என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.
    • சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் ரவுடிகளை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரை தாக்கி தப்பும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும் ரவுடி கும்பல் குறித்து போலீசார் கண்காணித்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தை கலக்கிய மறைந்த பிரபல ரவுடி தனபாலின் வலது கரமாக இருந்து வந்த பிரபல ரவுடி தியாகுவின் கூட்டாளிகளான பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. ஏற்கனவே ரவுடி தியாகு சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

    எனினும் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா ஆகியோரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்களது இருப்பிடம் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் சகோதரர்கள் இருவரும் நேற்று இரவு காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் மேம்பாலம் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் ரவுடி சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலாவை சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மேம்பாலத்தில் மேலே இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றனர்.

    இதில் பிரபா, மண்டேலா ஆகிய இருவருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்ய முயன்ற போது ரவுடிகள் இருவரும் மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது51). தொழிலாளி. இவரது மனைவி காந்திமணி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    அதே பகுதியில் இவரது கடைசி தம்பி வடிவேலு தாயுடன் தனியாக வசித்து வருகிறார். வடிவேலுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சரவணன், வடிவேலு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தூங்க சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் அண்ணன்-தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது சரவணன் கோபத்தில் வடிவேலுவின் கைவிரலை கடித்ததாக தெரிகிறது. இதனால் வலியால் அலறி துடித்த வடிவேலு அருகில் கிடந்த கட்டையால் அண்ணன் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் சரவணன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், டி.எஸ்.பி. ஜுலியர்சீசர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக வடிவேலுவை கைது செய்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    அண்ணனை தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேசன் படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் தனது குடும்ப செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்குச் சென்று ஏற்கனவே பேட்டரி சார்ஜ் செய்ய கொடுத்திருந்த பேட்டரியை வாங்க சென்றார். பின்னர் பேட்டரி கடையில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வெங்கடேசன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுகாதார கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை பயன்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டங்களில் இடம்பெற வேண்டும்.
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் தின விழாவையொட்டி 'மிஷன் 11' என்கிற திட்டத்தை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். ரத்த சோகை இல்லாத மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

    இதைத்தொடர்ந்து பல்துறை சார்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. 'மிஷன் 11' திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

    கிராமங்கள் தோறும் ரத்தசோகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ரத்தசோகை தடுப்பு முறைகளான சரிவிகித உணவு உட்கொள்ளுதல், இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளான பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரை, வெல்லம், கேழ்வரகு போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் சுகாதார கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை பயன்படுத்துதல் விழிப்புணர்வு கூட்டங்களில் இடம்பெற வேண்டும்.

    பல்துறையினை சார்ந்த 49 வயது வரை உள்ள பெண் பணியாளர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை பரிசோதனை செய்தல், ரத்தசோகை கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து மீண்டும் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும்.

    இந்த சிறப்பு திட்டம் வெற்றி பெற சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, தொழில் துறை ஆகிய பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரியராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பிளஸ்-2 தேர்வு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 90 ஆயிரத்து 723 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

    பிளஸ்-2 தேர்வை 6,903 மாணவர்கள், 7,014 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 917 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 14-ந் தேதி தொடங்கும் பிளஸ்-1 தேர்தலை 13 ஆயிரத்து 114 பேரும், அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 434 பேரும் எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க 80 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வை 30,891 பேர் எழுத உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 356 பேர் எழுத உள்ளனர்.

    இதில் பிளஸ்-2 தேர்வை 171 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 173 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

    • பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    காஞ்சிபுரம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் நடிகர் ஒருவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார்.

    பின்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெண்ணிடம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.

    அப்பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட அலாவுதீன் அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்பத்தினருக்கும் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டி சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன், அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடம் விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    • பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று.
    • 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதவிழா 8 நாட்கள் நடைபெறும். பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. தற்போது தொடங்கியுள்ள இந்த உற்சவத்தில் நாளை பல்லவ உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள்.

    பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு.

    வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சீபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் நன்மைகளைப் பெறுவார்கள். வருகிற 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    • லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், கைலாசநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட 11 பழமையான கோவில்கள் உள்ளன. இங்கு பஸ் மற்றும் வேன்களில் சுற்றுலா வரும் பயணிகள் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு பஸ் நிலையம் அருகே காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பட்டுச்சேலைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

    இங்கு வார நாட்களில் 10 முதல் 15 பஸ்களிலும், வார இறுதி நாட்களில் சுமார் 40 பஸ்களிலும் பயணிகள் சுற்றுலா வருவார்கள். இதனால் காஞ்சிபுரத்தில் சுற்றுலா களைகட்டி வந்தது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் மா.ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தற்காலிகமாக புதிய போக்குவரத்து ஒழுங்கு முறையை அமல்படுத்தினர்.

    இதையடுத்து காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன. அங்கு பஸ்களை நிறுத்த ரூ.300 கட்டணமும், வேன்களுக்கு ரூ.150 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ மட்டுமே செல்ல முடிகிறது. ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளில் விடுமுறை தொடங்க இருப்பதால் ஏராளமானோர் காஞ்சிபுரம் நகருக்கு சுற்றுலா செல்வார்கள். ஆனால் சுற்றுலா பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா செல்ல பயணிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    இதனால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-

    சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களை காஞ்சிபுரம் நகருக்குள் அனுமதிக்காததால் பயணிகள் பல இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் பலர் வயதானவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.

    மேலும் இங்கு சாலையோரம் உள்ள பிளாட்பாரங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும். சீரான போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற காஞ்சிபுரம் நகரில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் காஞ்சிபுரம் சுற்றுலா நகராக வளர்ச்சி அமையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது.
    • வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜம் பேட்டையில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம்.மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்தனர்.

    அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து போலீசார் வந்தனர். உடனே கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்குள் சென்று பார்த்தபோது எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் மற்றும் போலீசார்விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது. கொள்ளைகும்பலை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த ஏ.டி.எம். கொள்ளை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர் என்று கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்தார்.
    • மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டுதல் கூட்டம் காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலை பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினரும், செயலாளருமான காஞ்சிபுரம் மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    தேர்வுகள் எந்தவித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும் மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு விதிகளை அனைத்து அலுவலர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகள் புகார்கள் இன்றி நடைபெறும் அளவில் ஏற்பாடுகளும், மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுதும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    வரும் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 114 மாணவ -மாணவியர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 917 மாணவ மாணவியர்களும் எழுத உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • கார்த்திக் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி, தண்டபாணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    அப்போது, கார்த்திக் ரூ.4 கோடியே 75 லட்சத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கார்த்திக் போலீசாரிடம் சிக்கவில்லை.

    இதற்கிடையே இது தொடர்பான வழக்கு விசாரணை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் கார்த்திக் ஆஜராகாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது.

    இந்நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×