search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் சாலை மறியல்"

    கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்றுமுன்தினம் மாயமானார்.

    பலஇடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டருகே நேற்று காலை சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. கை, கால்கள் டி-சர்ட்டால் கட்டப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    ஆனால், சிறுமியை கடத்திக் கொலை செய்தவர்களை கைது செய்து உரிய தண்டனை கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி கலைந்து சென்றனர். இந்நிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7.30 மணி அளவில் பன்னிமடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். எனினும், இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படாததால் சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு துடியலூர் பஸ் நிலைய சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    மேலும் கொலையாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உள்பட பலரிடம் விசாரித்தனர். பஸ் நிலையம் உள்ளிட்ட அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GirlHarassment
    நார்த்தாமலை அருகே ஓய்வுபெற்ற ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். மேலும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், காவேரிநகர் பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 60). இவர் ஆயுதப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலை என்னும் இடத்தில் சென்ற போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி பசுபதி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கீரனூர் போலீசார் மற்றும் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பசுபதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த கீரனூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார் பசுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நிலக்கோட்டை அருகே துக்க வீட்டுக்கு வந்தவர் மாரடைப்பால் இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள முத்துகாமன் பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஆனந்தகிருஷ்ணன் (வயது 22). இவர் சம்பவத்தன்று துரைசாமிபுரம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது கார் மோதி தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த பஸ் அவர் தலையில் ஏறி நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு டாஸ்மாக் கடையை அகற்றுமாறு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனந்தகிருஷ்ணன் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மல்லையாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமசாமி (29) வந்தார். அவர் ஆனந்தகிருஷ்ணன் உடலை பார்த்து கதறி அழுது கொண்டு இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் மேலும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் அவரது மகள் மஞ்சுளாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல் அம்பாதுறையில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று மதுரைக்கு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்ததில் அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ஜெயபாண்டியனுடன் மஞ்சுளா தேவி மாயமாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மஞ்சுளாதேவியின் தாயார் கோமதி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல்லில் பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக செயலாளர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்த தம்பிராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (வயது26) இவர் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் சிறுமலை தென்மலை 8-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வான்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பொன்னகரத்தில் வசித்து வந்தார்.

    கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலசுப்பிரமணி வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் தனது கணவரின் செல்போனில் இருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்திருந்தது. தான் வெளியூர் செல்வதாகவும் 2 நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சந்தேகம் அடைந்த வான்மதி இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையில் பணம் பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பரே கொன்று தனது ஆலையில் புதைத்திருந்தது தெரிய வந்தது.

    பாலசுப்பிரமணியன் பணிபுரிந்த அதே அலுவலகத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்தி (26) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ஆடிட்டிங் வேலையை ஒருவருக்கு செய்து முடித்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை கார்த்திக் வாங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து ரூ.25 ஆயிரம் பங்கு தொகையை தருவதாக கூறி உள்ளார். ஆனால் அதனை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். கார்த்திக்கு சொந்தமான நூற்பாலை பொன்னகரத்தில் உள்ளது.

    சம்பவத்தன்று தனது பங்கு தொகையை பாலசுப்பிரமணியன் கேட்க சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர் என்றும் பாராமல் பாலசுப்பிரமணியன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின்னர் தனது ஆலையின் ஓரத்திலேயே குழி தோண்டி புதைத்து விட்டார். இந்த விவரம் தெரிய வரவே தாலுகா போலீசார் கார்த்தியை பிடித்து கிடுக்கி பிடி விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட பாலசுப்பிர மணியனின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்தனர். ஆர்.டி.ஓ. ஜீவா, தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் இன்று உடல் தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் காலை 9 மணி வரை அதிகாரிகள் மற்றும் போலீசார் யாரும் வராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொலை செய்து உடலை தனது ஆலையிலேயே புதைத்திருப்பதால் இச்சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK
    காசிமேட்டில் காணாமல் போன சிறுமியின் உடலை கடற்கரையில் மீட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ராயபுரம்:

    காசிமேடு சிங்காரவேலர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீனவர். இவரது மனைவி மாலினி. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ஜெசிகா (10) அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று இரவு பிரகாஷ் தனது குடும்பத்துடன் அங்குள்ள சமயபுரத்து அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறால் ஏலமிடும் பகுதியில் உள்ள கடற்கரையில் கங்கை திரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சிறுமி ஜெசிகா தனது தாயிடம் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாள்.

    அதன்பின் இரவு 8 மணி அளவில் பிரகாஷ் வீட்டுக்கு வந்தபோது அங்கு சிறுமி ஜெசிகா இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து காசிமேடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் சம்பவம் நடந்த பகுதி தங்களது எல்லைக்குட்பட்டது அல்ல என்று கூறினர்.

    இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் செய்தனர். அவர்களும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்கவில்லை.

    இதனால் அலைக்கழிக்கப்பட்ட உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் உறவினர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காசிமேடு கடற்கரை மணல் பரப்பில் ஜெசிகா மயங்கிய நிலையில் கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவளை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சிறுமி மாயமானதும் புகாரை உடனே வாங்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து இரவு 11 மணிக்கு காசிமேடு சூரியநாராயணன் தோட்டம் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி சாவில் மர்மம் இருக்கிறது.

    போலீசார் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    வீட்டுக்கு சென்ற சிறுமி கடற்கரையில் எப்படி பிணமாக கிடந்தாள் என்பதில் மர்மம் நீடிக்கிறது. வீட்டுக்கு சென்ற அவளை யாராவது கடத்தி சென்று கொலை செய்து வீசினார்களா என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கோவில் திருவிழாவில் இருந்து வீட்டுக்கு சென்ற ஜெசிகா கடற்கரையில் பிணமாக கிடந்தாள். அவள் மீது மணல்கள் கிடந்தன முகத்தில் கீறல்கள் இருந்தன.

    வீட்டில் இருந்த அவள் எப்படி கடற்கரையில் பிணமாக கிடந்தாள் என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவளை யாராவது கடத்தி சென்று கொலை செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

    முதலில் நாங்கள் தேடிய போது கடற்கரையில் அவள் பிணமாக கிடக்கவில்லை. போலீசில் புகார் அளித்த பின்னர் தேடிய போதுதான் அங்கு பிணமாக கிடந்தாள்.

    கடலில் விழுந்து அவள் இறந்திருக்க வாய்ப்பில்லை. அவளது உடல் தண்ணீரால் நனையாமல் இருந்தது.

    போலீசார் உடனே புகார் வாங்கி இருந்தால் அவளை மீட்டு இருக்கலாம் ஆனால் போலீசார் எங்களை அலை கழித்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசார் கூறும் போது சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    அதன் அறிக்கை வந்த பிறகு தான், பாலியல் கொடுமை செய்யப்பட்டு இறந்தாளா? அல்லது வேறு காரணமா என்பது தெரிய வரும் என்றார்.

    இச்சம்பவம் காசிமேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாகனம் ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேலு (வயது 44). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு கடலூர் திருவந்திபுரத்தில் நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    வில்லியனூர் அருகே உளவாய்க்கால் என்ற இடத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சக்திவேலு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து சக்திவேலு மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விபத்தில் சக்திவேலு இறந்து போனதை அறிந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு உளவாய்க்கால் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் சக்திவேலு மீது மோதிய வாகன டிரைவரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வில்லியனூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வாகன டிரைவரை கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை வரை சக்திவேலு மீது மோதிய வாகனத்தையும், வாகன டிரைவரையும் கைது செய்யாததால் ஆத்திரம் அடைந்த சக்திவேலுவின் உறவினர்கள் மற்றும் செல்லிப்பட்டு கிராம மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பத்துக்கண்ணு சந்திப்புக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் அங்குள்ள 5 சாலை சந்திப்பிலும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சக்திவேலுவை யாரோ திட்டமிட்டு வாகனத்தை மோதி கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டத்தால் 5 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சக்திவேலு மீது மோதிய வாகனத்தை தேடி வருவதாகவும், விரைவில் வாகன டிரைவரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    மேலும் சாலை மறியல் போராட்டத்தால் மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை போலீசார் எடுத்து கூறினர். சுமார் 30 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    உடையார்பாளையம் அருகே பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பாளையம்பாடி அரண்மனைகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் செந்தமிழ்செல்வி (25) மணகெதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும், பள்ளி விடுதியில் காப்பாளராகவும் பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியிடம், அவரது தந்தை செல்போனில் பேசி உள்ளார். அப்போது உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாக செந்தமிழ்செல்வியிடம் கூறினார். அதற்கு தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், தம்பி, தங்கைகள் படிப்பு முடிந்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த செந்தமிழ்செல்வி பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில் செந்தமிழ்செல்வி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு செந்தமிழ்செல்வி சாவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×