search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தீ"

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.பாத்திர கடை வைத்துள்ளார். இன்று காலை பாலாஜி தனது மனைவி, குழந்தை, உறவினர்களை காரில் அழைத்துக் கொண்டு அவர்களை ஊரில் விடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    பாலாஜி கார் நிறுத்தும் பகுதியில் காரை நிறுத்தி விட்டு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள், மனைவி, குழந்தையை ரெயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் காரை எடுக்க வந்தார்.

    அப்போது காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலாஜி காரை விட்டு வெளியே வந்தார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயை அணைத்தனர்.

    தீப்பிடித்து எறிந்த காரை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கார்கள் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் பாலாஜியும் காரை விட்டு இறங்கியதால் அவரும் உயிர் தப்பினார்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்த பேட்டரி கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    • காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    குன்றத்தூர்:

    சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை தனது நண்பர் கணபதி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்களது நண்பரை பார்த்துவிட்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் புழல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

    இதை பார்த்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அதற்குள் காரின் முன் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க போராடினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

    • பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தீ விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் தேங்காய் பழக்கடை வைத்துள்ளார்.

    இவர் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் டாஸ்மாக் அருகே சாலை யோரத்தில் அவரது காரை நேற்று இரவு நிறுத்தி விட்டு ஓட்டலில் டிபன் வாங்க சென்றுள்ளார். திடீரென இந்த காரின் முன்பக்கத்தில் இருந்து புகை கிளம்பியது. இதனையடுத்து கார் தீ பிடிக்க தொடங்கியது.

    இதுகுறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். காரை எடுக்க வந்த கார் உரிமையாளர் கார் தீ பற்றி எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்ததாக தெரியவந்தது.

    மேலும் காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

    பிரதான சாலையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த தீ விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காரஜ்மாவில் கிண்னெடும் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் (வயது 35).

    இவர் மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்டர்நெட் கபே (கணினி மையம்) நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், தற்போது புளிமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் தனது காரில் இண்டர்நெட் கபேக்கு சென்று வந்தார்.

    நேற்று தனது நிறுவனத்திற்கு சென்ற அவர் நள்ளிரவு வரை அங்கேயே இருந்து வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு காரில் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் முன்பு காரை நிறுத்தினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது.

    இதனால் காருக்குள் இருந்த கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் உடனடியாக இறங்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கண்ணன் தீயில் கருகியபடி அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் தீப்பிடித்தது எப்படி என்பது தெரியவில்லை. தீவிபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே காரில் வெடிபொருட்கள் ஏதும் இருந்ததா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக கார் தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.
    • காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் 4 பேருடன் நேற்று திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர்.

    ஆந்திர மாநிலம் பாலாஜி கோல்டன் சிட்டி அருகே சென்றபோது கார் என்ஜினில் இருந்து புகை வந்தது.

    இதனை கண்டு திடுக்கிட்ட சுந்தரராஜ் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சரி செய்ய முயன்றார்.

    காரில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுந்தரராஜ் அசம்பாவித சம்பவம் நடக்கப் போவதாக எண்ணினார். தனது குடும்பத்தினரை காரில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.

    அவரது குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி ஓடினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே திடீரென காரில் பெரிய அளவில் தீ பரவியது.

    அவர்கள் கண்முன்னே கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

    காரின் என்ஜின் பகுதியில் கம்பிகள் அறுந்து கிடந்ததால் மின் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    சுந்தர்ராஜ் தனது குடும்பத்தினரை முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து உடனடியாக வெளியேற கூறியதால் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

    இந்த சம்பவத்தால் நகரி சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
    • கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.

    அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.

    கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.

    உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.
    • கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி மூன்றோடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி நாயக்கர். விசைத்தறி தொழில் செய்து வருகி ன்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டு களை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு கார் வந்த கொண்டிருந்த போது கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு காரின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.

    அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிதுரம் நகர்ந்து நின்றார். உடனடி யாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி நாயக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியினார்.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் ஒலகடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பில்லூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (39). இவர் நேற்று மாலை காரில் ஈரோடு இடையன்காட்டு வலசுக்கு வந்துள்ளார்.

    அங்கு ஒரு விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் சங்கருடன் சந்தோஷ் குமாரும் நேற்றிரவு தங்கி இருந்தார். சங்கருக்கு இன்று வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதால் சந்தோஷ் குமார் காரில் வந்திருந்தார். காரை விடுதியின் வெளியே நிறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை காரை சந்தோஷ்குமார் இயக்க முயன்றார். ஆனால் கார் இயங்காததால் மெக்கானிக்குக்கு தகவல் சொல்லிவிட்டு நண்பருடன் சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.

    பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த போது காரில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இடையன்காட்டு வலசு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது வேலை நிமித்தமாக காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென அவரது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்ததும் சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு அவருக்கு தெரிவித்தனர். உடனே காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் திருமண மண்டபம் அருகே நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காரை டிரைவர் தினேஷ் பார்க்கிங் பகுதியில் ஓரமாக நிறுத்த முயன்றார்.
    • தீ விபத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்காக பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திருமுருகன் (45) தனது சொந்த காரில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். காரை டிரைவர் தினேஷ் ஓட்டி வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே கார் வந்ததும் திருமுருகன் காரை விட்டு கீழே இறங்கி ஆய்வு கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு சென்று விட்டார்.

    பின்னர் காரை டிரைவர் தினேஷ் பார்க்கிங் பகுதியில் ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது காரில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி என்ஜின் பகுதியை பார்த்தபோது திடீரென தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

    இந்த தீ விபத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் தினேஷ் தீயணைக்கும் கருவி எடுத்து தீயை அணைக்க முயன்றார். அதற்குள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த மற்ற பணியாளர்கள் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி, என்ஜின், பேட்டரி முழுவதுமாக சேதமடைந்தது.

    நல்ல வேளையாக டிரைவர் தினேஷ் சுதாரித்து கொண்டு காரை விட்டு வெளியே வந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதைப்போல் தீ விபத்து ஏற்பட்டதும் அருகிலிருந்த காரை மற்றவர்கள் வேகமாக எடுத்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×