search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagarcoil"

    புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

    அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

    ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினர். #RahulGandhi #Stalin #TamilnaduCM
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் முதல்கட்டமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்னும் நம்பிக்கையை உங்களுக்கு தெரிவித்து எனது பேச்சை தொடங்குகிறேன்.

    தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்துவிட்டாலும் நம்முடன் இருக்கிறார். அவர் மறைந்து விடவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளில், தமிழக வரலாற்றில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இங்கு நடைபெறும் அரசை டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் அலுவலகம் கைப்பாவையாக ஆட்டிவைத்து இயக்கிக் கொண்டிருக்கிறது.

    பொய் சொல்வதில் வல்லவரான பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அளித்த வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் உள்பட எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. தனக்கு வேண்டப்பட்ட பெரு முதலாளிகள் வாழ்க்கை வளம் பெறுவதற்காக அவர் தனது பதவியை பயன்படுத்துகிறார்.

    ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நான் இந்த நாட்டின் காவல்காரன் என்று முழங்கிய மோடி, இந்த நாட்டு மக்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை பறித்து தனது நண்பர் அனில் அம்பானி கையில் கொடுத்து விட்டார்.

    ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி இணைக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் முன்னாள் பிரதமரிடம் மோடி நேரிடையாகவே பேரம் பேசி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வைத்தார்.

    திருவள்ளுவர் கூறியதுபோல் உண்மை வெல்லும். அப்படி, உண்மை வெல்லும்போது ரபேல் விவகாரத்தில் செய்த ஊழலுக்காக மோடி சிறையில் அடைக்கப்படுவார்.

    நாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்? என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்கள் இன்று வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல தொழில்கள் நொடிந்துபோய் கிடக்கின்றன. அடுத்த அடியாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். இதனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பணவீக்கமும் அதிகரித்துள்ளது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரி என்ற புதிய ஒற்றை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்.

    தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கான அத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன. இன்று பல கோடி மக்களிடம் உள்ள கைபேசிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என பொறிக்கப்பட்டுள்ளதுபோல், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்னும் நிலையை உருவாக்க தொழில் துறையை மேம்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.

    தொழில் முனைவோருக்கு அதிகமான அளவில் வங்கிக்கடன்களை அளித்து வர்த்தகத்துறையில் சீனாவை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவை வளர்ச்சி அடைய வைப்போம். நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச நிச்சயிக்கப்பட்ட வருமானத்தை உறுதிப்படுத்துவோம். இந்த திட்டம் உள்பட நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களின் பலனும் பயனாளிகளான மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.



    தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய புயல்களால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் ஏக்கர் விளைபொருட்கள் நாசமடைந்தன. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் அளிக்காமல் இருக்கிறது.

    மேலும், மீன்பிடி தொழிலை நம்பி வாழும் தமிழக மீனவ மக்களுக்கும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தழுவிய அளவில் மீனவர்களின் நலன்களை பாதுகாக்கவும், தேவையான உதவிகளை அளிக்கவும் மீனவர் நலனுக்கு என தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும்.

    இங்குள்ள தாய்மார்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வாக்குறுதியை நான் இப்போது அளிக்க விரும்புகிறேன். பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். மத்திய அரசு துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவோம்.

    கடைசியாக நான் ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் மோடியை மீண்டும் பிரதமராக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மோடி கையில் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்.

    மோடி தமிழ்நாட்டின் மீது மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மொழி மற்றும் பண்பாட்டின் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்படுகின்றன. இதற்கு இனிமேல் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்னும் உறுதிமொழியை அளித்து, இந்த கூட்டத்தில் உங்களை சந்தித்துப் பேசும் அரிய வாய்ப்பை அளித்ததற்கு நன்றிகூறி விடை பெறுகிறேன். #RahulGandhi #Stalin #TamilnaduCM 
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #ParliamentElection #DMK #Stalin
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சொன்னேன்.

    நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு  பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் 'அடிக்கல்' பிரதமர் தான்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு காலமாக இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் மோடிக்கு இப்போது தான் வந்திருக்கிறது. பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா?

    தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை டெல்லியில் உள்ள பிஜேபி ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது.

    இந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #DMK #Stalin
    ×