என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர்கள்"

    • வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.
    • அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி 8 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை இன்று ஒரு நாள் மேற்கொண்டுள்ளனர்.

    இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டுமே திறந்திருந்தன. அதில் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள 16,000 வங்கிக் கிளைகள் இன்று செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமையோடு குடியரசு தினம் விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றதால் 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.

    வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் காசோலைகள், பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள காசோலை இன்று ஒரு நாளில் முடங்கியதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் அந்நிய செலாவணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.

    வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பணமும் தீர்ந்து போனதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் இன்று செயல்படவில்லை.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. அங்கே அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் இழுத்து அடித்து வருகிறது. மத்திய, மாநில அரசின் நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி, பொது காப்பீடு மற்ற அனைத்து துறைகளிலும் வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறை அமலில் உள்ளது.

    ஆனால் வங்கிகளுக்கு 2 சனிக்கிழமை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தொழிற்சங்கங்கள் பேசி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை நேரத்தை அதிகரித்து ஒப்பு தல் அளிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

    எனவே 5 நாட்கள் வேலை நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்ய முடியாமலும், எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இதர வங்கி சேவைகளும் முடங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பதனால் அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற சிரமங்களுக்காக வருந்துகிறோம். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம்உறுதி அளித்தது.
    • கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) உறுதி அளித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசுடன் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வருகிற ஜனவரி 27-ந்தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது.
    • இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

    பெருநிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து மோடி அரசின் மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் உடனான தனது சந்திப்பு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " பாஜக அரசாங்கம் அதன் பில்லியனர் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

    நண்பர்களுக்கு சலுகை, ஒழுங்குமுறை தவறிய நிர்வாகத்துடன் இணைந்து, இந்தியாவின் வங்கித் துறை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தச் சுமை இறுதியில் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கும் இளம் பணியாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது.

    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது. பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றம், என்ஏபி விதிகளை மீறியவர்களுக்கு நெறிமுறையற்று வழங்கப்பட்ட கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் நடவடிக்கை, பணிநீக்கம் என பல பிரச்சனைகளை அவர்கள் தெரிவித்தனர். இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

    இந்தப் பிரச்சினை ஐசிஐசிஐ வங்கியைத் தாண்டி நாடு முழுவதும் உள்ள பல வங்கி  ஊழியர்களை பாதிக்கிறது. பாஜக அரசின்  தவறான பொருளாதாரத் நிர்வாகம், மனித உயிரைப் பறிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயம்.

    இந்த தொழிலாள வர்க்கதினருக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை முழு தீவிரத்துடன் கையாளும்" என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்ள அனைவருக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

    • நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
    • முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

    தொடர்ந்து டெல்லியில் 9 வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
    • 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஊதிய உயர்வு 2022, நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.

    சென்னை:

    பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.

    இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ரூ.7,898 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும்.

    புதுடெல்லி:

    வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன.

    இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

    அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.

    வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.

    • பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
    • இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கியும், அதன் பண சேமிப்பு கிடங்கும் உள்ளது.

    வங்கி பண சேமிப்பு கிடங்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கிக்கு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.70.40 கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதிகாரிகள் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது பல்வேறு வகைகளில் ரூ.3.28 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பண சேமிப்பு கிடங்கு கடந்த ஆண்டு 3 முறை முறைகேடாக திறக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பண சேமிப்பு கிடங்கில் இருந்து பணத்தை எடுத்து போலி ரூபாய் நோட்டு மற்றும் சேதாரமான ரூபாய் நோட்டுகளை மாற்றி வைத்து இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து வங்கியின் மண்டல அதிகாரி காகதால் புகார் அளித்தார். புகாரின் பேரில் வங்கி அலுவலர் செல்வராஜன், மேலாளர் ராஜன், அலுவலர் ஜெயசங்கரன், சார்பு அலுவலர் ஸ்ரீகாந்த், பண பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் ஆகியோர் மீது சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட மூத்த வங்கி மேலாளர் விஜயலட்சுமி இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை கொண்டு 5 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையின் போது வங்கி கதவுகள் எதற்காக 3 முறை திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார்களா? அல்லது சொத்துக்கள் வாங்கி உள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி போலி நோட்டுகள் தயாரித்து அதனை சேமிப்பு கிடங்கில் வைத்து விட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை அவர்கள் கைப்பற்றி இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதன்பேரிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் 5 பேரும் கைதாக வாய்ப்பு உள்ளது.

    இந்த விவகாரத்தில் இந்த 5 பேர் மட்டும் தான் காரணமா, அல்லது வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    ×