search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா"

    • எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான்.
    • கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.

    திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

    10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.

    அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். 

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.

    அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    11-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். 

    கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

    கடற்கரையில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

    4.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். பின்னர் விரதத்தை பக்தர்கள் முடித்து கொள்வார்கள். இதற்காக ஏற்கனவே திரண்ட லட்சக்கணக்கானோர் மட்டுமல்லாது இன்றும் பக்தர்கள் அலைஅலையாய் திரண்டு வருகிறார்கள்.

    இதனால் குலசேகரன்பட்டினம் குலுங்கியது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும். நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.

    இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.

    கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.

    தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.

    கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.

    அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.

    நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.

    சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. 

    வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

    வேடமணிந்து காணிக்கை செலுத்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.

    குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.

    அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.

    • சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.
    • தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

    பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதில் பல்வேறு நோய்கள், தொழில் முடக்கம், குடும்ப பிரச்சினைகள் தீர அம்மனுக்கு நேர்த்தி கடனாக காளி, அம்மன், சிவன், கிருஷ்ணன், விநாயகர், முருகன், பண்டாரம், குரங்கு, கரடி ,புலி, சிங்கம், குறவன், குறத்தி, பெண், போலீஸ் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பிரித்து அம்மனுக்கு செலுத்துவார்கள்.

    இதில் சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள். திருவிழா தொடங்க இன்னும் 2 வாரமே இருப்பதால் வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் கடலில் குளித்து மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.

    பல்வேறு சுவாமி வேடத்திற்கான கீரிடம், சடை முடி, சூலாயுதம், நெற்றி பட்டை, கண்மலர், வீரபல் போன்றவை கடந்த சில மாதங்களாக உடன்குடியில் தயாராகி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த பொருட்கள் தயார் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் உடன்குடி பகுதியில் தயார் செய்யப்படும் சுவாமி வேடப்பொருட்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    தனி நபராகவும், தசரா குழுக்களாக வந்தும் முன் ஆர்டர் செய்கின்றனர். சிலர் இடுப்பு ஒட்டியாணம், தலை கீரிடம், கை பட்டை போன்றவற்றிற்கு முன்னதாக அளவு கொடுத்து முன்பதிவு செய்வதாகவும் இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உள்ள பெண்கள் போல வேடம் போடும் பக்தர்கள் இரட்டை ஜடை, ஒத்த ஜடை என்று பல்வேறு அலங்காரத்தில் தலை முடிவைப்பார்கள். இதுபோன்று ராஜா, ராணி வேடம் போன்ற பல்வேறு பொருட்களும் உடன்குடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதால் தற்போது உடன்குடியில் தசரா பொருட்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
    • பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். 12 நாட்கள் கோலாகலமாக நடந்தது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது. 11-ம் திருநாள் அன்று ஏராளமான உண்டியல்கள் நிறைந்துவிட்டது. அதனால் அந்த உண்டியல்களை மூடி சீல் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 69 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்த பணியில் தூத்துக்குடி அறநிலையத்துறை துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ரத்தினவேல்பாண்டியன், உதவி ஆணையர்கள் கோமதி, கண்ணதாசன், சாத்தான்குளம் கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டது.

    ரொக்கமாக ரூ. 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114, பொன் இனங்கள் 134 புள்ளியின் புதுக்காமு, வெள்ளி இனங்கள் 2416 கிராம் இருந்தது. 5 நாள் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் கோவில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்தனர். விழா நாட்களில் கோவிலில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவில் கடற்கரையில் நடந்தது. இதை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகம், எருமை தலை, சேவல் என அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர்.

    விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனின் காப்பு களையப்பட்டது. பின்னர் வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

    12-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • இன்று மாலை 4 மணிக்கு கொடியிறக்கப்படும்.
    • நாளை நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கிடையே தசரா விழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

    10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    கடற்கரையில் அம்மன் மகிஷாசூரனை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    11-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்படும். பின்னர் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    விழாவின் நிறைவு நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • குலசை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் விமர்சையாக நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து இருந்தனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், பத்தாம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசை தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முக்கியமான இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
    • குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் கோவில் வளாகம், கடற்கரை அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான ஏ.டி.எஸ்.பி., டி.எஸ். பி., இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

    முக்கியமான இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை 4 இடங்களில் நிறுத்துவதற்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை முறைப்படி வரிசையாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் கோவில் வளாகம், கடற்கரை அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட வழியாக வரும் அனைத்து பஸ்களும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நல அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் போலீசாருக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் குளிப்பதற்கு வசதி என பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.

    • தென் மாவட்டங்களில் வேடம் அணிந்த பக்தர்களால் தசரா திருவிழா களைகட்டியது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் தசரா குழுக்களாவும் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து காணிக்கை வசூலிக்கின்றனர். தசரா குழுவினரும் ஊர் ஊராக சென்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

    9-ம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    10-ம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. இரவில் துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர் ஆகிய திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.

    6-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் நேற்று முதல் கோவிலில் காப்பு கட்டி குழுக்களாக ஊர் ஊராக சென்று நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். நேற்று தாண்டவன்காட்டில் காளி பக்தர்கள் தசரா குழுக்களாக சென்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    • கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் இரவு அம்மன் ஒரு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு 3-ம் நாள் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் காவடி திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    • வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது, ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப்பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணித்தும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வருவதோ, ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோ, போலீஸ் துறையினர் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்த அனுமதி இல்லை. கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுகின்றனர். வியாபாரிகள் அனுமதியின்றி சாலையோரம் கடைகள் அமைத்து போக்குவரத்துக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒழுங்காக நிறுத்த வேண்டும். பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காகவும், பக்தர்களின் பொதுநலனுக்காகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×