என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தரை பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது தாய் புகார் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், ராஜாமகேந்திரவர்மபுரத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 44). இவர்களது மகன் ஆகாஷ் (22). தாய், மகன் இருவரும் நேற்று காலை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிக்க வந்தனர்.

    பிற்பகல் இவர்கள் இலவச தரிசன வரிசையில் நின்று, அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது ஆகாஷ் தனது செல்போனில் அத்திவரதரை படம் எடுத்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் போலீஸ் ஆகாஷை அழைத்து, செல்போனில் படம் எடுக்கக் கூடாது என்று கண்டித்ததாக தெரிகிறது

    அதையும் மீறி, மிகுந்த ஆர்வத்துடன் அத்திவரதரை ஆகாஷ் படம் எடுத்தார். கோபம் அடைந்த அந்த பெண் போலீஸ் ஆகாஷை அழைத்து, தாய் கண்ணெதிரே ஆகாஷ் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆகாஷ் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து அத்திவரதரை சாமி தரிசனம் செய்ய வந்தபோது மகன் ஆகாஷை பறிகொடுத்த தாய் நாகேஸ்வரி, அந்த பெண் போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    அத்திவரதர் வைபவம் நடைபெறும் நிலையில், காஞ்சீபுரத்தில் ஆட்டோ ஓட்ட அனுமதி மறுத்ததாக கூறி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஏராளமான பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    அத்திவரதர் வைபவம் நடைபெறும் நிலையில், நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீடீரென தீக்குளித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த குமாரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே சமூக ஆர்வலர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா.

    சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதன் காரணமாக இவருக்கு ஏற்கனவே மிரட்டல்களும் வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ராஜாவின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ராஜா, மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென ராஜா மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    பாட்டில்கள் விழுந்து வெடித்து சிதறியதில் ராஜாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் புகுந்து அவர் உயிர் தப்பினார்.

    இதுபற்றி மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ராஜாவை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் :

    108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நேற்று முன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஏராளமான பக்தர்கள் வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கேளம்பாக்கம் அருகே வேன் மீது லாரி மோதலில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரவு நேர காவல் பணி, துப்புரவு வேலையில் கல்குளம், அணைக்கட்டு, பழைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை பணி முடிந்த தொழிலாளர்கள் பெண்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் கல்குளம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கடலூரில் இருந்து ‘ஸ்பிரிட்’ ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேன் முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்து கல்குளம், புதுக்காலனியைச் சேர்ந்த பாலாஜி (28), அய்யனாரப்பன் (30) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் வேனில் பயணம் செய்த முருகன், நந்தினி, சரத்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வசூலிக்கப்பட்ட ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் தரிசனம் நேற்று தொடங்கியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்காக அறநிலையத்துறை சார்பில் ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று 50 ரூபாய் கொடுத்து சிறப்பு நுழைவு டிக்கெட் வாங்கி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்தார். இதனால் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
    கேளம்பாக்கம் கிறிஸ்தவ ஆலயத்தில் வீசப்பட்ட 3 மாத குழந்தையை மீட்ட போலீசார் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
    திருப்போரூர்:

    கேளம்பாக்கம், கோவளம் சாலையில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆலய வாசலில் பிறந்து 3 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. மர்ம நபர்கள் குழந்தையை வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய இயக்குனர் தேவன்பு, ஒருங்கிணைப்பாளர் ஹென்றி, உறுப்பினர் ஆலிஸ் அற்புதம் ஆகியோர் குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் இந்த குழந்தை செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார்? எதற்காக விட்டு சென்றனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய தொடங்கினர்.
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு முதல் அத்திவரதர் காட்சி தரத்தொடங்கினார். பக்தர்கள் காலை 5 மணி முதல் தரிசனம் செய்யத்தொடங்கினர்

    முதல் 24 நாள் சயன கோலத்தில் ( ஜூலை 1-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) அத்தி வரதர் காட்சிதருவார். அடுத்த 20 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். இன்று முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

    அத்திவரதரை அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசிக்கலாம். காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்பதால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.
    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுள்ளன.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வரதராஜபெருமாளையும், தங்கம், வெள்ளி பல்லி, பெருந்தேவி தாயாரையும் தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதையொட்டி, மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்

    பக்தர்கள் வசதிக்காக கோவில் பின்புறகோபுரத்தில் இருந்து உள்ளே செல்லும் வரை நீண்ட வரிசைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரூ.50 கட்டண வரிசை - ரூ.500-க்கான சிறப்பு வசதி, முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான சிறப்பு வரிசை என்று அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    கோவிலின் பின்புற கோபுர பகுதியில் ரூ.50-க்கான சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் நகரில், நகராட்சி உள்பட பல்வேறு இடங்களில் இலவச தரிசன டிக்கெட், ரூ.50-க்கான டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.

    பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க அத்திவரதர் கோவில் அலுவலகம் அருகே வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். வசந்த மண்டபம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவிலுக்கு வெளியே நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அத்திவரதரை தரிசிக்க ரோப்-கார், மூன்று சக்கர சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள சுமார் 3 ஆயிரம் போலீசார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவில் வளாகத்தில், அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள், நர்சுகள் இருப்பார்கள். பக்தர்களின் வருகையையொட்டி ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி போன்ற இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே கூடுதலாக 12 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 11 மணி முதல் மதியம் 12.50 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒருமுறை அரக்கோணம் சந்திப்பில் இருந்து செங்கல்பட்டுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்லும்.

    மதியம் 1.30 மணி முதல் 3.15 மணிவரை செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்துக்கு ரெயில்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மதுரவாயலில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரூர்:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி. இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோயம்பேடு வந்தார். பின்னர் மதுரவாயலில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் லாரி முத்துலட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேப்பம்பட்டைச் சேர்ந்த தண்ணீர் லாரி டிரைவர் முரளிமோகனை கைது செய்தனர்.

    40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டது. அர்ச்சகர்கள் “வரதா... வரதா... கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.

    தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த விழா வருகிற 1-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    அத்திவரதர் விழாவுக்காக அத்திவரதர் சிலையை திருக்குளத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக குளத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. பின்னர் சேறு, சகதிகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து வந்தன.

    இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலையை அர்ச்சகர்கள் வெளியே எடுத்து வந்தனர். பின்னர் சிலையை வசந்த மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    அத்திவரதர்

    40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதரை தரிசித்த பக்தியில் அர்ச்சகர்கள் “வரதா... வரதா... கோவிந்தா... கோவிந்தா...” என்று பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடந்து வருகின்றன.

    அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது. வருகிற 1-ந்தேதி காலை முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.

    அத்திவரதர் சிலை திருக்குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் நிகழ்ச்சிக்கு அர்ச்சர்கள், அற நிலையத்துறை அதிகாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கு கோவிலின் வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டாவது முறையாக அனந்தசரஸ் குளத்தில் இருந்து அருள்பாலிக்க அத்திவரதர் எழுந்தருளி உள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் விழாவின்போது எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது.

    தற்போது 2019-ம் ஆண்டு அத்திவரதர் எழுந்தருளியுள்ள நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    கிண்டியில் 9-வது வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    கிண்டி மடுவின்கரை தாத்தானியா பேட்டையை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் விஷால் (13).

    புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விஷால் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் தனது வீட்டில் படிக்கட்டின் கீழ் உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.

    விஷாலின் அம்மா சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். காபி போட்டு மகனுக்கு கொண்டு வந்தார்.

    அப்போது மாணவன் விஷால் படிக்கட்டின் கீழ் நிற்பதுபோல் தெரிந்தது. அருகில் வந்து பார்த்தபோது அவர் படிக்கட்டில் உள்ள கம்பியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனே கதறி துடித்தார். வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் விஷாலை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதல் உதவிக்கு பிறகு ராயபேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

    ஆனால், மாணவன் விஷால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் உடலை கண்டு தாய்-தந்தை, உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    ×