search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் கணேஷ்"

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில், ஆரோக்கிய பாரத பயணம் எனும் தொடர் சைக்கிள் பயணம் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின் படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ண போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    முதல் கட்டமாக இந்த போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssai.gov.in/creativitychallenge என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகள் மூலம் snfatschool@fssai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். மின்னணு கலை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ-மாணவிகளின் திறன் மேம்படும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவ-மாணவிகள் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தங்களது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபுவை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் பேசியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கியாளர்களுக்கான நிதி பங்களிப்பு மற்றும் நிதிசார் கல்வி குறித்த பயிற்சி வகுப்பு  கலெக்டர் கணேஷ்  தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக் குழுவினருக்கு முதல் வங்கி இணைப்பு, நேரடி கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக் குழுவினருக்கு  வழங்கப்படும் கடன்களை எளிதாக வழங்குவது குறித்து வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 9 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கப் பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் முறைகள், செயல்படுத்தும் திட்டங்கள், பயனாளிகள் தேர்வு, கடன் தவணையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது. மேலும் இதே போன்று  நான்கு கட்டங்களாக பிற பயிற்சி வகுப்புகளும் வங்கியாளர்களுக்கு நடைபெறவுள்ளது. 

    எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள வங்கியாளர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னேற்றத்திற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

    இவ்வாறு  கலெக்டர் கூறினார்.
    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சத்துணவுத்திட்ட கண்காணிப்புக்குழுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்ள 1,642 சத்துணவு மையங்களில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு   தரமான சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட சத்துணவுத் திட்ட கண்காணிப்புக்  குழுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

    கூட்டத்தில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு சத்துணவை தொடர்ந்து சுகாதாரமான முறையில் சமைத்து  வழங்கவும், உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக தலைமையிடத்திற்கு அனுப்பிவைக்கவும், சத்துணவு  மையங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கவும், குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்கவும், மேலும் முட்டையின்தரம் குறித்த ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. 
    இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த கல்வியறிவு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பருவநிலை மாற்றமும், வேளாண்மையும் என்ற கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை விவசாயிகள் எதிர்கொள்வது குறித்தும் உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இடர்களை குறைக்க விவசாயிகள் பயிர் பரவலாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் மற்றும் வானிலை சார்ந்த ஆலோசனைகளை பெற்று தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் கிராமங்களில் தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் நீர்நிலை மேலாண்மையை சிறப்பாக கையாண்டால் பருவநிலை மாற்றத்தினை சிறப்பாக கையாள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து, தேர்வர்களுக்கு விலையில்லா பாடக்குறிப்பேடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

    எனவே இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பு மூலம் தேர்வர்கள் முறையாக பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லலாம். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெறவிண்ணப் பிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

    மேலும் செப்டம்பர் 1-ந் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை செப்டம்படர் 15-ந்தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
    முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கிராமங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டுப்போட்டிகள் நடத்த தமிழக முதல்வர் அறிவுறுத்தி  உள்ளார். 

    அதன் அடிப்படையில் முள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும்   2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.  இப்போட்டிகள் 11.7.2018 வரை 2 கட்டமாக நடத்தப்பட உள்ளது. 

    மாணவர்களின் எதிர் காலத்தில் வேலை வாய்ப்புகளின் விளையாட்டு பிரிவிற்கென சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. கல்வி கற்கும் காலங்களிலேயே மனநலம், உடல் நலத்தை மேம்படுத்தும் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.
    கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் கணேஷ் உறுதி அளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, 283 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து 2 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. அவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க 1,200 அடி வரை ஆழ்துளை போட வேண்டியது உள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ.6 லட்சம் செலவு ஆகும். ஆனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் முறையாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 லட்சம் செலவாகிறது. 

    அப்போதுதான் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் பயன்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணறு அமையும். கோட்டைப்பட்டின அனைத்து பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கியில் இருந்து வரும் பஸ்கள் கோட்டைப்பட்டினம் வரை வந்து செல்ல ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதி பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கணேஷ் எச்சரித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த பழங்கள் மற்றும் முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் போது பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதனை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம்.

    மேலும் பொதுமக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மற்றும் கடைகளில் விற்கப்படும் உலர்ந்த திராட்சை பழங்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை விற்பனை செய்யும் வணிகர்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி பொட்டலமிட்ட உணவுப்பொருட்களின் மீது உணவு குறிப்புசீட்டு ஒட்டப்பட வேண்டும்.

    தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம், பதிவு எண்ணை பொட்டலத்தின் மீது குறிக்க வேண்டும். மேலும் உணவு கலப்படம் மற்றும் தரங்கள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். எனவே கடைகளில் விற்பனை செய்யப்படும் பொட்டலங்களின் மீது தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடாத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை  31-ந் தேதி காலை 10.00 மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். 

    எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம். 

    இத் தகவலை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
    ×