என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என். பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போலி லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் டி.என்.பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த தண்டபாணி (47) என்பவர், கே.என்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தது கொண்டு இருந்தார். அப்போது நால் ரோட்டை சேர்ந்த இசக்கிதுரை (42), கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமசாமி (59), ராஜேந்திரன் (50), சிங்கப்பூர் ராஜா மற்றும் அன்னூர் பழனிச்சாமி ஆகியோர் அங்கு வந்து அவரிடம் லாட்டரி டிக்கெட் வாங்குமாறு கட்டாயப்படுத்தினர். இதையடுத்து தண்டபாணி அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அப்போது அது போலி லாட்டரி டிக்கெட் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தண்டபாணி பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இசக்கிராஜா, ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் போலி லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்களிடம் இருந்து 120 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிங்கப்பூர் ராஜா, பழனிச்சாமி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (51). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தங்கமணி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் தங்கமணி அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கமணியின் தாய் இறந்துவிட்டார். இதிலிருந்து தங்கமணி தனது மனைவி, மகளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் வசந்தி தனது மகளுடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தங்கமணி மட்டும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தங்கமணி வீட்டு கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வசந்திக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வசந்தி தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். பதில் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் தங்கமணி தூக்குப்போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பட்லூர் ஊராட்சி சொக்கநாதமலையூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளித் திருப்பூர்-சென்னம்பட்டி செல்லும் வழியில் பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும் சில நேரங்களில் குடிநீர் கலங்கலாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை சொக்கநாத மலையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார், பட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி தண்ணீர் சீரான முறையில் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் ஒலகடம்- வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி செல்வமணி (வயது 62). நேற்று மாலை இவர் தனது வீட்டில் இருந்து 46 புதூர் அருகே உள்ள தீரன்நகர் சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.
அப்போது அந்த மூதாட்டிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ரிங் ரோடு அருகே செல்வமணி நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மூதாட்டி திருடன்.. திருடன் என கத்தினார். அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். செயின் பறிப்பு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.
வழக்கம்போல் இன்று அதிகாலையும் கோபி செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்துக்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் தபால்நிலையம் அருகே ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் தனது மோட்டார் சைக்கிளுடன் சக்திவேல் இறந்து கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
சக்திவேல் எப்படி இறந்தார் என்று தெரிய வில்லை. அவர் இறந்து கிடந்த பகுதியில் ரத்தக்கறை இருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தபோது தவறி விழுந்து அவர் இறந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலியானாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சக்திவேலுக்கு விஜய லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மோகனாராணி. இவர்களுக்கு பிரியா, தனலட்சுமி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிரியா காதல் திருமணம் செய்து எழுமாத்தூர் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் தனலட்சுமி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தனலட்சுமி தனது அக்காவைப் பார்ப்பதற்காக அடிக்கடி எழுமாத்தூர் சென்று வந்தார்.
அப்போது அக்கா கணவரின் உறவினர் ஒருவரிடம் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனலட்சுமி பெற்றோர் உனக்கு சிறு வயதாக இருப்பதால் இப்போதைக்கு கல்லூரி படிப்பை முடித்து பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து தனலட்சுமி காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி சம்பவத்தன்று வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது பெற்றோர் கேட்டபோது தான் விஷம் (எலி மருந்து) குடித்து விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






