search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரிநீர் திறப்பு"

    • குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.

    3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும்.

    கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 22 அடியை எட்டியது. ஏரியில் 3132மி.கன அடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கி றது. இன்று காலை நிலவரப் படி ஏரிக்கு 393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும் அவ்வப்போது பலத்த மழை பெய்வதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதலில் இன்று காலை உபரி நீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை திறக்கப்படும் உபரி நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. எனினும் பலத்த மழை பெய்தால் உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பருவமழை தொடங்கு வதற்கு முன்பே செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் முழுவதும் எந்த பயனும் இன்றி வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பைதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • கனமழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
    • ஏரியின் பாதுகாப்பைக் கருதி உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர்.

    பெரியபாளையம்:

    மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். நேற்று 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதற்கிடையே, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இதில், 42 பேர் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

    இந்நிலையில், கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து 18 பேர் மட்டும் நேற்று வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்புப் படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின், அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    கொசஸ்தலை ஆற்றை கடக்க முடியாமல் 18 பேர் அவதிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
    • ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்வோ செல்ல வேண்டாம்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தும்பல அள்ளி அணை முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை கலெக்டர் சாந்தி திறந்து விட்டார். பின்னர் கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் பாசன வசதி செய்யும் பொருட்டு பெண்ணையாற்றின் கிளை நதியான பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நரியன அள்ளி கிராமத்தில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தும்பலஅள்ளியில் நீர்த்தேக்க அணையானது அமைந்துள்ளது.

    இது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து பெறுகிறது. இந்நிலையில் தற்பொழுது நல்ல மழை பெய்துவருவதால் சின்னாறு அணை தற்பொழுது முழு கொள்ளளவை எட்டி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி தும்பல அள்ளி நீர்த்தேக்க அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

    சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து கிடைக்கப்பெற்று இந்த நீர்த்தேக்க அணையின் 14.76 அடி உயரத்தில் நேற்று மாலை சுமார் 12.14 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் இந்நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

    இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பூலாப்பாடி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்வோ செல்ல வேண்டாம் .

    பூலாப்பாடி ஆற்றின் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு வந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் குமார், வட்டாட்சியர் சுகுமார், உதவி பொறியாளர்கள் மாலதி, வெங்கடேசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×