என் மலர்tooltip icon

    அரியலூர்

    தேர்தல் அதிகாரிகள் இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #thirumavalavan
    செந்துறை:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயார் பெரியம்மா என்பவருடன் வந்து வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதாகி உள்ளது. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #thirumavalavan
    வாக்குச்சாவடிகளுக்கு செல்போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்களிக்க செல்லும்போது செல்போன் மற்றும் கேமரா போன்ற மின்னணு சாதனைங்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. 

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலி வசதி, பார்வை குறைபாடு உடையவர் வாக்களிக்க தன்னுடன் ஓர் உதவியாளரை அழைத்து செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வாக்களிப்பதில் முன்னுரிமையும், ஆண், பெண் வாக்காளர்களுக்கென தனித்தனி வரிசைகளும் அமைக்கப்படும். இவ்வரிசையில் வரும் வாக்காளர்களில் ஒரு ஆண் வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படும்போது, 2 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதேபோல் அரியலூரில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்திக்கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்று பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இயங்கும் லாரிகள் ஒவ்வொன்றின் வேகத்தை கண்டறிய கருவி பொருத்தபட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான் பணி கொடுக்க வேண்டும்.

    விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலை விபத்தில் அடிபட்ட நபர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விபத்துகளை தடுக்க சிமெண்டு ஆலை, நெடுஞ்சாலை துறையினர், போலீசார் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    அரியலூர் மாவட்ட தேர்தல் பணிகளை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை நேற்று அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. பேலட் பேப்பரில் 13 வேட்பாளர்கள் மற்றும் 1 நோட்டா என மொத்தம் 14 பெயர்கள் உள்ளது. இந்த பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் ஆய்வு செய்து முடித்த பின்னர் மீண்டும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையில் அவை வைக்கப்படும். பின்னர், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என்றார்.

    இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, தாசில்தார் குமரய்யா மற்றும் மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    மின்சார வசதி கேட்டு செந்துறையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செந்துறை:

    செந்துறை-உடையார் பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்பு செந்துறை சித்தேரி கரையில் வசித்தனர். ஏரியில் அதிக அளவில் நீர் வந்ததையடுத்து உடையார் பாளையம் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை, இதனால் மின்சாரம் பெற முடியாமல் உள்ளனர். அரசின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கிடைத்தும் அதனை பயன்படுத்த மின் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இதனால் மின் வசதி கேட்டு செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையுடன் பெண்கள், சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் செந்துறை -உடையார்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
    அரியலூர்:

    சிதம்பரம் தனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 1,445 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 290 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 1,409 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, தாசில்தார் குமரய்யா, மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மாட்டு வண்டி மோதிய விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் குடிக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வரங்கன் மகன் மாதவன்(வயது 22). உடற்கல்வி ஆசிரியரான இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது சித்தப்பா சிதம்பரநாதன் மகன் தனுஷை (16) அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். 

    அப்போது இலையூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் வந்தபோது ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த சரக்கு வேனில் ஒன்றன்பின் ஒன்றாக 2 மாட்டு வண்டிகள் கட்டப்பட்டு இருந்தன. சரக்கு வேன் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது ஒரு மாட்டு வண்டி கழன்று, மாதவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனுஷ் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த புகாரை அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் ரகசியமாக வைக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரங்கள் ஏதுமில்லாமலும், புகார் அளிக்கலாம்.

    இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்களை அனுப்ப வசதியாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்ள மார்டன் கலை அறிவியல் கல்லூரியில் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதையொட்டி கல்லூரி முகப்பில் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியின் ‘லோகோ’வை வரைந்து அதன் முன்பு மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் கோமதி, ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விரிவாக எடுத்துக்கூறி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சரகத் துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் ‘சி-விஜில்’ செயலியின் செயல்பாடுகளை பயன்படுத்துவது எப்படி என்று விளக்கினார். பின்னர் அந்த செயலியை பயன்படுத்துவோம் என்று 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முகாமில் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், கல்லூரியின் துணை முதல்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    மீன்சுருட்டி அருகே முன்விரோதத்தில் கூட்டுறவு சங்க இயக்குனர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 47). பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முத்து சேர்வாமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குனராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி சுந்தரி(42). இவர்களுக்கு ஒரு மகளும், ஜீவகன், கதிரவன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மாலை இளையபெருமாள் நல்லூர் கிராமத்துக்கு சென்ற, ஜீவகன் தனது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு, மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மொபட் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன.

    இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ரெட்டிபாளையம் காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன்(25), துரைராஜ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சவுந்திரபாண்டியனின் வீட்டுக்கு சென்றனர். அவருடன் மணிகண்டனின் தம்பி குமாரும்(23) சென்றார். அங்கு அவர்கள், சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்ததாக தெரிகிறது.

    அப்போது, அவர்கள் முன்விரோதம் காரணமாக, சவுந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், மணிகண்டன், துரைராஜ், குமார் ஆகியோர் மீது மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலைச்சாமி கொலை வழக்கு பதிவு செய்தார். பின்னர் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். இதில் செந்துறை ஒன்றிய எல்லையான கட்டையன்குடிக்காடு வந்த சந்திரசேகருக்கு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரசார வாகனத்தில் ஏறிய சந்திரசேகர் முதலில் செந்துறை காலனி தெருவில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திர எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முள்ளுக் குறிச்சி சுரேஷ், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் வைத்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் காமராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். 
    100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டைகளை பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று தபால் பணியாளர்கள் மூலம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தொடங்கி வைத்தார்.

    மேலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மேற்கொண்டு வருகிறது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்களிப்பது குறித்து கிராமங்களில் தேர்தல் சம்மந்தமான குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, 18 வயது நிரம்பிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மூலம் நூதன பிரசுரங்களும் செய்யப்படுகின்றன. தற்போது, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சிறப்பு அஞ்சல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து, விவரம் இடம் பெற்றுள்ளது. இந்த அஞ்சல் அட்டைகளை அஞ்சல் துறையின் தபால் பணியாளர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கும் வழங்க உள்ளனர். குறிப்பாக மக்களை அவர்களது வசிக்கும் இடங்களுக்கு தேடிச்சென்று வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு சிறப்பு அஞ்சல் அட்டைகளை அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் ஒவ்வொருவரும் தேர்தலின் மாண்பை அறிந்து, 100 சதவீதம் பங்கேற்று வாக்களிக்க முன்வரவேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, துணை அஞ்சலக அலுவலர் டோம்னிக்ராஜ், தபால்காரர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×