என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈங்கூர் சிப்காட் வளாகத்துக்கு ரெயில் தண்டவாளம் அமைக்க வேண்டும்
போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஈங்கூர் சிப்காட் வளாகத்துக்கு ரெயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு
போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஈங்கூர் சிப்காட் வளாகத்துக்கு ரெயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமும், ஈரோடு ரெயில்நிலையம் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
ஈங்கூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிப்காட்டிற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் விரிவாக்கம் செய்தால் சரக்கு ரெயில்கள் எளிதில் சிப்காட் வளாகத்திற்குள்ளாகவே வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்ல முடியும். இக்கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொழில் துறையினர் மத்திய அரசிடமும், ரெயில்வே நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதால் சிப்காட் வளாகத்தில் இருந்து லாரிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு ரெயில்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகின்றது.
இதனால் போக்குவரத்து செலவு மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றது. தண்டவாளம் விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக தற்காலிகமாக ஈங்கூர் ரெயில் நிலையத்தில் அனைத்து விதமான சரக்கு பெட்டகங்கள் ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:--
பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை ரெயில்களில் ஏற்றி இறக்குவதற்கு வசதியாக ஈங்கூர் ரெயில்நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும்.
இது தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தி யும் ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வராமல் உள்ளது.
இதனால் சரக்குகள் மீதான போக்குவரத்து செலவுதான் அதிகரித்து வருகின்றது. குறைந்தபட்சம் ஈங்கூர் ரயில்நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து சரக்கு ரெயில்களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






