என் மலர்tooltip icon

    கடலூர்

    காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.

    நேற்று மதியம் 1 மணியளவில் சாராய வியாபாரிகளான லால்பேட்டையை சேர்ந்த விஜி (வயது 39), கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது ரோந்து சென்ற காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் இருந்தது. கிடுக்கிப்பிடி விசாரணையில், அரசு டாஸ்டாக் கடையில் கூடுதல் பணம் கொடுத்து பெட்டி பெட்டியாக மதுப்பாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    கொரோனா சிகிச்சையின் மூலம் கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஏற்படுத்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்தது. பின்னர், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு அதிக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர்.

    அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைபடுத்தி பரிசோதனை செய்தது. இதில் அவர்கள் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 416 பேராக உயர்ந்தது.தற்போது மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று கடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொரோனா மையம் வார்டுகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் 58 பேரும், பெரும்பாக்கம் அரசு மையத்தில் 45 பேரும் உள்பட 108 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர்.

    அவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழங்கள், அரிசி, காய்கறிகள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர்களை வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.
    டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டோக்கன் வாங்குவதற்கு மதுபான பிரியர்கள் குவிந்தனர்.
    கடலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் 10 கடைகள் அமையபெற்று உள்ளது.இந்த கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

    இதையொட்டி காலை முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பகுதியில் ஏராளமான குடி பிரியர்கள் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் 100 பேராக பிரித்து ஆங்காங்கே இட வசதிகளை ஏற்படுத்தி சமூக இடைவெளியில் அமர வைத்தனர். மேலும் முகம் கவசம் அணிந்திருக்க வேண்டும் என போலீசார் கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.

    காலை முதல் காத்துக்கொண்டிருந்த மது பிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது போல் 500 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இதில் குடிப்பிரியர்கள் போட்டாபோட்டி ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களிடத்தில் நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இன்று கரு நீல வண்ண டோக்கன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை முதல் ஏராளமான குடிப்பிரியர்கள் திரண்டதால் உச்சநீதிமன்றம் அறிவித்தது போல் 500 டோக்கன்விறுவிறுப்பாக குடி பிரியர்கள் வாங்கி சென்றனர்.

    மேலும் 500 டோக்கன் வழங்கிய தகவல் அறிந்த குடிபிரியர்கள் அருகாமையிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அவசர அவசரமாக சென்றதையும் காண முடிந்தது. இதுமட்டுமின்றி முதலில் 100 டோக்கன் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்ததாக 100, 100 டோக்கன் ஆக வைத்திருப்பவர்கள் பத்து பத்து நபர்களாக அனுப்பி வைத்து மது பாட்டில்கள் வாங்க போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    காலை நேரத்தில் தாமதமாக வந்த குடிப்பிரியர்கள் டோக்கன் கிடைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் அங்கேயே காத்துக் கிடந்தனர். அவர்களை போலீசார் காரணமின்றி நின்று கொண்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் நேரம் செல்ல செல்ல குடி பிரியர்கள் அதிகமாகும் காரணத்தினால் பலத்த போலீஸ் பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் போடப்பட்டு உள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இன்று காலை பலர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு காத்து இருந்ததை காண முடிந்தது.

    கடலூர் அருகே ரெயில்வே மரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே வெளியூர்களிலிருந்து சர்க்கரை சவுக்கு கட்டை போன்றவற்றை இறக்குவதற்கு தனியாக சிமெண்ட் தளம் உள்ளது. இங்கு ரெயில்வே துறைக்கு சொந்தமாக ஒரு லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்தது.

    நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று மரக்கட்டைகளில் இருந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர் மளமளவென தீ பரவி, மரக்கட்டைகள் முழுவதும் எரிய தொடங்கியதால் தீப்பிழம்பாக காட்சியளித்தது.

    இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் பகுதியில் மின்சார ரெயில் இயக்குவதற்கு மின்கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திடீர் தீ விபத்தால் மின் பாதை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் ரெயில்வே துறையினர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே டேங்க் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    குறிஞ்சிப்பாடி:

    குறிஞ்சிப்பாடி மண்டக மேட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவர் அந்த பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக உள்ளார்.

    சம்பவத்தன்று மின்மோட்டாரை இயக்க பாலமுருகன் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது
    கடலூர்:

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை. நேற்றுமாலை வெளியான சுகாதாரதுறை அறிவிப்பில் கடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதியானது. விருத்தாசலத்தை சேர்ந்த தந்தை -மகனுக்கும், மற்றொருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கடலூர்:

    கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வருகிற 18-ந்தேதி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க ஆயத்த பணிகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    அதாவது பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், ஒரு பஸ்சில் 26 பேர் மட்டுமே செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இது பற்றி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வருகிற 18-ந்தேதி அரசு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடலூர் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும் போது, கிருமி நாசினி தெளிக்கப்படும். அதேபோல் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு பயணிகள் ஏறுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம்.

    அவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்வார்கள். அதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி விட்டதும், நகராட்சி, பேரூராட்சி சார்பில் மீண்டும் பஸ்சில் கிருமி நாசினி தெளித்து, பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்குவோம். 26 பேர் மட்டும் செல்லும் வகையில் வரிசை எண்களை பஸ்சில் ஒட்டி வருகிறோம்.

    மேலும் பஸ்களில் உள்ள சிறு, சிறு பழுதுகளையும் சரிசெய்து வருகிறோம் என்றார்.

    தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அவ்வகையில் தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

    அர்ஜுனா விருதுக்காக துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரை பட்டியலில்,  உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மற்றும் மனு பாக்கர், அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நெய்வேலியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நெய்வேலி, மந்தாரக்குப்பம் மற்று-ம் அதனை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக 50 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உணவுக்கு கூட  அல்லல்படும் நிலையில்  உள்ளனர். எனவே  தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதன்படி நெய்வேலில்  தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை சொந்த ஊருக்கு செல்ல நடந்து வந்தனர்.  நெய்வேலி கியூ பாலம் அருகே வந்த போது அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தகவல் அறிந்த என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க பெண் பலியானார்.
    கடலூர்:

    சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டை முபாரக் தெருவை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க பெண் உடல்நலக் குறைவால் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    எனவே அவர் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்றார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
    நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 2-வது அனல் மின்நிலையத்தில் 6-வது உற்பத்தி பிரிவில் கடந்த 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டனர்.

    இவர்களில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    நெய்வேலி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் 5 பேர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் கந்தன் மகன் அஜித் குமார்(வயது 22). இவரும் சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அஜித்குமாரையும், அந்த பெண்ணையும், சி.ஆர்.குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், அவர்களிடம் சென்று, ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மாலையில் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும், மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் என்.எல்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த மணிகண்டன் மகன் அன்புமணி(25), உத்திராபதி மகன் ஞானப்பிரகாசம்(30) மற்றும் சி.ஆர். குடியிருப்பை சேர்ந்த அன்பழகன் மகன் சதீஷ்குமார்(26), சந்திரசேகரன் மகன் முனீஸ்வரன் என்கிற சத்திய சந்திரன்(20), லிங்கேஷ் என்கிற கமலநாதன்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.
    ×