என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
    • தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    துரித மின் இணைப்பு 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்ட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500-ம், 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்துக்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீதம் பயனாளி பங்குத்தொகையுடன் புதிதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ, காஞ்சிபுரம், மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தேரோட்டத்தையொடடி சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் எராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி 9-ம் நாள் விழாவாக நேற்று இரவு வெள்ளித்தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், பல்வேறு மலர் அலங்காரத்தில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதி உடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண பாடலுடன் காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.

    ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொடடி கச்சபேஸ்வரர் கோவில் அருகே சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

    • பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.
    • அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு கால்பந்து, ஆக்கி, தடகளம், கூடைப்பந்து, வாலிபால், நீச்சல் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி மைதானங்கள் உள்ளது.

    இங்கு தினமும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் பயிற்சி முடித்த கல்லூரி மாணவி தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் தொடர்பாக பயிற்சியாளரான முருகேசன் என்பவரிடம் கேட்டார்.

    அப்போது, சான்றிதழ் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள தனது வீட்டில் உள்ளதாகவும், அதை அங்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் மாணவியிடம் பயிற்சியாளர் முருகேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவி பயிற்சியாளரின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனிமையில் இருந்த பயிற்சியாளர் முருகேசன் திடீரென கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கற்பழிக்க முயன்றாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்து தப்பிய மாணவி இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி பயிற்சியாளர் முருகேசனை கைது செய்தனர்.

    அவர் மீது அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கைதான பயிற்சியாளர் முருகேசன் மீது ஏற்கனவே ரெயில்வே சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிக பயிற்சியாளர் பணியில் இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவியை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சாலவான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகள் பிரியங்கா (வயது15). அப்பகுதியில் உள்ள பாட்டி சுமதியின் வீட்டில் தங்கி இருந்து நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவி பிரியங்காவை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த வயலூர் கிராமம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் சரவணன் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாகரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    படப்பை:

    படப்பை, கரசங்கால் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலை வரதராஜபுரம், கரசங்கால், படப்பை வழியாக செல்கிறது. இந்த சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை பகுதியில் முக்கிய இடமாக மணிமங்கலம் கரசங்கால், ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பகுதி உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி, மாணவர்கள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதேபோல் படப்பை, செரப்பணஞ்சேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    இந்த இடங்களில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் காலை, மாலை நேரங்களில் அதிவேகமாக வரும் லாரிகளால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    அப்படியே சாலையை கடக்க முற்பட்டால் விபத்து ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. எனவே கரசங்கால், படப்பை, செரப்பணஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தவும் இந்த 2 பகுதிகளிலும் சிக்னல் அமைக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
    • 8-ந்தேதி விஸ்வரூப தரசனம் நடக்கிறது.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாள்தோறும் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை வேளைகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    7-ம் நாள் விழா உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் ரோஸ் நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் மல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலையில் அருகே எழுந்தருளினார்.

    8-ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. லட்சுமி சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்பிகையும் இணைந்து தேரில் மங்கள மேள வாத்தியங்களுடன் காஞ்சீபுரம் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே காஞ்சீபுரம் சங்கர மடத்தில் எழுந்தருளினார்.

    மடத்தின் வாயிலில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தேரில் கோவிலுக்கு எழுந்தருளினார்.

    இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் நாள் விழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. இதில் வெள்ளித் தேரில் காமாட்சி அம்மன் பவனி வருகிறார். இது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். வருகிற 6-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி அம்மன் தங்க காமகோடி விமானத்தில் பவனி வருகிறார். 8-ந் தேதி காலையில் விஸ்வரூப தரசனம் நடக்கிறது. இரவு விடையாற்று உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

    • எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர்.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், எல்லப்பா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஸ்வர் (33). இவர் பட்டுசேலை வியாபாரம் செய்து வந்தார். இந்ந நிலையில் பட்டுசேலை வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் இருந்த கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், விக்னேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    • 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வன்னியர் மக்கள் கட்சி சார்பில் 10.5 சதவீத வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த கோரி காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை வன்னியர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சக்தி படையாட்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    வன்னியர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் நாயகர் முன்னிலையில் அமைப்பு செயலாளர் குணசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கன்னியப்பன் வரவேற்று பேசினார். திருபெருமந்தூர் தொகுதி செயலாளர் பூபாலன், மாநில தொண்டர் அணி செயலாளர் முரளி, மாநில துணை தலைவர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் ராமலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாய அணி பொது செயலாளர் திருக்குறள் ஆறுமுகம், தமிழ்நாடு வன்னியர் பேரவையின் மாநில தலைவர் ஐயப்பன், பொது செயலாளர் ஆனந்த், தமிழ் பத்திரிகையாளர்கள் சங்க பொது செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுகந்த், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் சம்பத், மத்திய மாவட்ட தலைவர் கண்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், அருண்குமார், மணிகண்டன், ஹரிகரன், சூர்யா, அஜித்குமார், இளையா, சுந்தரி, ராஜேஸ்வரி சதீஷ்குமார், ஹரிஹரன், சக்தி, சதீஷ், ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வன்னியர் மக்கள் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    • கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர்.

    மாங்காடு:

    மாங்காடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது குடும்பத்துடன் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தண்டலம், மணிமேடு, பெரியார் தெருவை சேர்ந்த விஷ்ணு (21), என்பவர் சப்- இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    கடந்த மாதம் விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்றனர். கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அவனை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக மாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த விஷ்ணுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்

    • புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என்பதால் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வந்தது முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதிய விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏகனாபுரம் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து உள்ளனர். புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை கண்காணித்து வருகிறார்கள். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்குடியினர் இன மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக இணையதளம் (https://tnadtwscholarship.tn.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போல் மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×