என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
- போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும், பட்டுச்சேலைக்கு பிரபலமானதாகவும் திகழ்கிறது. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அத்திவரதர் உற்சவம் பிரசித்தி பெற்றது.
இதனால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாவாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தினந்தோறும் லட்சக்கணக்கான வியாபாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வேன், பஸ்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து வரும் நிலை உள்ளது.
தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதியம் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலா பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள்.
இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் நிலைமை மோசமாக உள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் நடந்து செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பட்டுச்சேலை வாங்கி செல்ல விரும்புவார்கள். தற்போது உள்ள போக்குவரத்து புதிய விதியால் பட்டுச்சேலை கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த புதிய போக்குவரத்து விதிமுறையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது பட்டுச்சேலை கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்து உள்ளது.
அவர்கள் கார் அல்லது ஆட்டோவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் நகருக்குள் மேலும் போக்குவர்தது நெரிசல் அதிகம் ஆகும்.
சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து வர இனி தயங்குவார்கள். போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது' என்றார்.
சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பயணிகளை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் காஞ்சிபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும், வியாபாரமும் பாதிக்காது' என்றார்.
- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை.
- மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் மாருதி நகர், ஐயப்பா நகர், மணவாளன் நகர், கற்பகம் அவென்யூ, பாக்கியம் நகர், திருமூர்த்தி நகர், சாம்ராஜ் நகர் 8-வது தெரு மற்றும் அனைத்து பகுதிகள், மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு.
- பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச சமயபயிற்சி வகுப்பு வருகிற மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 70-க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்பத்தினை காஞ்சிபுரம், பங்காரம்மன் தோட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24-ந்தேதிக்குள் வந்து சேரவேண்டும். இந்த தகவலை அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் தெரிவித்து உள்ளார்.
- படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன. இவரது மகன் அருண்குமார் (வயது 25). மாற்றுத்திறனாளி. எலெக்ட்ரிகல் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 21-ந்தேதி ஆனம்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக உத்திரமேரூர் சாலையில் தன்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மேல்பேரமநல்லூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அருண்குமார் சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய்நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடைகுறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
மேலும், இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய்பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் போன்றவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 69 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 3-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி வருகிற 1-ந்தேதி முதல் 21-ந்தேதி முடிய 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் போன்றவற்றுக்கு கால் மற்றும் வாய்கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டு கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
- துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், திடீரென புறப்பாடு பகுதியில் வெளியேற முயற்சிப்பதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர். அந்த ஊழியரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தங்கத்தை விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்து அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியது தெரிந்தது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைப்பெற்றது.
- ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில். கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா. ஆர்த்தி ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான பயிர் கடன்கள் வழங்கினார்.
அதேபோல் வேளாண் பொறியியல் சார்பில் ரூ. 21.84 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் பா. ஜெயஸ்ரீ ஆகியோர் உள்ளனர்.
- வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு பணியாற்றும் 20 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை பஸ் நேற்று மாலை வண்டலுார்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்றது. ஒரகடம் அருகே பஸ் சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 23 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பெண் தொழிலாளர்கள், டிரைவர் உள்ளிட்ட 3 ஆண்கள் என மொத்தம் 23 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களை மேம்படுத்த விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகள் 380 மற்றும் ஊரணி, குளங்கள் (சிறிய நீர்நிலைகள்) 2112 எண்கள் உள்ளன.
இந்த ஏரிகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக காணப்படும் போது விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மண் வளம் மேம்படுத்த ஏரியில் இருந்து வண்டல் மண் அரசு நிர்ணயித்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
அதன்படி (மாட்டு வண்டி / டிராக்டர்) அரசு விதிகளின்படி காஞ்சிபுரம், கனிம வளத்துறை உதவி இயக்குனரால் உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், விவசாயிகள் சுயமுகவரியிட்ட வெள்ளைத்தாளில் 1. நிலம் அமைந்துள்ள இடம் 2. எந்த ஏரியின் பாசன பரப்பு (ஆயக்கட்டு பகுதி) 3. மொத்த பரப்பளவு அதில் எத்தனை ஏக்கருக்கு வண்டல் மண் தேவை மற்றும் அளவு போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு அத்துடன் விவசாயியின் ஆதார் எண், பட்டா நகல், ஏரி வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் டிராக்டர் வண்டி பதிவு எண் நகல் / மாட்டுவண்டி போன்றவற்றை இணைத்து பெறப்படும்.
ஏரி வண்டல் மண் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த என்ற உறுதிமொழியுடன் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து நில உடமை குறித்து சரித்தன்மை சான்று பெறப்பட்ட பின்னர் கணிம வளம், உதவி இயக்குநருக்கும், அந்தந்த தாசில்தார் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அந்தந்த ஏரியில் உள்ள நீர் இருப்பு அளவின் அடிப்படையில் எவ்வளவு ஏரி வண்டல் மண் (40 சதவீதம்) எடுக்க முடியும் என்ற விவரம் கணக்கீடு செய்யப்பட்டு ஏப்ரல் 2023 முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏரியில் இருந்து விளை நிலங்களுக்கு கொண்டு செல்லும் எந்திரச்செலவை விவசாயிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். விளை நிலங்களுக்கு என வழங்கப்பட்ட ஏரி வண்டல் மண் பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அருகே செவிலிமேடு குமரகோட்டம் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 6½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டறை விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் முருகன் (34). இவரது மனைவி மோனிஷா. இவர்கள் இருவரும் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர்.
முருகன் மற்றும் அவரது மனைவி மோனிஷா இருவரும் வேலை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பீரோவை திறக்க சென்ற முருகன் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் மாடிப்படிக்கான கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து, போர்டிகோ வழியாக சென்று படியில் இருந்த மெயின்டோர் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பீரோவை உடைத்து 5½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முருகன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
- விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
- கூடுதல் வாடகை கேட்டால் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
காஞ்சிபுரம்:
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் 17-2-2023 அன்று காஞ்சிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் நெல் அறுவடை இயந்திரம். பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2600/- மற்றும் டயர் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1850/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் நெல் அறுவை இயந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்த பெல்ட் டைப் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880-ம் டயர் டைப் இயந்திரத்திற்கு ரூ.1160-ம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆகவே அரசு நெல் அறுவடை இயந்திரம் மற்றும் 65 தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் விவரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அதற்கான வாடகை தொகையினை செலுத்தி அரசு மற்றும் தனியார் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலிப்பது குறித்து கீழ்க்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
1. செயற்பொறியாளர். (வே.பொ.து). நத்தனம். சென்னை-35, தொலைபேசி எண்: 044-24327238, 9952952253
2. உதவி செயற்பொறியாளர் (வே.பொ.து) காஞ்சிபுரம், தொலைபேசி எண்: 044 - 27230110, 90030 90440






