என் மலர்
நீங்கள் தேடியது "knife threat"
பேரையூர்:
திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அடிக்கடி நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பட்டப்பகலிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர்.
மதுரை பைக்காரா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (வயது 32). இவர் நேற்று திருமங்கலம் மறவங்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மானாமதுரை ஏ.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு என்ற குட்டை கமல் (27) என்பவர் வழிமறித்தார். அவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பிரபுவை கைது செய்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம்:
முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொடரேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவியர் மேரி (வயது 44). இவர் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அவர், சேவியர் மேரியை வழிமறித்து தான் பெரிய ரவுடி என்று கூறியதோடு, கத்தியை காட்டி மிரட்டினார்.
மேலும் சேவியர் மேரி அணிந்திருந்த 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சேவியர் மேரி, திருடன்....திருடன் என கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் நகை பறித்த வாலிபர் மாயமாக மறைந்து விட்டார்.
இதுகுறித்து தேரிருவேலி போலீசில் சேவியர் மேரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் விகாஸ் (வயது 36). அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இவர், தினமும் இரவு டிரிபில்ஸ் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வார்.
வழக்கம் போல் நேற்றிரவும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு 9 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். உடற்பயிற்சி கூடம் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் முகத்தை கைக்குட்டை கட்டி மறைத்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென விகாசின் பைக்கை வழி மறித்தனர்.
விகாசிடம் கத்தியை காட்டி மிரட்டிய கழுத்தில் இருந்த 13½ பவுன் டாலர் செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினர். விகாசும் பயத்தில் தங்க செயினை கழற்றி கொடுத்தார்.
செயினை பறித்த பிறகு 2 மர்ம நபர்களும், அவர்கள் வந்த பைக்கில் ஏற்றி மின்னல் வேகத்தை ஓட்டி தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் நகைக்கடை அதிபர் விகாஸ் நேற்றிரவே புகார் அளித்தார்.
போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில், செயின் பறிப்பு கொள்ளை காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், மர்ம நபர்கள் முகத்தில் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
ஆனாலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை:
மதுரை பொன்மேனி சுரேந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 36). இவர் கென்னட் ரோடு கார் பார்க்கிங் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் ஜானகி ராமனை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் ஜானகிராமனிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜானகி ராமன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட மகபூப் பாளையம் சீத்தாலட்சுமி நகரைச் சேர்ந்த பாப்ளி (25), வண்டியூர் செம்மன் ரோட்டைச் சேர்ந்த பாண்டி மகன் அஜீத் (19) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளியின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு வாலிபர் அவரை வழிமறித்தார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி அய்யப்பனிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அல்லிநகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 29) என தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஈஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






