என் மலர்
காஞ்சிபுரம்
- மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைப்பெற்றது.
- ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில். கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா. ஆர்த்தி ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கினார்.
அதேபோல் வேளாண் பொறியியல் சார்பில் ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் பா. ஜெயஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.
- வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு பணியாற்றும் 20 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை பஸ் நேற்று மாலை வண்டலுார்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்றது. ஒரகடம் அருகே பஸ் சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 23 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பெண் தொழிலாளர்கள், டிரைவர் உள்ளிட்ட 3 ஆண்கள் என மொத்தம் 23 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களை மேம்படுத்த விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் 380 மற்றும் ஊரணி, குளங்கள் (சிறிய நீர்நிலைகள்) 2112 எண்கள் உள்ளன.
இந்த ஏரிகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
அதன்படி (மாட்டு வண்டி / டிராக்டர்) அரசு விதிகளின்படி காஞ்சிபுரம், கனிம வளத்துறை உதவி இயக்குனரால் உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், விவசாயிகள் சுயமுகவரியிட்ட வெள்ளைத்தாளில் 1. நிலம் அமைந்துள்ள இடம் 2. எந்த ஏரியின் பாசன பரப்பு (ஆயக்கட்டு பகுதி) 3. மொத்த பரப்பளவு அதில் எத்தனை ஏக்கருக்கு வண்டல் மண் தேவை மற்றும் அளவு போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு அத்துடன் விவசாயியின் ஆதார் எண், பட்டா நகல், ஏரி வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் டிராக்டர் வண்டி பதிவு எண் நகல் / மாட்டுவண்டி போன்றவற்றை இணைத்து பெறப்படும்.
ஏரி வண்டல் மண் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த என்ற உறுதிமொழியுடன் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து நில உடமை குறித்து சரித்தன்மை சான்று பெறப்பட்ட பின்னர் கணிம வளம், உதவி இயக்குநருக்கும், அந்தந்த தாசில்தார் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அந்தந்த ஏரியில் உள்ள நீர் இருப்பு அளவின் அடிப்படையில் எவ்வளவு ஏரி வண்டல் மண் (40 சதவீதம்) எடுக்க முடியும் என்ற விவரம் கணக்கீடு செய்யப்பட்டு ஏப்ரல் 2023 முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியில் இருந்து விளை நிலங்களுக்கு கொண்டு செல்லும் எந்திரச்செலவை விவசாயிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். விளை நிலங்களுக்கு என வழங்கப்பட்ட ஏரி வண்டல் மண் பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அருகே செவிலிமேடு குமரகோட்டம் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 6½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டறை விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகன் (34). இவரது மனைவி மோனிஷா. இவர்கள் இருவரும் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.
முருகன் மற்றும் அவரது மனைவி மோனிஷா இருவரும் வேலை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பீரோவை திறக்க சென்ற முருகன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் மாடிப்படிக்கான கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து, போர்டிகோ வழியாக சென்று படியில் இருந்த மெயின்டோர் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பீரோவை உடைத்து 5½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
- விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
- கூடுதல் வாடகை கேட்டால் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
காஞ்சிபுரம்:
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் 17-2-2023 அன்று காஞ்சிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் நெல் அறுவடை இயந்திரம். பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2600/- மற்றும் டயர் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1850/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் நெல் அறுவை இயந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்த பெல்ட் டைப் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880-ம் டயர் டைப் இயந்திரத்திற்கு ரூ.1160-ம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆகவே அரசு நெல் அறுவடை இயந்திரம் மற்றும் 65 தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விவரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அதற்கான வாடகை தொகையினை செலுத்தி அரசு மற்றும் தனியார் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலிப்பது குறித்து கீழ்க்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
1. செயற்பொறியாளர். (வே.பொ.து). நத்தனம். சென்னை-35, தொலைபேசி எண்: 044-24327238, 9952952253
2. உதவி செயற்பொறியாளர் (வே.பொ.து) காஞ்சிபுரம், தொலைபேசி எண்: 044 - 27230110, 90030 90440
- 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
- ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே வாகன போக்குவரத்துக்கு வசதியாக, 25 ஆண்டுகளுக்கு முன் தரை மட்ட பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து, பிரமதேசம், ஆற்காடு, வேலுார் போன்ற பகுதிகளுக்கு பஸ் இயங்கி வருகிறது.
மேலும் இந்த ஆற்றுக்கு மறுகரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்குகிறது.
அதிகளவில் வட இலுப்பை, செய்யனுார், பேட்டை, பட்டரை, சித்தனகால், சீவரம், சிறுநாவல்பட்டு, பிரமதேசம், நாட்டேரி, கல்பாக்கம், தென்னம்பட்டு, புத்தனுார், ஐவர்தாங்கல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையின் போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தற்காலிகமாக அங்கு மண் சாலை அமைக்கப்பட்டது.
இந்த மண்சாலை மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது என்பதால் இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய தரைமட்ட பாலம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் சென்றாலும் தண்ணீர் செல்லும் வகையில் 240 சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் பிரிந்து செல்லும், பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.
- வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
- கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சன்னிதி தெருவில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
கோவிலை சுற்றியுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அதிகாரிகள் அகற்றினாலும் மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. வருகிற 24-ந் தேதி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்த ரவுப்படி சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 25 கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல் வடக்கு மாட வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- வாலிபர்கள் இருவரும் கடையிலேயே கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.
- அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (18), சக்திவேல் (20). இவர்கள் இருவரும் தங்களது சித்தி மகளின் பிறந்தநாளுக்காக கருக்குப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் கேக் வாங்கி இருந்தனர்.
அவர்கள் பிறந்தநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி கேக்கை வெட்ட முயன்றனர். அப்போது வெட்ட முடியாத அளவுக்கு கேக் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் அந்த கேக்கை எடுத்துக்கொண்டு பேக்கரி கடைக்கு சென்று இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தனர்.
ஆனால் பேக்கரி கடை ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளது. இப்போதே நீங்கள் கேக்கை சாப்பிடலாம் என்று கூறினர்.
இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் கடையிலேயே அந்த கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார்.
- என்ஜினீயரிங் மாணவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.
ஆலந்தூர்:
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கதவை திறந்து சர்ச்சையில் சிக்கினார். இதே போல் மேலும் சில சம்பவங்கள் நடந்தன.
இதைத் தொடர்ந்து விமானத்தின் அவசர கதவு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் மீது விமான நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் அவசர கதவை தொட்ட மாணவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அவர் விமானத்தில் உள்ள அவசர கால கதவை திறக்க முயன்றார்.
இதனை கவனித்த விமான பணிப்பெண்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் இதுபற்றி விமான கேப்டனிடமும் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் மாணவரின் செயல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக அந்த மாணவர் கூறும்போது, "நான் விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயற்சி செய்யவில்லை. அதன் கைப்பிடியை தொட்டுப் பார்த்தேன்" என்றார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்றதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மாணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் மாணவர் கைது செய்யப்படவில்லை" என்றனர்.
- சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரகடம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 26). இவர் சொந்தமாக சோலார் பேனல் தொடர்பான வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த தாழம்பட்டு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஹரிகிருஷ்ணன் சிறிது நேரத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பள்ளியின் அருகே அபாயகரமான சாலை வளைவில் சிக்னல் இல்லாமலும் எந்தவிதமான எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் தடுப்புச்சுவர் உள்ளதாகவும் இதனால் விபத்து நேர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
- நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில் வைகுண்டநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் 1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்தது பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரியாதை நிமித்த வாக்கியமான "பெருமக்கள்" என வாரிய பொறுப்பாளரை அழைத்து உள்ளனர். அவர்கள் நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்த தகவலும் உள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜய்குமார் என்பவர் கூறியதாவது:-
1100 ஆண்டுக்கு முன்பே மிகச்சிறந்த ஊராட்சி நிர்வாக முறை இருந்து இருப்பது கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த செய்தி கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாது, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒருவரின் பதவிக்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு முறை தேர்வு செய்யப்படுபவர் மறுமுறை மீண்டும் போட்டியிட முடியாது. மேலும் வாரியம் செய்வோர் பிற ஊர்களுக்கும் சென்று வாரியம் செய்த செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரி வாரியம், சம் வத்சர ஆண்டு வாரியம் என இரண்டு வாரியங்கள் செயல்பட்டு வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாரியப் பெருமக்கள் கணக்கு காட்ட வேண்டும் என்றும், வாரியப் பணிகளை செய்யாமல் இருத்தல் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணபுரத்து பெருங்குறி சபையார் சீர்குட்டி அம்பலத்தில் கூடி வாரியஞ்செய்பவரை தேர்ந்தெடுப்பர் என்றும், அவருக்கு 2 கழஞ்சு பொன் அதாவது 10 கிராம் தங்க நகை ஊதியமாக வழங்கி, அவர்கள் லஞ்சம் லாவண்ணியத்தில் சிக்காதவாறு வருமானத்தை அளித்து வந்ததும் உள்ளது.
10-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பார்த்தி வேந்திராதிபதி மற்றும் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்கள் இந்த கோவிலில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.






