search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட வீட்டின் பூட்டுகள், பீரோ.
    X
    கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட வீட்டின் பூட்டுகள், பீரோ.

    ஈரோட்டில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஈரோட்டில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் திரிவேனி நகரை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி செல்வமேரி (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ் தனியார் குடியிருப்பில் கீழ் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை விசயமாக ராஜேஸ் கேரளாவுக்கு சென்று விட்டார். செல்வமேரி திண்டல்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    கேரளாவுக்கு சென்று விட்டு ராஜேஸ் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராஜேஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ கதவு திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 24 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணமும் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை குறித்து வழக்குப் பதிவும் செய்தனர்.

    சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்கள் கைரேகை பதிவு குறித்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தது.

    மேலும் குடியிருப்பில் வசிக்கும் ராஜேஸ் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதால் யாராவது தெரிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

    அதன்பேரில் விசாரணை நடக்கிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×