என் மலர்
ஈரோடு
ஈரோடு நாராயண வலசு பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், ஈரோடு கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்த தவமணி (வயது 52), பெரிய வலசு பகுதியை சேர்ந்த பழனியப்பன் (60), மூர்த்தி கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில் (39), நாராயண வலசு பகுதியை சேர்ந்த ராஜா (53), விவேகானந்தர் சாலை பகுதியை சேர்ந்த மாதேஷ் (36), திருமால் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் (50), வாஞ்சிநாதன் நகர் பகுதியை சேர்ந்த மணி (50), வெட்டுகாட்டுவலசு மடிக்காரர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் ரூ.9 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டன.
தாளவாடி:
ஈரோடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கொரோனா ஊரடங்கால் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகுட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் கடந்த மாதம் தாளவாடி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடும் கட்டுபாடுகளால் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தாளவாடி பகுதியில் சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு பஸ்கள் கடந்த 21-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
தளர்வு காரணமாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி அருகே உள்ள மாநில எல்லைபகுதியான பாரதிபுரம் வரை கர்நாடக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனால் தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து தாளவாடி பகுதிக்கும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும் எந்த ஒரு இ-பதிவும் இல்லாமல் பொதுமக்கள் சகஜமாக சென்று வருகின்றனர்.
மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசாரும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதால் தாளவாடி பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மாநில எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் எனவும், பேருந்தில் பயணம் செய்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * * * தமிழக-கர்நாடக எல்லையான பாரதிபுரத்துக்கு இயக்கப்பட்ட கர்நாடக அரசு பஸ்.
ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (67) ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்யா, ரம்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர். மகதி மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நல்லபடியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கை கொரோனா என்ற கொடிய நோயால் சின்னா பின்னமாகி விட்டது.
கடந்த மாதம் 2-ந் தேதி பாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்த நித்யா சரிவர சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
கணவர் இறந்ததால் நித்யா தனது மகன், மகளுடன் திண்டலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவர் பிரிவைத் தாங்க முடியாத நித்யா தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி நேற்று மதியம் உணவில் விஷ மாத்திரையை கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்து தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு மகன், மகளுடன் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை பார்த்தசாரதி கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அந்த அறையில் விஷ மாத்திரை கிடந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு எல்லக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (41). சாப்ட்வேர் என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாலதொழுவு ஜம்பமடை என்ற இடத்தில் டிராக்டர் ஒன்று பஞ்சராகி ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது. அதன்மீது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-கோபி பகுதியை சேர்ந்தவர் பூபாலன், இவரது மனைவி இனியராதா (29). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, பிரதீப் (10), சுரேஷ் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இனியராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தெரிய வந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட இனியராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககா அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
கடந்த 12 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதுபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 741 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1855 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 5ஆயிரத்து 942 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 9 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் 4,032 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 11 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் இறந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் காலியாகி வருகின்றன. தற்போது 4331 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த காரில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த ஈரோடு வெட்டுகாட்டுவலசு பகுதியை சேர்ந்த விஜய்சூர்யா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது.






