என் மலர்tooltip icon

    ஈரோடு

    தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தடுப்பூசி போடும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 சென்ட் அளவுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பூசி

    மேலும்   தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள சேலைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போட குவிந்தனர்.


    ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 40). காடா துணி வியாபாரி. இவருடைய நிறுவனத்தின் அலுவலகமும், ஜவுளி குடோனும் ஈரோடு சேட் காலனி அகில் மேடு 3-வது வீதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு அலுவலகம் மற்றும் குடோனை தொழிலாளர்கள் பூட்டி சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ஜவுளி நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் சிலர் வந்தனர். அப்போது குடோனின் பின்புற கதவு (அதாவது ஷட்டர்) பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தினுள் இருந்த பீரோ, மேஜையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சத்தை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. முகேஷ்குமார் அலுவலகத்திலும், சுற்றுப்புற பகுதிகளிலும் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


    பெருந்துறை அருகே கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை ஈரோடு ரோடு, கந்தாம்பாளையம் பிரிவு அருகே கழிவு பஞ்சுகளை அரைக்கும், பஞ்சு குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில் 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் தொழிலாளர்கள் 10 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடோனில் வைக்கப்பட்டு இருந்த கழிவு பஞ்சுகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது.

    இதைப்பார்த்ததும் தொழிலாளர்கள் உடனே எரிந்து கொண்டிருந்த பஞ்சு மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மளமளவென பரவிய தீ அங்கு குவிக்கப்பட்டு கிடந்த கழிவு பஞ்சுவில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுபற்றி அவர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கழிவு பஞ்சு குடோனில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. தகவல் அறிந்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து பெருந்துறை, ஈரோடு தீயணைப்பு வீரர்கள் இணைந்து குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகே பஞ்சு குடோனில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. பஞ்சு அரவை எந்திரம் சூடாகி அதனால் ஏற்பட்ட வெப்பமே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி வேலுமணி நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி சுந்தரி. பொன்னுசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால் அவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டின் பின்புறம் குடியிருந்து வருபவர் கமலா. அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி கமலா வேலை முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கொரோனா நிதி உதவி உங்களுக்கு வாங்கித்தருகிறேன் என்று கூறி, அவரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற கமலா சுந்தரியிடமும் இதுபற்றி கூறினார்.

    உடனே கமலாவை அழைத்து வந்த மர்ம நபர் சுந்தரியிடம் உங்களுக்கும், கொரோனா நிதி வாங்கித்தருகிறேன். அதற்கு போட்டோ எடுக்க வேண்டும். நகைகள் அணிந்திருந்தால் நிதி கிடைக்காது. அவைகளை கழற்றிவைத்துவிடுங்கள் என்று கூறினார்.

    இதனால் சுந்தரி தான் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கழற்றி கட்டிலில் தலையணைக்கு கீழே வைத்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் எனக்கு டீ கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். சுந்தரி டீ போட சமையல் கட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் டீயுடன் வந்தபோது மர்ம நபரை காணவில்லை. மேலும் தலையணைக்கு அடியில் வைத்திருந்த நகைகளையும் காணவில்லை. வந்தவர் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து உடனே அவர் கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தார்கள்.

    இந்தநிலையில் கோபி போலீசார் கரட்டடிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் திரும்பி செல்ல முயன்றார். இதனால் ஊஷாரான போலீசார் அவரை பிடித்து விசாரித்தார்கள். அதில் அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 46) என்பதும், சுந்தரியிடம் நகையை அபேஸ் செய்தது அவர்தான் என்பதும் தெரிந்தது.

    மேலும் விருதுநகர், கூகலூர், பேரூர், தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல கொள்ளை, திருட்டு வழக்குகள் இருக்கும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தார்கள்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது52). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மரகதம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவனர பிரிந்து சென்று விட்டார்.

    செல்வன் தனது மகளை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன் பாளையம் காலனியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். செல்வன் மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை செல்வன் வெங்கநாயக்கன்பாளையம் காலனி பெருமள்கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். செல்வன் உடல் அருகே ஹாலோ பிளாக்கல் கிடந்தது. எனவே அவர் தலையில் யாரோ மர்ம நபர் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்கிற பண்ணாரி (42) என்பதும் அவர் தான் செல்வனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலை குறித்து போலீசார் கூறியதாவது:-

    செல்வன் கட்டிட வேலைக்கு செல்லும் போது நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதேசமயம் அந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்கிற பண்ணாரி உடனும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் அந்தப்பெண் செல்வன் உடன் தொடர்பு வைத்திருப்பதை பண்ணாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வெங்கநாயக்கன் பாளையத்தில் உள்ள கட்டிடத்தில் செல்வனும் அந்தப் பெண்ணும் ஒன்றாக இருந்துள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பண்ணாரி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து சென்று விட்டார். எனினும் ஆத்திரம் அடங்காத பண்ணாரி அருகிலிருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து செல்வன் தலையில் தாக்கியுள்ளார். இது செல்வன் பரிதாபமாக இறந்துள்ளார்.

    இவ்வாறு போலீஸ் தெரிவித்தனர்.

    மேலும் கட்டிட தொழிலாளி பண்ணாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையை அவர் மட்டும் செய்தாரா? அல்லது அந்த பெண்ணுக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புஞ்சை புளியம்பட்டியில் தலையில் கல்லைபோட்டு கோவை தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் அன்னூர் பொன்னே கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் தனது மகளை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வெங்கபாளையம் என்ற பகுதியில் திருமணம் செய்து கொடுத்தார்.

    பின்னர் செல்வமும் தனது மகளுடனே தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று வேலைக்கு சென்ற செல்வம் இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

    இந்த நிலையில் வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் செல்வம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு பவானிசாகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அப்போது செல்வம் தலையில் ஹலோபிளாக் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    ஈரோட்டில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கறி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் முகமது பாசிலுக்கு ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி முகமது பாசில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

    இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து இந்த சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் முகமது பாசில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.
    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அந்த தண்ணீர் நள்ளிரவு முதல் பவானிசாகர் அணைக்கு வரத்தொடங்கியது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு 4852 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 483 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலில் 800 கனஅடியும், பவானி ஆற்றில் 3517 கனஅடியும் என மொத்தம் 4800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகரித்து வருகிறது.

    மேலும் அணையில் இருந்து கீழ் பவானி பாசனம் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வாசுதேவநல்லூர் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் விஜய் கணேஷ்(வயது 21).

    இவர் நேற்று அதிகாலை சிவகிரி அருகே உள்ள கூடலூர் மொட்டை மலை பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுத்த பிரச்சனையில் விஜய் கணேசின் நண்பர்கள் 3 பேர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(21), திருமலாபுரத்தை சேர்ந்த கோபி ஆனந்த்(22), அருளாச்சியை சேர்ந்த மகேந்திரன்(18) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

    அதில் விஜய் கணேசிடம் அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பி கொடுக்காததால் பணம் தந்த பிறகு வாங்கி கொள்ளுமாறு அவரது செல்போனை விஜய் கணேஷ் வாங்கி கொண்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களான கோபி ஆனந்த மற்றும் மகேந்திரன் ஆகியோர் மூலம் செல்போனில் மொட்டை மலை பகுதிக்கு விஜய் கணேசை அழைத்துள்ளார். அங்கு வைத்து நடந்த தகராறில் 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    பவானி அருகே மகன்களுக்கு நீச்சல் கற்று கொடுத்த தந்தை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஜம்பை துருசாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). எலக்ட்ரீசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சக்திவேல் தனது மகன்களுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக பவானி அடுத்த தளவாய்பேட்டை வைரமங்கலம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றார்.

    தற்போது பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சக்திவேல் மற்றும் அவரது மகன்கள் ஆற்றில் குளித்து விட்டு நீச்சல் கற்று கொண்டு இருந்தனர்.

    அப்போது தண்ணீரில் சென்ற வாழை மரத்தைப் பிடிக்க சக்திவேல் முயன்றார். இதில் அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட அவரது மகன்கள் கதறி அழுதனர்.

    அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நீரேற்று நிலையம் பகுதியில் சக்திவேல் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் இன்று காலை முதல் வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையை ஆதாரமாக கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர்ஆகிய மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது நேற்று பாதியாக குறைந்தது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் இன்று அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3058 கனஅடி தண்ணீர்வந்து கொண்டு இருக்கிறது.

    பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் இன்று காலை முதல் வினாடிக்கு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 477 கனஅடியும், பவானி ஆற்றில் 1723 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரம் கன அடி பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவி வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கும், துரைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த நந்தகுமார் புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழ்செல்வி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சந்தானம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ராம்பிரபு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ரவி வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கும், துரைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவானந்தம் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்துக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் ஈரோடு டவுன் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த செல்வம், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.

    இதேபோல், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகராஜ் பவானி போலீஸ் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த (கட்டுப்பாட்டு அறை) சந்திரகுமார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும், வாசுகி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், செல்வகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கும், சின்னசாமி பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கும், ராஜமாணிக்கம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கும், ரத்தினம் தாளவாடி போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மோகனசுந்தரம் ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிவபாலசண்முகஜெயராஜ் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மதிவாணன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கஜலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கும், சித்தோடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தைலா ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 55 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    ×