என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது குறைந் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதைவிட குறைந்த விலையில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, AMOLED, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புது 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் மெமரி விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்ட புது பிரைவசி பாலிசி விதிகளை ஏற்காதவர்களுக்கு புது கட்டுப்பாடு அமலாகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரைவசி பாலிசியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பிறப்பித்த மே 15 காலக்கெடுவை நீக்கிவிட்டது. இதனால், புது அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்கள் மே 15 ஆம் தேதிக்கு பின் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம்.
எனினும், புது அப்டேட் இன்ஸ்டால் செய்யக் கோரி வாட்ஸ்அப் சார்பில் அடிக்கடி நோட்டிபிகேஷன் அனுப்பப்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். புது விதிகள் வாட்ஸ்அப் அதன் பயனர் விவரங்களை பேஸ்புக் இயக்கும் வசதியை வழங்கும்.

புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்களுக்கு சில அம்சங்களை பயன்படுத்தும் வசதி படிப்படியாக நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்-ஐ இயக்க முடியாது. மேலும் வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை ஏற்க முடியும்.
எனினும், நோட்டிபிகேஷன் அலெர்ட்களை க்ளிக் செய்த பின்பே குறுந்தகவல்களை படிக்க முடியும். சில வாரங்களுக்கு பின் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும்.
விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், கீக்பென்ச் தகவல்களின்படி புதிய விவோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டிமென்சிட்டி 1100 மற்றும் டிமென்சிட்டி 1200 போன்ற பிராசஸர்களுக்கு இணையான ஒன்றாகும்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கீக்பென்ச் சோதனையில், இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 3467 புள்ளிகளையும், மல்டி கோரில் 8852 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.
புதிய விவோ ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ்70 மாடலின் ரி-பிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஐகூ பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போனினை மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையில் ஹை பிடிலிட்டி வசதியை அறிவிக்கும் என கூறப்படுகிறது. புது சாதனங்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

மே 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டு அறிக்கை மூலம் புது ஏர்பாட்ஸ் 3 மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என தெரிகிறது.
ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சேவையில் புதிதாக ஹை பிடிலிட்டி வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் ஹைபை சேவைக்கான கட்டணம் 9.99 டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் அதற்கேற்ற ஹார்டுவேர் கொண்ட சாதனங்களில் மட்டுமே இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போனார். தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

ரூ. 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு மே 10 ஆம் தேதி ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் அவர் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ அப்டேட் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது பனாமா பகுதியில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் அல்லது மே மாத அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த ஸ்மார்ட்போனிற்கு முதல் முறையாக மிகமுக்கிய அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த அப்டேட் A115MUBU2BUE1 வெர்ஷன் கொண்டிருக்கிறது. புது அப்டேட் பெற ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
விவோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை நீட்டித்து வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை 30 நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை விவோ விற்பனை செய்த அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும். எனினும், இது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் வசிக்கும் விவோ வாடிக்கையாளர்களின் சாதனங்களுக்கு வாரண்டி நிறைவுபெற இருக்கும் பட்சத்தில் அதனை 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக சர்வீஸ் மையங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும்.
வாரண்டி நீட்டிப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் சாதனங்களை வீட்டிற்கு வந்து சரி செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கால அவகாசம் விவோ மீண்டும் தனது வியாபாரத்தை துவங்கிய நாள் முதல் கணக்கிடப்படும் என விவோ அறிவித்து இருக்கிறது.
சபையர் கிளாஸ் கவர், கோபால்ட் அலாய் பிரேம் கொண்ட ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் வாட்ச் கிளாசிக் எடிஷன் மட்டுமே வெளியானது. தற்போது இந்த வாட்ச்-இன் மற்றொரு வேரியண்ட் கோபால்ட் எடிஷன் எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இதன் விலையும் கிளாசிக் எடிஷன் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய கோபால்ட் எடிஷன் மாடலில் சபையர் கிளாஸ் கவர், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோபால்ட் அலாய் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ டையல் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஒன்பிளஸ் வாட்ச் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
சீன சந்தையில் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் விலை RMB1599 இந்திய மதிப்பில் ரூ. 18,250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 14,999 ஆகும்.
தற்போது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர்சோனிக் புளூ மற்றும் சூப்பர்சோனிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மே 18 ஆம் தேதி துவங்குகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு அறிமுகமாகிறது. வெளியீட்டு தேதி, நேரம் தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 13 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி நோட் 10எஸ் அம்சங்கள்
- 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 64 ஜிபி (UFS 2.2) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP52)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், பிராஸ்ட் வைட் மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியை எத்திரியம் இணை நிறுவனர் க்ரிப்டோகரென்சியாக வழங்கி இருக்கிறார்.
எத்திரியம் க்ரிப்டோகரென்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் இந்தியாவுக்கு ரூ. 7360 கோடி மதிப்பிலான ஷிபா இனு க்ரிப்டோகரென்சியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். ஷிபா இனு கரென்சியை உருவாக்கியவர்கள் புடெரினுக்கு 50 சதவீத மீம் டோக்கன்களை பரிசாக வழங்கினர்.

உலகின் இளைய க்ரிப்டோகரென்சி கோடீஸ்வரரான புடெரின் அவற்றை தொண்டு காரியங்களுக்கு செலவிட முடிவு செய்து நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். புடெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ஷிபு டோக்கன்களை இந்தியா கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறார்.
இத்தகைய தொகை க்ரிப்டோகரென்சி மூலம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இவ்வளவு க்ரிப்டோகரென்சியை இந்திய ரொக்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு சற்றே குறையும்.






