search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money distribution"

    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத் தவறும் இல்லாமல் தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான், நான் கண்ட உண்மை.  பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான். சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சனைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்.

    தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, தேர்தல் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது.


    பணப்பட்டுவாடாவை தவிர்க்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். #Loksabhaelections2019 #Congress #KSAlagiri
    அவனியாபுரம்:

    மதுரையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும். இந்த திட்டத்தினை கண்டு பா.ஜனதா அச்சம் அடைந்துள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே தான் மாநிலங்கள் விரும்பினால் நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது.

    நீட் தேர்வு குறித்து பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் எந்த தகவலும் இல்லை. ஜி.எஸ்.டி. வரியை முறைப்படுத்துவோம். தமிழகத்தில் பா.ஜனதா அமைத்துள்ள கூட்டணி அவசர கூட்டணி ஆகும்.



    பிரதமர் தன்னை காவலாளி என்று கூறி வருகிறார். அவர் குற்றவாளிகளை பாதுகாக்கும் காவலாளியாக உள்ளார். எங்களுடைய கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #Congress #KSAlagiri
    ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷன் தடுக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து உங்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது நீங்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன. அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.

    5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டுகால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது பொதுமக்களாகிய உங்களுக்குத் தெரியும்.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் நம்பிக்கையை உங்கள் எதிர்காலத்தை நாட்டின் வளர்ச்சியை மாநிலத்தின் உரிமையை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.

    நாட்டை இருட்டில் தள்ளி பின்னோக்கி இழுத்த பாசிசஅடிமை ஆட்சியை ஒரு சேர விரட்டிட ஏப்ரல் 18ல் தீர்ப்பெழுதுங்கள்! மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட மத்திய, மாநில ஆளுங்கட்சிகளும் அவற்றுடன் கூட்டணியில் உள்ளோரும் தோல்வி பயத்தில் வசவுகளைஅவதூறுகளை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை நோக்கி வீசிப்பார்த்தார்கள். மக்களே கேடயமாக இருந்து அந்த அவதூறு அம்புகளை முனை முறித்துப் போட்டு விட்டார்கள்.




    இப்போது கடைசி அஸ்திரமாக பணம் எனும் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். கட்சிகளையே பணத்தால் விலை பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்தவர்கள், வாக்காளர்களாகிய பொதுமக்களையும் விலை பேசிட முடியும் எனக் கருதி 200ரூபாயில் தொடங்கி, 20ஆயிரம் ரூபாய் வரை ஓட்டுக்கு விலை வைத்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம், காவல்துறை, பறக்கும் படை என்றெல்லாம் சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதும், விவசாயிகள் வணிகர்கள் ஏழை நடுத்தர மக்களை மடக்கி சோதனை என்ற பெயரில் பாடாய்படுத்துகிறார்களே தவிர, ஆட்சியில் உள்ளவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் பண விநியோகத்தைத் தடுக்கவில்லை, அதற்குத் துணை போகிறார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்துதான் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது.

    இப்போது இன்னும் பல மடங்கு செலவு செய்வார்கள். ஏனென்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கள் தலைவர் மகனின் நிறுவனத்துக்கும், தங்களுக்கு சகலமுமாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க மத்திய ஆட்சியாளர்களும், மாநில ஆட்சியாளர்களும் ஊழல் பணத்தை வைத்து மக்களெனப்படும் மகேசர்களையே விலைக்கு வாங்கிடக் களமிறங்கியிருக்கிறார்கள்.

    வாக்குகளை விலை பேசுவதும், வாக்குச்சாவடியைக் கைப்பற்றத் திட்டமிடுவதும், மத உணர்வுகளைக் கிளறி விட்டு வன்முறைக்கு வழி வகுப்பதும் தோல்வி பயத்தில் தோய்ந்துள்ள அவர்களின் இறுதிக்கட்ட உபாயங்களாக இருக்கின்றன. நாம் உறுதியுடன் இருந்தால், கலைஞர் கற்றுத்தந்துள்ள அணுகுமுறையுடன் ஜனநாயகத் தேர்தல் களத்தை சந்தித்தால், நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. ஏப்ரல் 18ல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் மே 19ல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் முழு வெற்றி நமக்கே.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #LoksabhaElections2019 #DMK #MKStalin
    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 81-ம் வார்டு செயலாளர் கோபிநாத் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கீழ அண்ணா தோப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டு இருந்தார். கோபிநாத் அவரை கையும், களவுமாக பிடித்து திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அவர் கீழ அண்ணாத்தோப்பைச் சேர்ந்த எம்.என்.பத்மநாபன் என்பதும், அ.தி.மு.க. பிரமுகராக இருப்பதும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திலகர்திடல் போலீசார் பத்மநாபனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 21 பேர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று பணம் வழங்குவதாக புகார் வந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் பேட்ரிக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் பிடிபட்டனர். அதிகாரிகளின் விசாரணையில், அவர்கள் தல்லா குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், அர்ஜூன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019

    தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் வீரம் நிறைந்த, தன்மானம் உள்ள விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.



    பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

    தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.

    ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri

    ×