என் மலர்
குழந்தை பராமரிப்பு
- திடீர் மரணத்துக்கு மூன்று காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.
- 3-4 மாதங்கள் ஆன குழந்தைகளே இந்த திடீர் உயிாிழப்புக்கு ஆளாகிறார்கள்.
காரணம் தெரியாத இத்தகைய திடீர் மரணத்தை SIDS (sudden infant death syndrome) என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ஸ் எனும் பச்சிளம் குழந்தை திடீர் மரணம் ஏன் ஏற்படுகிறது? அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்த குழந்தைகள் நல மருத்துவர் கூறுவதை பார்க்கலாம்.
90களில் ஆயிரம் குழந்தைகளுக்கு 2 குழந்தைகள் இதற்குப் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் இது பற்றியான துல்லியமான கணக்கெடுப்பு நிகழ்த்தப்படவில்லை. ஒரு வயது வரை உள்ள குழந்தைகளையே நாம் பச்சிளம் குழந்தைகள் என்று குறிப்பிடுகிறோம். 3-4 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தைகளே இந்த திடீர் மரணத்துக்கு ஆளாகின்றனர்.
இவ்விஷயத்தில் பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் இந்த பச்சிளம் குழந்தை திடீர் மரணத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
இந்த திடீர் மரணத்துக்கு மூன்று காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.முதலாவது மரபணுக் கோளாறு. இரண்டாவது குழந்தைகள் தூங்கும் அறையில் புகைப் பிடித்தல். குளிர்பிரதேசங்களில் மூடிய அறையினுள்தான் புகைப் பிடிப்பார்கள். அந்தப் புகையிலிருக்கும் கார்பன் மோனாக்ஸைடு ஆக்சிஜன் ஓட்டத்தை தடை செய்வதால் மூச்சுத்திணறி குழந்தை இறக்கக் கூடும். மூன்றாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது. இந்த மூன்று காரணங்களில் எதனாலும் சிட்ஸ் ஏற்படலாம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.
ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் பச்சிளம் குழந்தை திடீர் மரணத்துக்கு மிக முக்கியக் காரணம் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிற பசும்பால்தான். 1994 நவம்பர் 5 அன்று வெளியான லான்செட் மருத்துவ இதழில் இது குறித்தான விரிவான கட்டுரை வெளியாகியிருக்கிறது. பசும்பாலில் கேசீன் (Casein), அல்புமின் (Albumin), க்ளோபுலின் (Globulin) ஆகிய முக்கியப் புரதங்களும், பல ஹார்மோன் புரதங்களும் இருக்கின்றன. உலகில் 50 சதவிகித மக்களுக்கு பசும்பால் புரத ஒவ்வாமை இருக்கிறது. தும்மல், ஆஸ்துமா, எக்ஸிமா உள்ளிட்ட சரும நோய்கள் போன்றவை இந்த ஒவ்வாமையால் ஏற்படுகிறது. மரபணுக்களால் ஏற்படுவதால் இதை மரபணுக் கோளாறு எனலாம்.
குழந்தையின் தூக்கத்தின்போது ஏற்படுகிற ஒவ்வாமையின் காரணமாகவும் திடீர் மரணத்துக்கு ஆளாகலாம்.தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பசும்பால்/பவுடர் பால் குடிக்கிற குழந்தைகளே இதில் சிக்குகின்றனர். காரணம் என்னவெனில், பசும்பாலில் உள்ள கேசீன் புரதத்திலிருந்து Caso morphine எனும் போதை தரக்கூடிய பொருள் வயிற்றில் உருவாகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் பசும்பால் குடிக்கிற குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லக் காரணம் இதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் ஒவ்வாமை ஏற்படும்போது கோழை சுரந்து மூச்சுப்பாதையை அடைத்துக் கொள்ளும். இதனால் மூச்சுத் திணறி குழந்தை இறந்து விடக்கூடும். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தை ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லாது. இந்த புரத ஒவ்வாமைக்கும் ஆளாகாது.
3-4 மாதங்கள் ஆன குழந்தைகளே இந்த திடீர் உயிாிழப்புக்கு ஆளாகிறார்கள். ஏன் என்றால் 3-வது மாதத்தில்தான் குழந்தைக்கு பசும்பால்/பவுடர் பால் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். பசும்பால் புரத ஒவ்வாமையின் காரணமாக 3 வது மாத இறுதியில் அல்லது நான்காவது மாதத்தில் சில குழந்தைகள் மரணத்தை சந்திக்கிறார்கள். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது. ஆகவேதான் இந்நாடுகளில் இந்த திடீர் மரணத்தின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
பசும்பால் மனிதனுக்கு ஆனதல்ல என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேறு பல பிரச்னைகளுக்கும் அடிகோலிடும் என்பதால், பசும்பாலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு தூங்க வைக்கும் முன் பசும்பால் கொடுக்கவே கூடாது. குறைந்தது ஒரு வயது வரை அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்படி காற்றோட்டமான இடத்தில் தூங்க வைக்க வேண்டும்.
வீட்டுக்குள் புகைப்பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் கவனத்துடன் செயல்படும்போது பச்சிளம் குழந்தை திடீர் மரணத்திலிருந்து நமது குழந்தையை காக்க முடியும்.மரபணுக் கோளாறு, குழந்தைகள் தூங்கும் அறையில் புகைப் பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது... இந்த மூன்று காரணங்களால் சிட்ஸ் எனும் குழந்தைகளின் திடீர் மரணம் ஏற்படலாம்.
- குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.
- குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின்-டி கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதான் விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், பகல் முழுவதும் வீட்டுக்கே வரமாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையதளம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்யவேண்டும்.
இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கனவே, கிட்டப் பார்வைக்குக் கண்ணாடி அணிந்து இருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன் மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
- மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மகள் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும். இதற்கு, உங்கள் மகள் பிறப்பிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கியது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம்.
சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் சுமார் 60 லட்சம் பெறலாம்.
- குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது.
- குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை வயதுவரை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்? கோடைக்காலத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம்.
குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள்.
வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது. கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம்.
ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது. எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம்.
குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.
- இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள்.
- தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.
உலகின் கண்மணிகள் குழந்தைகள். இப்படிபட்ட குழந்தைகள் தங்களது பருவத்தில் காலையில் புத்தகப்பையை சுமந்துகொண்டு பள்ளிக்கு சென்று கல்வி கற்பதும், மாலையில் வீட்டிற்கு வந்து சிறிதுநேரம் விளையாடுவதும் என்று எவ்வித கவலைகளும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டியவர்கள். ஆனால் சமூகத்தில் இன்றளவும் குடும்பத்தின் வறுமை எனும் சுமையை, படிக்கும் வயதிலான சில குழந்தைகளின் தலையில் ஏற்றி அவர்களை வேலைக்கு அமர்த்தும் வேதனை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நம் நாட்டில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் சில நாடுகளில் குழந்தைகளின் வயது மாறுப்பட்டு சட்டங்கள் உள்ளன. மேலும் குழந்தை தொழிலாளர் உருவாவதை தடுக்க பல்வேறு சட்டதிட்டங்களும் உள்ளன. அத்துடன் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணிகளில் குழந்தைகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு குழந்தைகள் நல அமைப்புகள், இயக்கங்களும் கைகோர்த்து செயல்படுகின்றன.
இன்றைய குழந்தைகளே நாளைய தலைமுறைகள். அதனால் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதும், அதிகரிப்பதும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். மேலும் நாடு எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த சமூகத்தை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி விளையாடும், படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் குடும்ப வறுமை, கல்வியின் அவசியம் உணராமை, போதிய விழிப்புணர்வு இல்லாமைதான்.
எல்லா குழந்தைகளும் கட்டாய கல்வி பெறவேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பது நம் கடமை என்பதை உணரவேண்டும். வறுமை காரணமாக குழந்தைகளை பணிக்கு அனுப்புதல் கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.
பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும். இருசாராரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் குழந்தை தொழிலாளர் உருவாவதைத் தடுக்க முடியும்.
அந்த வகையில் உலகளவில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும், அதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி(இன்று) உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, உரிய கல்வி கிடைக்க வழிவகை செய்வது அனைவரின் கடமையாகும்.
- குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.
- பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம்.
எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.
இதுபோல பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது சற்று சிரமமான ஒன்று. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கூட பாதிக்கப்படலாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கலாம், குழந்தைகள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள், அதை எப்படிச் சரிசெய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
புதிதாகப் பள்ளியில் சேரும்போது, சில குழந்தைகள் அந்தப் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது அடம்பிடிப்பார்கள். என்றாலும், தொடர்ச்சியாக 20 நாள்கள் பள்ளி செல்லும் காலத்தில் அவர்களுக்கு அந்தச் சூழல் பழகிவிடும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு சூழலில் பள்ளி செல்ல மீண்டும் அடம்பிடிக்கலாம். சமாதானம் செய்து அனுப்பிவைத்தால் சூழலை ஏற்றுக்கொள்வார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால், ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுத்து, சில உடல்நிலைக் காரணங்களைச் சொல்லி, தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முயல்வார்கள். ஏதோ உடல்நல பாதிப்பு என நினைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால், எல்லாம் நார்மலாக இருக்கும். இதுவே குழந்தைகளின் அன்றாட நிகழ்வாகும்போது பெற்றோர் தங்கள் குழந்தையின் செயல்பாடுகளை அவசியம் ஆராய வேண்டும்.
* பள்ளிக்குச் செல்வதால் அம்மாவைப் பிரியவேண்டியிருக்கும், இதனால் தனக்கோ, தன் அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயத்துக்கு ஆளாகலாம். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனவே, இது 'ஸ்கூல் போபியா' கிடையாது; பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கான பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
* சில குழந்தைகள் மென்மையான மனம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் பிற குழந்தைகளின், ஆசிரியர்களின், ஸ்கூல் வேன் டிரைவர், ஆயா ஆகியோரின் கேலி, கிண்டல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ ஆளாகியிருக்கலாம். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.
* தான் பள்ளி சென்றவுடன் தன் தம்பி அல்லது தங்கை மட்டும் அம்மாவுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல், தானும் வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர்.
* சில குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் கற்றல் குறைபாடு ஏற்படலாம். இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளைக் கண்டிக்கும்போது பள்ளிக்குச் செல்ல அவர்கள் நிச்சயம் மறுப்பார்கள்.
* உடல்நிலை பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நீண்ட நாள்கள் விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு, மீண்டும் பள்ளிச் சூழலை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள்.
* குழந்தைகள், தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் `வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, தலை வலிக்கிறது' போன்ற உடல்ரீதியான காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க முயல்வார்கள். 'சரி லீவ் எடுத்துக்கோ' என பெற்றோர் சொன்ன சில மணி நேரத்தில் இயல்பான சூழலுக்கு வந்துவிடுவார்கள்.
* மனரீதியான பாதிப்பு ஏதேனும் அடைந்திருந்தால், தூக்கத்தில் அது அலறல்களாக வெளிப்படும்.
* ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களைப் பற்றி வீட்டில் அடிக்கடி குறை கூறலாம்.
* பள்ளி சார்ந்த செயல்பாடுகளான வீட்டுப்பாடம் எழுதுவது, பாடம் படிப்பது போன்றவற்றை வீட்டிலிருந்தே தான் செய்துகொள்வதாகச் சொல்வார்கள்; கெஞ்சுவார்கள்.
குழந்தைகள் இது போன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் உடனே இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
தீர்வுகள்!
பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'நீ ஸ்கூலுக்கு கண்டிப்பாகப் போகணும்' என வற்புறுத்தாமல், அவர்கள் ஏன் அடம்பிடிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் அடிக்கடி பள்ளி செல்ல மறுக்கிறார்கள் என்றால், முதலில் உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா எனக் குழந்தைகள்நல மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை வழங்கி, முழுமையாகக் குணப்படுத்தி, அதன் பிறகு பள்ளிக்கு அனுப்பலாம்.
சில குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாலியாக விளையாடலாம்; டி.வி பார்க்கலாம் என்றும்கூட பள்ளி செல்ல மறுப்பது உண்டு. எனவே, அவர்கள் விடுப்பு எடுக்கும் நாள்களில் டி.வி பார்க்கவும், விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தான் நினைத்தது நடக்கவில்லை எனும் பட்சத்தில் மறுநாள் அவர்களே ஸ்கூலுக்குக் கிளம்பிவிடுவார்கள்.
`ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே மிரட்சியுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் வகுப்பு ஆசிரியரை அணுகி உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல், மிரட்டல்களுக்கு ஆளாகிறதா என்பதை விசாரித்துத் தீர்வு காணுங்கள்.
பெற்றோரைப் பிரிய இயலாமல் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் எனில், பெற்றோரிடமிருந்து குழந்தை விலகியிருக்கச் சிறிது சிறிதாக எப்படிப் பழக்கப்படுத்தலாம் என ஆசிரியர்களுடன் கலந்து பேசலாம். பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில் குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம். அதன் பின்னர் சில தினங்கள் குழந்தையை வகுப்பறையில் அமரச் சொல்லி, 'அம்மா ஸ்கூல்லதான் இருப்பேன், லஞ்ச் டைம்ல பார்க்கலாம்' எனச் சொல்லி பள்ளியில் காத்திருக்கலாம். இப்படிப் படிப்படியாக பள்ளியின் சூழலையும் பெற்றோரின் பிரிவையும் குழந்தையை மனதளவில் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம்.
பள்ளி செல்ல குழந்தை மறுப்பதற்கு என்ன காரணம் என்றே பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாத சூழலில், குழந்தைகள் உளவியல் அல்லது மனநல மருத்துவரை அணுகித் தீர்வு காண வேண்டும்.
- இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள்.
- பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.
குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
இன்றைய தலைமுறை பெற்றோர் பலரும் அதிக பாசம் காட்டி குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு அன்பையும், அரவணைப்பையும் வழங்குகிறார்களோ அதே அளவுக்கு அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அப்படி கடுமையாக கண்டிப்பது உளவியல் ரீதியாக அவர்களை காயப்படுத்தும்.
எப்போதும் அன்பாக நடத்தும் பெற்றோர் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறார்களே என்ற ஆதங்கத்தை அவர்கள் மனதில் விதைக்கும். ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் தவறு செய்யும்போது குரலை உயர்த்தி கடுமையாக பேசுவது மனதளவில் காயப்படுத்திவிடும்.
அதன் அதிர்வு ஆழ் மனதில் பதிவாகிவிடும். அதன் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும். உளவியல் ரீதியாக பலவீனமாகிவிடுவார்கள். பெற்றோர் - பிள்ளைகள் இடையேயான பிணைப்பிலும் விரிசல் ஏற்படக்கூடும்.
உங்கள் குழந்தையை பொது இடத்தில் கத்தாதீர்கள், இதனால் அவர்கள் மற்றவர்கள் மத்தியில் குற்றஉணர்ச்சியாக உணர்வார்கள். மேலும் நல்ல பழக்கவழக்கங்களைத் தூண்டுவதற்குப் பதிலாக, அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். இதன் விளையாவாக அவர்கள் நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உங்களை வெறுக்கத் தொடங்கலாம். எனவே அவர்கள் தவறு செய்தாலும் தனியாக அழைத்து சென்று கண்டிப்பது நல்லது.
ஒவ்வொரு குழந்தையும் தவறு செய்கின்றன, அது தவறு என ஒரு முறை புரிய வைத்தால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருப்பினும், அதைப் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டாக மாற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. அவை குழந்தைகளின் நடத்தையில் மேலும் சிக்கலை தரும். எனவே, தொடர்ந்து அசிங்கப்படுத்துவை தவிர்க்கவும்.
- ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
- கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.
குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.
நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.
அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.
எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.
திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.
வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.
நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.
- படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள்.
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:
5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.
நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள்.
படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும்.
குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.
- குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
- குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. உருவாக்குகிறது.
மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது.
காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம்.
உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும்.
அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.
- பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
- கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.
பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.
இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.
பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:
"மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:
"ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
- குழந்தைகள் செல்போனில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.
- குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.
குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.
பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள்.






