என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தை மரத்தாலேயே எலெக்ட்ரிக் திறன் கொண்ட லம்போர்கினி காரை உருவாக்கி இருக்கிறார்.
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற, பெற்றோர் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பர். அவர்களுக்கு கார் பிடித்தால், கார் பொம்மையை வாங்கி பரிசளிப்பர். வியட்நாமை சேர்ந்த டுரோங் வேண் டௌ மரவேலை செய்து வருகிறார்.
இவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற லம்போர்கினி சியான் ரோட்ஸ்டர் மாடலை மரத்தாலேயே உருவாக்கி இருக்கிறார். இந்த கார் முழுமையாக இயங்குகிறது. தான் உருவாக்கிய காரை மகனுக்கு பரிசளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது, இதனை உருவாக்க எவ்வளவு நேரம் செலவானது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
முதலில் காருக்கான பிளாட்பார்மை டுரோங் உருவாக்கினார். பின் அதில் சக்கரங்களை பொருத்தி, பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் அதனை இயக்கினார். இதைத் தொடர்ந்து காரின் பொனெட், சைடு பேனல்கள், கதவுகளை வடிவமைத்து பொருத்தினார்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தியது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் பிஎஸ்6 மாடல் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடல் விலை முன்பை விட ரூ. 1072 உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் இந்த மாடலின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 71,550 முதல் துவங்குகிறது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 76,346 என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடலை வங்குவோருக்கு தற்போது கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 30, 2021 வரை வழங்கப்படுகிறது.
ஷைன் பிஎஸ்6 மாடலில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.72 பிஹெச்பி பவர், 10.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் S1000R மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட 6.5 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ S1000R மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎம்டபிள்யூ S1000R நேக்கட் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இதன் என்ஜின், பிரேம், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படுகிறது.

இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்பட்டு புது பாடி பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ S1000R மாடலில் பிளெக்ஸ் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 199 கிலோ எடை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6.5 கிலோ குறைவு ஆகும்.
புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ S1000R மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றி அமைத்தது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர், கைகர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஜூன், 2021 அன்று அமலுக்கு வந்தது.
விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடலின் பேஸ் RXE வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 5.50 லட்சம் ஆகும். மற்ற வேரியண்ட்களான RXL, RXT, RXZ மற்றும் RXZ டூயல் டோன் விலை ரூ. 13,200 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 13,050 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் க்விட் மாடல் விலை ரூ. 13,900 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கைகர் மாடலின் விலை ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 3090 துவங்கி அதிகபட்சம் ரூ. 39030 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா H2R மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
கவாசகி இந்தியா வலைதளத்தில் 2021 நின்ஜா H2R மோட்டார்சைக்கிள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விலை ரூ. 79.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பந்தய களத்தில் இயக்கக்கூடிய மாடல் ஆகும். இதன் முந்தைய மாடல் விலை ரூ. 75.80 லட்சம் ஆகும்.
முந்தைய வெர்ஷனை விட புது மாடலின் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பை போன்றே இது ஏரோடைனமிக் விங்லெட்கள், ஒற்றை புறத்தில் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 998சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் சூப்பர்சார்ஜர் உள்ளது. இது என்ஜின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது. இவை என்ஜினை 305.7 பிஹெச்பி திறன், 165 என்எம் டார்க்கில் இயக்க வழி வகுக்கிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச், பை-டைரெக்ஷனல் குவிக்ஷிப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளை அதிவேகமாக இயக்கும் போது சிறப்பாக கட்டுப்படுத்த தேவையான அதிநவீன அம்சங்கள் இந்த மாடலில் உள்ளது.
ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் பொது மக்களுக்கு உதவும் வகையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் சார்பில் மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் நிரப்பப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்நிறுவனம் கொரோனா சார்ந்த அவசர சேவையை வழங்கும் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கியது. இந்த சேவையை ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நாடு முழுக்க வழங்கியது.
`மும்பையில் ரிலையன்ஸ் மொபிலிட்டி எரிபொருள் விற்பனை மையங்கள் நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது,' என ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1888 பிஹெச்பி பவர் கொண்ட ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் உற்பத்தி துவங்கியது.
ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. ரிமேக் நிவெரா மாடல் 1888 பிஹெச்பி பவர், 2360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் காரின் நான்கு சக்கரங்களுக்கு தனித்தனியாக திறன் வழங்குகின்றன.

பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை போன்று இல்லாமல், இந்த காரில் உள்ள மோட்டார்கள் வித்தியாசமாக இருக்கின்றன. முன்புற சக்கரங்களில் உள்ள மோட்டார்கள் 670 பிஹெச்பி பவர், 560 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பின்புற மோட்டார்கள் 1206 பிஹெச்பி பவர், 1800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
முற்றிலும் வித்தியாசமான பவர்டிரெயின் ரிமேக் நிவெரா மாடலை ரியர்-வீல் டிரைவ் வாகனத்தை இயக்குவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.97 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 412 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் சர்வதேச சந்தையில் எம்ஜி6 எக்ஸ்பவர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் எம்ஜி 6 எக்ஸ்பவர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது மாடல் அகலமான பாடி, ஏரோடைனமிக் பாடி கிட் கொண்டிருக்கிறது. இது ரேசிங் டிசைன் கொண்டுள்ளது.

எம்ஜி6 எக்ஸ்பவர் மாடலில் 305பிஎஸ் பவர் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த காரில் 480 என்எம் டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த என்ஜினுடன் 10 ஸ்பீடு EDU 2nd Gen எலெக்ட்ரிக் டிரைவ் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிரேக்கிங்கிற்கு ரேசிங் கிரேடு 920E 6 பிஸ்டன் கொண்ட கேலிப்பர்கள் உள்ளது. இது 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் காரை 33 மீட்டர்களில் நிறுத்திவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பிரேக்குகளுடன் மிஷலின் பைலட் ஸ்போர்ட் CUP2 ரப்பர்கள் உள்ளது. இது காரை அதிவேகத்தில் ஓட்டும் போது சிறப்பாக கண்ட்ரோல் செய்ய உதவுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வாகன சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பவர்கள் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி மூலம் கார் சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

சர்வீஸ் முன்பதிவில் துவங்கி, பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளையும் கான்டாக்ட்லெஸ் முறையில் பிஎம்டபிள்யூ மாற்றி இருக்கிறது. பிஎம்டபிள்யூ வலைதளத்தில் லாக் இன் செய்து எந்த தேதியில் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
பிஎம்டபிள்யூ ஒன் செயலி மூலமாகவும் கார் சர்வீஸ் செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. செயலியில் மெக்கானிக்குகள் கார் சர்வீஸ் செய்யப்படும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவர்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பீடு ட்வின் மாடல் விவரங்கள் அதன் இந்திய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இந்திய வலைதளத்தில் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் விவரங்களை பதிவேற்றம் செய்து இரருக்கிறது. விலை தவிர மோட்டார்சைக்கிளின் அனைத்து விவரங்களும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் ஒற்றை வேரியண்டில், மூன்றுவித நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஜெட் பிளாக், ரெட் ஹாப்பர் மற்றும் மேட் ஸ்டாம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ரெட் ஹாப்பர் மற்றும் மேட் ஸ்டாம் கிரே நிறங்களை விட ஜெட் பிளாக் மாடல் விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது.
டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் 1200சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது. இது 98.6 பிஹெச்பி பவர், 112 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 19.60 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
மஹிந்திரா நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறையில் சரிந்த வாகன விற்பனையை வேகப்படுத்தி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில் உள்ளது.
மஹிந்திரா வாகனங்கள் விலையை குறைப்பது மட்டுமின்றி வாகனம் வாங்கும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. புது சலுகைகளில் 'Own Now and Pay after 90 days' சலுகையும் ஒன்று. இது மஹிந்திராவின் பல்வேறு மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதில் வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் எந்த மாடலையும் மாத தவணையில் வாங்கிக் கொண்டு அதற்கான தவணையை 90 நாட்களுக்கு பின் செலுத்த துவங்கலாம். இந்த சலுகை கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
புது மஹிந்திரா கார் வாங்குவோர் முடிந்தால் அவர்களின் அருகாமையில் உள்ள விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைன் தளம் மூலமாகவும் புது கார் வாங்கலாம்.
கொரோனாவைரஸ் தொற்று பரவல் காரணமாக உற்பத்தி ஆலை பணி திட்டத்தை மாற்றிய ஹூண்டாய்.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் மூன்றாவது ஷிப்ட் பணிகளை நிறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 31 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை மூன்றாவது ஷிப்ட் பணிகளை ஹூண்டாய் நிறுத்தி உள்ளது.

ஒரு ஷிப்ட் பணிகளை நிறுத்துவதன் மூலம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்றாலும், இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க முடியும். முன்னதாக சென்னை உற்பத்தி ஆலை ஒரு வார காலத்திற்கு முழுமையாக மூடப்பட்டு இருந்தது.
ஊரடங்கு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை மூடின. ஆலையை மூடியதால் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்களின் முழு ஆக்சிஜனையும் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கின.






