search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode robbery"

    • கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர்.
    • வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (61). இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்.

    இவரது மனைவி சபிதா. இவர்களது மகள் தீபிகா. கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். தீபிகாவிற்கு வரன் பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

    மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சில பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்காக சென்று விட்டார். அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். வீட்டின் முன் பக்க கதவை திறந்து அர்ச்சுனன் மற்றும் அவரது மனைவி வீட்டுக்குள்ளே சென்றனர்.

    அப்போது வீட்டில் சமையல் அறையில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் இருந்த பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மேல் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 பீரோக்களிலும் இருந்த 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அர்ச்சுனன் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போலீசார் வீட்டின் பின்பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் பின்பக்க காம்பவுண்ட் சுவர் அருகே ஒரு பேக் இருப்பது தெரியவந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 30 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிக்கும் போது கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பேக் தவறி வீட்டுக்குள் விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    அறச்சலூர்:

    அறச்சலூரை அடுத்த வடபழனி குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறப்பகவுண்டர்(75) விவசாயி. இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது ஒரே மகன் ராஜசேகர். சாப்ட்வேர் பொறியாளரான ராஜசேகருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது சென்னையில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

    குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ஆறப்பகவுண்டரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டு மெயின்கேட்டை திறக்காமல் உள்ளே சென்று வீட்டின் உள் கதவை உடைத்து அந்த வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் 1½ பவுன் நகையுடன் அங்கிருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பிய ஆறப்பகவுண்டர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிந்து தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வடபழனி குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
    • வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.

    பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இருந்தாலும் இதனையும் மீறி ஒரு சில இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்களிடம் 7 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன். திருடன்.. என கத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.
    • இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையம் பிரிவில் முத்தாயம்மாள் (52) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் இவர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது முத்தாயம்மாள் மளிகை கடைக்கு ஒரு வாலிபர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தார். அவர் கேட்ட பொருட்களை முத்தாயம்மாள் அவரிடம் கொடுத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்தாயம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். சிறிது தூரத்தில் மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்தாயம்மாள் திருடன்..திருடன் என கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி கொள்ளையர்களை விரட்டினர். அப்போது அந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை சாலையோரம் போட்டுவிட்டு அங்கு உள்ள மறைவான இடத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோட்டில் குடும்பத்துடன் வெளியூர் சென்ற டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு டாக்டர் தங்கவேல் வீதியை சேர்ந்தவர் விஷ்ணுதீபக். தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோக சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஷ்ணுதீபக் மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்தினருடன் கடந்த 22-ந்தேதி விருதாச்சலத்திற்கு சென்று விட்டார்.

    இதனையடுத்து இன்று அதிகாலை குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 45 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய தெலுங்கானாவை சேர்ந்த 3 தம்பதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டலில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை போயிருந்தது. அதேபோல் மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு போயிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இன்று ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் ஈரோடு மாநகர் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள முன்னம் அடுத்த செங்கோடம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 64) விவசாயி.

    மாரிமுத்து சம்பவத்தன்று வேலை வி‌ஷயமாக வெளியே சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் மாரிமுத்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து இருந்தன. பீரோவில் இருந்த தங்க கொடி செயின், மோதிரம் என மொத்தம் 8 ½ பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

    இதுகுறித்து மாரிமுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

    மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னை திருவேல்லிகேனி பகுதியை சேர்ந்தவர் முகமது சாகிர் பாஷா(42). இவரது மனைவி காதர்பீவி(40). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர்.

    நள்ளிரவில் காதர்பீவி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். ரெயில் ஈரோடு ஜங்‌ஷன் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் வெளியே நின்று கொண்டு காதர்பீவி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றான்.

    இதில் உஷார் ஆன அவர், செயினை இருக்கமாக பிடித்து கொண்டதால் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரிடம் சிக்கியது. இதில் 4 பவுன் செயினில், 2 பவுன் மட்டுமே தப்பியது.

    இதுகுறித்து முகமது சாகீர் பாஷா இமெயில் மூலம் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
    ஈரோடு பழைபாளையத்தில் இன்று அதிகாலை தனியார் கம்பெனி மேலாளரை அரிவாளால் மிரட்டி 35 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி பெயர் வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் கவுதம் ஓசூரில் வேலை பார்க்கிறார். இளையமகன் ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறாள்.

    நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கீழ்வீடு வாடைக்கு விடப்பட்டுள்ளது. மேல் வீட்டில் ராமநாதன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இவர்கள் 4 பேருக்கும் 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்கும்.

    2பேர் கீழே நின்று கொண்டனர். மற்ற 2 பேர் மாடிக்கு சென்றனர். ஒருவன் கதவை உடைத்தான். 2 பேர் கைகளிலும் அரிவாள் இருந்தது.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கிகொண்டிருந்த ராமநாதன் மணியம்மை, ஸ்ரீராம் 3 பேரும் முழித்தனர். ஒருவன் மணியம்மை கழுத்தில் அரிவாளை வைத்தான். இன்னொருவன் மாணவன் ஸ்ரீராம் கழுத்தின் அரிவாளை வைத்தான்.

    பிறகு கொள்ளையர்கள் “நகை பணம் இருக்கும் இடத்தை சொல்லி விடுங்கள். இல்லையென்றால் அரிவாளால் வெட்டி கொன்று விடுவோம்” என்று மிரட்டினர்.

    இதில் பயந்துபோன அவர்கள் நகை இருக்கும் இடத்தை கூறினர். பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து 35 பவுன் நகை ஒரு வைரநகை, வெள்ளி பொருட்கள், 6 செல்போன்கள் ஒரு டி.வி. ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    வீட்டில் இருந்த 2 கண்காணிப்பு கேமிராவையும் உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறாரகள். 
    ஈரோடு அருகே அழகு நிலையம் நடத்தும் பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு சென்று விட்டார். ஜெசிமாபேகம் அழகு நிலையம் சென்று விட்டார்.

    இரவு 8.30 மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஜெசிமாபேகம் பின்னால் அவருக்கு தெரியாமல் 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    ஜெசிமாபேகம் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவரது பின்னாலேயே 8 பேர் கொண்ட கும்பலும் உள்ளே புகுந்தது. அந்த 8 ஆசாமிகளும் முகமூடி அணிந்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிமாபேகத்தை அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பிறகு கை, கால்களையும் கட்டினர்.

    பிறகு அவர் அணிந்திருந்த நகைகள் மேலும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 40 பவுன் நகைகளை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் மிரட்டி பறித்து கொண்டனர்.

    தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட கொள்ளையர்கள் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்றதும் ஜெசிமாபேகத்தின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்து ஜெசிமாபேகத்தின் கை-கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிறகு அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் ஓடும் பஸ்சில் இருந்து டாக்டரிடம் லேப்-டாப் மற்றும் செல்போன் அடங்கிய பையை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் அடுத்த புது உடையம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). இவர் அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இதற்காக அவர் தினமும் அவினாசிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த பஸ் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வழியாக ஈரோடு வந்து அவினாசிக்கு செல்லும்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜ்குமார் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ராஜ்குமார் தனது லேப்-டாப், செல்போன் அடங்கிய பொருட்களை ஒரு பையில் வைத்திருந்தார்.

    ராஜ்குமாரின் பின் பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த பையை திடீரென பிடுங்கி கொண்டு ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் திருடன் திருடன் என கத்தினார். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு அடுத்த தாமரை பாளையம் புது காலனியைச் சேர்ந்த மயில்ராஜ் (வயது39) என தெரியவந்தது.

    மயில்ராஜிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோட்டில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் திரிவேனி நகரை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி செல்வமேரி (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ் தனியார் குடியிருப்பில் கீழ் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை விசயமாக ராஜேஸ் கேரளாவுக்கு சென்று விட்டார். செல்வமேரி திண்டல்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    கேரளாவுக்கு சென்று விட்டு ராஜேஸ் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராஜேஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ கதவு திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 24 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணமும் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை குறித்து வழக்குப் பதிவும் செய்தனர்.

    சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்கள் கைரேகை பதிவு குறித்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தது.

    மேலும் குடியிருப்பில் வசிக்கும் ராஜேஸ் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதால் யாராவது தெரிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

    அதன்பேரில் விசாரணை நடக்கிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×