search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan Tamils problem"

    தமிழர்களை காப்பாற்றுவதற்கு மோடியை விட்டால் வேறு கதியே கிடையாது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishan #PMModi #congress
    சென்னை:

    சதுரங்க விளையாட்டில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவர் பிரக்ஞானந்தா மற்றும் மாணவி வைஷாலிக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

    இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.27 லட்சமும், சிறுமி வைஷாலிக்கு ரூ.9 லட்சமும் காசோலையாக வழங்கினார். அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    50 ஆண்டுகாலம் தமிழகம் பின்னோக்கி சென்றதற்கு கழகங்களின் தவறான அணுகுமுறை, ஆட்சி முறை தான் காரணம். தமிழகம் வளரவேண்டிய உச்சத்தை எட்ட முடியாமல் நிற்கிறது.

    50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து முடித்து இருக்கிறார்கள். தி.மு.க. மீது எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது? எதனால் வந்தது?. அ.தி.மு.க. மீது என்ன ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது? என்ன காரணத்துக்காக வந்தது? என கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அது நடக்கட்டும். ஊழல் செய்ததில் யார் பெரியவர்கள் என்று பார்க்கிறார்கள்?

    அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

    ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய அரசாங்கம் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு பா.ஜ.க.வை விரும்புகிறார்கள். மோடி உலகம் போற்றக்கூடிய வகையில் ஆட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் ஊழலற்ற, வளர்ச்சி தரக்கூடிய ஒரே கட்சி என்றால், அது பா.ஜ.க. தான்.

    பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று சொல்பவர்களின் கால் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேர்தல் வரப்போகிறது. கழகங்களிடம் ஒன்றுமே இல்லை. ஏதாவது சொல்லி ஆகவேண்டும் என்று குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுக்க முடியாது.

    காங்கிரஸ் காட்டிக்கொடுத்த காரணத்தால் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அன்று குற்றச்சாட்டு வைத்தவர்கள் இன்று பேசாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?. ராஜபக்சேவை காங்கிரஸ்-தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்து வந்ததற்கான காரணத்தை தெளிவு படுத்தவில்லை. இதைவிட அநியாயம் கிடையாது.

    தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு மோடியை விட்டால் வேறு கதியே கிடையாது. இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் காப்பாற்றப்பட மோடி உதவி செய்து வருகிறார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இலங்கையில் ஒரு தமிழன் இருக்கமாட்டான். இலங்கை தமிழன் மட்டுமல்லாது நம்முடைய தமிழர்களும் அழிக்கப்படுவார்கள்.

    ஈழத்தமிழர் படுகொலையில் பிரதான குற்றவாளி காங்கிரஸ். இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்துக்கு தமிழர்கள் எப்படி ஆதரவு கொடுக்க முடியும். ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரின் விடுதலையில் மத்திய அரசின் அழுத்தம் எதுவும் இல்லை. கவர்னர் முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BJP #PonRadhakrishan #PMModi #congress
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    சென்னை:

    சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

    நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.


    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

    தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்துவது தி.மு.க. தமிழகத்தை சூறையாடிய இந்த கட்சியை மக்களும் புறக்கணித்து எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிளுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் கருணாநிதி விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார். இறுதிக்கட்ட போரில் உண்ணாவிரத நாடகம் நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்கள், குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த கட்சி தி.மு.க.

    இப்போது உத்தமர் வேடம் போடுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதியாக இருக்கிறார். அவர் அ.தி.மு.க. அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். புலியாக இருந்த கருணாநிதியாலேயே முடியவில்லை. பூனையாக இருக்கும் ஸ்டாலினால் அ.திமு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் செய்து ஆசியாவில் முதல் பணக்காரர் இடத்தை பிடித்தது யார்? என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. யார் ஊழல்வாதி என்று நிரூபிக்க ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தினகரன் எங்களுக்கு எதிரி கிடையாது. இதனை வருகிற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் அப்பாவி குழந்தைகள் கூட இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    அப்பாவி தமிழர்கள் கொலைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு முழு உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    எனவே தான் போர் குற்றவாளிகளாக நிறுத்தி இந்த கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் கூறும் குற்றங்களுக்கு எந்த முகாந்தரமும் இருக்கிறதா? என்றால் இல்லை.

    தமிழக மக்களை ஏமாற்றி பலகோடி சொத்துக்களை குவித்தது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே உத்தமர் வேடம் போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பே கிடையாது.

    இதற்கு ஒரு வாய்ப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. பேசியதாவது:-

    ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

    தி.மு.க. வீழ்கிற கட்சி. இனி அது ஒருபோதும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. கட்சி தொண்டர்கள் எல்லாம் முதல்வராகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது போல நம்மை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒருவர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். இதனால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் நிலைமை எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அது போல தான் புதிதாக கட்சி தொடங்கியவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், கோபால கிருஷ்ணன் எம்.பி., திரவியம், எம்.எஸ்.பாண்டியன், சாலைமுத்து, வெற்றிவேல், பரவை ராஜா, சோலைராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், நிர்வாகிகள் மாரிச்சாமி, கருப்புசாமி, கே.வி.கே. கண்ணன், பிரிட்டோ முத்துவேல், ஏ.பி.பாலசுப்பிரமணி, முத்துக்குமார், முனியாண்டி, முத்து ராமலிங்கம், கலைச் செல்வம், அபுதாகீர், ஐ.பி. எஸ்.பாலமுருகன், திருநகர் குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×