என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா 

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.


    புஷ்பா -2

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஃபகத் பாசில் புஷ்பா முதல் பாகத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • பருத்திவீரன் படத்தில் ‘பொணந்தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு.
    • உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாழை ராசு காலமானார்.

    கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில் 'பொணந்தின்னி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. அதன்பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    செவ்வாழை ராசு

    செவ்வாழை ராசு

    உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 70 வயதாகும் செவ்வாழை ராசுவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ஜூனியர் என்டிஆர் படக்குழு வெளியிடவுள்ளது.

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.


    என்டிஆர்30 படக்குழு

    என்டிஆர்30 படக்குழு

    இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.


    என்டிஆர்30

    என்டிஆர்30

    இந்நிலையில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    • நகைச்சுவை நடிகர் சூரி, சமீபத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விடுதலை.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

    வேலாயுதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, அஞ்சான், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயாகனாக நடித்த விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.


    சூரி

    சூரி

    இந்நிலையில் நடிகர் சூரி, சமீபத்தில் அஜித்தை சந்தித்து பேசியதாகவும் அப்பொழுது சூரியிடம் அஜித் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. அஜித் கூறியதாவது, "மற்றவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்களை பற்றி வரும் விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மதிக்க தொடங்குங்கள் பிறகு மற்றவர்கள் தானாக உங்களை மதிப்பார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள் சூரி" என்று அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    • ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையானது.

    அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ராஷ்மிகா மந்தனா - ஐஸ்வர்யா ராஜேஷ்

    ராஷ்மிகா மந்தனா - ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது,

    "அன்பிற்குரிய நண்பர்களே...

    நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.


    ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை

    ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை

    இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

    இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லால் சலாம்'.
    • இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.



    இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
    • அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.



    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஜா கூறியதாவது, "இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஜெகன்மோகன் இருக்கிறார். அனைத்து விதமான தேர்தல்களிலும் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றார்.

    • நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
    • இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


    இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது, யாதும் ஊரே என்பது நம்முடைய தமிழ் இலக்கியத்தில் முதல் வரி. இன்று உலகத்தில் ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே' என்று தான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழுக்குரிய பெருமையை தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.


    விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் நல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள சமூகங்கள் மாறிக் கிடக்கிறது. இன்று இலங்கையில் உள்ள பிரச்சினையை தமிழ் நாட்டில் பேசுகிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினையை வெளி உலகத்தில் பேசுகிறார்கள். இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இப்படத்தை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

    • பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா.
    • இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் ஆவார்.

    இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், "பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.


    பைக்கில் பயணம் செய்த அமிதாப் பச்சன்

    இந்த பதிவை வைரலாக்கிய நெட்டிசன்கள் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.


    பைக்கில் பயணம் செய்த அனுஷ்கா ஷர்மா

    இந்நிலையில், அமிதாப் பச்சனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, "அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'.
    • இப்படம் ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    வீரன் போஸ்டர்

    சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குட் நைட்'.
    • இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



    இதில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, இயக்குனரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது. இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்தக் கதை மீதும் மணிகண்டன் மீதும் இந்தப் பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார்.



    எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்று பேசினார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
    • லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அவர் நடிகர் விஜய் நடித்த "கத்தி" படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். எந்திரன், கோலமாவு கோகிலா, 2.0, தர்பார் படங்கள் தயாரிப்பு மூலம் லைகா நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது.

    கடந்த ஆண்டு வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

    இதையடுத்து சினிமா படங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

    லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை தயாரித்து வருகிறது. இது தொடர்பாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டதால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனை நடை பெற்ற 8 இடங்களில் இருந்த லைகா பட நிறுவன ஊழியர்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×