search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் கலெக்டர்"

    • பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
    • அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.

    திருவள்ளூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.


    மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூண்டி ஏரி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி கேட்டறிந்தார். முன்னதாக அவர் பூண்டி ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சத்ய நாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கலெக்டர் கேட்டு அறிந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் புதிதாக தார் சாலைகள் மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மழை நீர் பாயாத நிலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் கோல்ட் மனி, பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

    தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனரான தங்கவேல், கரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனராக மாற்றப்பட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனர் வீரராகவராவ், தொழிற்கல்வி கமிஷனராக மாற்றப்பட்டார்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதஞ்சே நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
    • இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி விட்டு அதனை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ரசாயனம் கலப்பு இல்லாமல் விநாயகர் சிலைகளை செய்யவும், அதனை கரைக்கும் இடங்கள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்பட லாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி), கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்து கோடை குளம், சித்தேரி, ஊத்துக்கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை, பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகமாசத்திரம், குளம் புலிகாட் ஏரி, திருப்பாலை வனம், ஏழு கண்பாலம், கும்மிடிப்பூண்டி, பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி, திருவள்ளூர் ஆகிய 16 ஏரி, குளங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ‘மென டோரா அறக்கட்டளை’ தன்னார்வ தொண்டு நிறுவனம் வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.
    • ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

    திருவள்ளூர்:

    ஆவடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்த போது யார்? எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

    இதுபற்றி அறிந்த 'மென டோரா அறக்கட்டளை' தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் அந்த வாலிபர் விரைவில் குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரிய வந்தது.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் மன நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்திருப்பதும் பின்னர் ஆவடி ரெயில் நிலையத்தில் வழிதெரி யாமல் சுற்றி வந்ததும் தெரிந்தது.

    தற்போது மாணவர் நல்ல முறையில் குணமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விவரங்களின்படி பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

    உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட வாலிபரை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஒப்படைத்தார். முன்னதாக வாலிபருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக நடந்தது.

    ஒரு மாதத்துக்கு பின்னர் மாயமான வாலிபரை மீட்டுக்கொடுக்க பெரும் உதவியாக இருந்த தொண்டு நிறுவனத்துக்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கும் வாலிபரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:-

    ஆவடி ரெயில் நிலையத்தில் வீடின்றி தங்குவதற்கு இடமின்றி ஒரு நபர் மிகவும் முடியாத நிலையில் உள்ளதாக ஹெல்ப்லைன் மூலமாக மெனடோரா அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இ.சி.ஆர்.சி. மூலமாக அந்த நபரை மீட்டெடுத்து பிப்ரவரி 21-ந் தேதியில் இருந்து தற்பொழுது வரை நம் பாதுகாப்பில் இருந்து வந்தார். அவரிடம் இருந்து தொலைபேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து பீகாரில் உள்ள உறவினரை அழைத்தோம். அவர்கள் உடனடியாக வந்ததன் அடிப்படையில், அந்த குடும்பத்துடன் அந்த நபரை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இதுபோன்ற நிகழ்வு முதலாவதாக கிடையாது, இதேபோல் 35 நபர்கள் மீட்டெடுத்தும், 20 நபர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைப்பும் செய்திருக்கிறோம். இது ஒரு நல்ல முன்மாதிரியான மீட்டெடுப்பு சம்பவம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200 எண்ணிக்கையில் தீவிர சிகிச்சை பிரிவிலான நபர்களுக்கு உரிய சிகிச்சை செய்துள்ளார்கள். 35 நபர்களை தெருக்களில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 நபர்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத குடும்பங்களை பார்த்திருக்கிறோம். அப்படிபட்டவர்களை தொண்டு நிறுவனம் மூலமாக காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறக்கட்டளை இயக்குனர்கள் ரதீஷ்கான் கோட், ரெவலீனா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மா கவுரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • மாணவிகளுடன் “காபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
    • அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 53 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2020-ம் ஆண்டு 41 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும், 2021 -ம் ஆண்டு 24 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் 2022 -ம் ஆண்டு 18 சிறுமியர்களுக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணங்களும் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி பயிலவும். தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்தான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயின்றுவரும் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டம்-2006 குறித்தும் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக விவரித்தும், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டு உயர்கல்வி பயிலும் உங்களை போன்று உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்தும் சம்பந்த ப்பட்ட துறைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பெண் குழந்தைகளும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரசு சார்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, எந்தவித அச்சமுமின்றி உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படித்து நாளை நல்லதொரு சமுதாயத்தை கட்டமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடை பெறவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மாணவியர்க ளோடு "காபி வித் கலெக்டர்" என்ற தலைப்பில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி அம்மாணவிகளை பாராட்டி, புத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன.
    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் அனுமதி அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன. இங்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், பிரிஞ்சி சாப்பாடு, கேழ்வரகு களி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டும் என்று திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்திருந்தார். அத்தகைய மனுவை கலெக்டர் முதலில் நிராகரித்திருந்தார். இதனை எதிர்த்து மோகன், தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் முறையிட்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவ கத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுமதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.100 ஆகும். இதேபோல் அசைவ உணவுக்கான விலைப் பட்டியலும் உணவு விடுதி முன்பாக பேனராக வைத்து உள்ளனர். அதில் சிக்கன் பிரியாணி ரூ.100, சிக்கன் குழம்பு-ரூ.50, முட்டை-ரூ.15, சிக்கன்65-ரூ.60, மீன் குழம்பு -ரூ.50, மீன் வறுவல்-ரூ.30, மட்டன் குழம்பு-ரூ.100, ஆட்டுக்கால் சூப்-ரூ.100, மட்டன் பிரியாணி-ரூ.200, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
    • கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும் போது, 'மாவட்டத்தில் தாலுகா வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்' என்றார்.

    இதில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார், நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், சேர்மன் ரவி கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 -ம் கல்வியாண்டில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.

    • போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
    • புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போகிப்பண்டிகையன்று பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க வேண்டும் என்ற நோக்கில், பழையன கழிதலும், புதியன புகுதலுமென நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    இத்தகைய பழக்கம் பெரும் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேறுவிதமாக கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×