search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "samayapuram temple"

    பெரம்பலூர் அருகே இன்று காலை சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாடாலூர்:

    சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பூச்சொரிதல் விழா. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் 25 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை பாடாலூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    இதில் 20 பேர் ஒரு குழுவாகவும், மற்ற 5 பேர் சற்று பின்னால் மற்றொரு குழுவாகவும் சென்றனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இறுதியில் அந்த கார் பாதயாத்திரை சென்ற 5 பேர் குழுவின் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் கலியன் (வயது 60), பரமேஸ்வரி (35), காவேரி (55) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் சென்ற மருதாம்பாள் (60), சோலையம்மாள் (70) ஆகிய இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு வேன் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பேர் வந்துள்ளனர். தூக்க கலக்கத்தில் இருந்த அவர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மோதியுள்ளனர். விபத்து நடந்ததும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலாவது பூச்சொரிதல் விழா இன்று தொடங்கும் நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சமயபுரம் கோவில் பாகனை கொன்ற யானை மசினி முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர். #Masini
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் இருந்த 12 வயது பெண் யானை மசினி திருச்சி சமயபுரம் கோவிலுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.

    வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிந்த மசினி சமயபுரம் கோவிலில் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டதால் அதீத சத்தம் மற்றும் கூட்டத்தை பார்த்து அடிக்கடி மிரண்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை பராமரித்து வந்த பாகன் ராஜேந்திரனை மிதித்து கொன்றது.

    இதனால் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் யானையை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. மேலும் யானைக்கு நோய் தொற்று இருந்தது.

    இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் முழுமையாக குணம் அடையவில்லை. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து லாரியில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. அங்கு யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து முதுமலை கொண்டு வரப்பட்டது. முதுமலை வனச்சரகர் தயானந்த் மற்றும் வனத்துறையினர் மசினிக்கு பழங்களை கொடுத்து வரவேற்றனர்.

    மசினியை முன்பு முதுமலையில் பராமரித்து வந்த பாகன் பொம்மன் யானை மீண்டும் இங்கு வந்ததால் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.

    நீண்ட நாட்கள் ஆனாலும் தன்னை மசினி அடையாளம் கண்டு கொண்டதாக வியப்புடன் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, 2006-ம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்தில் 3 மாத குட்டியாக மசினி கண்டெடுக்கப்பட்டு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

    9 ஆண்டுகள் யானைகள் முகாமில் எனது பராமரிப்பில் மசினி வளர்ந்தது. மிகவும் அமைதியாக, சொன்ன பேச்சை தட்டாமல் வளர்ந்தது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 2015-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பி உள்ளது. இனி இங்கேயே நிரந்தரமாக மசினி தங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    முதுமலையில் மாலையில் குளிர் வாட்டுவதால் மசினி யானை ஒரு கொட்டகையில் வைத்து பாராமரிக்கப்படும் என வனசரகர் தயானந்த் கூறினார்.  #Masini
    குடும்ப தகராறு காரணமாக காவிரியில் குதித்து தற்கொலை செய்வதாக கூறிவிட்டு மகனுடன் மாயமான பெண் சமயபுரம் கோவிலில் தங்கியது அம்பலமானது.
    ஆத்தூர்:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மனைவி சுதா. இவர்களது மகள் ரம்யா (வயது 22).

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கனக சபாபதிக்கும் (35) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாஸ்விக் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.

    கனக சபாபதிக்கும், ரம்யாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரம்யா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிக்கொண்டு வீட்டை விட்டு தனது குழந்தையுடன் வெளியேறினார்.

    பின்னர் அவர் மொபட்டில் தனது குழந்தையுடன் புறப்பட்டு சென்றார். அப்போது தனது தாய் சுதாவிடம், தான் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக செல்போனில் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளையும், குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் பெற்றோர், கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் கொடுமுடி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தேடினர்.

    அப்போது ரம்யாவும், அவரது குழந்தையும் சமயபுரம் கோவிலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று ரம்யா, குழந்தை யாஸ்விக் ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.

    இந்த நிலையில், இருவரும் மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    சம்பவத்தன்று கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறிய ரம்யா, மொபட்டை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்வதற்காக நேராக நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்றார். அப்போது செல்போனில் பெற்றோரிடம், தினமும் வீட்டில் சண்டை ஏற்படுகிறது. நிம்மதி இல்லை. எனக்கு கணவருடன் வாழ பயமாக இருக்கிறது. இதனால் எனது வாழ்க்கையை ஒரே அடியாக முடித்துக் கொள்ளப்போகிறேன் என்றார். பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறினர். தற்கொலை செய்து கொள்ளாதே, நாங்கள் உனக்கு துணையாக இருக்கிறோம் என்றனர்.

    இருப்பினும் ரம்யா ஆற்றில் குதிக்க சென்றபோது, குழந்தையின் முகத்தை பார்த்து மனம் மாறினார். பின்னர், தனது செல்போன், மொபட் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு, அந்த வழியாக சென்ற திருச்சி செல்லும் பஸ்சில் ஏறினார்.

    அப்போது, ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று, சாமியை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று கருதிய ரம்யா சமயபுரம் டோல்கேட்டில் இறங்கினார். அங்கு டவுன் பஸ்சில் ஏறி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று குழந்தையுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் முகப்பில் உள்ள மண்டபத்தின் முன்பு உட்கார்ந்து குழந்தையுடன் அவர் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ஆத்தூரை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, மண்டபத்தின் முன்பு ரம்யா அழுது கொண்டிருப்பதை பார்த்தார். அந்த பெண் புகைப்படம் வாட்ஸ்- அப்பில் வெளிவந்ததை தொடர்ந்து மாயமான பெண் போல் இருக்கிறதே? என சந்தேகத்தில், நீங்கள் யார்? எதற்காக அழுது கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்.

    அதற்கு ரம்யா, எனது ஊர் கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் என்றும், தான் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். எங்கு செல்வது என தெரியாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த நபர், சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் அங்கு வந்து ரம்யாவையும், குழந்தை யாஸ்விக்கையும் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரது உறவினர்களுக்கும், கொடுமுடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ரம்யாவின் உறவுக்கார பெண் ஒருவர் சமயபுரம் அருகே வசித்து வருகிறார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீசார் ரம்யாவுக்கு அறிவுரை கூறி, உறவினருடன் அனுப்பி வைத்தனர். மகளும், பேரனும் கிடைத்த தகவல் அறிந்ததும் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    பாகனை மிதித்து கொன்ற சமயபுரம் கோவில் யானை மசினிக்கு காலில் ஏற்பட்ட நீர்க்கட்டியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மே மாதம் 24-ந்தேதி கோவில் பிரகாரத்தில் நின்றிருந்த யானை மசினி, பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்றது. இதையடுத்து யானையை கொட்டகைக்கு கொண்டு சென்று பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் யானையின் இடது காலில் வந்துள்ள நீர்க்கட்டியால் அவதியுற்று வந்தது. இதற்கு கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதையடுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை சிறப்பு மருத்துவர் கலைவாணன் யானை மசினியை பரிசோதனை செய்ய உள்ளார்.

    அதன்பிறகு அவரது அறிவுறுத்தலின்படி ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக யானையை பராமரிக்கும் சுகுமார் தெரிவித்துள்ளார்.
    ×