என் மலர்
பெண்கள் உலகம்
- பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
- ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...
தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...
வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன. தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.

பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்
தேனை எப்படி பயன்படுத்தலாம்?
பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
- திருமண உறவில் பெண்களே தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்து வாழ்கின்றனர்?
- விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.
கணவன், மனைவியோ அல்லது காதலர்களோ தங்களுக்குள் பிரிவு வந்தால் இருவருக்கும் இருக்கும் வேற்றுமைகள்தான் காரணம் என நினைப்பர். ஆனால் ஒரு உறவின் பிரிதலுக்கு அங்கு புரிதல்தன்மை இல்லாததே காரணம் என அறிந்திருக்கமாட்டார்கள். அறிந்தால் அந்த உறவின், பிரிவின் வலியிலிருந்து வெளியேவந்துவிடுவார்கள். இருவரின் விருப்பங்களில் வேற்றுமை இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். யாரும், யாருக்காகவும் மாறக்கூடாது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் அன்பால், காதலால் மட்டுமே நிகழவேண்டும். கட்டாயத்தால் அல்ல. இருவரில் ஒருவரின் செயலோ, விருப்பங்களோ, நடைமுறையோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்து மாற்றொருவர் தானாக மாறுவதே காதல். ஆனால் நீங்கள் மாறாமலேயே அப்படியே ஏற்றுக்கொள்பவர்தான் உண்மையான காதலர். ஒருவரின் கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்வது அல்ல. பலதரப்பு மக்களின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் இந்த மாற்றிக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் நிகழ்கிறது. இதனால் ஆண்களை குறைசொல்லவில்லை. ஆனால் பெண்கள் ஏன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து...
எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்?
ஒரு பெண்ணின் செயல் அவளுடைய காதலனுக்கோ, கணவனுக்கோ பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் (கோபம், முரண்பாடு, தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் போன்ற எண்ணங்கள்). ஆனால் தங்களுக்கு உரித்தான உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை மாற்றிக்கொள்ளவோக்கூடாது. எல்லோரிடத்திலும் பொதுவாக நிலவும் ஒரு கருத்து பெற்றோர்களால் பார்த்து செய்யப்பட்ட திருமணத்தில்தான் பெண்கள், கணவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்று. ஆனால் காதல் திருமணத்திலும் பல பெண்கள் தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்தே வாழ்கின்றனர். அதை என்ன சொல்வது?. இவற்றில் முக்கியமானவை வேலை, ஆடை, பேச்சு சுதந்திரம்.
வேலை
திருமணத்திற்கு பின்னரும் வேலைக்கு செல்லலாம் எனக்கூறி பெண்களை திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ள வைக்கும் பலரும், அதன்பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதில்லை. சில பெண்களும் இரண்டு, மூன்றுமுறை கேட்டுவிட்டு குழந்தை, குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று இதனை அப்படியே விட்டுவிடுவார்கள். கணவர் அன்பானவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால்? நிதி சுதந்திரம் என்பது எப்போதுமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை தரவல்லது. அதனால் எப்போதும் உங்கள் வேலை விஷயத்தில் விட்டுக்கொடுக்காதீர். இந்த வேலைக்குதான் செல்லவேண்டும், இதற்கு செல்லக்கூடாது என்றால் ஒத்துக்கொள்ளாதீர்கள். அதுபோல காதல் திருமணத்தில் பெரும்பாலும் கணவன், மனைவி பெற்றோரை பிரிந்து தனியாகத்தான் இருப்பார்கள்.

உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார்
இதனால் குழந்தை பிறந்தபின், குழந்தையை யாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்ற குழப்பம் நிலவும். இதனால் பெரும்பாலான வீடுகளில் வேலையை விடுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். இருவரும் பேசி முடிவெடுத்து, உண்மையில் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் குழந்தைக்காக நீங்கள் வேலையைவிடலாம். ஆனால் கணவரால், கணவரின் குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது நீங்கள் பெண் என்பதால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு எப்போதும் சம்மதிக்கக்கூடாது.
ஆடை
ஆடை சுதந்திரம் என்பது திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லை என பல பெண்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். உங்கள் ஆடையை மற்றவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? உங்கள் கணவர் உங்களை உண்மையில் காதலித்தால், உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கமாட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால் உங்கள் விருப்பத்தை புரிந்துகொள்ளாத ஒருவருக்காக உங்கள் விருப்ப சுதந்திரத்தை எங்கும் விட்டுத்தராதீர்கள்.
பேச்சு
அதிகமாக பெண்கள் பேசினாலே ஆண்களுக்கு பிடிக்காது. அது அந்தப் பெண்களை விரும்பாத ஆண்களுக்கு. உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார். இதனை எப்போதும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஏன் சில பெண்களுக்கே பெண்கள் அதிகம் பேசுவது பிடிக்காது. அதனால் உங்களை உங்கள் கணவர் கட்டுப்படுத்தினால் நீங்கள் அவர் சொல்வதை கேட்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக கணவரின், காதலரின் எல்லாக் கருத்துகளுக்கும் பெண்கள் முரண்பட வேண்டும் என்பது பொருளல்ல. நியாயமான உங்களது விருப்பங்களுக்கு முரண்படுதல் என்பது தேவையான ஒன்று. விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.
- நாய் வைத்திருப்பவர்கள் பலரும் தங்களை அறியாமலேயே உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்?
- வயதானவர்களுக்கு, அவர்களின் தனிமையில் உணர்ச்சிரீதியான ஆதரவை செல்லப்பிராணிகள் வழங்குகின்றன.
"நாயே வந்து சோறு சாப்பிடு, தங்கப்புள்ள வந்து சாப்பிடுடி" என அம்மா வீட்டில் கூறுவார். இதில் நாய் என கூப்பிட்டது, தான் பெற்றப்பிள்ளையை. தங்கப்புள்ள என கூப்பிட்டது வீட்டு செல்லப்பிராணி நாயை. இப்படித்தான் நமது வீடுகளில் நாய்கள் செல்லமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை ஒரு விலங்காக பார்க்கப்படாமல் வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகின்றன. நாய்மீது விருப்பம் கொல்லாதவர்கள் வீட்டில் பூனையை வளர்ப்பர். சிலர் ஆடு, மாடுகள் வளர்ப்பர். ஆனால் பெரும்பாலானோர் வீட்டில் ஏதாவது ஒரு செல்லப்பிள்ளை(செல்லப்பிராணி) இருக்கும். இதுபோன்ற செல்லப்பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் நமது மனநலனுக்கும், உடல் நலனுக்கும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.
மனநல நன்மைகள்
காவலுக்காகவோ, குழந்தைகள் ஆசைப்பட்டார்கள் என்றோ அல்லது எதோ ஒரு காரணத்தால் நாம் பிராணிகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்திருப்போம். ஆனால் அவை குறிப்பாக நாய்கள், நமது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? இவை மனிதர்களால் கொடுக்கப்படும் தனிமையை எளிதாக்குகின்றன. உடற்பயிற்சியை ஊக்குவிக்கின்றன. மொத்தமாக நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை வைத்திருப்பது நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள ஒரு உந்துதலை அளிக்கும். அப்படி உங்கள் வீட்டில் செல்லப்பிராணி இல்லை என்றால், உங்களுடைய நண்பர்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ இருந்தால் அவற்றுடன் சென்று விளையாடி பாருங்கள். அது கண்டிப்பாக உங்களுடைய மனநலனுக்கு நன்மை பயக்கும்.

மன ஆரோக்கியத்திற்கு உதவும் செல்லப்பிராணிகள்
ஆரோக்கிய நன்மைகள்
நாய் வைத்திருப்பவர்கள் பலரும் தங்களை அறியாமலேயே உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். நாய் இருந்தால் வீட்டில் நாம் அதனோடு விளையாடிக் கொண்டிருப்போம். அல்லது அது சேட்டை செய்தாலும் அதை பிடிப்பதற்கு அங்கும், இங்கும் ஓடுவோம். அதனை வெளியில் அழைத்துச்செல்வோம். இதில் நமக்கு தெரியாமலேயே நம் உடல் உறுப்புகள் இயக்கம் அடைகின்றன. நடைபயிற்சி மேற்கொள்கிறோம். இந்த தினசரி இயக்கம், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதோடு மார்பகம், புரோஸ்டேட், நுரையீரல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்குமாம். இவற்றையெல்லாம் தாண்டி செல்லப்பிராணிகளை வைத்திருப்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். விலங்குகள் இருப்பது இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கிறது. ஏனெனில் விலங்குகளின் உடனிருப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை அமைதிப்படுத்துகிறது. நாய்களை வளர்ப்போர் குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த இதயத் துடிப்பு மற்றும் குறைந்த கொழுப்பு போன்ற மேம்பட்ட இதய ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

முதுமையில் துணையாக இருக்கும் செல்லப்பிராணிகள்
ஆரோக்கியமான முதுமை
செல்லப்பிராணிகளை வைத்திருப்பது வயதானவர்களுக்கு, அவர்களின் தனிமையில் உணர்ச்சிரீதியான ஆதரவை வழங்கும். வேலையால் பிள்ளைகளும், படிப்பால் பேரக்குழந்தைகளும் அவர்களுடன் இருக்கமுடியாத சூழலில், செல்லப்பிராணிகள் எப்போதும் அவர்கள் கூடவே இருக்கின்றன. இது மனஅழுத்தம் மற்றும் அவர்களது தனிமையை குறைப்பதாக தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், செல்லப்பிராணிகள் வயதானவர்களை அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற மறதி நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகின்றன. செல்லப்பிராணிகள் நம்முடைய துன்பம், தனிமை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கின்றன.
- காலைநேரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்யாதீர்!
- சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை பிரச்சனைகளை தீர்க்கும்.
ஒரு குழந்தையை காலையில் பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்தது என்பது அவர்களின் தாய்மார்களுக்கு மட்டும்தான் தெரியும். குழந்தைகளைவிட அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமைகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஒரு பள்ளி காலைப்பொழுதை இவ்வளவு கடினமாக்குவது எது என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? முன்கூட்டியே திட்டமிடாததுதான் அது. காலையில் சிரமமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கீழ்க்காணும் எளிய நடைமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றினாலே போதும்....
சீக்கிரம் எழுவது
குழந்தைகள் 8 மணிக்கு பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அவர்களை 7 மணிக்கு எழுப்பிவிட்டு அரக்க பறக்க பள்ளிக்கு அனுப்பாதீர்கள். 8 மணிக்கு பள்ளி எனில் 6.30-க்கு எழுப்பிவிடுங்கள். அதற்கு முதல்நாள் இரவு தாமதாக தூங்கவைக்கமால், சீக்கிரம் தூங்கவைக்கவேண்டும். சீரான தூக்க அட்டவணை குழந்தைகளை மன அழுத்தத்திற்கு இட்டுசெல்லாது.
தண்ணீர் குடிக்க வைக்கவேண்டும்
குழந்தைகள் எழுந்தவுடன் அவர்கள் முகம், கை, கால்களை கழுவசொல்லவேண்டும். பின்னர் கழிவறைக்கு சென்றுவந்தபின், பல் துலக்க சொல்லிவிட்டு, வெறும் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும். ஏனெனில் இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் உடல் நீரேற்றம் இன்றி இருக்கும். தூக்கத்திற்குப் பிறகு மீண்டும் நீரேற்றம் பெறுவது வளர்சிதை மாற்றத்தில் தொடங்கி அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
காலை உணவு
சீக்கிரம் எழாத குழந்தைகள், தாமதமாகிவிட்டது எனக்கூறி சாப்பிடாமல் செல்வார்கள். காலை உணவை தவிர்ப்பது நினைவாற்றல், கவனம் செலுத்தும் செயல்களை பாதிக்கும். இதனால் கல்வி பாதிக்கப்படும்.

குழந்தைகளின் காலை நேர ரொட்டீனின் மாதிரிப் படம்
திரை பயன்பாட்டை குறைத்தல்
பெற்றோர் பலரும் தங்களுக்கு குழந்தைகள் வேலைகொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் ஃபோன் கொடுப்பது, டிவியை போட்டுவிட்டு பார்க்க சொல்வது என இருப்பர். எழுந்த உடனேயே டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது மூளையின் கவனம் செலுத்தும் திறனை சீர்குலைக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல் ஏற்படும்.
உடற்பயிற்சி
காலையில் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்லலாம். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை தூண்டும் மற்றும் மூளையை கற்றலுக்கு தூண்டும்.
முன்னேற்பாடு
காலை நேரத்தை எளிதாக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். முந்தைய நாள் இரவே காலையில் போடவேண்டிய பள்ளி சீருடைகள், அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்கள், போன்றவற்றை எடுத்துவைத்துவிடவேண்டும். இது குழந்தையின் நாளை அமைதியாக தொடங்க உதவும்.
படித்தல்
அன்றைய நாளில் உள்ள வகுப்புக்கான பாடங்களை ஒருமுறை எடுத்து காலைநேரத்தில் வாசித்து பார்க்க சொல்லலாம். ஒருமுறை தாங்களே வாசித்து பார்த்துவிட்டு, பின்னர் ஆசிரியர் நடத்துவதை கவனிக்கும்போது நன்றாக புரியும். பாடத்தில் இருக்கும் வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் சந்தேகங்களை எழுப்ப முடியும்.
பெற்றோர் அமைதி அவசியம்
இறுதியாக, பெற்றோர்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. காலை நேரத்திலேயே பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்வது நேரத்தை வீணடிப்பதோடு, குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, காலை நேரத்தை இன்னும் கடினமாக்குகிறது.
சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை குழந்தைகளின் கவனத்தையும், நல்வாழ்வையும் ஆதரிக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?. கதையமைப்புப்படி அவர்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது சரிதானா என ஒரு சிறிய கலந்துரையலாடலை காணலாம்.
கோவலனுக்கெல்லாம் கண்ணகிதான் கிடைப்பார்களோ?
மனைவி இருக்கும்போது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல்வயப்படுவது என்பது எவ்வளவு பெரிய துயர். அது கண்ணகி காலத்தில் இருந்தாலும் சரி, தற்போதைய 21ம் நூற்றாண்டாக இருந்தாலும் சரி. நாம் அன்பு கொண்டிருக்கும் ஒருவர், வேறு ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறார் என தெரியவந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. நாம் காதல் செய்யும் ஒருவர், நம்மை காதலித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறலாம். ஆனால் அவர்கள் வேறு ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது? இந்த உணர்வுதான் கண்ணகிக்கும் இருந்திருக்கும்.
தான் உயிரினும் மேலாக காதல் கொண்டிருந்த தன் கணவன், நாடக மகள்மீது காதல் கொள்வதை கண்ணகி அறிகிறாள். அது 21ஆம் நூற்றாண்டு இல்லை என்பதால், கண்ணகியால் கோவலனிடம் கேள்வி எழுப்பியிருக்க முடியாது. ஆனால் அவளின் மனநிலை?. தன் காதலன் பிரிந்த நாள்முதல் கால்களில் சிலம்பு அணியவில்லை; காதுகளில் தோடு அணிவதில்லை; கண்களில் மை இடுவதில்லை; ஒளிபொருந்திய நெற்றியில் திலகமும் இடுவதில்லை; நீண்ட கருங்கூந்தல் எண்ணெயையும், பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன. வெறுமைத்தன்மை கண்ணகியை சூழ்ந்தது. யாருக்காக? வேறொரு ஒரு மங்கையிடம் காதல்கொண்ட ஒருவனுக்காக... அதாவது தனது கணவனுக்காக. மனது முழுவதும் பாரம். கணவன் வேறு பெண்ணிடம் காதல் கொண்டாலும், அவனை நினைத்தே இல்லறம் நடத்துகிறாள். அவனுடைய உறவினர்களையும் முகம் சுழிக்காமல் வரவேற்கிறாள். புகுந்த இடத்திலும், பிறந்த இடத்திலும் மனதில் இருக்கும் பாரத்தை வெளிக்காட்டாமல், யாருக்கென்றே தெரியாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். தம் மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ணகியின் பெற்றோர் அறிகின்றனர். அறிந்து என் செய்வது?
அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டுபோயினர். கணவன் வேறு பெண்ணிடம் சென்றாலும், அதை கேட்காமல், அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் இருந்ததால் அவள் கற்புக்கரசி என போற்றப்பட்டால். மாதவியிடம் மனக்கசப்பு எழ கண்ணகியிடம் வருகிறான் கோவலன். ஆனாலும் மாதவியிடம் வரும் சில கடிதங்களை எண்ணி வருந்துகிறான். கண்ணகி கற்புக்கரசியாக இருந்தாலும், மாதவியைத்தான் பிடிக்கும் என சொல்லாமல் சொல்கிறான். பேதை கண்ணகியும் கணவன் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் ஏற்றுக்கொள்கிறாள். ஏனெனில், அது அவள் காதல் கொண்டவன் அல்லவா. மற்றொன்று அது 21ம் நூற்றாண்டு இல்லையே. கணவன் வேறு ஒருவரை வைத்திருந்தால் தூக்கி எறிய. ஆயினும் இப்போதும் அதேபோல பல கண்ணகிகள் வாழ்ந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதல் கொண்டிருக்க வேண்டியது கலை மீதா? மாதவி மீதா?
நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் உட்பட பலரும் மாதவி மீதான கோவலனின் காதலை ஆதரிக்கின்றனர். காரணம் கலாரசிகனான கோவலன், கலைகளின் அரசியான மாதவி மீது காதல் கொள்கிறானாம். மற்றொன்று திருமணத்தின்போது கண்ணகிக்கு வயது 12. அதாவது சிறுபிள்ளை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. கலாரசிகன் என்றால் கலையின் மீதுதானே காதல் கொண்டிருந்திருக்கவேண்டும். கலையை நிகழ்த்தும் பெண்ணின் மீதுதான் காதல் வருமோ?. கண்ணகி ஏதும் அறியாதவள் என விளக்கம் கொடுப்பவர்கள், அந்த ஏதும் தெரியாதவளை கோவலன் ஏன் மணந்தான்? என கூறமாட்டார்கள். அதற்கு கோவலனும் பதில்கூறமாட்டான். கலையால் ஈர்க்கப்பட்டு, காதல் வயப்பட்டிருந்தால், ஏன் அவள் பாடிய பாடலின் அர்த்தத்தை தவறாக கொண்டு மீண்டும் கண்ணகியிடம் வந்து வாசம் செய்யவேண்டும்?.

கணவனுக்காக சிலம்பை கையில் கொண்டு மன்னனிடம் முறையிடும் கண்ணகி
கற்புக்காக போற்றப்பட்டாளா கண்ணகி?
இங்கு கண்ணகியின் காதலும் போற்றப்படுகிறது. மாதவியின் காதலும் போற்றப்படுகிறது. ஏனெனில் கோவலன் பிரிந்துவந்த பிறகும் வேறு ஆண்களை எண்ணாமல், கோவலனை எண்ணியே வாழ்ந்து வந்தால் மாதவி. அப்போது இருவரின் காதலும் புனிதம் என்றால் கோவலனின் காதல்? கலைமீது காதல் கொண்டு சென்றிருந்தால், அவளது பாடலை தவறாக புரிந்துகொண்டிருந்தாலும், மாதவி யாரை விரும்பியிருந்தாலும், கோவலன் அவளை விரும்பியிருக்கவேண்டும், கண்ணிகியைப்போல. கோவலன் கங்கையை வைத்து பாடிய பாடலை தவறாக புரிந்துதான் மாதவி அதற்கேற்ற பாடலை பாடினாள். கோவலனின் பாடலில் மாதவி புரிந்துகொண்டது என்ன? அவள் வேறு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று பயம். அப்போது ஒரு பேதையே, அதாவது கண்ணகியை விட்டு, கோவலன் மாதவியிடம் செல்லும்போது? கண்ணகியின் வலி?. ஆனால், கேட்டால் நாம் மாதவியை குறை கூற இயலாது. ஏனெனில் அது அப்போதைய குலவழக்கம். அவளை குற்றம் சொல்ல இயலாது. கடைசியாக கண்ணகிக்கு வருவோம். கண்ணகி கற்புக்காகத்தான் போற்றப்பட்டாளா? இங்கு கற்பு என்பது என்ன? ஏன் இந்த உலகில் கோவலன் மட்டும்தான் அழகனா என்ன? கோவலன் மாதவியிடம் காதல்கொண்டவாறு, கண்ணகி யாரிடமாவது காதல்கொண்டு கலை என்று கூறியிருக்கலாமே?
அவள் கற்பை காத்து நல்லவள் என்றால், கோவலனின் கற்பு எங்கு சென்றது? அந்தகாலத்தில் ஆண்களுக்கு கற்பு இல்லை. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு. ஆனால் இப்போது? கற்பு ஒருவரின் காதலை தீர்மானிக்காது. காதல் கொண்டவரிடத்தில் வைத்திருக்கும் நேசம்தான் அதனை தீர்மானிக்கும். தன் காதலன் வேறொரு பெண்ணிடம் காதல் கொண்டானோ என்று அஞ்சி மாதவி பாடிய பாடல்தான் இருவரும் பிரியக் காரணம். இதுவும் ஒருவகை கோபம்தான். எங்கு தன்னைவிட்டு விலகிவிடுவானோ என அஞ்சி மாதவி வெளிப்படுத்தினால். கோவலன், மாதவி காதல்கொண்டாலோ என அவளை பிரிந்தான். ஆனால் தன் கணவன் தனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்தும், அவன்மீது கடைசிவரை அன்பு வைத்திருந்தால் கண்ணகி. இங்கு போற்றப்பட்டது அவளின் காதல். கற்பு அல்ல. மேலே முதலில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலத்திலும் கண்ணகிகள் வாழ்கிறார்கள். கோவலன்போல மாதவியிடம் செல்லத்தெரியாமல் அல்ல. அதீத அன்பினால். முடிவில் இங்கு காதல்தான் கற்பு என்பதை பலரும் புரிந்துகொள்ளவேண்டும்.
- உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும்.
- உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும்.
மூன்று வேளையும் உணவு சாப்பிட்டாலே போதும், உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் எந்த அளவு ஊட்டச்சத்துகள் உட்செல்கிறது என்பது மிகமிக முக்கியமானது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால், எவ்வாறு உணவுமுறையை அட்டவணைப்படுத்தவேண்டும் என்பது குறித்து காண்போம்.
நார்ச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுக்கவும்
நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்க வேண்டும். அதுபோல அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் குறைந்தது ஒன்றாவது மாவுச்சத்துள்ள உணவாக இருக்கவேண்டும். சிலர் மாவுச்சத்துள்ள உணவுகள் கொழுப்பை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாவுச்சத்து உணவுகள் ஒரு கிராமுக்கு, கொழுப்பைக் காட்டிலும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் மாவுச்சத்துள்ள உணவுகளை சமைக்கும்போது அதோடு எதை சேர்க்கிறோம் என்பதை கவனிக்கவேண்டும். அதாவது உருளைக்கிழங்குடன் வெண்ணெய் அல்லது சீஸ் போன்றவற்றைச் சேர்க்கும்போது அதன் கலோரி அளவு அதிகரிக்கிறது.
நிறைய பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்
தினமும் குறைந்தது 5 விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. அவை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ அல்லது உலர்ந்ததாகவோ எந்த விதத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதுபோல காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்.
மீன்கள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்
மீன் புரதத்தின் நல்ல மூலமாகும். இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. வாரத்திற்கு 2 முறையாவது மீன் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் எண்ணெய் மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிகமாக உள்ளது. இது இதய நோய்களை தடுக்க உதவும். சால்மன், வெங்கணை, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

11 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளின் தினசரி உணவில் 6 கிராமுக்கும் குறைவான உப்பே இருக்கவேண்டும்
நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரையை குறைக்கவும்
நமது உணவில் கொழுப்புச்சத்து இருப்பது அவசியம். ஆனால் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமானது. அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இதயத்தில் கொழுப்பை அதிகரிக்கும். இது இதய அபாயங்களுக்கு வழிவகுக்கும். ஆண்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது. பெண்கள் 20 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுபோல அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது உடல்பருமனுக்கு வழிவகுக்கும். சர்க்கரை நிறைந்த பானங்கள் அதிக ஆற்றலை கொண்டிருக்கும். அவை எடை அதிகரிப்பிற்கு பங்களிப்பதோடு, பல் சிதைவிற்கும் வழிவகுக்கும். சுகர் ஃப்ரீ சர்க்கரைகளும் உடலுக்கு நல்லதல்ல. பழங்கள் மற்றும் விதைகளில் இயற்கையாகவே சர்க்கரை இருந்தாலும், அவற்றின் நார்ச்சத்து காரணமாக அது உடனடியாக இரத்த ஓட்டத்தில் கலக்காது.
குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்
அதிக உப்பு பயன்பாடு இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரியவர்கள் மற்றும் 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. சிறுவயது குழந்தைகள் அதைவிட குறைவாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். உடற்பயிற்சி செய்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும். அதுபோல எப்போதும் ஆரோக்கியமான எடையோடு இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதிக எடை அல்லது பருமனாக இருப்பது வகை 2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்காக மெலிந்து இருப்பதும் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் மிதமான, சராசரி எடையை நிர்வகித்து கொள்ளுங்கள்.
தண்ணீர்
நமது உடலே நமக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டும். தாகம் என மூளை சைகை கொடுக்கும்போதே தண்ணீர் குடிக்கவேண்டும். அதனால் தண்ணீர் அதிகம் குடித்து உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்.
காலை உணவை தவிர்க்கவேண்டாம்
சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவு எடுத்துக்கொள்ளமாட்டார்கள். காலை உணவு சாப்பிடாவிட்டால் பல்வேறு விளைவுகளை உடல் சந்திக்கக்கூடும். அதனால் காலை உணவை தவிர்க்கமால் இருப்பது நல்லது.
பலரும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போம். ஆனால் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என பெரிதாக தெரியாது. சரும பளபளப்புக்கு எப்போதும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுப்பது நல்லப் பலனை தரும். சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பழங்கள் குறித்து காணலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்து புத்துயிர் பெறச் செய்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டியே வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன.
பப்பாளி
சருமத்தில் நன்மை பயக்கும் முக்கியப் பழம் பப்பாளி என பலரும் அறிவர். பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி, முகத்தில் உள்ள இறந்தசெல்களை அகற்ற உதவுகிறது. இது முகத்தை உள்ளிருந்து பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ சருமத்தை சேதமடையாமல் பாதுகாத்து ஊட்டமளிக்கின்றன.
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உறுதியான மற்றும் இளமையான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பளபளப்பான சருமத்திற்கு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. முக சுருக்கத்தை குறைக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எதிர்த்து போராடுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள்களில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கும். சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவும். மேலும் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து நச்சு நீக்கியாக செயல்படுவதால் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
அன்னாசிப் பழம்
அன்னாசிப் பழத்தில் சுத்திகரிப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட ப்ரோமெலைன் நொதி உள்ளது. ப்ரோமெலைன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சரும பளபளப்புக்கு வைட்டமின் சி & ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை தேர்ந்தெடுங்கள்
மாதுளை
அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டது மாதுளை. இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளையில் பியூனிசிக் அமிலமும் உள்ளது. இது ஒமேகா-5 கொழுப்பு அமிலமாகும். இது சருமத்தின் ஈரப்பத இழப்பைத் தடுக்கிறது. மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது மென்மையான, மிருதுவான சருமத்திற்கு வழிவகுக்கும்.
கிவி
மற்ற பழங்களை விட கிவியில் அதிக வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி உள்ளடக்கம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. கிவியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன.
மாம்பழம்
மாம்பழம் சுவையானது மட்டுமல்ல. வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியூட்டவும் பிரகாசமாக்கவும் உதவுகிறது. மாம்பழத்தில் AHA கள் (ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள்) மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது.
வெள்ளரிக்காய்
அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் குளிர்ச்சியான பண்புகளையும் கொண்டுள்ளன. வெள்ளரிக்காயில் சிலிக்காவும் உள்ளது. இது திசுக்களை வலுப்படுத்தவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவுடனும் இருக்கும்.
- கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு.
- என் குழந்தைக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.
பெற்றோர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பயம் குழந்தைகளின் அமைதி, அதாவது கூச்ச சுபாவம். கூச்ச சுபாவம் என்பது இளம் குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பாகும். மனோதத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி 10-20 சதவீதம் குழந்தைகள் பிறக்கும்பொழுதே கூச்ச சுபாவம் கொண்டவையாக இருக்கின்றன. கூச்சம் என்பது அமைதியின் ஒரு வெளிப்பாடே. அவர்கள் எதற்காக அமைதியாக இருக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுப்படுத்தி, அதிலிருந்து வெளியேக்கொண்டு வாருங்கள். கூச்ச சுபாவமுள்ள குழந்தைகளை மாற்றுவது குறித்த சில யோசனைகளை காணலாம்.
முத்திரை குற்றுவதை நிறுத்துங்கள்
முதலில், என் குழந்தைக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள். இதில் சிலர் பெருமைக்கொள்வார்கள். இதில் பெருமைக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் நம் குடும்பத்தினர் மட்டுமே இருப்போம். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் மற்ற முகங்களை பார்த்திருக்கமாட்டார்கள். ஒரு பொதுவெளியில் அதாவது ஒரு விழாவிற்கோ, கோயிலுக்கோ செல்லும்போது புதுமுகங்களை பார்ப்பர். தெரியாதவர்கள் என்பதால் சில குழந்தைகள் பேசமாட்டர்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். பெற்றோர்கள்தான் இவர்கள் நம் உறவினர், நண்பர் எனக்கூறி அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அந்த பயத்தை போக்கவேண்டும். புதிய நபர்களை பார்க்கும்போதும் அல்லது பொது இடத்திற்கு செல்லும்போதும் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் இதைவிடுத்து அவன் என்னமாதிரி அமைதியா இருப்பான் என கூறுவார்கள். பின்னர் அவனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என இவர்களே கூறுவர். இதுபோல உங்களுடையை குணாதிசியம் என லேபிளிடாமல் அது கூச்ச சுபாவமா அல்லது சங்கடமா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அப்படி பேசுவதற்கு சங்கடம் எனும்போது அதனை விளக்கி சரிசெய்யுங்கள்.
கூச்சத்தை பலவீனமாக பார்க்கவேண்டாம்
முதலில் பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு அது புதிதாக இருக்கும். முதல்நாள் பள்ளி வகுப்பறையை கற்பனை செய்துகொள்வோம். ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே ஓடி, ஓடி விளையாடுவார்கள், சிரிப்பார்கள், அங்குள்ள பொருட்கள், புத்தகங்களை எடுத்து பார்ப்பார்கள், துறுதுறுவென இருப்பார்கள். மற்ற குழந்தைகள் அனைவரும் அமைதியாகத்தான் இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல புதிய முகங்கள் பழக பழக அவர்களும் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பள்ளி மட்டுமின்றி வீட்டிலும் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். இதனைப் பார்க்கும் பெற்றோர்கள் பலரும் மந்தமாக இருக்கிறான் எனக் கூறுவார்கள். அது மந்தம் இல்லை. அமைதி. அனைத்து குழந்தைகளும் ஒரே சுபாவத்தை கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் அமைதியை பலவீனமாக பார்க்கவேண்டாம்.

குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுதல் கூடாது
குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்
கொஞ்சம் தைரியமாக இருக்கும் குழந்தைகள் கூச்ச சுபாவத்திற்கு ஆளாகமாட்டார்கள். மனதில் பயம் இருந்தால்தான் சில குழந்தைகள் பேசமாட்டார்கள். அதனால் குழந்தைகள் எதையாவது எண்ணி பயத்தில் இருக்கிறார்களா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பயத்தில் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசுங்கள். கோபத்தில் சில பெற்றோர்களே குழந்தைகளை அவர்களின் சுபாவங்களை வைத்துப்பேசுவர். அது அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் சுபாவங்களை வைத்து பிள்ளைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.
தனியாக விடவேண்டும்
குழந்தைகளோடு எப்போதும் ஒன்றாக இருப்பதை தவிர்க்கவேண்டும், அதாவது பொதுஇடங்களில். குழந்தைகளை பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். நிறையபேர் இருக்கும் அந்த இடத்தில் அவர்களை சுதந்திரமாகவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் அதில் கவனம் செலுத்த தொடங்கினால் கொஞ்சம் அவர்களை விட்டு தள்ளிச்செல்லுங்கள். தேவைப்பட்டால் திரும்பி பிள்ளைகளிடம் செல்லுங்கள்.
வெளிப்படைத்தன்மையை பாராட்டுங்கள்
குழந்தைகள் அவர்களுக்கு புதிதாக ஒரு விஷயம் தெரியவரும்போது நம்மிடம் வந்து ஆர்வமாக கூறுவார்கள். நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் சிலர் அதை காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள். குழந்தைகள் பேசுவதை ஆர்வமாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் விஷயங்கள் தவறாக இருந்தாலும், எடுத்தவுடன் கோபப்பட வேண்டாம். அதை வெளிப்படையாக சொல்வதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். பின்னர் தவறை சுட்டிக்காட்டி திருத்தவேண்டும். திட்டினால் அடுத்தமுறை சொல்லமாட்டார்கள். மறைக்க நினைப்பார்கள். அதனால் அவர்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையாய் இருப்பதை பாராட்டி, அப்படியே தொடர அனுமதிக்கவேண்டும்.
- உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாக பனீர் உள்ளது.
- 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக செய்யப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது'.
இந்திய சைவ உணவுகளில், பனீரின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. புரதச்சத்தின் இருப்பிடமான இந்தப் பாலாடைக்கட்டி, பலவகை குழம்புகள் மற்றும் வறுவல்களில் சுவையைக் கூட்டுகிறது. அந்த வரிசையில் கேரளாவின் பிரபலமான 'மீன் பொளிச்சது' பாணியில், சைவப் பிரியர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுதான் 'பனீர் பொளிச்சது' என்கிற வித்யாசமான சைவ உணவு. வாழை இலையின் தனித்துவமான நறுமணம், சின்ன வெங்காயம் மற்றும் பாரம்பரிய மசாலாப் பொருட்களின் கலவையில், பனீர் மென்மையாக வேகவைக்கப்பட்டுப் பரிமாறப்படும் இந்த உணவு, சுவை மற்றும் ஆரோக்கியத்தின் சரியான கலவையாகும். 'பனீர் பொளிச்சது' செய்முறையை, பிரபல செஃப் கதிர்வேல் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

மசாலா தயாரித்தல்
* ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உடைத்த உளுந்து, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து, பொன்னிறமாக மாறாமல் ஓரளவுக்கு வேக வைக்கவும்.
* நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, சீக்கிரம் வதங்க உப்பு சேர்த்து, மூடிபோட்டு 30-40 வினாடிகள் வேக வைக்கவும். சின்ன வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, மசாலா பைண்டிங் கன்சிஸ்டன்சிக்கு வர நன்கு கிளறவும்.
* இந்த நிலையில், நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கருவேப்பிலையை முழுதாகப் போடாமல் நறுக்கிச் சேர்ப்பது நல்லது.
* பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து மசாலாவை மீண்டும் மூடிபோட்டு 30 வினாடிகள் வேக வைக்கவும்.
* மசாலா ரெடி ஆனதும், அடுப்பை அணைத்து, சிறிது சூடு ஆறிய பிறகு, வாசனைக்காக ஒரு சிட்டிகை சீரகப்பொடி மற்றும் காரத்துக்காக ஒரு சிட்டிகை மிளகுப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பனீர் பொளிச்சது செய்முறை
* வாழை இலையைச் சுத்தம் செய்து, இலையின் மேல் சிறிதளவு ஏற்கனவே நாம் தயாரித்து வைத்துள்ள மசாலாவைத் தடவவும்.
* பிறகு வாழை இலையின் மேல், 2 மி.மீ தடிமனில் நறுக்கிய பனீர் துண்டை வைத்து, அதன் இருபுறமும் மசாலாவை மீண்டும் நன்றாகத் தடவவும்.
* மசாலா தடவிய பனீரை வாழை இலையில் வைத்துப் பொட்டலமாகச் சுற்றவும்.
* பிறகு ஒரு தவா அல்லது தோசைக் கல்லைச் சூடாக்கி, அதில் சற்றே எண்ணெய் விட்டு, வாழை இலையால் சுற்றப்பட்ட பனீரை வேக வைக்கவும்.
* மடிப்புப் பகுதி முதலில் கீழே இருக்கும்படி வைத்து, இலை ஒட்டிப் பிடிப்பதற்காக, மூடி போட்டு ஒரு பக்கம் 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
* பின்பு திருப்பிப் போட்டு, அடுத்த பக்கமும் 2 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது வாழை இலை கிரிஸ்பியாக மாறி பனீர் பொளிச்சது தயாராகி விடும்.
* பனீர் பொளிச்சதைச் சூடாகப் பரிமாறவும். வாழை இலையைத் திறந்து சாப்பிடும் போது வரும் வாசம் கூடுதல் சுவையைக் கொடுக்கும். கூடவே, ஆனியன் ரிங்ஸ் மற்றும் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பனீர் பொளிச்சது
ஆரோக்கிய நன்மைகள்
* பனீர் உயர்தரப் புரதத்தின் சிறந்த சைவ மூலமாகும். தசை வளர்ச்சி, திசுக்கள் பழுது பார்த்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் பராமரிப்புக்கு இது சிறந்தது. குறிப்பாக இதில் கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கும். மேலும், இது பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
* சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் இதயம் மற்றும் நோயெதிர்ப்புச் சக்திக்கு நன்மை பயக்கும். இது உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை வழங்குவதோடு, மூளையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக தக்காளி சேர்க்காமல் சின்ன வெங்காயத்தை மட்டும் பயன்படுத்துவது இந்த உணவின் பாரம்பரிய முறையையும், ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.
* வாழை இலையில் சமைத்துச் சாப்பிடும்போது, அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் கலந்து, அதன் மூலம் ஆரோக்கியப் பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இலையின் வாசம் உணவுக்குச் சிறந்த நறுமணத்தையும் சுவையையும் சேர்க்கிறது.
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான 'பனீர் பொளிச்சது' நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு உணவாக அமையும்.
- பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம்.
- நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.
விபத்து, இரத்தம், கொலை, தற்கொலை... இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள், ஆண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனநிலையையுமே சற்று பாதிக்கும். அதிலும் சில பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்... இதுபோன்ற சம்பவங்களை கடந்துவர மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் ஆராய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுபோன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும் சூழலில், தடயவியல் பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணராக தைரியத்துடன் பணியாற்றிவரும் இளம்பெண் மருத்துவரான நிவ்யாழினி, அண்மையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் பிரேத பரிசோதனை செய்யும் போது தாங்கள் எதிர்கொள்ளும் தயக்கங்கள், அருவருப்பு, முக சுளிப்புகள், பிரேத பரிசோதனையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், கொலையுண்டவருக்கு எதிர்தரப்பிலிருந்து வரும் கொலைமிரட்டல்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் நிவ்யாழினி. தனக்கு இதுவரை கொலைமிரட்டல்கள் எதுவும் வந்ததில்லை எனவும், ஆனால் தன்னுடன் பணியாற்றிய சிலருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை தகவலை மாற்ற சொல்லி கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொலைக்கும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள், சந்தேக மரண வழக்குகளில் அவை கொலை என எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்தார். மேலும் 8 மாத குழந்தை ஒன்றின் கொலை பற்றியும் பேசியிருந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு முன், உடல்களை எப்படி கையாள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் நிவ்யாழினி
பிரேத பரிசோதனை என்றால்? என்ன செய்வீர்கள்?
தற்கொலை செய்து உயிரிழந்த உடல் ஒன்று வருகிறது என்றால், முதலில் ஃபோட்டோ எடுப்போம். அனைத்து பக்கங்களில் இருந்தும் எடுப்போம். முதலில் ஆடையுடனும், பின்னர் ஆடைகளை நீக்கிவிட்டும் அந்த புகைப்படங்களை எடுப்போம். பின்னர் கழுத்தில் மார்க் இருக்கிறது என்றால் அதனை ஆராய்வோம். உடல் உறுப்புகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஆராய்வோம். எப்படி என்றால், கழுத்திலிருந்து தொப்புளுக்கு முன்புவரை கத்தியால் கிழித்து, உறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுப்போம். பின்னர் அந்த உறுப்புகளை கழுவி, அதனை வெட்டி ஆராய்ச்சி செய்வோம். இதயம், நுரையீரல், கிட்னி என அனைத்து உறுப்புகளையும் ஆராய்வோம். பின்னர் அந்த உறுப்புகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு, உடலுக்குள் வைத்து தைத்து, உடலை முழுமையாக கொடுத்துவிடுவோம். உறுப்புகளை ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரின் இறப்பு இயற்கையானதா? கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிப்போம்.
முதல்முதலில் நீங்கள் பார்த்த கேஸ் எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நான் முதலில் பார்த்த கேஸ், ஹேங்கிங்தான். முதல் அனுபவம் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதிலும், ஸ்மெல்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. வயிற்று பகுதியை ஆராயும்போது, அவர் இறுதியாக என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள, அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. அது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலல்லவா... தைரியமாக அனைத்தையும் பழகிக்கொண்டேன். ஒரு விஷயத்தை நான் இங்கு உங்களிடம் சொல்கிறேன், பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு நாங்கள் க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம். அதனால், நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.
எப்படி இவ்வளவு தைரியம்?
நான் ஏற்கனவே சொன்னதைப்போல ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. கொலையானவர்களின் உறவினர்கள் அழும்போது அதனை பார்க்கும்போது கவலையாக இருக்கும். முதலில் எல்லாம், யுவனின் ஒரு பாடலை கேட்டுவிட்டுதான் நான் உடல்களை பரிசோனை செய்ய அறைக்குள் செல்வேன். இப்போது நிறைய கேஸ்களை பார்த்துவிட்டேன்.
இந்த துறைக்கு செல்ல குடும்பத்தினர் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?
பொதுவாக எல்லாவற்றுக்குமே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதனை சரியாக செய்து நம்மை நிரூபிக்க வேண்டும். இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெண்கள் மிகவும் திறமையாக செயலாற்றுகிறார்கள். பெண்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.
திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது. அலுவலகத்திற்கு சென்று வருவதுதான் கடினம். இதுவே திருமணமல்லாமலும் குடும்ப சூழ்நிலைகளால் சிலரால் தினசரி அலுவலங்களுக்கு சென்று பணியாற்ற முடியாது. சூழ்நிலையால் வேலை இல்லாமல், வேலைக்கு செல்ல இயலாமல் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே சிறுதொழில் தொடங்கலாம். உங்களுக்கு உகந்த நேரம், அதாவது நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளை கவனித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தில் பிடித்த தொழிலை செய்யலாம். அதற்கான சில யோசனைகளை இங்கே காணலாம்.
ஊறுகாய்
சமையல் தெரிந்த பெண்கள் ஊறுகாய் தொழில் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். முதலில் ஒரு சிறிய முதலீடு, அதாவது ரூ. 10 ஆயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்து பாருங்கள். வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மகளிர் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துவர். இதற்கு ஊறுகாயை ஆன்லைன் மூலம் விற்கவேண்டும். அப்படி ஆன்லைன் வேண்டாம் என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைகளில் முதலில் கொஞ்சம், கொஞ்சம் போடுங்கள். ஊறுகாய் நன்றாக இருந்தால், அடுத்தடுத்து உங்களிடம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊறுகாயை மொத்த சந்தை, சில்லறை சந்தை எனப் பல்வேறு வழிகளில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம். உங்கள் ஊறுகாய் நன்கு விற்பனையானால் பின்னர் முதலீட்டை அதிகமாக்குங்கள்.
கேட்டரிங்
சிலருக்கு கைப்பக்குவம் நன்றாக இருக்கும். அவர்கள் எல்லாம் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். பெரிய பெரிய கல்யாணம், விழாக்கள் அப்படி இல்லையென்றாலும் வீடுகளுக்கு அதாவது படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலருக்கும் உணவு செய்து தரலாம். அப்படி இந்த தொழிலை ஆரம்பித்தால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் கொடுத்தால் போதும். மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வீட்டு சாப்பாட்டை விரும்பி உங்களிடம் ஆர்டர் கொடுப்பார்கள். இதில் நல்ல லாபம் கிடைக்கும். மூன்று வேலைகளிலும் சமைக்க இயலாது என்றாலும், மதிய அல்லது இரவு உணவு மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

கைவினைப்பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது
அழகுசாதனப் பொருட்கள்
இப்போதெல்லாம் பெண்கள் பலரும் ரசாயனங்கள் கலந்த அழகுப் பொருட்களைவிட இயற்கையாக தயாரிக்கும் பொருட்களையே விரும்புகின்றனர். ஆகையால் கற்றாழை ஜெல், குளியல் சோப்புகள், எண்ணெய் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்கலாம். முதலில் தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி நம்பிக்கை பெற்றபின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் விற்கலாம். வரவேற்பை பொறுத்து பின்னர் கடைகளிலும் விற்கலாம்.
ஆரி வொர்க்
இப்போதெல்லாம் பெண்கள் பலரும் டிசைனிங் அதிகம் உள்ள ஆடைகளைத்தான் விரும்புகின்றனர். நீங்கள் கடையில் துணியை மெட்டீரியலாக வாங்கி அதில் மணி, முத்துகள், ஜரிகைகள் வைத்து தைத்து விற்கலாம். இல்லையென்றால் நூலை வைத்தும் எம்ப்ராய்டரிங் செய்யலாம். இந்த துணிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தையல் தெரிந்தவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இதுபோல இன்னும் நிறைய சிறுதொழில்கள் உள்ளன. நிதி சுதந்திரம் என்பது மகளிருக்கு அவசியமான ஒன்று. இதுபோன்ற சிறுதொழில்கள் மூலம் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்.
உலகின் பலதரப்பட்ட மக்களும் ஆப்பிளை எடுத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "An apple a day keeps the doctor away". அதாவது ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் இந்த தொடர் உண்மையா? உண்மையில் தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க நேராதா? பார்ப்போம்.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
ஆப்பிளை தோலுடன் எடுத்துக்கொள்வதுதான் அதிக நன்மை பயக்கும். ஆப்பிள்கள் நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். தினசரி ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வது இதயநோய் அபாயத்தை குறைப்பதோடு அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளையும் குறைக்கிறது. மேலும் தினசரி ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
செரிமானத்தை மேம்படுத்தும்
ஆப்பிள்கள் பெக்டினின் நல்ல மூலமாகும். இது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தும். பெக்டின் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு ப்ரீபயாடிக்காவும் செயல்படுகிறது.
எடை இழப்பு
ஆப்பிள்களில் நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கலோரிகள் குறைவாக உள்ளன. இதனால் தினசரி கலோரி உட்கொள்ளல் குறையும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயை தடுக்கலாம்
ஆப்பிள், பேரிக்காய் எடுத்துக்கொள்வது வகை 2 நீரிழிவு நோய் ஆபத்தை 18% குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் அபாயத்தை 3% குறைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆப்பிளில் உள்ள குர்செடின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகளின் செறிவு ஆகும். இது இரத்த சர்க்கரையை குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் செரிமானமாவதையும், இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதையும் மெதுவாக்குவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து, நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது இதயநோயால் இறக்கும் அபாயத்தை 25% குறைக்கிறது
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
ஆப்பிள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. கூடுதலாக, ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்கவும், அவை பெருகுவதைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிளில் காணப்படும் நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் .
மூளை ஆரோக்கியம்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் அறிவாற்றல் செயல்பாட்டிற்கு பயனளிக்கக்கூடும், குறிப்பாக வயதானவர்களுக்கு. ஆப்பிளில் உள்ள குர்செடின் மூளையில் உள்ள நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், அல்சைமர் நோயைத் தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அபாயங்கள்
ஆப்பிள்களை சரியான அளவு எடுத்துக்கொள்வது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வீக்கம், வாயு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் ஆப்பிளில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய பிரக்டோஸ் மோனோசாக்கரைடும், சர்பிடால் பாலியோலும் உள்ளது. ஆப்பிள் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் தவிர்த்துகொள்ளலாம். இறுதியில், ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு பலன்களை கொடுக்கும். ஆனால் அது வெறும் ஆப்பிள் சாப்பிடுவதை மட்டும் குறிப்பதல்ல. நாம் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவின் ஒரு பகுதியாக ஆப்பிள் இருக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடினால் கிடைக்காது.






