search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்"

    • ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
    • 21-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை, திருவொற்றி யூரில் உள்ள வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழாவையொட்டி கோவிலில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணியளவில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (15-ந்தேதி) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சந்திர சேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

    தொடர்ந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக் கல்யாண உற்சவமும், பிற் பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் சேவை உற்சவம் நடக்கிறது.

    • இன்று இரவு மகிழடி சேவை நடக்கிறது.
    • திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

    திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.

    இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், வடிவுடையம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.

    கல்யாணசுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது. பின்னர் பால், பழம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம் நடைபெற்றது.

    இன்று இரவு 9 மணிக்கு கல்யாணசுந்தருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடை பெறுகிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் அதி காரிகள் செய்து இருந்தனர். திருக்கல்யாண விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர்மீரா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவர் சந்தரசேகரர் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலா வருகிறார். விழாவில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.

    இந்நிகழ்வை காண திருவொற்றியூர் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 8-ந்தேதி தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சந்திரசேகரர்-திரபுரசுந்தரி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் பரிவார பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.45 மணியளவில் 41 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தேர், சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க புறப்பட்டது.

    இதில் தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, வடசென்னை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து தெற்கு மாட வீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகள் வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சன்னதி தெரு வந்து பகல் 2 மணியளவில் நிலையை வந்தடைந்து.

    தேருக்கு முன்பு சங்க நாதம் முழங்க சிவனடியார்கள் நடனமாடியபடியும், பள்ளி மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடிய படியும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரை வரவேற்றபடி சென்றனர்.

    தேர் செல்லும் வழியில் ஆங்காங்கே நின்றிருந்த பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். தேர் செல்லும் வழியில் வெப்பத்தை தணிக்க மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உபயதாரர்கள் நீர்மோர் வழங்கினர்.

    தேரானது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 45 அடிக்கும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் தூண்களுக்கு இடையே சென்றதை பக்தர்களும், பொதுமக்களும் ஆச்சரியமாக பார்த்து வணங்கி சென்றனர்.

    விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் செல்லும் நேரத்தில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. விழாவில் வருகிற 6-ந்தேதி திருக்கல்யாணம், 8-ந்தேதி இரவு 18 திருநடனம், தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.

    • கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதி நடக்கிறது.
    • ஊர்வலத்தில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணியளவில் நடக்கிறது. 41 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசாமி திரிபுரசுந்தரி தாயாருடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

    இந்தநிலையில் தேரோட்டத்தின்போது பயன்படுத்தப்படும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகி விட்டது.

    இதையடுத்து திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக சேவகரான உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் 160 அடி நீளம், 5.5 இஞ்ச் அகலமுள்ள 500 கிலோ எடையுள்ள புதிய வடக்கயிறு பிரத்யேகமாக ஒருமாத காலமாக தயாரிக்கப்பட்டு திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வடத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் பொருத்தப்பட்டது.

    விழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த திருக்கல்யாணத்தை காண 3 நாட்களுக்கு முன்பு சென்னை மண்ணடி, பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சாமி வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து வெள்ளி மற்றும் மரத்தேரில் அலங்கரிக்கப்பட்ட பழைய மற்றும் புதிய தண்டாயுதபாணி சாமிகள் ஊர்வலமாக திருவொற்றியூருக்கு வந்தனர். ஊர்வலத்தில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ஊர்வலம் திருவொற்றியூர், தெற்கு மாடவீதியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் முடிந்தது. அங்கு 5 நாட்கள் தண்டாயுதபாணி சாமியுடன் தங்கியிருக்கும் நகரத்தார் சமூகத்தினர் அனைவருக்கும் அன்னதானம் அளித்து திருக்கல்யாணம் கண்டு திரும்புவர்.

    • 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடை பெறுகிறது. 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தேரோட்டத்தின் போது பயன்படுத்தும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகிவிட்டது. இதையடுத்து சமூக சேவகர் பக்தர் உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.


    இந்த புதிய வடக்கயிறு கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை 5 மணி யளவில் இதற்கு சிறப்புபூஜை செய்யப்பட்டு தேரில் பொறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    • சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதி நடக்கிறது.
    • கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந்தேதி நடக்கிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கொடிமரம், மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாம்பிராணி தூபமிட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைதொடர்ந்து பிரமாண்ட கொடி மரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தியாகேசா ஒற்றீசா என, விண்ணதிர பக்தி ேகாஷம் முழங்கினர். பின்னர் தியாகராஜ சாமி, பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    மாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் உற்சவர் சந்திர சேகரர் மற்றும் திரிபுர சுந்தரி தாயார், சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபர், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லாக்கு, இந்திர விமானம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதியும், கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதியும் நடைபெற உள்ளது. வருகிற 7-ந் தேதி கடலாடு தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம், 8-ந்தேதி இரவு தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன், திருவிழா நிறைவடைகிறது.

    • மார்ச் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 3-ந்தேதி இரவு 7.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 10.45 மணிக்குள் சந்திரசேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரருடன் திரிபுர சுந்தரி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

    தொடர்ந்து மார்ச் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 2 மணிக்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவம் நடைபெறும், தொடர்ந்து இரவு 9 மணியளவில் மகிழடி சேவை உற்சவம் நடைபெறுகிறது.

    • ஏராளமான பக்தர்கள் ஒம் நமச்சிவாய!என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்
    • தியாகராஜ சுவாமிகள் மாட வீதி உற்சவம் நடைபெற்றது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை தியாகராஜ சுவாமி மற்றும் சந்திரசேகர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை அலங்காரம் செய்யப்பட்ட சந்திரசேகர் சுவாமிகள், திரிபுர சுந்தரி ஆதிஷேச குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் தெப்பகுளத்தில் உள்ள நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றி வந்தது. அப்போது குளத்தின் படிக்கட்டுகளில் இருந்த ஏராளமான பக்தர்கள் ஒம் நமச்சிவாய!என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். இரவு தியாகராஜ சுவாமிகள் மாட வீதி உற்சவம் நடைபெற்றது. தெப்பத்திருவிழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பா.ஜ.க.மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசரிக்க முடியும்
    • இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மூலவர் சுயம்பு திருமேனியான ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டு இருந்த தங்க நாக கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி, தைலாபிஷேகம் நடைபெற்றது. முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புணுகு தைலத்தில் பொட்டு வைத்தும், பிரசாதமாக புணுகு தைலம் வழங்கப்பட்டது.

    ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசரிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    2-வது நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தூரல் மழையிலும் குடையை பிடித்தபடி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேரடி வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலேயே தான் வந்த காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களை பார்த்து அவர் கையெடுத்து கும்பிட்டு, பாதுகாப்பாக பத்திரமாக சாமி கும்பிட்டு விட்டு செல்லும்படி கூறினார்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் ஊழியர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுவரை 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிவரை ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும். இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாளை மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும்.
    • வருகிற 9-ந்தேதி வரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மூல வர் ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். வருகிற 9-ந்தேதி இரவு 8 மணிவரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

    ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 2016-ம் ஆண்டு தைப்பூசத்தில் வடிவுடையம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • சுமார் 6 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்தது வடிவுடையம்மன் கோவில்.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கோவில் வெளியே உள்ள ஆதிஷேசகுளம் என்ற பெரிய குளம் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    இந்த குளத்துக்கு தண்ணீர்வரும் மதகுகள் அடைக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்படாமல் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் தெப்பக்குளம் வற்றி வறண்டு கிடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டது.

    இதையடுத்து திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் மழைநீர் அனைத்தும் குழாய்கள் வழியாக இந்த குளத்துக்கு வரும் வகையில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழைநீரானது புதிதாக கட்டமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக கோவில் குளத்துக்கு வந்தது. இதனால் சுமார் 6 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்த வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி வருகிறது.

    பல வருடங்களுக்கு பிறகு கோவில் குளத்தில் தண்ணீர் தேங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளத்தை தூய்மைப்படுத்தும் பணிகளை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் சங்கரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

    அப்போது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கூறும்போது, "தற்போது அடைப்புகளை நீக்கி புதிதாக ஏற்படுத்தப்பட்ட குழாய்கள் வழியாக மழை நீர் குளத்துக்கு வருகிறது. மழை காலம் முடிந்ததும் திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பாதையில் இருந்து வரக்கூடிய மழைநீரையும் இந்த குளத்துக்கு வரும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி இருக்கும்" என்றார்.

    கடந்த 2016-ம் ஆண்டு தைப்பூசத்தில் வடிவுடையம்மன் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதன் பிறகு குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைதெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. தற்போது குளம் நிரம்பி வருவதால் இந்த ஆண்டு தெற்ப உற்சவம் நடைபெறவேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×