என் மலர்
குஜராத்
- குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
- பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
கேடா மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது என தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
நாட்டைப் பலப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் இரண்டு புகழ்பெற்ற மற்றும் உலகம் மதிக்கும் பிரதமர்களை இழந்துள்ளோம். இது மாநில சட்டசபைக்கான தேர்தல், பாராளுமன்ற தேர்தல் அல்ல.
மாநிலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். அரசின் வெற்றி தோல்விகளை அவர் பேசினால் நல்லது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யாராவது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்களா? என கேள்வி எழுப்பினார்.
- பா.ஜ.க. மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் இம்மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினமா செய்தார்.
- பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.
அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் பழங்குடியின சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
- பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
அகமதாபாத்:
குஜராத்தில் வருகிற 1-ந்தேதி முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று நேத்ராங்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
முன்னதாக அவர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அவி (வயது 14), ஜெய் (11) ஆகிய சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் தாய், தந்தையின்றி தனித்து வளர்ந்து வருகின்றனர்.
இவர்களது பெற்றோர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தனர். அன்றிலிருந்து அவி, ஜெய் ஆகியோர் ஒருவரை ஒருவர் கவனித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்து வருகின்றனர்.
வறுமையில் பல கஷ்டங்கள் வந்தாலும் கல்வியை விடக்கூடாது என்ற உறுதியில் சகோதரர்கள் இருவரும் வேலைகளுக்கு இடையே பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அவி 9-ம் வகுப்பும், ஜெய் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று தனது சுற்றுப்பயணத்தின் போது சிறுவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறுவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவி, நான் என்ஜினீயராக வேண்டும் என கூறி உள்ளார். ஜெய், நான் மாவட்ட கலெக்டராக விரும்புவதாக கூறி உள்ளார்.
மாணவர்கள் இருவரையும் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு சார்பில் அவர்களது வீட்டில் டி.வி., கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். மேலும் அவர்களது படிப்பு செலவை ஏற்பதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தான் சந்தித்து பேசிய பழங்குடியின சிறுவர்களை குறிப்பிட்டு பேசினார். பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் இந்த சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என்றார்.
பேரணியில் 2 சிறுவர்களை பற்றி பிரதமர் பேசிய வீடியோவை டுவிட் செய்த குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், 'பிரதமர் பேசிய அவி மற்றும் ஜெய் என்ற 2 குழந்தைகளின் போராட்டத்தின் மனதை தொடும் கதையை கேளுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதே நேரம் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
- பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
- சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள்.
ஆமதாபாத் :
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எனது கணிப்புகள் பலித்துள்ளன.
உங்கள் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக கணித்துக்கூறுகிறேன். குறித்துக்கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனது கணிப்பு குஜராத்திலும் நன்றாகவே பலிக்கும்.
27 ஆண்டு கால தவறான ஆட்சிக்குப்பின், குஜராத் இந்த மனிதர்களிடம் இருந்து (பா.ஜ.க.) விடுபடப்போகிறது.
(குஜராத் தேர்தல் பற்றிய தனது கணிப்பை கெஜ்ரிவால் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி நிருபர்களிடம் காட்டினார்.)
பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு ஊழியர்கள், எங்கள் கட்சி ஆட்சி அமைக்க உதவுங்கள்.
ஜனவரி 31-ந் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கையை நாங்கள் வெளியிடுவோம். நான் சும்மா சொல்லவில்லை. பஞ்சாப்பில் நாங்கள் அப்படி அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்.
பிற ஒப்பந்த பணியாளர்கள், போலீசார், மாநில போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தர ஊதியம், பணி நிரந்தரம், சம்பள உயர்வு, இட மாறுதல் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
நாங்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்பதை அவர்களுக்கு உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு முக்கியம். எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு போடுங்கள்.
27 ஆண்டுகளில் இப்போதுதான் பா.ஜ.க. முதல் முறையாக கொந்தளித்துப்போய் இருக்கிறது. நீங்கள் தெருவில் இறங்கி மக்களிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என கேளுங்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு அல்லது பா.ஜ.க.வுக்கு என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறவர்கள் 5 நிமிடங்கள் கழித்து தாங்கள் துடைப்பத்துக்கு (ஆம் ஆத்மி தேர்தல் சின்னம்) ஓட்டு போடுவோம் என்று வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். ஆனால் குஜராத்தில்தான் முதல்முறையாக மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கப்போகிறோம் என கூறுவதற்கு பயப்படுகிறார்கள். சாதாரண மனிதர்கள் பயப்படுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை எங்கும் காண முடியவில்லை. பா.ஜ.க. ஆதரவாளர்களே பெருமளவில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடப்போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
- பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.
காந்திநகர் :
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது.
அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.
வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது.
89 தொகுதிகளில் 1-ந் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்த 88 வேட்பாளர்களில் 36 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
முதல் கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.
முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் அவர் பாரூச் மாவட்டத்தில் உள்ள நேட்ராங்க், கெடா மாவட்டத்தின் மெகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
கெடா மாவட்டத்தில் மெகமதாபாத்தில் அவர் பேசும்போது, "ஜனநாயகம் வலிமை பெற அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஜனநாயகம் வலுவானால், நாம் அனைவரும் வலிமை பெற முடியும்" என தெரிவித்தார்.
பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற நர்மதா மாவட்டத்தின் டெடியாபடா நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கார்கே நேற்று ஓட்டு வேட்டையாடினார். அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சாடினார். அப்போது அவர், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் 70 வருடங்களில் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் ஜனநாயகமே கிடைத்திருக்காது. நீங்கள் உங்களை ஏழை என்கிறீர்கள். நானும் ஏழைதான். ஏழையிலும் பரம ஏழை" என குறிப்பிட்டார்.
காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.
அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் நாளை (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும்.
- பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சூரத்:
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.நேற்று ஒரே நாளில் கேடா மாவட்டம், நேத்ராங், பருச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதி மற்றும் சூரத் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:
குஜராத்தின் தற்போதைய புதிய தலைமுறையினர் அகமதாபாத் மற்றும் சூரத் தொடர் குண்டு வெடிப்புகளைப் பார்த்ததில்லை. தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது. 2014- ஆண்டு (லோக்சபா தேர்தல்) உங்களின் ஒரு வாக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.
இப்போது அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது எல்லைகளில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு முன் 100 முறை யோசிக்கிறார்கள். ஏனென்றால அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நர்மதா அணை திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
அணை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட்டு வழங்கியவர்களை குஜராத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சூரத் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார், ஆனால் அது 50 ஆண்டுகளாக முடங்கியது.
அவர்கள் (போராட்டக்காரர்கள்) யாரும் இந்த அணை திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்ற நிலையை உறுதி செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஆம் ஆத்மி டிக்கெட் கொடுத்தது. மூன்று தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இதுபோன்றவர்களை நம் மாநிலத்தில் காலடி வைக்க அனுமதித்தால் அது பாவம் செய்வது போன்றது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மெட்ரோ ரயில் திட்டம், சூரத் நகருக்கு விமான நிலையம் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இரட்டை எஞ்ஜின் அரசு (மத்தியில் பாஜக ஆட்சி) வந்த பிறகு, சூரத்தில் விமான நிலையம் அமைந்தது. மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
அகமதாபாத்:
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 93 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 சட்டசபை தேர்தல்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பா.ஜனதா அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் எப்போதும் நேரடி போட்டி இருக்கும்.
தற்போது முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்குகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்ததால் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 179 இடங்களிலும், அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளது. இது தவிர சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
182 தொகுதியில் மொத்தம் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 139 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். 3 பிரதான கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 38 பெண் வேட்பாளர்களை தான் நிறுத்தி உள்ளது. பா.ஜனதாவில் 18 பேருக்கும், காங்கிரசில் 12 பேருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த முறையை விட கூடுதலாகும்.
குஜராத் சட்டசபை தேர்தலில் 4.90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். இதில் 2.53 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.37 கோடியாகும். தேர்தலுக்காக 51,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் அங்கு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா உள்ளது.
நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று போட்டி பிரசாரம் செய்கிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வைர நகரமான சூரத்தில் அவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.
மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சூரத்தில் உள்ள மோட்டா வரச்சா, பரூச் மாவட்டம் நேட்ரங், கேடா மாவட்டம் மெகமதாபாத் ஆகிய இடங்களில் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
அவர் 25 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மோட்டா வராச்சா வரும் வரை இந்த ரோடு ஷோ நடக்கிறது. இதை சூரத் பகுதி பா.ஜனதா தலைவர் ஜெகதீஷ் படேல் தெரிவித்தார். சூரத் பகுதியில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.
கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சூரத் செல்கிறார். இன்று அவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், கைவினை கலைஞர்களுடன் உரையாடுகிறார். சூரத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் இந்த உரையாடல் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும்.
மேலும் கெஜ்ரிவால் அங்குள்ள கதர்காம் பகுதியில் ரோடு ஷோவிலும் ஈடுபடுகிறார். ஒரே நேரத்தில் மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று பிரசாரம் செய்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- ஜாம்நகர் மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
- துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
குஜராத்தில் டிசம்பர் மாதம் 1ம் தேதி, 5ம் தேதி ஆகிய 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மணிப்பூரை சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை ராணுவ படையினர், போர் பந்தலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு துணை ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
துப்பாக்கி சூட்டில் மேலும் 2 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வயிற்றிலும், மற்றொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.
அவர்கள் உடனடியாக போர் பந்தலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஜாம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் தொய்பாசிங், ஜிதேந்திரா சிங் என்று தெரியவந்தது.
மேலும் சொராஜித், ரோஹிகானா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது இனாவ்ச்சா சிங் என்று தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மணிப்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மோதலுக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.
- குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அகமதாபாத்:
182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. 89 தொகுதிகளுக்கு வருகிற 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
ஆளும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரசும், ஆம் ஆத்மியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பெண்களை குறிவைத்து பல்வேறு இலவச அறிவிப்புகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும்.
தகுதி உடைய கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- வருகிற 1-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
- 89 தொகுதிகளிலும் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
அகமதாபாத்:
குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இம்முறை குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
ஆளும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறது. அவர்களை எதிர்த்து காங்கிரசும், ஆம் ஆத்மியும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வருகிற 1-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
89 தொகுதிகளிலும் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை பற்றிய விபரங்களை சமீபத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது.
இச்சங்கம் வெளியிட்ட பட்டியலில் குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்களின் குற்றப்பின்னணி குறித்த விபரங்களை தெரிவித்து உள்ளனர்.
அதன்படி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 167 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது போட்டியிடும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த வேட்பாளர்களில் 100 பேர் கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட தீவிர குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள்.
இப்பட்டியலில் ஆம்ஆத்மி கட்சி முதலிடத்தில் உள்ளது. இக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் 32 பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் காங்கிரசில் 31 பேரும், பாரதிய ஜனதா கட்சியில் 14 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
- குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
- குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என பிரதமர் மோடி பேசினார்.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்கவைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற போராடுகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் புதிதாக போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தின் மெஹ்சானா நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தினரிடையே பேசியதாவது:
மெஹ்சானாவில் மக்களின் அன்பு நிறைந்த வரவேற்பை பார்த்து செயலற்று போயுள்ளேன். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற தயாராகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் பெருமளவு மாறியுள்ளது. குஜராத் மாநிலம் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனை அவர்கள் பார்த்தது இல்லை. அவர்களின் முந்தின தலைமுறை இன்று காணப்படும் குஜராத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிட்டது. காங்கிரசானது, குடும்ப அரசியல், சாதிய அடிப்படையிலான, மதவெறி சார்ந்த மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியல் நடத்தும் மாதிரியை கொண்டுள்ளது என தெரிவித்தார்.
- ஆளும் பா.ஜ.க. மட்டுமே அனைத்து இடங்களிலும் நிற்கிறது.
- பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
ஆமதாபாத் :
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிற இந்த மாநிலத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.
மும்முனைப் போட்டி நடைபெறுகிற தேர்தலில் பிரசார களத்தில் சூடேறி வருகிறது.
முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தல் 93 இடங்களில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ளன.
இந்த நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.
ஆளும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கித்தந்து விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடச்செய்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார். எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் போட்டி போடுவதாக அறிவித்தது. ஆனால் அதன் வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், அந்தக் கட்சி 181 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.
ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அதன் வேட்பாளர் பாபுநகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்பப்பெற்று விட்டதால் 13 இடங்களில் மட்டுமே அக்கட்சி களத்தில் உள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 765 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் (2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738), ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1,417 பேர் இந்த மாநிலத்தில் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன. அதே நாளில் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.






