search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur Constituency"

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன் கொரடாச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலை கண்டு தி.மு.க. அஞ்சியது கிடையாது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் சென்றடைய வேண்டும். அதற்கு இந்த தேர்தல் தடையாக இருந்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையில்தான், தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கைகளை வைத்தோம். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை கண்டு அஞ்சியது. அதனால்தான் வேட்பாளரை அறிவிக்க தயங்கியது. மக்களின் மனநிலையை தெரிந்துகொண்ட அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தேசிய கட்சிகளுக்கு அச்சம் உள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க.வும், ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வும் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன. மக்களுக்கான பணிகளுக்காக தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் வரவேற்கலாம். ஆனால் மக்களின் சிந்தனைக்கு எதிராக இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.#TiruvarurByElection
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran #Tiruvarurbyelection
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின்பு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஈபிஎஸ் - ஓபிஎஸ் உடன் அமமுக இணைப்பு என்ற எண்ணமே எனக்கு இல்லை. என்னுடைய தற்போதைய எண்ணம் எல்லாம் திருவாரூர் தேர்தல் பற்றி மட்டுமே.



    திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    திருவாரூர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #Tiruvarurbyelection
    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமி‌ஷன் கடந்த 31-ந்தேதி அறிவித்தது. இதனால் அன்று முதலே திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆர்.டி.ஓ முருகதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் திருமால் மற்றும் திருவாரூர் தாசில்தார் குணசீலி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வேட்பு மனுதாக்கல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று (3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பும், பேரிகார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்த விதிகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் துணை தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால், அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர்.

    பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் இறங்கியுள்ளன. நேர்காணல் நடத்தி இந்த இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும்.

    தினகரன் கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தினகரன் கட்சி வேட்பாளர் யார்? என அறிவிக்கப்பட்டு விடுவார்.

    அதன் பிறகே திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. -அ.ம.மு.க. கட்சிகளின் மும்முனை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் குறித்து முன்னதாகவே உரிய முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகம் முன்பு 200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர் உள்பட 6 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் முதல் நாளில், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு வாபஸ் பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அதன் பின்னரே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். தொகுதி முழுவதும் தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இதன் பிறகு வாக்குப்பதிவு வருகிற ஜனவரி 28-ந்தேதி நடைபெறுகிறது. 31-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே அதாவது குறுகிய காலமே உள்ளதால் திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    திருவாரூர் தொகுதியில் அமைச்சர்கள் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறினார். #Tiruvarurconstituency
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தைகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.

    தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.

    19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Tiruvarurconstituency
    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.#ThiruvarurByElection
    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம். #ThiruvarurByElections
    திருவாரூர்:

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி காலமானார். இதனை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 3 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. #ThiruvarurByElections

    ×