என் மலர்tooltip icon

    ஈரோடு

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீர்காழி:

    நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினத்திலிருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்த மாணவர்களிடம் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர் மற்றும் முகவரியை விசாரித்தனராம். அதற்கு கல்லூரி மாணவர்கள் ஏன் விசாரிக்கிறார்கள் என்று கேட்டபோது விவரம் ஏதும் கூறாமல் மர்ம நபர்கள் சென்று விட்டனராம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் நாகப்பட்டினத்தில் இருந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து வந்த மாணவர்கள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது சீர்காழி தாடாளன் மேலவீதியை சேர்ந்த பொறியியல் மாணவர் சந்தோஷ் குமார் (18) இதுகுறித்து கேட்டபோது அந்த மாணவரை தகாத வார்தைகளால் திட்டி அடித்த அந்த நபர்கள் அவருடன் இருந்த சக நண்பர்களை கல்லால் அடிக்க முயன்றுள்ளனர். மேலும் கல்லூரி பேருந்தை உடைத்து, கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 பேர் தப்பிச் சென்றுவிட்டனராம்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறு கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பொதுமக்கள் ஒன்று கூடி விட்டனர். இது குறித்து அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீர்காழி கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், அடித்து கல்லூரி பேருந்தை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற 5 பேர் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவை கண்டித்து இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடிகர் சூர்யாவை கண்டித்து இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் தா.ப. பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பிரபு, ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் பொ.வை.ஆறுமுகம், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை கைது செய்ய வலியுறுத்தியும், அன்புமணி ராமதாஸ் எம்.பி. இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோசங்கள் எழுப்பினர்.


    பல்லடம் எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
    பல்லடம்:

    தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க. தேர்தல் பணி குறித்த கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் தலைமை வகித்தார். 

    நகரச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் பல்லடம் எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தர்மராஜ், வைஸ் பழனிச்சாமி, பானு பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கண்ணும் கண்ணும் என்ற படத்தில் நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என புகார் செய்யும் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல் ஈரோட்டில் பெண் ஒருவர் தனது வீட்டை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி சுந்தரி (வயது 59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பவானி அரசு மருத்துவமனையின் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதிலிருந்து கிடைத்த தொகை மட்டும் வங்கிகளில் கடன் பெற்று ரூ.22 லட்சம் மதிப்பில் பவானி அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 9 சென்ட் நிலத்தை வாங்கி 2009-ஆம் ஆண்டு புதிதாக வீடு ஒன்றை கட்டி அதில் வசித்துள்ளார்.

    இந்நிலையில் 2015 -ம் ஆண்டு செல்லமுத்துவுக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவ வசதிக்காக குடும்பத்துடன் 2015-ல் செல்லமுத்து ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் 2019 -ம் ஆண்டு செல்லமுத்து உடல்நலம் சரியில்லாமல் இறந்தார்.

    அதன்பின் சுந்தரி பவானி தொட்டிபாளையத்தில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தங்கலாம் என்று சென்று உள்ளார். ஆனால் அங்கு வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு இடித்து அகற்றப்பட்டதுடன், நிலத்திற்கான எல்லைக் கற்களும் இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதன் பின் வருவாய்த்துறையில் ஆவணங்களை சரிபார்த்த போது அந்த இடம் வேறொருவரின் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில், தனது வீடு மற்றும் நிலத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் சுந்தரி மனு அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் புகார் குறித்து கள விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.
    1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

    2009ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ படத்தை ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார்.

    மனோகர்

    இந்நிலையில் இன்று (நவ.17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    வாரிசு சான்று வழங்க லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிவில் சப்ளை கார்ப்பரேசனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2011-ம் ஆண்டு சுப்பிரமணி இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி சிவில் கார்ப்பரேசனில் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார். அவர்கள் வாரிசு சான்றிதழ் கேட்டனர்.

    இதையடுத்து ராஜேஸ்வரி கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு கிழக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மனோகரன் என்பவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவர் ரூ.1000 லஞ்சமாக கேட்டார்.

    இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஸ்வரி இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் லஞ்ச பணத்தை வருவாய் ஆய்வாளர் மனோகரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு லஞ்சம் கேட்டதற்கு 1 ஆண்டும், லஞ்சம் வாங்கியதற்கு 2 ஆண்டும் என மொத்தம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து மனோகரன் அபராதத்தை செலுத்தினார். மேலும் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதித்ததால் அவர் ஜாமீனில் சென்றார்.

    3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வருவாய் ஆய்வாளர் மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். எனவே இந்த தீர்ப்பு குறித்து நீலகிரி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மனோகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
    அந்தியூர் அருகே உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் விராலிக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி செலம்பாயி. இவர் ஈரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகள் கீதா (17) அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 2-வது மகள் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கீதாவுடன் அவரது உறவுக்கார பெண் தேவி என்பவரது மகள் காவியா என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி காவியாவின் தாய் தேவி கீதாவை திட்டி உள்ளார். என் மகளின் செல்போன் எண்ணை ஏன் கொடுத்தாய் என்று கூறி திட்டி மிரட்டி உள்ளார். உன்னால் என் மகள் கெட்டு போய்விடுவாள் என்று கூறி உள்ளார். இதனால் மாணவி கீதா மனம் உடைந்தார்.

    மாணவி கீதா வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்றார். மீண்டும் அவர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது ஈரோட்டில் வேலை பார்க்கும் தனது தாய் செலம்பாயிடம் போனில் பேசினார். அப்போது அவர் காவியாவின் தாய் தேவி என்னை மிரட்டினார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி உள்ளார். அதற்கு அவரது தாய் செலம்பாயி அவசரப்பட வேண்டாம். நான் அங்கு வருகிறேன். பேசிக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

    ஆனால் இதை மாணவி கீதா ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் யாரும் இல்லாததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தாய் செலம்பாயி மீண்டும் தனது மகளை தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் இருந்தவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

    அங்கு சென்று பார்த்தபோது மாணவி கீதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் செலம்பாயிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தாய் செலம்பாயி கொடுத்த தகவலின் அடிப்படையில் உறவுக்கார பெண் தேவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவுக்கார பெண் மிரட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் ஆஜராகி சாட்சியம் அளித்தபோது, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து படுகாயங்களுடன் ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு நேற்று மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கிருபை கிரேனாப் என்பவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பகல் 12 மணியளவில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது.

    பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் கிருபை கிரேனாப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரையும் படுகாயங்களுடன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு மருந்து செலுத்துவதற்காக ஊசியுடன் அவர்களிடம் சென்றேன்.

    இருவரின் இடுப்பு பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்தை பார்த்தேன் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பினர் செவிலியர் கிருபையிடம், உடனடியாக இதுபற்றி டாக்டரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கிருபை, இவர்களைப்போல சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானவர்கள் தங்களின் உடல்களில் கடுமையான காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் அருகிலும் போலீசார் நின்று கொண்டு இருந்தனர். இதனால் இதுபற்றி நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

    அடுத்த விசாரணையின்போது, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மாஜிஸ்திரேட்டுவிடம் கொடுத்தது தொடர்பாக கேமரா தொழில்நுட்ப பணியாளர் இன்பன்ட் அந்தோணி, வருகிற 19-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். இவர் தான் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து கொடுத்துள்ளார்.

    இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை தாண்டி உள்ளதால் அணைக்கு வரும் 45 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. மேட்டூர் அணை கால்வாயில் இருந்து நேற்றிரவு முதல் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் 24 மணி நேரமும் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சித்தோடு அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    சித்தோடு, நடுப்பாளையம் பகுதியை சேர்தவர் கார்த்திபன் (29). பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார்.

    கடந்த 6 மாதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் ஈரோடு சென்று பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். பின் வாட்ஸ் அப்பில் ஏதோ தகவல் போட்டிருப்பதாக உறவினர் ஒருவரின் போன் மூலம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கார்த்திபன் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்க்கும் போது இரும்பு ஆங்கிலில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சித்தோடு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கோவில் நிலத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவதும் கோவில் நிலத்தை அபகரிப்பதும், கோவில் நிலத்தில் உழுது பிழைப்பதும் வாஸ்துபடி குற்றமாகவே கருதப்படுகிறது.


    நீங்கள் கட்டியுள்ள வீட்டில் வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்துக் கொள்வீர்களானால் இது சிறப்பைத் தரும்.

    குறிப்பாக வீட்டின் தென் மேற்கும் வடமேற்கும் படுக்கை அறை அமைத்துக் கொள்ள சிறந்த இடங்களே என்றாலும், முதலிடம் பெறுவது தென்மேற்கு மூலைதான். எனவே எப்படியாவது தென் மேற்கு மூலையை படுக்கை அறைக்குப் பயன்படுத்த வேண்டும்.

    சிலர்தென் மேற்கில் மேல் மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைப்பதும் நன்மை தானே என்று சொல்வதுண்டு. உண்மைதான். ஆனால், தென்மேற்கில் படிக்கட்டு அமைத்தாலும், தென் மேற்கில் படுக்கை அறை வரவேண்டும்.

    இதுபோல ஒரு வீட்டில் இரண்டாவது முக்கியமான இடம் எனில் அது வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைப்பதுதான்.

    ஆனால் மேற்கு பார்த்த தலைவாசல் கொண்ட வீட்டிற்கு வடமேற்கில் அல்லவா தலைவாசல் வரும். அது தானே அந்த இடத்திற்கு உச்சஸ்தானம், பின்பு எப்படி வடமேற்கில் படுக்கை அறை அமைக்க முடியும் எனத் தோன்றும்.

    முன் சொன்னது போலவே, வடமேற்கில் தலைவாசல் வைத்தாலும், வாசலுக்கு தென்திசையில் படுக்கை அறை இருப்பது விசே‌ஷமே.

    வடமேற்குப் படுக்கை அறை வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நன்மையே தரும்.

    சரி இப்படி வடமேற்கில் அமையும் படுக்கை அறைக்கு அந்த அறையின் தெற்குப் பக்கத்தில் கிழக்கு சார்ந்தும், கிழக்குப் பக்கத்தில் வடக்கு சார்ந்தும் வாசல் வைத்துக் கொள்ள வேண்டும்.

    உள் அறைகளில் வரும் வாசல்களைப் பொறுத்தளவு அளவுகளில் கட்டாயமில்லை. தலைவாசலுக்கு மட்டும்தான் அகல, உயர அளவுகளில் விதிகள் உண்டு.

    வடமேற்கு மூலையில் உள்ள இந்த படுக்கை அறையில் ஜன்னல் அமைக்கும் போது வடக்குச் சுவற்றின் கிழக்கு ஒரத்திலும் அல்லது வடக்கு சுவரின் மையத்திலும், மேற்குச் சுவரின் வடக்கு ஒரத்திலும் ஜன்னல்கள் வைக்கலாம். ஜன்னல்களின் அளவுகளிலும் விதிகள் இல்லை.

    மேலும் இந்த வடமேற்கு மூலையின் படுக்கை அறையில் கழிவறையை அறையின் வடக்குச் சுவரை ஒட்டி, கிழக்கு மேற்காக அமைத்துக் கொள்ளலாம். கழிவறையின் உள்ளே வடமேற்கு மூலையில் தெற்கு நோக்கி கழிவு உபரகரணத்தைப் பொருத்த வேண்டும். குளிக்கும் இடமாக கழிவறையின் உள்ளே வடகிழக்கு மூலையைப் பயன்படுத்தலாம். முகம் கழுவ வாஷ்பேசின் வைக்க தென்மேற்கு மூலையைப் பயன்படுத்தலாம்.

    கழிவறையின் வாசல் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் அமையலாம். முடிந்த மட்டும் வடமேற்கு மூலையின் கழிவறைத் தளத்தை பள்ளம் செய்யாமல் வேண்டுமெனில் சற்று உயர்த்தியும் கட்டலாம்.

    வடமேற்கு மூலையில் அமைந்துள்ள இந்த படுக்கை அறையில் தெற்குச்சுவர் சார்ந்து, மேற்கு நோக்கியும், அறையின் மையப் பகுதியில் தெற்கு நோக்கியும் கட்டிப் போடலாம்.

    அறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் திறந்து மூடும்படி கபோடுகள் வைத்துக் கொள்ளலாம்.

    ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

    முக்கியமான விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பத்திரங்கள் போன்றவற்றை இந்த கபோடுகளில் பத்திரப்படுத்தலாம்.

    இந்த அறையின் கிழக்குச்சுவர் சார்ந்து வடக்கு, தெற்காக கப்போர்டுகள் மற்றும் துணிகள் வைக்கும் பீரோக்கள் வைக்கலாம். ஆனால் அந்த கிழக்குச்சுவரில் பரண்கள் அமைக்கக் கூடாது.

    இந்த வடமேற்கு அறையின் வடகிழக்கு மூலையில் டிரஸ்சிங் அறையாகப் பயன்படுத்தலாம். கண்ணாடியைக் கிழக்குச் சுவற்றில் மாட்டிக் கொள்ளலாம். சிலர் வடமேற்கு அறையின் குளியல் அறை உள்ளே பரண்கள் அமைப்பார்கள். இது பெருந் தவறு.

    அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் குறைந்த பட்சமாக நீங்கள் வாங்கும் வீட்டின் உள்ளே வடமேற்கில் படுக்கை அறை உள்ளதா என்று பார்த்துக் கொள்வது நல்லது. தென்மேற்கு மூலையிலும் வடமேற்கு மூலையிலும் உங்கள் வீட்டில் படுக்கை அறை அமைந்து அதன் உள்ளே நான் முன்னே சொன்னபடி உள் அமைப்புகளை வைத்துக் கொண்டால் அநேகமாக 50 சதவீதம் வாஸ்து தோ‌ஷம் கழிந்து போகும்.

    சிலர் வடமேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்துக் கொண்டு, அந்த அறையின் உள்ளே தென்பகுதியில் கிழக்கு மேற்காக கழிவறை அமைப்பார்கள் இது தவறு.

    இதுபோல மேற்கு சுவர் ஒரத்தில் தெற்கு வடக்காக கழிவறை அமைப்பார்கள் இதுவும் தவறுதான்.

    சரி உங்கள் வீட்டின் வடக்கே சரியாக 360 டிகிரியில் படுக்கை அறை அமைந்தால் எப்படி இருக்கும்?

    அதாவது நேர் வடக்கு என்பது குபேரனுக்குச் சொந்தமான இடம் என்பதால் இது ஒரளவுக்கு நன்மைதான். சில வீடுகளில் குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏதோ காரணத்தால் இந்த 360டிகிரி எனும் வடக்கு வீட்டுக்குள் இல்லாமலே போய்விடும். எப்போதுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒரு போதும் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இராது.

    அதன் அடிப்படையில் இப்படி வடக்கு என்பது வீட்டுக்குள் வராமல் போவது வாஸ்து தோ‌ஷத்தைத் தரும்.

    சிலர் உழைத்து உழைத்து வீணாகப் போவதும், பெரும் தொழில் அதிபர்கள் கூட கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆவதும் இப்படியான குறைகளால் தான்.

    எனவே நீங்கள் வீடு கட்டும் போது வடக்குத் திசைக்கு அதிக முக்கியத்துவம்தர வேண்டியது கட்டாய மாகிறது.

    இப்படியான வடக்குத் திசையில் உங்கள் வீட்டில் படுக்கை அறை அமையுமானால், முடிந்த மட்டும் அந்த அறையின் உள்ளே கழிவறை அமைத்துக்கொள்ள வேண்டாம். கட்டாயம் வேண்டுமெனில் குளிப்பதற்கு மட்டும் அறை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கும் குளியல் அறையும் வடக்கிலோ, தெற்கிலோ அல்லாமல் மேற்குப் பக்கம் மட்டும் அமைத்துக் கொள்ளலாம். அதாவது மேற்குச்சுவர் ஒட்டி தெற்கு வடக்காக அமைக்க வேண்டும்.

    அதுபோலவே இந்த வடக்குத்திசையின் படுக்கை அறை உள்ளே எந்தச் சுவரிலும் பரன்கள் அமைக்கக்கூடாது. முடிந்தால் மரத்தாலான தற்காலிக கப்போர்டுகள் வைத்துக் கொள்ளலாம்.

    இப்படியான தற்காலிகக் கப்போர்டுகளையும் தெற்கு மற்றும் மேற்குச்சுவர் ஒரத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

    இந்த அறையில் கிழக்கு நோக்கி அறையின் மையப்பாகத்தில் கட்டில் போட்டு கிழக்கில் தலை வைத்துத் தூங்கலாம்.

    குறிப்பாக ஒரு வீட்டில் உள்ள அறைகளில் கிழக்கு நோக்கித் தலைவைத்து படுப்பது இந்த வடக்குப்பாகத்தில் அமைந்த படுக்கை அறையில் மட்டுமே.

    வடக்கு பாகத்தில் அமைந்துள்ள இந்த படுக்கை அறை குறிப்பாக இளம் பிள்ளைகள் அமர்ந்து படிப்பதற்கு மிகப் பொருத்தமான இடம். அதிலும் வடக்குச் சுவர் சார்ந்து டேபிள் போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்து படித்தார்களாயின் குழந்தைகள் கல்வியில், அறிவாற்றலில், ஒழுக்கத்தில், பழக்க வழக்கங்களில் மிக அற்புதமான பலன் பெறுவார்கள்.

    இந்த அறை நூலகமாக பயன்படுத்த இசை சார்ந்த பயிற்சி பெறுவதற்கு கலைகள் சார்ந்த அனைத்துப் பயிற்சிகளுக்கும் மிகச் சிறப்பாக அமையும்.

    குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இது மிகப் பொருத்தமான இடம். வீர, விவேகத்தோடு பிள்ளைகள் வளருவார்கள்.

    பழைய செட்டிநாட்டு வீடுகளில் இந்த வடக்குப் பாகத்தில் அமைந்துள்ள இந்த அறைகளில்தான் பணப்பெட்டகம் வைப்பதும், அதையே பூஜை அறையாக பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

    கிராமப்புற விவசாயக் குடும்பங்களில் வீட்டின் இந்த மையப் பகுதியில் தான் விதை நெல் போன்ற அடுத்த மகசூலுக்கான விதைகளைச் சேமிப்பார்கள்.

    குறிப்பாக வீட்டுக்கு வெளியே கூட இந்த வடக்கு மையபாகத்தில் வாழைமரம் நட்டு வைப்பார்கள்.

    ஆனால் இன்றைய தலைமுறையினர் இதில் நாட்டம் கொள்வதுமில்லை. தெரிவதுமில்லை. முற்போக்கு என்ற கண்ணோட்டத்தில் நம் பாரம்பரிய வி‌ஷயங்களை நாம் மறந்து கொண்டு இருக்கிறோம். இழந்து கொண்டு வருகிறோம்.

    இனி கோவிலுக்குப் பக்கத்தில் வீடு, நிலம் அமையலாமா? அதேபோல் கோவில் நிலத்தில் குடி இருக்கலாமா? என்ற செய்திகளை இங்கே காணலாம்.

    அதாவது கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் வீடு அமையுமானால் அது சிறப்பில்லை. பொதுவாக கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருந்தால் வருவோர், போவோர் ஜன சந்தடியால் தொல்லைகள் உண்டாகும் என்று நினைத்து இது சொல்லப்படவில்லை. வாஸ்து சாஸ்திரப்படி கோவிலுக்குப் பக்கத்தில் குறிப்பாக கோவிலுக்கு கிழக்குப்பக்கத்தில் குடியிருந்தால் அங்கு வாழ்வோரின் கடைசிக்காலம் மிகக் கஷ்டமாக கழியும் என்றும் அந்த வீட்டுப் பிள்ளைகளிடம் ஒற்றுமை குறைந்து ஆளுக்கு ஒருபக்கம் போவார்கள் என்றும் ஊர்ப்பகை, பொல்லாப்பு, அவப்பெயர் என்று அந்த வீட்டை ஆண்டவருக்கு ஏராளமான துக்கங்கள் வரும் என்றும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

    மேலும் தாரபங்கம், புத்திர தோ‌ஷம், புத்திரசோகம் உண்டாகும் என்பார்கள். எனவே கோவிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் அதுவும் கோவில் நிலத்தில் குடியிருந்து ஒரு வேளை அந்த கோவிலுக்கு ராஜேகோபுரம் இருந்து, மாலை நேர வெயிலில் அந்த ராஜகோபுரத்தின் நிழலானது இந்த வீட்டின் மேலே விழுமாயின் முன்னே சொன்ன அனைத்தும் நடந்தேறும்.

    சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டுவதாயின் கூட கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழும்படி வீடு கட்டுவதைத் தவிர்க்கலாம். இதுபோல கோவில் உள்ள இடத்தில் கோவிலின் மேற்கு பக்கத்திலும் வீடு கட்டிக் குடியேறுவது சிறப்பில்லை.

    மேற்குத் திசையில் ஒரு வேளை அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி அந்த அடுக்குமாடிக் கட்டிடமானது கோவில் ராஜகோபுரத்தை விட மிக அதிக உயரமாக கட்டப்படுமாயின் ஒரளவு தொந்தரவுகள் இருக்காது.

    கோவில் கோபுரத்தைவிட குறைவான உயரத்தில் வீடு அமைந்து அந்த வீட்டை முழுமையாக காலைச்சூரியன் கோபுர நிழலானது வீட்டின் மேல் விழுமாயின் இதுவும் வாஸ்து தோ‌ஷமே.

    இந்த வீடானது கோவில் நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் முழு தோ‌ஷத்தையும் அந்த வீட்டார் அனுபவிப்பார்கள்.

    கூடவே கோவில் நிலத்தை அபகரிப்பது அதில் வீடு, தொழில் நடத்துவது, ஏன் விவசாயம் செய்வது எதுவுமே மிகச் சிறப்பைத் தராது.

    பொதுவாக பிள்ளை இல்லாதவர்கள் மேலும் பிள்ளை இல்லாது இருந்து தனக்கு முன்னே கணவனை இழந்து விட்டவர்களால் எழுதி வைக்கப்பட்ட சொத்துகளே கோவில் நிலங்களாகும்.

    இப்படி அந்த சொத்து அதனுடைய உரிமையாளர்களுக்கே பயன்படாமல் போகிறது என்றால் நிச்சயம் வாஸ்துவின்படி அந்த சொத்தில் தோ‌ஷம் உள்ளது என்பதே பொருள்.

    அப்படிப்பட்ட சொத்தை பின்வரும் காலங்களில் யார் எடுத்துக் கொண்டாலும் அதில் தொல்லைகளே மிஞ்சும்.

    எனக்கு தெரிய கோவில் நிலங்களை உழுது பிழைத்தவர்கள் கூட பெரிய மேன்மை அடைந்த செய்திகள் இல்லை.

    எனவே தான் அந்த சொத்தை தன் சொந்தங்களே பெற்றுக்கொள்ளாமல் கோவில்களுக்கு எழுதி வைத்தார்கள். எனவே தான் “கோவில் சொத்து குல நாசம்” என்று சொல்லப்பட்டது.

    ஆனால் இன்று கதை வேறு, இதுபோலத்தான் கோவிலுக்குப் பக்கத்தில் நீங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் நிலம் வாங்கி வீடு கட்டுவதாயின் கூட கவனமாக செயல்பட வேண்டும்.

    கோவிலுக்கு நேர் எதிர் திசையான 180 டிகிரி கோணத்திலும் அதேபோல 360 டிகிரி கோணமான தெற்கிலும், வடக்கிலும் உங்கள் சொந்த இடங்களில் வீடு கட்டிக் குடியேறலாம்.

    இதையெல்லாம் காரணமாக வைத்து தான் அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் கோயிலை ஊருக்கு வெளியே கட்டினார்கள். இன்று அதுவும் தலைகீழாகப் போனது.

    எப்படியாயினும், கோவில் நிலத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வீடு கட்டுவதும் கோவில் நிலத்தை அபகரிப்பதும், கோவில் நிலத்தில் உழுது பிழைப்பதும் வாஸ்துபடி குற்றமாகவே கருதப்படுகிறது.

    தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

    தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்காவில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.

    கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் இன்று ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதேப்போல் வெண்டைக்காய் போன வாரம் ரூ.60, இந்த வாரம் ரூ.100, பீர்க்கங்காய் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.70, வாழைக்காய் போன வாரம் ரூ.30, இந்த வாரம் ரூ.50, கேரட் போன வாரம் ரூ.55 இந்த வாரம் ரூ.80, பீட்ரூட் போன வாரம் ரூ.40, இந்த வாரம் ரூ.50, கருப்பு அவரைக்காய் போன வாரம் ரூ.90, இந்த வாரம் ரூ.130, முருங்கைக்காய் போன வாரம் ரூ.100, இந்த வாரம் ரூ.150 -க்கும் விற்கப்பட்டது.

    தொடர்ந்து தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கடந்த வாரம் ரூ.100-க்கு விற்ற தக்காளி விலை இந்த வாரம் சில்லரை விற்பனையில் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, மேச்சேரி, தாளவாடி பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி ஏற்றுமதி செய்யப்படும்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகள் வரத்தும் கனமழையால் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

    காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ×