என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
    • தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.

    தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.

    தேவையான பொருட்கள்

    தீபாவளி லேகியப்பொடி

    வெல்லம்

    தேன்

    நெய்

    இஞ்சி

    நல்லெண்ணெய்

    செய்முறை

    கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.


    பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்

    தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...

    தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது. 

    • மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
    • ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?

    கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.

    "டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?

    ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.

    அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

    சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?

    மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.

    ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?

    பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.

    ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.

    கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?

    முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.

    விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?

    இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.

    கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?

    முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

    • குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
    • அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?

    குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

    மூன்று தூக்க நிலைகள்...

    பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.

    ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 


    குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்

    வலிப்புத் தாக்கம்...

    பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

    • குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.
    • கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.

    தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான். பட்டாசுக்களை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பட்டாசுக்களை வெடிக்கும்போது கட்டாயம் பின்பற்றவேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்.

    * பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீர், முதலுதவி பெட்டியை உடன் வைத்திருங்கள்.

    * வெடிக்கும் பட்டாசுகளை கையில் வைத்து தூக்கி எறியக் கூடாது.

    * அருகில் தீப்பற்றும் எந்த பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    * பட்டாசுகளை வெடிக்க திறந்தவெளி பகுதியை தேர்ந்தெடுங்கள்.

    * குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.

    * வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.

    * வெடித்த பட்டாசுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு வாளி தண்ணீரில் மூழ்க வைக்கவும்.

    * நல்ல தரமான, உரிமம் பெற்ற பட்டாசுகளை வாங்கவும், தரத்தில் சமரசம் செய்ய வேண்டாம்.

    * கால்களை முழுவதும் மூடும் காலணிகள் பயன் படுத்துங்கள். ஷூ பயன்படுத்துவது காலில் காயம் ஏற்படுவதை தடுக்கும்.

    * கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.

     

    * 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசுகளுக்கு அருகில் அனுமதிக்காதீர்கள். மற்ற வயது குழந்தைகளை அவர்களாகவே பட்டாசுகளை பற்றவைக்க அனுமதிக்காதீர்கள்.

    * பட்டாசுகளை வெடிக்க நீண்ட பத்தியை பயன்படுத்தவும். பட்டாசுகளை பற்ற வைக்கும்போது முகத்தை பட்டாசுகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக குனிந்து பட்டாசு பற்றவைப்பதை தவிர்க்கவும்.

    * ஒருபோதும் சீரற்ற முறையில் பட்டாசுகளை வீசாதீர்கள். ஒன்றுக்கு மேல் பட்டாசுகளை ஒன்றிணைத்து பற்ற வைக்காதீர்கள்.

    * நைலான், பட்டு, சிந்தட்டிக் உடைகளை அணிய வேண்டாம். ஏனெனில் அவை விரைவாக தீப்பிடிக்கும். தீப்பிடிக்கக்கூடிய தளர்வான ஆடைகளையும் அணியாதீர்கள்.

    * வீட்டின் உட்புறத்திலோ அல்லது வாகன நிறுத்துமிட பகுதியிலோ ஒருபோதும் பட்டாசுகளை பற்றவைக்காதீர்கள்.

    * பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரின் ஆடையை அகற்றி, அவர் மீது போர்வை போர்த்துங்கள்.

    * கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் கண்ணை அழுத்தி தேய்க்காதீர்கள். அது காயத்தை அதிகப்படுத்திவிடும்.

    * பட்டாசு வெடித்த தீக்காயத்தின் மீது பற்பசை, எண்ணெய், மஞ்சள் தூள், மை தடவக்கூடாது. குளிர்ந்த நீரையோ, ஐஸ் கட்டியையோ கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. தண்ணீரில் 10 நிமிடங்கள் கழுவி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    * பட்டாசுகளை பற்றவைக்கும்போது உங்கள் பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்திருக்கக்கூடாது.

    * மின் கம்பங்கள் அல்லது கம்பிகளுக்கு அருகில் ஒரு போதும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

    * பட்டாசு ஒருமுறை வெடிக்கவில்லை என்றால் மீண்டும் நெருப்பு பற்றவைக்க முயற்சிக்கக்கூடாது.

    • வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.
    • இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலருக்கும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் அசைவ உணவுகள். நம் வீடுகளில் சாப்பிடுவது மட்டுமின்றி, உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கொடுப்பதையும் தவிர்க்க இயலாது. தீபாவளி, கண்டிப்பாக இனிப்புகள் இல்லாமல் முழுமையடையாது. ஆனால் தீபாவளி திண்பண்டங்களால் எடைக்கூடாமல் இருக்கவேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில்கொண்டு சாப்பிடுங்கள்.

    இனிப்புக்கு முன் புரதம் அல்லது நார்ச்சத்து

    இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கும். இதனால் இனிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

    நீரேற்றம்

    விழாக்காலங்களில் நமது கவனம் முழுவதும் கொண்டாட்டத்தில்தான் இருக்கும். வேளைக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அம்மா சுடும் வடை, வீட்டில் இருக்கும் இனிப்பை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்வோம். தண்ணீரும் போதுமான அளவு எடுத்துக்கொள்ளமாட்டோம். அதனால் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். இதுவும் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் மற்ற திண்பண்டங்களை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டோம்.

    சாப்பிட வேண்டுமா?

    தீபாவளி என்பதால் உறவினர்கள் வீட்டிற்கு அதிகம் செல்லவேண்டியிருக்கும். அவர்களும் பாசத்தில் நிறைய உணவுகளை எடுத்துவந்து சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதற்கு நம் வயிற்றில் இடமே இருக்காது. இருப்பினும் அவர்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக எடுத்துக்கொள்வோம். அதை செய்யவேண்டாம். உண்மையில் உங்களுக்கு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடலாம் என தோன்றினால் மட்டும் சாப்பிடுங்கள். அவர்கள் கொடுத்த அன்பிற்காக துளி அளவு மட்டும் எடுத்து சாப்பிட்டால் போதுமானது. வயிறு நிரம்பியிருக்கும்போது அடுத்தடுத்து உணவை உள்ளே செலுத்தாதீர்கள்.


    அதிகளவு இனிப்பு பலகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்

    திரையை தவிர்க்கவும்

    சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது ஃபோனில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் டிவி பார்க்கும்போதோ அல்லது ஃபோனில் பேசும்போதோ நமது கவனம் உணவில் இருக்காது. கவனச்சிதறல், உட்கொள்ளல் அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுங்கள்.

    உடற்பயிற்சியை தொடரவும்

    விடுமுறை என்றாலே நமக்கு ஓய்வுதான். அதுவும் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உணவுகள் அதிகரிக்கும்போது உடற்பயிற்சி தவிர்க்கப்படுகிறது. இது எடை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கூடுதல் முயற்சிகள் இல்லாமல், அதே எடையை நிர்வகிக்க உதவும் ஒரு மிகப்பெரிய வழியாகும்.

    ஆரோக்கியமாக இருப்பதும், குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் நினைவுகளை போற்றுவதற்கான மற்றொரு வழியாகும். எனவே, இந்த தீபாவளியில் ஒரு சில எளிய முயற்சிகளை எடுப்பது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

    • இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • ஒவ்வொரு பண்டிகை நாளிலும் ‘அளவுக் கட்டுப்பாடு' முக்கியம்.

    நீரிழிவு நோயை தடுக்க இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கடந்த 2023-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 2021-ம் ஆண்டிலேயே இந்தியாவில் 10.1 கோடி நீரிழிவு நோயாளிகள், 13.6 கோடி முன்-நீரிழிவு நோயாளிகள் மற்றும் 31.5 கோடி உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இந்தநிலையில் 'லோகல் சர்கிள்ஸ்' என்ற நிறுவனம் நடப்பு ஆண்டு நடத்திய ஆய்வில், 74 சதவீத நகர்ப்புற குடும்பத்தினர் மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளை உண்கிறார்கள் எனவும், திருவிழா காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது.

    இதுதவிர 5 சதவீதம் பேர் தினமும் சர்க்கரை உட்கொள்கிறோம் என்றும், 26 சதவீதம் பேர் மாதத்திற்கு 15 முதல் 30 முறை வரை சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 43 சதவீதம் பேர் தங்களின் குடும்பத்தில் பெரும்பாலானோர் ''சர்க்கரை அடிமைகள்'' என்று கூறியுள்ளனர். அதேசமயம், 70 சதவீதம் பேர் ''சர்க்கரை அளவு 30 சதவீதம் குறைந்த மாற்று தயாரிப்புகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்துவோம்'' எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே டாக்டர்கள், நிபுணர்கள், தீபாவளி பண்டிகையால் இந்தியாவில் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரித்து உள்ளது என்றும், அதனால் நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்திய நகர்ப்புறங்களில் இனிப்பு உண்ணும் வீதம் கடந்த 18 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள் இனிப்புகளோடு சாக்லெட், பிஸ்கட், கேக் போன்ற இனிப்புகளையும் அடிக்கடி உண்பதாக தெரியவந்துள்ளது. தீபாவளி என்றாலே இனிப்புகள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்ற சர்க்கரை நிறைந்த உணவுகளை தான் மக்கள் அதிகம் எடுத்து கொள்கின்றனர்.

    இதோடு இறைச்சி வகைகள் மற்றும் பிரியாணியும் முக்கிய உணவாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தீபாவளி காலத்தில் நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி இனிப்புகளை அதிக அளவில் எடுத்து கொள்வதுதான்.

    சமீபகாலமாக சிலர் இனிப்புகளுக்கு பதிலாக பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை பரிசாக வழங்க ஆரம்பித்து உள்ளார்கள். இது நல்ல முன்னேற்றம். உப்பு இல்லாத பருப்புகள் நல்லது. இனிப்புகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்தது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியோடு இனிப்புகளை அனுபவிப்பது தவறு அல்ல.

    ஆனால் அவற்றை அளவுக்கு மிஞ்சாமல் எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனமான வழி. இனிப்புகளுக்கு பதிலாக பழங்கள், பருப்புகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு பண்டிகை நாளிலும் 'அளவுக் கட்டுப்பாடு' முக்கியம். திருவிழாக்கள் மகிழ்ச்சியை தரட்டும். ஆனால் நோய்களை அல்ல.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
    • செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.

    செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.


    செய்முறை

    * முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)

    * ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

    * பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.

    * அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.

    * வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.

    * வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    * இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.

    * சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.

    * மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

    * மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.

    * இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.

    * கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.


    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்

    ஆரோக்கிய நன்மைகள்

    1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.

    2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

    3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.

    • பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
    • சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?

    தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


    இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!

    பட்டாசு வெடிக்கும்போது...

    * பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.

    * ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    * பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும். 

    * பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.

    * பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

    * பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

    உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!

    * பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    * பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.

    * காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். 

    * பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


    திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    தீப்பற்றினால்...!

    * பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.

    * தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.

    * தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    * தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    * கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

    சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!

    * காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. 

    * பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

    * சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    * பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

    * பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.

    * சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.

    * பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.

    • வயர் அசவுகரியமாக தெரிந்ததால் ‘புளூ டூத்’ வசதியை அறிமுகம் செய்தார்கள்.
    • பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    யாராவது தெருவில் தனியாக நடந்து செல்லும்போது சிரித்துக் கொண்டே நடந்தாலோ அல்லது பேசிக்கொண்டே நடந்தாலோ அய்யோ பாவம்.... ஏதோ ஆகி விட்டது என்று ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது அந்தக் காலம்.

    ஆனால் இன்று யாரை பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் நல்லாத்தான் இருக்கிறார்கள். என்ன சொல்வது...? காலம் மாறி போச்சு.

    செல்போன் வந்ததும் காதில் நீண்ட நேரம் வைத்து பேசும்போது சூடாகிறது. இது காதுக்கு நல்லதல்ல என்றார்கள்.

    அதை தவிர்ப்பதற்காக வயருடன் கூடிய இயர்போன் வந்தது. செலபோனில் ஒரு முனையை சொருகி விட்டு மறுமுனையில் இருக்கும் இரண்டு இயர்போன்களையும் இரண்டு காதுகளிலும் மாட்டி கொண்டார்கள்.

    பின்னர் வயர் அசவுகரியமாக தெரிந்ததால் 'புளூ டூத்' வசதியை அறிமுகம் செய்தார்கள். இப்போது செல்போனில் புளூ டூத்தை ஆன் செய்து வைத்து விடுகிறார்கள். காது கேட்கும் கருவி போல் இருக்கும் சிறிய அளவிலான இயர்போனை காதுக்குள் சொருகி கொள்கிறார்கள்.

    காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அதை மாட்டுகிறார்கள். இரவு வீடு திரும்பும் வரை அது காதுகளில் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை மட்டுமல்ல வேலை பார்ப்பவர்கள் கூட காதுக்குள் வைத்திருக்கிறார்கள்.

    கையில் போனை எடுத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் எந்த நேரமும் நினைத்த மாதிரி இனிமையான பாடல்களையோ, நகைச்சுவைகளையோ போட்டு கேட்டு ரசித்தபடியே இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது வேலையில் எந்த அளவு கவனம் இருக்கும்? நடந்து செல்லும்போது சுற்றிலும் நடப்பது அல்லது நெருங்கி வரும் ஆபத்துகளை எப்படி உணர முடியும்? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால் இதுபற்றி இயர்போனை பயன்படுத்துபவர்களிடம் கேட்டால் ஒரு காதில்தான் மாட்டியிருக்கிறோம். மற்றொரு காதில் வெளி உலகில் நடப்பதை கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். இந்த மாதிரி ஒற்றை இயர்பட் என்பது இப்போதெல்லாம் புதிய சமூக அடையாளமாக மாறி விட்டது.

    சிலர் பேசுவது எரிச்சலூட்டும்போது இயர்போன் வழியாக காதில் விழும் மெல்லிய பின்னணி இசை அதில் இருந்து மீட்பதாக கூறுகிறார்கள். நாங்கள் இங்குதான் இருக்கிறோம். ஆனால் இல்லை என்ற ரீதியில்தான் ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள்.

    பஸ், ரெயில், பொது இடங்கள் என்று எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் ஒற்றை இயர்போனோடுதான் இருக்கிறார்கள்.

    வெளியில் இருந்து ஒலி பெருக்கி சத்தமோ அல்லது அதிகமான ஏதாவது ஓசையோ கேட்டால் செவிப்பறை கிழிந்து விடும் போல் இருக்கிறது என்று சலித்து கொண்டவர்கள்தான் இப்போது ஒலியை சிந்தாமல், சிதறாமல் அப்படியே காதுக்குள் பாய்த்து கொள்கிறார்கள். இது காதை பாதிக்காதா? என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. பல நேரங்களில் இயர்போன் வழியாக வெளியேறும் ஒலியின் அளவை பொறுத்து போனில் எச்சரிக்கை வருகிறது. "அதாவது அளவுக்கு அதிகமான சத்தம் வருகிறது. ஒலியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கும்.

    ஆனால் அதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. மணிக்கணக்கில், நாள் கணக்கில், மாத கணக்கில், ஆண்டு கணக்கில் இப்படியே பழக்கப்பட்டால் காது என்னவாகும்? செவி மடல் பாதிக்காதா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருக்கிறது.

    இவ்வாறு பயன்படுத்துவது நல்லதல்ல. வாகனங்களில் செல்லும்போதும் பேசிக்கொண்டோ, பாடல்கள் கேட்டுக்கொண்டோ செல்வதால் கவன சிதறல் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம்.

    காது பகுதி மிகவும் சென்சிட்டிவான பகுதி இந்த பகுதிக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் ஒலி மாசு நிச்சயம் செவித்திறனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    • குங்குமப்பூ அழகு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது.
    • புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும்.

    குங்குமப்பூ என்றாலே நமது நினைவுக்கு வருவது, கர்ப்பிணிகள் அதனை பாலில் கலந்து குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பதுதான். ஆனால் குங்குமப்பூ பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டது என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். குங்குமப்பூ, அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என கேள்விப்பட்டிருப்போம். அப்படி பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை காண்போம்.

    வயதான தோற்றத்தை தவிர்க்கும்

    குங்குமப்பூவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (குரோசின் மற்றும் சஃப்ரானல்) நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். இது முகத்தில் சுருக்கங்கள், கோடுகள் உருவாக வழிவகுக்கும். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்திருக்கின்றன.

    பிரகாசமான முகம்...

    குங்குமப்பூவில் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உள்ளது. இது சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது டைரோசினேஸ் நொதியை அடக்கி, மெலனின் உருவாவதைக் குறைக்கும் ஆற்றல்மிகு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மெலனின் உற்பத்தியைத் தூண்டக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இதன் விளைவாக முகத்திற்கு பிரகாசமான நிறம் கிடைக்கிறது.

    நிறமிகளுக்கு சிகிச்சையளிக்கும்

    காயம் அல்லது அழற்சிக்கு பின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வடுக்களை நீக்க குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. தோல்நோயை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சுற்றுச்சூழல் அழுத்தத்தால் ஏற்படும் நிறமி மாற்றங்களைக் குறைக்கிறது.


    சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்க குங்குமப்பூ உதவுகிறது

    ஈரப்பதம்

    குங்குமப்பூ ஒரு இயற்கையான மாய்ச்சுரைசர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கின்றன. மேலும் சரும வறட்சி மற்றும் தோல் உரிதலைத் தடுக்கின்றன. 

    சரும அமைப்பை மேம்படுத்தும்

    குங்குமப்பூவில் வைட்டமின் பி (ரைபோஃப்ளேவின்) உள்ளது. இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சரும செல் புத்துயிர் பெறவும் உதவுகிறது. இதனால் புதிய செல்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைந்து, பழைய, சேதமடைந்த செல்கள் உதிர்ந்து, சருமம் பெரும்பாலும் மென்மையாகவும், பொலிவுடனும் தோன்றும். மேலும் சருமத்தின் மந்தமான தன்மை, கரடுமுரடான தன்மையைக் குறைத்து, சருமத்தை மென்மையாக காட்டு். 

    கருவளையத்தை நீக்கும்

    கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது . குங்குமப்பூ ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

    தோல் அழற்சி

    குங்குமப்பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா (அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமம்) போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. 

    சூரிய ஒளி பாதுகாப்பு

    குங்குமப்பூ சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணைபுரிகிறது. 

    • ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம்.
    • பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

    இன்றைய போட்டி உலகில் பொருத்தமான வேலையை தேடி அதற்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கும் கடினமாகிவிட்டது. பலரும் பொதுவான சில தவறுகளை செய்து வேலையை தவறவிட்டு விடுகிறார்கள். நேர்காணலில் வெற்றி பெற கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்..

    1. ஆராய்ச்சி செய்யுங்கள்

    ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது முதலில் நிறுவனம், பணி கலாசாரம், அவர்களின் தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். நிறுவனத்தின் வலைத்தளம், சமூக ஊடக பக்கங்கள் போன்றவற்றில் நிறுவனம் பற்றிய சமீபத்திய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தில் ஏதேனும் பெரிய திட்டங்கள் அல்லது தலைமை மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அறிந்து வையுங்கள்.

    2. நேரம் மற்றும் தோற்றம்

    நேர்காணலுக்கு தாமதமாக செல்வது, சரியான முறையில் உடை அணியாமல் இருப்பது உங்கள் மேல் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு குறித்த நேரத்தை விட 15 நிமிடங்களுக்கு முன்பாகவே செல்லுங்கள். நேர்காணலுக்கு சரியான முறையில் ஆடையை தேர்ந்தெடுத்து அணியுங்கள். பாலிஷ் செய்யப்பட்ட காலணிகள், குறைந்த அளவிலான ஆபரணங்கள் நிறைவான தோற்றத்தை அளிக்கின்றன.

    3. உடல் மொழி

    ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம். கண்களை நோக்கி பேசுவதை தவிர்ப்பது, குனிந்து நிற்பது ஆகியவை உங்களுக்கு போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகின்றன. நேராக அமர்ந்து, கண்களை நோக்கி பேசுங்கள். அதேபோல பதிலளிக்கும்போது நம்பிக்கையுடன் தைரியமாக பேசுங்கள்.

    4. தடுமாற்றம் வேண்டாம்

    கவனமில்லாமல் பதில் சொல்வது, பேசும்போது தடுமாறுவது ஆகியவை அந்த தலைப்புகளை பற்றி அதிகம் தெரியாது என்பதையும், தன்னம்பிக்கை இல்லை என்பதையும் காட்டும். பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

    5. கேள்வி கேளுங்கள்

    பெரும்பாலான நேர்காணல்களில் இறுதியில், `உங்களுக்கு ஏதேனும் கேள்வி உள்ளதா?' என கேட்கப்படும். நீங்கள் எதையும் கேட்காமல் மவுனமாக இருந்தால் வேலையில் ஆர்வம் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து கேள்வி கேளுங்கள். பணி கலாசாரம், பணியில் உள்ள முக்கிய சவால்கள் போன்றவற்றை பற்றி கேளுங்கள். இது புதிய வேலையில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது.

    • அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
    • இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.

    கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.  

    மனத்திறன்களை மேம்படுத்தும்

    இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும். 


    மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்

    மனஆரோக்கியம் மேம்படும்

    அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    என்ன செய்யவேண்டும்? 

    ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.

    ×