என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றம் செல்போனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பண்ருட்டி:

    நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33), லாரி டிரைவர். இவர் நேற்று மாலை லாரியில் பண்ருட்டியை அடுத்த ராசாபாளையம் பகுதிக்கு வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென லாரி டிரைவர் முருகேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து முருகேசன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றார்.
    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கட்டிட தொழிலாளி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 43). கட்டிட தொழிலாளி.

    கடலூர் கோண்டூரை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு நெல்லிகுப்பம் அடுத்த தோட்டப்பட்டு காலனியில் புதியதாக தொகுப்பு வீடு கட்டப்பட்டது. தற்போது அந்த தொகுப்பு வீட்டின் மாடியில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டு வந்தது. இந்த பணியில் குணசேகர் உள்பட 4 பேர் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று அவர்களில் ஒருவர் வேலை முடியும் முன்பே வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து வேலை முடிந்ததும் இரவு அந்த வீட்டின் கீழ்பகுதியில் அமர்ந்து குணசேகர் உள்பட 3 பேர் மது குடித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் குணசேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பார்வையிட்டனர்.

    அப்போது அவரது தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதில் குணசேகர் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு ரத்தக் கறையுடன் கிடந்த மண் வெட்டியை போலீசார் கைப்பற்றினர்.

    மோப்ப நாய் அர்ஜூன் அங்கு வரழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபுரம் வரை ஓடி நின்றது.

    குணசேகருடன் மது அருந்தியவர்கள் அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே குணசேகரன் கொலை தொடர்பாக அவருடன் மது அருந்திய ஒரு வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை பிடித்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிதம்பரம் அருகே இன்று காலை பள்ளி முன்பு இறந்து கிடந்த முதலையால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளத்தில் கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் கரையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று சுற்றி திரிந்தது. அந்த முதுலை பொதுமக்களை பயமுறுத்தியது. பின்னர் மீண்டும் தண்ணீருக்குள் சென்று விட்டது. இதேப்போல் வல்லம்படுகை, வக்காரமாரி, பெராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளிலும் உள்ள முதலைகள் அடிக்கடி கரையோரம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் அடுத்த மடப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு ஒரு முதலை இறந்து கிடந்தது. பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டனர்.

    இது குறித்து சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதலையை பார்வையிட்டனர்.

    பள்ளிக்கு அருகே இருக்கும் வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியே வந்த முதலை இரை தேடி ரோட்டில் வந்த போது விபத்தில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முன்பு முதலை இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள கொம்பாடிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மின்என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரும் நண்பர்கள்.

    இவர்கள் 2 பேரும் விருத்தாசலத்தில் இருந்து கொம்பாடிகுப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார். அந்த மோட்டார் சைக்கிள் நெய்வேலி அடுத்த சாத்தமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மகேஷ் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயம் அடைந்த மகேசை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழை குறைந்ததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கும் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஏரி நிரம்பி வழிந்தது. ஏரியின் நீர்மட்டம் 46.80 அடியாக இருந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்ட் 11-ல் இருந்தும், விவசாய பாசனத்துக்கு ஆகஸ்ட் 26-ந்தேதியில் இருந்தும் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. 46.80 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    வீராணம் ஏரிக்கு இன்று வடவாறு வழியாக 722 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 44.45 அடியாக இருந்தது. இன்று அது சற்று அதிகரித்து 44.65 அடியாக உள்ளது. இருப்பினும் சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்படுகிறது. விவசாய பாசனத்துக்கு 90 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கும். தொடர்ந்து இதேப்போல் நீர்மட்டம் குறைந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிகிறது. ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #VeeranamLake
    கடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிக்கும் பணியில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வார்டுகள் தோறும் உள்ள அனைத்து வீடு மற்றும் வணிகவளாகங்களுக்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி சுகாதார ஆய்வாளர்கள் பாக்கியநாதன், சிவா, மேற்பார்வையாளர்கள் தண்டபாணி, பக்கிரிராஜா, தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் மற்றும் களப்பணியாளர்கள் நேற்று திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவிநாயுடு தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில வீடுகளின் தோட்டம் மற்றும் உபயோகமற்ற கழிப்பறைகளில் உள்ள பாத்திரம் மற்றும் தேங்காய் மட்டைகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் வளர்ந்துள்ளதா? என பார்வையிட்டனர். அப்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பேரல்கள், குடங்களில் தண்ணீரை சேமித்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களிடம், சேமித்த தண்ணீரை உடனே அகற்றவதோடு, வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர்.

    இது குறித்து தூய்மைபாரத இயக்க பரப்புரையாளர் ஆனந்தன் கூறும்போது, தூய்மைபாரத இயக்கத்தின் மூலம் கடலூர் பெருநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி, பொது இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக 100 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

    வேப்பூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் பாலவிளையை சேர்ந்தவர் அஜீத்ஜோகி (வயது 21). இவரது உறவினர் வினோத் (21). இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இருவரும் சொந்த ஊர் சென்றிருந்தனர். விடுமுறை முடிந்ததும் நேற்று மதியம் அஜித்ஜோகி, வினோத் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலவிளையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்ஜோகி, வினோத் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிமேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாலிபர்கள் மீது மோதிய வாகனம் எது? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூரில் நேற்று மழை பெய்த நிலையில், அம்மா உணவகத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் உழவர் சந்தை வளாகத்தில் நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிக குறைந்த விலையில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உணவை சாப்பிடுவதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறைந்த விலை என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்பனையாகி விடும். இதனால் காலதாமதமாக வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது.

    இந்நிலையில் இந்த அம்மா உணவக சுற்றுச்சுவர் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுற்றுச்சுவரை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதனால் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் என்ற நிலையில் இருந்தது.

    நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால், மதியம் 2 மணி அளவில் திடீரென அம்மா உணவக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடது புறம் உள்ள சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கமாக காலை, மாலை நேரங்களில் இந்த சுவரையொட்டி விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவரை ஒட்டி பள்ளம் தோண்டியதால் விவசாயிகள் அதன் அருகில் சாலையோரம் வாழைத்தார்களை வைத்து விற்பனை செய்தனர்.

    அதிலும் மதியம் நேரம் என்பதால் அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. ஆனால் அம்மா உணவகத்துக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். சுவர் விழும் நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநில துணை செயலாளர் ஜான்சன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன், ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் வீரபாபு, வரதராஜன், இடிமுரசு, சேகர், கண்ணன், வேல் முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மாநாட்டில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    நெய்வேலியில் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் பேன்சிகடை நடத்தி வருபவர் ஞானராஜ். இவர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான். பின்பு அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.

    காலையில் ஞானராஜ் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து ஞானராஜ் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனம் 2-வது சுரங்கபகுதியில் நேற்று மாலை 2 பேர் சாக்குமூட்டையுடன் சுற்றித் திரிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புபடை வீரர் அழகர்சாமி அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தார். அவர்கள் வைத்திருந்த சாக்குபையை பிரித்து பார்த்தபோது காப்பர் வயர் திருடி வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் வடலூர் பார்வதிபுரததை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 51), சஞ்சை (28) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி அருகே ஆசைவார்த்தை கூறி 14 வயது சிறுமியை தாயாக்கிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் (வயது 20), கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை தமிழ்வாணன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து நடந்த விபரங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனது மகளின் நிலைக்கு காரணமான காதலன் தமிழ்வாணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் தமிழ்வாணன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்வாணனை கைது செய்தார்.

    ×