search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur collector"

    • பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
    • அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.

    திருவள்ளூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.


    மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.

    • மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கலெக்டர் கேட்டு அறிந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் புதிதாக தார் சாலைகள் மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மழை நீர் பாயாத நிலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் கோல்ட் மனி, பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ‘மென டோரா அறக்கட்டளை’ தன்னார்வ தொண்டு நிறுவனம் வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.
    • ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

    திருவள்ளூர்:

    ஆவடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி வந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்த போது யார்? எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

    இதுபற்றி அறிந்த 'மென டோரா அறக்கட்டளை' தன்னார்வ தொண்டு நிறுவனம் அந்த வாலிபரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    அங்கு அவருக்கு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மாகவுரி மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதில் அந்த வாலிபர் விரைவில் குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் என்ஜினீயரிங் படித்து வந்ததும் தெரிய வந்தது.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் மன நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்திருப்பதும் பின்னர் ஆவடி ரெயில் நிலையத்தில் வழிதெரி யாமல் சுற்றி வந்ததும் தெரிந்தது.

    தற்போது மாணவர் நல்ல முறையில் குணமாகி இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விவரங்களின்படி பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவரை தேடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

    உடனடியாக அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட வாலிபரை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஒப்படைத்தார். முன்னதாக வாலிபருக்கு கலெக்டர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக நடந்தது.

    ஒரு மாதத்துக்கு பின்னர் மாயமான வாலிபரை மீட்டுக்கொடுக்க பெரும் உதவியாக இருந்த தொண்டு நிறுவனத்துக்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீசுக்கும் வாலிபரின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறியதாவது:-

    ஆவடி ரெயில் நிலையத்தில் வீடின்றி தங்குவதற்கு இடமின்றி ஒரு நபர் மிகவும் முடியாத நிலையில் உள்ளதாக ஹெல்ப்லைன் மூலமாக மெனடோரா அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இ.சி.ஆர்.சி. மூலமாக அந்த நபரை மீட்டெடுத்து பிப்ரவரி 21-ந் தேதியில் இருந்து தற்பொழுது வரை நம் பாதுகாப்பில் இருந்து வந்தார். அவரிடம் இருந்து தொலைபேசி எண் போன்ற விவரங்களை சேகரித்து பீகாரில் உள்ள உறவினரை அழைத்தோம். அவர்கள் உடனடியாக வந்ததன் அடிப்படையில், அந்த குடும்பத்துடன் அந்த நபரை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    இதுபோன்ற நிகழ்வு முதலாவதாக கிடையாது, இதேபோல் 35 நபர்கள் மீட்டெடுத்தும், 20 நபர்களை குடும்பத்துடன் ஒருங்கிணைப்பும் செய்திருக்கிறோம். இது ஒரு நல்ல முன்மாதிரியான மீட்டெடுப்பு சம்பவம் என்பதால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 200 எண்ணிக்கையில் தீவிர சிகிச்சை பிரிவிலான நபர்களுக்கு உரிய சிகிச்சை செய்துள்ளார்கள். 35 நபர்களை தெருக்களில் இருந்து மீட்டெடுத்துள்ளனர்.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 18 நபர்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத குடும்பங்களை பார்த்திருக்கிறோம். அப்படிபட்டவர்களை தொண்டு நிறுவனம் மூலமாக காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறக்கட்டளை இயக்குனர்கள் ரதீஷ்கான் கோட், ரெவலீனா, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர்கள் தீபா, பத்மா கவுரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன.
    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் அனுமதி அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன. இங்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், பிரிஞ்சி சாப்பாடு, கேழ்வரகு களி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டும் என்று திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்திருந்தார். அத்தகைய மனுவை கலெக்டர் முதலில் நிராகரித்திருந்தார். இதனை எதிர்த்து மோகன், தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் முறையிட்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவ கத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுமதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.100 ஆகும். இதேபோல் அசைவ உணவுக்கான விலைப் பட்டியலும் உணவு விடுதி முன்பாக பேனராக வைத்து உள்ளனர். அதில் சிக்கன் பிரியாணி ரூ.100, சிக்கன் குழம்பு-ரூ.50, முட்டை-ரூ.15, சிக்கன்65-ரூ.60, மீன் குழம்பு -ரூ.50, மீன் வறுவல்-ரூ.30, மட்டன் குழம்பு-ரூ.100, ஆட்டுக்கால் சூப்-ரூ.100, மட்டன் பிரியாணி-ரூ.200, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
    • பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    பொன்னேரி:

    வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை மற்றும் தயார் நிலை குறித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் கூறியதாவது:-

    பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த பருவமழையின் போது ஆரணி ஆற்றில் 8 இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது. தற்போது வருகின்ற பருவமழைக்கு முன்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான உபகரணங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு ரூ.1 கோடி 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை 210 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 25 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி போன்ற எல்லைப் பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தாய்மார்கள் ஆர்வம் காட்டுவது இல்லை என்று தெரிகிறது.

    ஸ்கேன் மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து விடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் புதிதாக 1 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தேசித்து உள்ளோம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ., தாசில்தார் இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசிலன், தலைமை எழுத்தர் ரவி கலந்து கொண்டனர்.

    நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பொன்னேரி:

    பொன்னேரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    அப்போது, மக்கள் நேரடியாக கலெக்டரிடம் மனு அளித்து, அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்று கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள், தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

    இதில் பெரும்பாலான மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பட்டா மற்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    இந்த முகாமில் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தாசில்தார்கள் புகழேந்தி சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
    திருவள்ளூர்:

    கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளூர் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

    வடக்கு ராஜவீதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கலெக்டர் மகேஸ்வரி அதிரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளின் தரத்தை பரிசோதித்தார். அவை தடை செய்யப்பட்டவை என்று தெரிந்தது. அந்த கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பஜார் வீதி, ராஜாஜி சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடந்தது.

    இதனால் திருவள்ளூர் நகர பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் தயாளன், சார்ஆட்சியர் ரத்னா, வட்டாட்சியர் தமிழ் செல்வன், உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்து உள்ளார். #vinayagarstatue
    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது திருவள்ளூர் பகுதியில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், அண்மைக்காலமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட, ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விடுவதால், நீர் நிலைகளில் மாசு ஏற்பட்டு சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது.

    எனவே, விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் பச்சை களிமண் (சுடப்படாதது) அல்லது சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் ரசாயனம் கலக்காத பொருள்களால் மட்டுமே விநாயகர் சிலைகளைத் தயார் செய்ய வேண்டும்.

    மேலும், தண்ணீரில் கரையக் கூடிய வர்ணங்களை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை, விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி, சுற்றுச் சூழல் பாதிப்பை தவிர்க்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    மேலும் விநாயகர் சிலைகளை நிறுவ முன்கூட்டியே உரிய அனுமதியினை காவல் உதவி ஆணையர்கள், சார்ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களிடம், விநாயகர் சிலையினை வைக்க விரும்பும் நபர், அமைப்பாளர் மேற்கூறிய அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

    அனுமதி பெற மனு செய்யும் பொழுது, கீழகண்ட துறைகளிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

    1) நில உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுதல் வேண்டும். அரசு நிலமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து தடையில்லா சான்று. (உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்ட துறை),

    2) காவல் துறையின் தடையில்லா சான்று.

    3) தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் தடையில்லா சான்று.

    4) மின் இணைப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான கடிதம் மற்றும் தற்காலிக மின் இணைப்பு தொடர்பான மின்வாரியத்தின் தடையில்லா சான்று.

    மேற்கண்ட தடையில்லா சான்றுகளுடன் காவல் உதவி ஆணையர்கள், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களிடம் மனு செய்யும் பட்சத்தில் உரிய பரிசீலனை செய்து, உரிய அனுமதி மேற்படி அலுவலர்களால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #vinayagarstatue
    ×