search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசித்திருவிழா"

    • ஆண்டுதோறும் மாசி தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.
    • தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    கோவை:

    கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது.

    8-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு உற்சவர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிற்பகலில் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடலான ராஜவீதியில் இன்று காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் தேரில் எழுந்தருளிய கோனியம்மனை வழிபட்டுச் சென்றனர். மதியத்துக்கு பிறகு ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கையாக ரத வீதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

    • இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா.
    • அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 13-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.

    இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயாரிக்கப்பட்டு முதலில் கோவில் பூசாரி அதில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர்.

     கையில் குழந்தையை ஏந்தியவாறும், தீச்சட்டி எந்தியவாறும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும், பக்தர்கள் பூக்குழி இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.

    3400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழிய இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை காண திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    • அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

     தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா.
    • தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று அதிகாலையில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 8 வீதியிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்கு பிறகு பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இந்த பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை வழிபட்டால் விஷ்ணு அம்சமாக இருந்து சண்முகர் வாழ்வில் வள மான வாழ்வு பெற்று செல்வ செழிப்புடன் இந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக வாழ வைப்பார் என்ற ஐதீகத்தால் பக்தர்கள் பச்சை நிறத்தில் ஆன உடையணிந்து தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருவிழாவான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழா அன்று மாலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • மாசித்திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • சண்முகர் இன்று சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் பவனி வருதல் நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 4.30 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

    இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான (23-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான (24-ந்தேதி) தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடு திருச்செந்தூர்.
    • மாசித்திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 4.30 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நாளான 5-ம் திருநாள் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாளான 23-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 24-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அஜித், மணியம் செந்தில்குமார் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நிறைவு நாளான வருகின்ற பிப்.12ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

    • 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி நம்மாழ்வார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • வருகிற 9-ந் தேதி காலை மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நவதிருப்பதியில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் பெருமாள் கருட வாகனத்தி லும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ந் தேதி காலை 9 மணிக்கு மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி இரவு பெருமாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 12-ந் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிகோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.

    நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித் மற்றும் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் ஓந்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் மாசி திருவிழா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பூக்குழி இறங்குதல், கரகம் ஜோடித்து முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரகம் ஜோடித்து, முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் சண்முகமூர்த்தி, செயலாளர்கள் தர்ம லிங்கம், பழனிக்குமார், முருகேசன், ஜெயபாண்டி மற்றும் பிள்ளைமார் சமூக பங்காளிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றில் மிதந்து வந்த பெட்டியில் இருந்த தெய்வ சிலையை ஒரு சமூகத்தை சேர்ந்த பங்காளிகள் இணைந்து ஆற்றின் மேற்கே பிரதிஷ்டை செய்து சிறு கோவிலாக கட்டி குலதெய்வ வழிபாடாக மாசி சிவராத்திரியில் பேரூராட்சி தலைவர், காவல் துறை மற்றும் அனைத்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    2015-ம் ஆண்டு கோவிலை சீரமைத்து பெரிய அளவில் கோவில் அமைத்து தற்போது வருடாவருடம் மாசி சிவராத்திரி அன்று பெரிய திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை அன்று பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கி கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×