என் மலர்
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணையில் மனநலம் பாதித்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத பெண் எனவும், இவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.
இது குறித்து வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (65). விவசாயி. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ந்தேதி தனது 2வது மகன் அலெக்ஸ்பாண்டியன் என்பவரை சொத்து தகராறில் விறகு கட்டையால் அடித்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
கடந்த 7 மாதம் சிறையில் இருந்த அண்ணாமலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தன் மகனை கொலை செய்ததால், அண்ணாமலையுடன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். இதில் மனமுடைந்த அண்ணாமலை வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த அவரது மனைவி குப்பு கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
சங்கராபுரத்தில் மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொ.மு.ச. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரம் திருத்த சட்டம் மற்றும் பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை. விவசாயி. இவரது மகள் வாசுகி (வயது 7).
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த வாசுகி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் சிறுமி நீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதேபோல திருநாவலூர் அருகே உள்ள ஆதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (8). இந்த சிறுவன் தனது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பூட்டை ஏரிக்கரை பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தென்னரசு(வயது 72) விவசாயி. இவர் அவரது வீட்டின் மாடிப்படியில் ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின் தலையில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி அருகே ஏரவார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் குமரவேல் (வயது 29). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 10ம் அணியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
இவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இவருடன் பணிபுரிந்து வந்த நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அருகே கருங்காலி குப்பத்தை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் சங்கராபுரம் அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (32) ஆகிய போலீஸ்காரர்கள் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மாடூர் தனியார் பால் பண்ணை அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து இடதுபக்கமாக திரும்பியதால் குமரவேல் மோட்டார் சைக்கிளும் கார்த்திக் மற்றும் கலைவாணன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்களும் கார் மீது மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் இறந்து போனார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கார் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், அம்மா பாளையம், வள்ளிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் ஆனந்த ராஜ் (22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் காங்கியனூர் கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த டெம்போவில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கள்ளிப்பட்டி கிராமத்தில் மொபட்டில் மணல் கடத்திய அய்யப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து 5 மூட்டை மணல் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அய்யப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் ஜம்பை கிராமத்தில் சதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை மணல் கடத்திய போது போலீசார் மடக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






