என் மலர்
பெண்கள் உலகம்
- காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.
- நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் புத்துணர்ச்சி மணம் கமழ, என்னென்ன வழிவகைகள் இருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* மெழுகுவர்த்திகள்
வீட்டின் நறுமணத்துக்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை வாசனை மெழுகுவர்த்திகள்தாம். வாசனைப் பொருட்களில் மெழுகுவர்த்திகள் பிரபலமாக இருக்கின்றன. அவை வாசனையை அழகாக அறையில் பரவவைப்பதோடு, அறைக்கு புத்துணர்ச்சி தரும் வெளிச்சத்தையும் வழங்குவதுதான் அதற்குக் காரணம். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.

* ஸ்ப்ரே
காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை 'ஸ்ப்ரே'வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை 'ஸ்ப்ரே'. உடனடியாக, அறையின் வாசத்தை மாற்றுவதற்குச் சரியானது வாசனை 'ஸ்ப்ரே'தான். வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
* எண்ணெய் எரிகருவி
எண்ணெய் எரிகருவி (Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்களைப் பெரிய அறைகளில் பயன்படுத்தலாம். 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடிய இந்தச் சிறிய மெழுகுவர்த்திகள், வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு உகந்தவை. ஆனால், இந்த எண்ணெய் எரிகருவியில் இருக்கும் எண்ணெய்யை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். அறையின் அழகை மெருகேற்றுவதற்கும் இந்தச் சிறிய மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.
* நாணல் எரிகருவி
கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரப்பும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது பல நாட்களுக்கு நீடிக்கும். காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இதை அமைக்கும்போது இதன் வாசம் கூடுதலாக அறையில் நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
* காற்றோட்டம், வெளிச்சம் அவசியம்
நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.
- பச்சை இலை மற்றும் காய்கறிகளில் சருமத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
- கீரையை நீங்கள் கூட்டாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
சரும அழகை பாதுகாப்பதில், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை முறையில் முக பொலிவை கூட்டவும், ஸ்கின் டோனை அதிகரிக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளே வழிவகுக்கின்றன. 'பேஸ் கிரீம்'களில் அதிகம் நிரம்பி இருப்பதும், இவையே.
இந்நிலையில், பேஸ் கிரீம்கள் இல்லாமல் ஒரு சில உணவு வகைகளிலும், இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய உணவுகளை உட்கொள்வதன் மூலமும் முகப்பொலிவை கூட்டலாம். அத்தகைய உணவு வகைகளை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* புரோக்கோலி
புரோக்கோலியில் லுடீன், ஜிக்ஸாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இந்த புரோக்கோலி ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதனை பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த புரோக்கோலி உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதை டிக்கா வடிவில் கூட சாப்பிடலாம்.
* கிட்னி பீன்ஸ் (ராஜ்மா)
ராஜ்மா என்று அழைக்கப்படும் இந்த கிட்னி வடிவ பீன்ஸில், புரதங்களும், அதிக ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இவை முகப் பொலிவிற்கு வழிவகுப்பதோடு, முகப்பருக்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்திய உணவில் ராஜ்மா மசாலா முக்கியமானது. இதனை சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு 'சைட் டிஷ்'ஷாக எடுத்துக் கொள்ளலாம்.
* கீரை
கீரை ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தது மட்டுமின்றி ஊட்டச்சத்து மிக்கது என்பது பலரும் அறிந்த உண்மை. பச்சை இலை மற்றும் காய்கறிகளில் சருமத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரசாயன கிரீம்கள் இல்லாமல் இயற்கையாகவே சருமத்தை பராமரிக்க முடியும். கீரையை நீங்கள் கூட்டாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
* தக்காளி
பழ வகையைச் சேர்ந்த தக்காளி சமையலில் நிச்சயம் இடம் பெறும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தக்காளி ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் சிறந்த ஆதாரமாகும். தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுடன் சரும அழகை மேம்படுத்த நினைத்தால் அதற்கு 'பெஸ்ட்' உணவு தக்காளி குழம்பு தான்.
* ஊதா முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். குறிப்பாக ஊதா நிற முட்டைக்கோஸ் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரமாகும். இதில், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. முட்டைக்கோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசை வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சரும பொலிவை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.
* உருளைக்கிழங்கு
இந்தியர்களின் மிக விருப்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு முதலிடம் உண்டு. உருளைக்கிழங்குகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் நிறைந்து உள்ளதால் சரும அழகை பாதுகாக்கும்.
- ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- சாப்பிட்ட பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டும். சோர்வாக இருந்தால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு கடிகாரம் அடித்தது போல பசிக்கிறது. இது ஆரோக்கியத்தின் அடையாளம். சிலர் மணிக்கணக்கில் பசி இல்லாதது போல் உணர்கிறார்கள். இது நோயின் அடையாளம்.
மாறிவரும் வாழ்க்கை முறை உணவுப் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. ஒரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவது. பசிக்கிறதோ இல்லையோ ஏதாவது சாப்பிடுவது. தீங்கு விளைவிக்கும்.
உண்மையில், நம் உடல் நமக்கு எப்போது பசிக்கிறது. எப்போது உணவு தேவைப்படுகிறது என்பதை நமக்குச் சொல்கிறது. அதை நாம் பின்பற்ற வேண்டும்.
ஆனால் இப்போது பலர் தங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அதிக எடை முதல் நீரிழிவு வரை பல நோய்கள் வருகின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான சக்தியை மீண்டும் பெறவும். ஒருவர் ஊட்டச்சத்து மதிப்புகள் நிறைந்த சீரான உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் குறிப்பாக இளைஞர்களிடையே கவலைக்குரிய ஒரு காரணமாகும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். பலருக்கு அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
உண்மையில் பசிக்காவிட்டாலும் கூட அவர்களின் உடல் விரும்பாவிட்டாலும் கூட சாப்பிடுகிறார்கள். இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.
பலர் டி.வி. அல்லது மொபைல் போன்களை பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள். இதன் பொருள் நீங்கள் உண்ணும் உணவின் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. வயிறு நிரம்பியதாக உணராததால் மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
இதனால் உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்கிறது.
பொதுவாக நமது வெறும் வயிற்றில் 75 மில்லி லிட்டர் தண்ணீர் இருக்கும் இது 950 மில்லிலிட்டர்கள் வரை பொருட்களை வைத்திருக்க முடியும்.
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டும். சோர்வாக இருந்தால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரித்து பின்னர் குறையக்கூடும். இதனால் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.
உணவு முறைக்கும் தூக்கமின்மைக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. மோசமாக தூங்கும் 60 சதவீத மக்கள் இரவில் சிற்றுண்டி சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல. எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் உடலைப் பாதிக்கிறது. சிலருக்கு வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
இது நேரத்தை மிச்சப்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஏற்படும் சேதம் மிக அதிகம்.
வேகமாக சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிகமாக சாப்பிடுவது மனதையும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பதட்டம் அதிகரிக்கிறது என்று மாறிவிடும்.
சரியாக மெல்லாமல் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்கள் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். நல்லது என்பதற்காக அதிகமாக சாப்பிடுவது மிக விரைவாக சாப்பிடுவது. இரண்டுமே நல்லதல்ல.
மதுவுக்கு அடிமையானவர்கள் அதிக உணவை உட்கொள்வதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
மேலும் சிலர் சாப்பிடும்போது குளிர் பானங்கள் குடிப்பார்கள். இது உண்ணும் உணவின் அளவையும் அதிகரிக்கிறது. இந்தப் பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவு பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும்.
- உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
புழுவெட்டு (அலோபேசியா) என்பது 'தன்னுடல் எதிர்ப்பு வகை நோய்' ஆகும். இது தலை அல்லது உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு மீசை, தாடி பகுதிகளிலும் ஏற்படும்.

புழுவெட்டு என்பது முடிகள் முழுவதும் உதிர்ந்து வட்ட வடிவமான வழுக்கைத் திட்டுகள் தலை, தாடி, மீசை, புருவங்களில் ஏற்படுவது ஆகும். அந்த இடம் வழவழப்பாக இருக்கும். முடிகள் உதிர்வதற்கு முன் தோலில் அரிப்பு அல்லது வலி ஏற்பட்டு திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கையை உருவாக்குகிறது.
ஆனால் இது தற்காலிகமானது ஆகும். பூஞ்சைகளால் ஏற்படும் வழுக்கை திட்டுகளில், கடுமையான அரிப்பு, முடி உதிர்தல், உடைந்த முடி, வெண்நிற சிறு துகள்கள் உதிரல், அந்த இடம் சிவத்தல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் கசிவுடன் காணப்படும்.

தலைமுடி பாதுகாப்பு வழிமுறைகள்:
பரந்த பல் கொண்ட சீப்பு வைத்து தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது, துவட்டுவதற்கு மெல்லிய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியைப் பாதுகாக்க உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது.

வயதாகும் போது தலை முடியின் வேர்கள் பலவீனம் அடைவது, நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில உடல் பாதிப்புகள், மன அழுத்தம், குடும்ப பாரம்பரியத்தில் தாய்-தந்தை வகையில் வழுக்கை இருத்தல் போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாகிறது.
- தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
- எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெரிகோஸ் வெயின்ஸ் (விரிசுருள் சிரை நோய்) என்பது காலில் இருந்து ரத்தத்தை இதயத்தை நோக்கி செலுத்தும் ரத்த நாளங்கள் சுருண்டு முறுக்கி வீங்கி இருக்கும் நிலையாகும். இது பெரும்பாலும் கால், கணுக்கால், தொடை போன்ற இடங்களில் ஏற்படுகிறது.
ஆண்களை விட பெண்களிடையே இது அதிகம் காணப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக செயல்படத் தவறும் போது, ரத்தம் தேங்கி ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.

வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்பட முக்கிய காரணம்:
குடும்ப வரலாறு, வயது முதிர்வினால் ரத்த நாளங்களில் உள்ள வால்வுகளின் குறைபாடு, நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்து கொண்டிருப்பது, கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், தசை இழப்பு மற்றும் அதிக அளவு காபின் உட்கொள்ளுதல் காரணமாகும்.
வெரிகோஸ் வெயின்ஸ் என்பது சர்க்கரை நோயின் அறிகுறி அல்ல. இருப்பினும் கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை வெரிகோஸ் வெயின்ஸ் ஏற்பட வழிவகுக்கும்.
காலில் வெளிப்புற அழுத்தத்தை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த கால் உறை அணிதல், லேசர் கதிர் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களை மூடச்செய்யும் சிகிச்சை, கதிரியக்க வெப்ப ஆற்றலால் சேதமடைந்த நாளங்களை மூடுதல் சிகிச்சை, ஸ்க்லீரோதெரபி, ஆம்புலேட்டரி பிளெபெக்டோமி சிகிச்சை போன்ற வழி முறைகள் இதற்கு தீர்வாக அமையும்.

வெரிகோஸ் வெயின்ஸ் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டியவை:
தூங்கும் போது கால்களை உயர்த்தி வையுங்கள். இடுப்புக்கு கீழ் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். அதிக நேரம் நிற்பதை தவிர்க்கவும். உட்கார்ந்து கொண்டே பணி செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியக்கூடாது. புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
- ஒட்டுமொத்த உடலின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சீரான அளவில் கோழி முட்டை கொண்டுள்ளது.
- துத்தநாகம், கோலின், ஒமேகா உள்பட பல்வேறு சத்துகள் முட்டையில் உள்ளன.
மனிதனின் உடல் இயக்கத்திற்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட, இந்த உலகில் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது கோழி முட்டை மட்டுமே.
முட்டை என்பது உயர்தர புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டது என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
தசைகளின் இயக்கத்திற்கு, மூளையின் செயல்பாட்டிற்கு, கண்களின் பார்வைக்கு, இதயத்தின் சீரான இயக்கத்திற்கு என்று ஒட்டுமொத்த உடலின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சீரான அளவில் கோழி முட்டை கொண்டுள்ளது.
கால்சியம், வைட்டமின்-ஏ, பி1, தையமின், வைட்டமின் பி2 எனும் ரிபோப்ளேவின், குரோமியம், நியாசின், செம்பு, வைட்டமின் பி 5 எனும் பாந்தோயோனிக் அமிலம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பயோட்டின், மாலிப்டினம், போலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம். துத்தநாகம், கோலின், ஒமேகா உள்பட பல்வேறு சத்துகள் முட்டையில் உள்ளன.
தினமும் ஒரு முட்டை உட்கொள்ளும் போது சத்துக்குறைபாட்டால் ஏற்படும் பல உடல் பாதிப்புகளை தடுக்கலாம் என்கிறார்கள், டாக்டர்கள்.
- தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.
- கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான புரதம்.
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை ஆகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
நாம் வயதாகும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நம்மை வழிநடத்திக் கொள்வது மிக மிக முக்கியமாகும். வாழ்க்கையில் முதுமை என்பதே இல்லாமல் இளமை மட்டுமே இருக்க வேண்டும் என்றால் அது நடக்காது. ஆனால் முதுமையிலும் இளமையாக காட்சியளிக்க முடியும்.
வயது அதிகரித்ததே தெரியாமல் முதுமை தோற்றத்தை மெதுவாக்கி இளமையோடு காட்சியளிக்க சில வழிகள் உள்ளன.
சிறந்த உடல் செயல்பாடு, சுறுசுறுப்பான ஈடுபாடு, இளமையான தோற்றம் என்பதே அனைவரின் ஆசை.

உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்பவர்கள் இதய நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி குறைவது மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
வயதான அறிகுறிகளை குறைக்க உதவும் முக்கிய செயல்முறைகள்:
* தினசரி காலையில் 5-6 பாதாம், 2 வால்நட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுங்கள். இது உடலுக்கு வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வழங்க வழிவகைச் செய்யும்.

* காலை உணவில் கோகோ ஸ்மூத்தியைக் குடிக்கவும், இது உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* கோகோவில் ஏராளமான ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், அதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை எடுத்து, அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

* உங்கள் உணவில் கொலாஜன் சப்ளிமெண்ட்களை சேர்க்கவும். கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு புரதமாகும்.
* சருமத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க பாஸ்த்ரிகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.
* ஒரு டம்ளர் எலுமிச்சை நீரில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். இது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மேலும், தசைகளை பராமரிக்க, 2-3 மணி நேரம் வலிமை பயிற்சி செய்யுங்கள்.
* நீர்ச்சத்துடன் இருங்கள் மற்றும் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அதனால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற முடியும்.
- இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.
- பயோட்டின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
முடி உதிர்தல் பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் சில வைட்டமின்கள் குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் குறைபாட்டை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.

வைட்டமின் டி
தலை முடி வேர்களை வலுப்படுத்துவதிலும், புதிய முடியை வளரச் செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் அமர்வது மற்றும் இதுதவிர மீன், முட்டை, பால், தயிர் போன்ற உணவுப்பொருட்களில் வைட்டமி டி அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் ஈ
வைட்டமி ஈ ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது முடியை ஃபிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. பாதாம், வெண்ணெய் மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.
வைட்டமின் சி
வைட்டமி சி தலைமுடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமிம் சி உள்ளது.

பயோட்டின்
பயோட்டின் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. முட்டை, கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் பயோட்டி நிறைந்த உணவுகள் ஆகும்.
இரும்புச்சத்து
முடி வளர்ச்சிக்கு அவசியமான ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பசலைக் கீரை, பீட்ருட் மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
ஆனாலும் இந்த வைட்டமின்களை உணவு மூலம் பெறுவதை விட மருத்துவர் அளிக்கும் ஆலோசனையின் பேரில் மருந்துகள் மூலமும் வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுக்க செய்ய வேண்டியவை:
* ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
* நல்ல தூக்கம்
* மன அழுத்தத்தைக் குறைக்கவும்
* லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்
* தலைமுடியில் அதிக வெப்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

* தலைமுடியை சீவும்போது மெதுவாக சீவுங்கள்
* உங்கள் தலைமுடியை ஈரமாக விடாதீர்கள்
- நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம்.
- விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம்.
காதில் எறும்பு, பூச்சு போன்றவை புகுந்து ஏற்படுத்தும் அவதியை நாம் அனைவரும் ஒருமுறையாவது அனுபவித்திருப்போம். காதுக்குள் இதுபோல எறும்பு, பூச்சி புகுவது ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

காதில் பூச்சி புகுந்துவிட்டால் முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று டார்ச் அல்லது மொபைல் லைட்டை காதில் காட்ட வேண்டும். காரணம் என்னவென்றால் பூச்சி இனங்கள் வெளிச்சத்தை கண்டு வெளியே வந்துவிடும்.
காதுகளில் எறும்பு சென்றுவிட்டால் வீட்டில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் இருந்தால் அதில் சில துளிகளை காதுகளில் விடலாம். இதுபோன்று செய்வதால் பூச்சி காதில் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும்.

மேலும் மிதமான சூட்டில் உள்ள நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால் அது உடனே காதுகளில் இருந்து வெளியே வந்துவிடும்.
காதில் பூச்சி, எறும்பு புகுந்துவிட்டால் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:
* பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருகளை வைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது. இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்றுவிடும். அதுமட்டுமின்றி காது ஜவ்வும் சேதம் அடையக்கூடும்.

* காதுக்குள் பூச்சி சென்றால் உடனே விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம். வலுக்கட்டாயமாக இவ்வாறு செய்வது வலியைத்தான் ஏற்படுத்தும்.
* சிலர் காதுகளில் பூச்சி சென்றால் தீக்குச்சியில் மருந்து இல்லாத மறுமுனையை காதுகளில் நுழைத்து எடுக்க முயற்சி செய்வர். அவ்வாறு செய்வது தவறு. இதனால் காதின் உட்புற பகுதி சேதம் அடையக்கூடும்.
* தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றியும் காதில் உள்ள பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வந்தால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
* வீட்டின் சூழலை சுத்தமாகவு வைத்திருக்க வேண்டும். படுக்கை அறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவு, தின்பண்டங்களை படுக்கை அறையில் சாப்பிடவோ, உணவு துணுக்குகளை சிந்தவோ கூடாது.
* வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும்.
பூச்சிகள் காதுக்குள் புகுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் வெளியே செல்லும் போது காதுகளை மூடி பாதுகாக்க வேண்டும்.
- கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம்.
- வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது.
பொதுவாக கால் மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்களால் வீக்கம் அல்லது வலி மூட்டுகளில் ஏற்படுகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் இரு கால் மூட்டுகளில் வரும் கீல் வாதம் தான் அதிகம். இது வயதானவர்களையும், மகளிரையும் மிக அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.

காரணங்கள்
கீல் வாதத்தில் கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலகீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது.
மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால்வலி, வீக்கம், நடக்கும் போது சொடக்கு விடுவது போன்ற சத்தம் இவற்றை ஏற்படுத்துகிறது.
வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு கீல் வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆண்களை விட அதிகம்.
மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவது இதற்கு முக்கிய காரணமாகும். விளையாடும்போது அல்லது விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

அறிகுறிகள்
நடக்கும் போது, தரையில் உட்காரும் போது, நிற்கும் போது, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி அதிகமாக உணரப்படும். காலையில் எழுந்தவுடன் கால் மூட்டுகள் விறைப்பு நிலையில் இருக்கும். இதனால் நடப்பதற்கு சிறிது நேரம் சிரமமாக இருக்கும்.
கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம். சில வளர்சிதை மாற்ற நோய்கள், நீரிழிவு மற்றும் உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் நிலை (ஹீமோக்ரோமாடோசிஸ்) ஆகியவை கீல் வாத பிரச்சனையை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை
உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகள் பயன் தரும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சைவ-அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். கால்மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் பிசியோ தெரபி சிகிச்சை உதவுகிறது. குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது. புளிப்பு சுவை உள்ள உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.
- ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
- எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
கொழுப்பு கட்டிகள் 'லிபோமா' என்று அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு கீழ் வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்புள்ள கொழுப்பு கட்டியாகும். இது பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு, தொடை, நெற்றி, தோள் மற்றும் கைகளில் ஏற்படுகிறது.
உலக அளவில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு லிபோமா பாதிப்புள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களை அதிகம் பாதிக்கிறது.

லிபோமா ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். இது சிக்கலை ஏற்படுத்தாது என்றாலும் அவை வளரும்போது அருகில் உள்ள ரத்த நாளங்கள், மூட்டு மற்றும் நரம்புகளை ஊடுருவி பாதிப்பை உண்டாக்கலாம்.
லிபோமா ஏற்பட உடல் பருமன், சர்க்கரை நோய், அதிக ரத்த கொலஸ்ட்ரால் அளவு, கல்லீரல் நோய், மரபணு காரணங்கள், கார்ட்னர் சிண்ட்ரோம், டெர்கம் நோய், மதுப்பழக்கம் போன்றவை முக்கிய காரணமாகும்.
இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. இதனை மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. லிபோடிசால்வ் என்றும் அழைக்கப்படும் இன்ஜெக்சன் லிபோலிசிஸ், லிபோசக்சன், அறுவை சிகிச்சை ஆகியவை இதற்குள்ள தற்போதைய சிகிச்சை முறைகளாகும்.

மேலும், பெரிய அளவு அல்லது விரைவாக வளர்ச்சியடையும் லிபோமா, லிபோமாவில் தொற்று ஏற்பட்டு நிறம் சிகப்பாக மாறுதல் அல்லது கடினமாக மாறுதல், வலி ஏற்படுத்துதல் அல்லது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் குறுக்கிடுதல், அழகியல் காரணங்கள், புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படுவது (லிபோசார்கோமா) போன்ற நிலைகளில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
லிபோமாவை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் (சால்மன், கானாங்கெளுத்தி அல்லது சூரை மீன்), நார்ச்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும். மதுப்பழக்கம் கூடாது.
- தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம்.
- என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதங்கள் நிறைந்த பழங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்...

அவகேடோ:
ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக அவகேடோ அறியப்படுகிறது. ஒரு கப் அவகேடோ 3 கிராம் அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ, கே நிறைந்து காணப்படுகிறது.

கொய்யாப்பழம்:
வைட்டமின் சி நிறைந்த இந்தப் பழம், ஒரு கோப்பைக்கு 4 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.

கிவி:
இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது ஒரு கோப்பைக்கு 2 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.

மாதுளை:
வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படும் மாதுளை, 100 கிராமுக்கு 1.7 கிராம் புரதத்தை வழங்குகிறது.

சர்க்கரை பாதாமி:
ஆப்ரிகாட்ஸ் என அறியப்படும் இந்தப் பழத்தில் வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 100 கிராம் அளவிலான இந்த பழம் 1.4 கிராம் புரதத்தை வழங்குகிறது.

கிரேப் புரூட்:
ஆரஞ்சு பழம் போன்று தோற்றமளிக்கும் இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கோப்பைக்கு 1.3 கிராம் புரதத்தை தருகிறது.

குழிப்பேரி:
பீச் என அழைக்கப்படும் இந்த பழத்தில் 1 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.

வாழைப்பழம்:
இதில் ஒவ்வொரு கோப்பையிலும் 1.6 கிராம் அளவிலான புரதம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகள் உள்ளன.

செர்ரி பழம்:
ஒரு கப் செர்ரி பழத்தில் 1.6 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.

பலாப்பழம்:
இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது. மேலும் ஒரு கோப்பைக்கு 3 கிராம் அளவிலான புரதம் உள்ளது.






