என் மலர்
கோயம்புத்தூர்
- அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
கோவை:
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. கோவை மாவட்டத்திலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் கோவை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. வீடுகள், கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று மாலையும் கருமேகங்கள் திரண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், ரேஸ்கோர்ஸ், இடையர்பாளையம், வெள்ளக்கிணறு, துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும், ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
அதிகபட்சமாக சிறுவாணி அடிவாரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆழியாறு 34, சின்கோனா 30, ஆனை மலையில் 28, சோலையாறில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கூடலூர், தேவர்சோலை பகுதியில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
இதனால் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட குனில் வயல் பகுதியில் உள்ள கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வழிப்பறி குறித்து நகை வியாபாரிகள் 2 பேரும் க.க.சாவடி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்தவர் பரத் (50). இவர்கள் 2 பேரும் தங்க நகை வியாபாரிகள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நகை விற்பதற்காக கோவை வந்தனர். ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் நகையை விற்று விட்டு அதற்கான பணம் ரூ.4 லட்சத்தை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் பணத்துடன் சென்ற பரத் மற்றும் ரோகித்தை கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கினர். பின்னர் ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த வழிப்பறி குறித்து நகை வியாபாரிகள் 2 பேரும் க.க.சாவடி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
விசாரணையில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த ரஞ்சித் (22), அபினேஷ் (27), ரஞ்சித்குமார் (32) ஆகியோருக்கு இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது நகை வியாபாரிகளை தாக்கி பணம் பறித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்கள் 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தன்னை சோலார் இன்ஸ்பெக்டர் எனவும், உங்கள் வீட்டில் உள்ள சோலாரை சரிபார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கோவை:
சுந்தர் சி நடித்த நகரம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிலும் அவர் டிஸ் அன்டனாவை சரி செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் சிரிப்பு வந்து கொண்டே இருக்கும்.
அதே பாணியில் தற்போது கோவை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் அரசினால் கட்டிகொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு சென்று, அங்கு சோலார் பேனலை சரி செய்து தருவதாக கூறி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம்(61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை சோலார் இன்ஸ்பெக்டர் எனவும், உங்கள் வீட்டில் உள்ள சோலாரை சரிபார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரமசிவமும் அதனை உண்மை என நம்பினார். பின்னர் அந்த வாலிபர் வீட்டின் மேல் ஏறி சோலாரை சரி செய்து இருக்கிறார். அப்போது கீழே நின்ற பரமசிவத்திடம் வீட்டிற்குள் மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்க கூற, அவரும் அதனை பார்த்துள்ளார்.
பின்னர் கீழே வந்த அந்த வாலிபர், தான் வீட்டிற்குள் சென்று மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்கிறேன். நீங்கள் மேலே சென்று சோலாரை பாருங்கள் என கூறியுள்ளார்.
பரமசிவமும் மேலே சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட வாலிபர், வீட்டில் இருந்த 9 பவுன் நகையை திருடிவிட்டார். பின்னர் சோலார் பேனல் சரியாக இருக்கிறது. நான் வருகிறேன் என கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்ற பின்பு பரமசிவம் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அதனை சோதனை செய்தார். அப்போது அதில் இருந்த நகை மாயமாகி இருந்தது.
உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாகவே சூலூர் பகுதிகளில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், அதில் ஈடுபடும் நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று தென்னம்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(வயது34) என்பதும், சூலூரில் பசுமை வீடுகளில் சோலார் பேனலை சரி செய்வதாக கூறி தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர், விசாரணையில், முத்துக்குமார் பசுமை வீடுகள் எனப்படும் அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் தன்னை ஒரு சோலார் இன்ஸ்பெக்டர், உங்கள் வீட்டில் சோலாரை சரி செய்ய வந்துள்ளேன் என கூறி விட்டு, அதனை சரி செய்வது போல நடித்து நகை, பணத்தை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
- திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
கோவை,
தென்காசியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.
இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் நீட் தேர்வுக்கு தயாரானார்.
இந்நிலையில், வருகிற மே 7-ந் தேதி நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ? என அவர் மன குழப்பத்தில் இருந்து வந்தார்.
இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி, திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
இதை பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை,
கோவையில் போதைபொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே 7 பேர் கும்பல் போதைப்பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கும்பல் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் 7 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சுஜிமோகன், அஸ்வின் என்ற அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஸ், புள்ளி பிரவீன் என்ற பிரவீன்ராஜ், பிரதீப் என்பதும், இவர்கள் கோவையில் ரவுடிகளாக வலம் வந்தது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேர் கும்பலும் பெங்களூருவில் இருந்து மெத்தாபெட்டமைன் என்னும் போதைப்பொருளை கடத்தி வந்து கோவையில் அதனை விற்பனை செய்துள்ளனர்.
குறிப்பாக கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கைதான சுஜிமோகனிடம் இருந்து 55 கிராம் போதை பொருளும், அஸ்வினிடம் இருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேர் மீதும் கோவையில் உள்ள சரவணம்பட்டி, ரத்தினபுரி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், பீளமேடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் 7 பேரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
- பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கோவை,
கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. ஆனால் இந்த இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சி.எம். நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட கும்பல், சி.எம்.நகர் பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களிடம் இது எங்கள் இடம். இது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், அங்கு வசித்து வரும் மற்ற குடியிருப்பு வாசிகளும் குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் இருதரப்பினரையும் திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில் கட்டுமான பொருட்களையும் ஏற்றி வந்தனர்.
பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள காலி இடத்தில் வைக்க முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களிடம் சென்று இங்கு வைக்க கூடாது என தெரிவித்தனர்.
இதனால் அந்த கும்பல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானம் செய்தும், அந்த கும்பல் கேட்காமல் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் 2 தரப்பினரிடமும் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்கள் மீது கொண்டு வந்து மோதினார். இதில் சில பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளை இயக்கி கொண்டே இருந்தார்.
இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். மேலும் மக்களிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து மக்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
போலீசாரின் முன்பே பெண்கள் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
- இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
- உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
கோவை நியூ சித்தாபுதுர் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது70).
இவர் முன்னாள் அரசு வக்கீல் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர் நேற்று கோவைக்கு வந்தார்.
வழக்கம் போல நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் அவரது படுக்கை அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அத்துடன் அவர் மீது தீ பரவியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் உடல் கருகிய ரேனுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே சென்றனர்.
- இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை கோவை புறநகர் பகுதிகளான அன்னூர், பொகலூர், தாளத்துறை, தேரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது.
இந்த மழையின் போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சுக்குள் மழைநீர் வடிந்து உள்ளே விழுந்து கொண்டிருந்தது.
இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருந்த போதிலும் பஸ் முழுவதும் மழைநீர் விழுந்து கொண்டே இருந்ததால் சில பயணிகளை பஸ்சை விட்டு இறங்கி மாற்று பஸ்சிலும் பயணிக்கும் நிலை உருவானது.
பஸ்சுக்குள் மழை நீர் வடிந்ததை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பழுதடைந்த பஸ்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகளிடம் எழுந்துள்ளது.
- காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
- இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.
7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.
5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.
வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.
துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.
மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
- கற்களை எடுத்து சதீஷ்குமார் தலையில் வீசினார்.
- இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது33). இவர் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இங்கு பணிபுரியும் தஞ்சையை சேர்ந்த வினோத்குமார்(19), பிரவின் (18) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சதிஷ்குமாரிடம் எங்களை பற்றி மேலாளரிடம் என்ன கூறினாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் வீசி தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
- சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கூலி தொழிலாளி. இவர் கோவை சி.எம்.சி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பொது இடத்தில் வைத்து இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தார்.
அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளினார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவையை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
- பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
பொள்ளாச்சி:
தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், மக்னா என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது.
அங்கு விடப்பட்ட சில நாட்களிலேயே மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை நகருக்குள் வந்தது.
வனத்துறையினர், மீண்டும் அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.
இதற்கிடையே அந்த மக்னா யானை, சுமார் ஒரு வாரத்துக்கு இடம் பெயர்ந்து சுமார் 36 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள டாப்சிலிப் வனத்திற்குள் புகுந்தது.
அந்த யானை, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகத்திற்குள் வந்து, அங்குள்ள கிராமத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அறிந்த வனத்துறையினர், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலம் கண்காணித்தனர்.
இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல், வனச்சரகர் புகழேந்தி தலைமையில், சுமார் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சரளபதி பகுதியில் தனித்தனி குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட துவங்கினர்.
இதற்கிடையே, வனத்திலிருந்து யானை வெளியேறி அங்குள்ள கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க, கோழிக்கமுகத்தி முகாமிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா ஆகிய 3 கும்கி யானைகள் சரளபதி பகுதிக்கு நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டது.
இந்த கும்கிகள் மூலம், மக்னா யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
ஆனால், அந்த ரேடியோ காலர் பழுதானதால் யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே அமைக்கப்பட்ட வனத்துறை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே சரள பகுதி அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மக்னா யானை புகுந்ததாக வந்த தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என ஆவேசமடைந்த மக்னா யானை, வனத்துறையினர் வந்த ஜீப்பை தாக்கி சேதப்படுத்தியது. இதில் டிரைவர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.






