என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும்.

    காஞ்சிபுரம்:

    தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர்

    ஒழுக்கோல்பட்டு, கிளார், களத்தூர், அவளுர், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைப்படும் என காஞ்சிபுரம் செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 87). இவருடைய மனைவி காமாட்சி (84). இவர்களுக்கு பாரதி (50) என்ற மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பாரதியின் வீட்டில் சுப்புராம், காமாட்சி இருவரும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த தனது தாய், தந்தை இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி தூக்கில் பிணமாக தொங்கிய சுப்புராம், காமாட்சி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த வயதான தம்பதி தூக்குப்போட்டு எப்படி இறந்தார்கள் காரணம் என்ன? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் நோய்வாய் பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.

    • 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரில் காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஊராட்சியில் நீர்நிலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீர்நிலை பகுதிகள் மாசடைந்து வருகிறது.

    கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் தின்று பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர்நிலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற ஊரக வளர்ச்சி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய வட்டார வளர்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு.

    ஆலந்தூர்:

    இலங்கை, யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்று இருந்தனர்.

    அவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை சிறையில் நேற்றைய தினம் வரை தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஏற்கனவே பேசி உள்ளோம்.

    கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளும் முன்வைத்துள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. பசுக்களை அரவணைக்கும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.
    • உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் திருஉருவச் சிலைக்கு வெளி நாட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வைரக்கல் பதித்த தங்க கை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி யாக உள்ள ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளார். இவரது ஜெயந்தி உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த 3 நாட்களும் வேதபாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியன சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி விஜயேந்திரரின் பிறந்த நாளும் அதே நாளில் சிவராத்திரி விழாவும் சங்கர மடத்தில் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய நாளில் சங்கர மடத்தின் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் ஒன்றிணைந்து மகா பெரியவரின் உருவச்சிலைக்கு அணிவிக்கும் வகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இருந்து வைரக்கை பக்தர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சங்கர மடத்துக்கு வந்து சேரும்.

    இதன் பின்னர் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகாபெரியவர் உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், வைரக்கல் பதித்த தங்ககவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும்.

    விஜயேந்திரர் ஜெயந்தி நாளன்று அவர் முகாமிட்டுள்ள விசாகப்பட்டினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
    • சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.

    முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

    • மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து மூழ்கினார்.
    • இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற விஜயகுமார் (34). இவர் மனஅழுத்தம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை முடிந்து மோட்டார் சைக்கிளில் நேராக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து நீரில் மூழ்கினார்.

    இதையடுத்து மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், மெரினாவில் உள்ள நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கல்குவாரியில் இறங்கி வெங்கடேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கல்குவாரியில் அதிக அளவில் நீர் நிறைந்து காணப்படுவதாலும், சுமார் 500 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வீரர்கள் செல்ல முடியாததால் உடலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.

    ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது.
    • டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்து உள்ளன. கடந்த மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த விமானங்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 17 லட்சத்து 61 ஆயிரத்து 426 பேர் பயணித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது. ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 விமானங்களில் சராசரியாக 56 ஆயிரத்து 822 பயணிகள் பயணித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 392 விமானங்களில் 55 ஆயிரத்து 565 பயணிகள் பயணித்து உள்ளனர். டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முதன் முறையாக ஜனவரி மாதத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்தது சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
    • மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த ஆண்டு (2022-2023) கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கான விண்ண ப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.

    அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் வகையில் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மாணாக்கரின் வங்கி கணக்கில் இடம் பெற்றுள்ள பெயர், அம்மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.

    • 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.

    காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம், வரும் 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி பந்தகால் நடப்பட்டது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.

    தினமும் காலை, மாலையில், அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8-ந் தேதி காலை விஸ்வரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவமும் நிறைவு பெறுகிறது.

    உற்சவம் நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 24-ந் தேதி பகல் சண்டிஓமம், இரவு வெள்ளி மூஷிகம், 25 பகல் வெள்ளி விருஷம், இரவு தங்கமான், 26 பகல் மகரம், இரவு சந்திர பிரபை, 27 பகல் தங்க சிம்மம், இரவு யானை, 28 பகல் தங்க சூர்ய பிரபை, இரவு தங்க அம்சம்.

    மார்ச் 1 பகல் தங்க பல்லக்கு, இரவு நாகம், 2 பகல் முத்து சப்பரம், இரவு தங்க கிளி, 3 பகல் ரதம், 4 பகல் பத்ர பீடம், இரவு குதிரை, 5 பகல் ஆள் மேல் பல்லக்கு, இரவு வெள்ளி ரதம், 6 பகல் சரபம், இரவு கல்பகோத்யானம், 7 தங்க காமகோடி விமானம், 8 பகல் விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி உற்சவம்.

    ×