என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family relationships"

    • திருமண உறவில் பெண்களே தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்து வாழ்கின்றனர்?
    • விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.

    கணவன், மனைவியோ அல்லது காதலர்களோ தங்களுக்குள் பிரிவு வந்தால் இருவருக்கும் இருக்கும் வேற்றுமைகள்தான் காரணம் என நினைப்பர். ஆனால் ஒரு உறவின் பிரிதலுக்கு அங்கு புரிதல்தன்மை இல்லாததே காரணம் என அறிந்திருக்கமாட்டார்கள். அறிந்தால் அந்த உறவின், பிரிவின் வலியிலிருந்து வெளியேவந்துவிடுவார்கள். இருவரின் விருப்பங்களில் வேற்றுமை இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். யாரும், யாருக்காகவும் மாறக்கூடாது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் அன்பால், காதலால் மட்டுமே நிகழவேண்டும். கட்டாயத்தால் அல்ல. இருவரில் ஒருவரின் செயலோ, விருப்பங்களோ, நடைமுறையோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்து மாற்றொருவர் தானாக மாறுவதே காதல். ஆனால் நீங்கள் மாறாமலேயே அப்படியே ஏற்றுக்கொள்பவர்தான் உண்மையான காதலர். ஒருவரின் கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்வது அல்ல. பலதரப்பு மக்களின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் இந்த மாற்றிக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் நிகழ்கிறது. இதனால் ஆண்களை குறைசொல்லவில்லை. ஆனால் பெண்கள் ஏன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து...

    எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்?

    ஒரு பெண்ணின் செயல் அவளுடைய காதலனுக்கோ, கணவனுக்கோ பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் (கோபம், முரண்பாடு, தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் போன்ற எண்ணங்கள்). ஆனால் தங்களுக்கு உரித்தான உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை மாற்றிக்கொள்ளவோக்கூடாது. எல்லோரிடத்திலும் பொதுவாக நிலவும் ஒரு கருத்து பெற்றோர்களால் பார்த்து செய்யப்பட்ட திருமணத்தில்தான் பெண்கள், கணவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்று. ஆனால் காதல் திருமணத்திலும் பல பெண்கள் தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்தே வாழ்கின்றனர். அதை என்ன சொல்வது?. இவற்றில் முக்கியமானவை வேலை, ஆடை, பேச்சு சுதந்திரம். 

    வேலை

    திருமணத்திற்கு பின்னரும் வேலைக்கு செல்லலாம் எனக்கூறி பெண்களை திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ள வைக்கும் பலரும், அதன்பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதில்லை. சில பெண்களும் இரண்டு, மூன்றுமுறை கேட்டுவிட்டு குழந்தை, குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று இதனை அப்படியே விட்டுவிடுவார்கள். கணவர் அன்பானவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால்? நிதி சுதந்திரம் என்பது எப்போதுமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை தரவல்லது. அதனால் எப்போதும் உங்கள் வேலை விஷயத்தில் விட்டுக்கொடுக்காதீர். இந்த வேலைக்குதான் செல்லவேண்டும், இதற்கு செல்லக்கூடாது என்றால் ஒத்துக்கொள்ளாதீர்கள். அதுபோல காதல் திருமணத்தில் பெரும்பாலும் கணவன், மனைவி பெற்றோரை பிரிந்து தனியாகத்தான் இருப்பார்கள்.


    உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார்

    இதனால் குழந்தை பிறந்தபின், குழந்தையை யாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்ற குழப்பம் நிலவும். இதனால் பெரும்பாலான வீடுகளில் வேலையை விடுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். இருவரும் பேசி முடிவெடுத்து, உண்மையில் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் குழந்தைக்காக நீங்கள் வேலையைவிடலாம். ஆனால் கணவரால், கணவரின் குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது நீங்கள் பெண் என்பதால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு எப்போதும் சம்மதிக்கக்கூடாது.

    ஆடை

    ஆடை சுதந்திரம் என்பது திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லை என பல பெண்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். உங்கள் ஆடையை மற்றவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? உங்கள் கணவர் உங்களை உண்மையில் காதலித்தால், உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கமாட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால் உங்கள் விருப்பத்தை புரிந்துகொள்ளாத ஒருவருக்காக உங்கள் விருப்ப சுதந்திரத்தை எங்கும் விட்டுத்தராதீர்கள்.  

    பேச்சு

    அதிகமாக பெண்கள் பேசினாலே ஆண்களுக்கு பிடிக்காது. அது அந்தப் பெண்களை விரும்பாத ஆண்களுக்கு. உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார். இதனை எப்போதும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஏன் சில பெண்களுக்கே பெண்கள் அதிகம் பேசுவது பிடிக்காது. அதனால் உங்களை உங்கள் கணவர் கட்டுப்படுத்தினால் நீங்கள் அவர் சொல்வதை கேட்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக கணவரின், காதலரின் எல்லாக் கருத்துகளுக்கும் பெண்கள் முரண்பட வேண்டும் என்பது பொருளல்ல. நியாயமான உங்களது விருப்பங்களுக்கு முரண்படுதல் என்பது தேவையான ஒன்று. விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.

    அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம்.
    ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. யானை, யானை அம்பாரி யானை, அரசனாக அமரச் சொல்லும் யானை.

    உனக்குக் கொஞ்சம், எனக்குக் கொஞ்சம், உவகையுடன் தின்னலாம். கை கோர்த்தே நாம் காலம் முழுதும் சஞ்சரிக்கலாம். உறவென்னும் பாறையில் உயிருள்ளவரை உலவலாம் இந்தப் பாடல்கள் நினைவிருக்கிறதா? சிறு வயதில் பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றவர்களுக்கு கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடியது நினைவில் இன்னும் இருக்கலாம். ஐம்பது வயதை கடந்த அனைவரிடமும் மாறாத வாசனையாய் இந்த உணர்வுகள் இருக்கும். அமைதி, பொறுமை, நிதானம் என்று வாழ்வில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு வாழ்பவர்கள் நிச்சயம் தங்கள் பால்ய காலத்தை உறவுகளுடன் கழித்தவர்களாய்த்தான் இருப்பார்கள்.

    ஏட்டுக் கல்வியை பல்கலைக்கழகங்கள் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக் கல்வியை இந்த மாதிரி உறவுகள்தான் கற்றுக் கொடுக்கும். எல்லா உறவுகளும் அன்பின் நெருக்கமாய் இருப்பதில்லை. அதிலும் போட்டி, பொறாமை, கோபம் என்று எல்லாம் இருக்கும். ஆனாலும் விட்டுக்கொடுத்து அன்பும் பாசமுமாய் வாழ்ந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்று உணர்த்த முடியும்.

    பள்ளி விடுமுறை விட்டதுமே ஊருக்குப் போகும் குஷி ஆரம்பித்து விடும். கிராமம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவே வேண்டாம். பொழுது போவது தெரியாது. நீரை வாரி இறைக்கும் பம்புசெட், நீச்சல் கற்றுக்கொடுக்கும் கிணறு, தணலில் சுட்டுச் சாப்பிடும் கம்பு, கேழ்வரகு, சோளம், இளநீர், நுங்கு என்று இயற்கையான தின்பண்டங்கள், தாத்தா தென்னை ஓலையில் செய்து கொடுக்கும் கிளி, குருவி, சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும் மாமா, வெள்ளி, சனியில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் அத்தை, சித்திகள் என்று அனைவரும் அன்பை கற்றுக்கொடுத்தார்கள். அன்பைவிட அக்கறையே அதிகம் இருக்கும் அவர்கள் செயலில்.

    பங்கிட்டு வாழ கற்றுக்கொடுக்கும் பல்லாங்குழி, விட்டுக்கொடுத்து வாழ் எனச் சொல்லும் கிட்டி, கிளித்தட்டு, அத்துடன் கும்மி. இன்று பல ஆங்கில டாக்டர்கள் இரு கையையும் தட்டுங்கள் அது இதயத்திற்கு இதமானது என்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். இன்று பல இடங்களில் கை தட்ட பயிற்சி, சிரிக்க ஒரு கிளப் என்று நடக்கிறது.

    வீட்டில் நாலு உறவுகள் அவர்களின் குழந்தைகள் சேர்ந்து இருக்கும்போது அங்கு தெறிக்கும் சிரிப்பலைகள் மூலம் தீர்க்காத நோய்களும் உண்டா? இரவில் மீந்துப்போன குழம்பு வகைகளைச் சுட வைத்து பாட்டி சாதம் பிசைந்து போடுவாள். அதில் உள்ள ருசி எந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது.? இருப்பதை பங்கிட்டுச் சாப்பிடும் வழக்கத்தையும் அல்லவா அது கற்றுத் தருகிறது. அனைவரும் ஒரே இடத்தில் பேதமின்றி படுத்திருக்க, பாட்டியும், தாத்தாவும் சொன்ன இதிகாசங்கள், நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்தது. தாத்தாவின் கை பிடித்து நடக்கும்போது எதிர்ப்படுபவரிடம் அவர் பேசுவதும், நடந்து கொள்வதும் நமக்குப் பாடமானது. வீட்டுக்கு வந்தவர்களை பாட்டி வரவேற்கும் முறையைப் பார்த்து மரியாதை என்பதைக் கற்றுக்கொண்டோம். நேசிப்பையும், உணவில் ஆரோக்கியத்தையும், அன்பையும், பணிவையும், நல்ல பண்புகளையும் அவர்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்றுத் தந்தார்கள்.



    ஆனால் இன்று? இன்று இளைய சமுதாயத்தின் உலகம் அலைபேசியின் தொடுதிரையிலும், கணினியிலும் அடக்கிவிட்டது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட வாங்க என்று கூப்பிடத்தோணாமல் வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். காசு மட்டும் அல்லவே வாழ்க்கை. அடிப்படை பண்புகளை எந்த கல்வி நிறுவனம் கற்றுத் தருகிறது?

    இன்று பெருகி நிற்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள், பயங்கரவாதம் இந்த அளவுக்கு அன்று இல்லையே? காசு சம்பாதிக்கும் எந்திரமாக்கி விட்டோம் குழந்தைகளை. விடுமுறை என்பது அவர்களுக்கு சென்டிரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். ஒரு கூட்டுக் குடும்பத்தில் எல்லா உறவுகளிடமும் அனுசரித்துப் போகப் பழகியவனால் சமுதாயத்தில் எந்த இடத்திலும் கலந்து பழகி வெற்றிபெற முடியும்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஐந்தாறு பெண் குழந்தைகளிடம் கலந்து பழகியவனால் மற்றொரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்க்கவோ, நடக்கவோ முடியாது. படித்து நல்ல வேலை கிடைத்து பையன் வெளிநாடு சென்றாலும் அவனின் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள கூட்டுக் குடும்பத்தில் உறவுகளின் அனுசரணை இருக்கும். அன்பும், பிரியமுமான குடும்பத்தில் வளர்ந்தவன் வெளிநாட்டுக்குத் தன்னை அடிமை சாசனம் எழுதித் தரமாட்டான். முதியோர் இல்லங்கள் தேவை இல்லாமல் போயிருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

    தன் மகன்-மகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் அவர்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ என்ன செலவு செய்கிறார்கள்? வாழ்க்கை, பல்கலைக்கழகங்களிலோ, கோடைக்கால பயிற்சி வகுப்பிலோ இல்லை. பாட்டி, தாத்தா வீட்டில், உறவுகளின் குழுவில் இருக்கிறது, நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் கடத்திக்கொண்டு வருகிறவர்கள் அவர்களே.

    விடுமுறை தினங்களில் உறவுகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அனுப்புங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டாம். அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

    சுற்றத்தின் அழகு சூழ இருத்தல் என்கிறார் அவ்வையார். அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம். நம் வீட்டில் அவர்கள் வருவதை அனுமதிக்கலாம். அன்பாய் விருந்தோம்பலாம். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பக் கிடைக்கும். டாலர்களில் இல்லை வாழ்க்கை. பெற்றோர்கள் இருக்க வேண்டியது முதியோர் இல்லங்களில் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது செல்வத்தை அல்ல. அதைவிட உயர்வான நல்ல கல்வி. அன்பான சுற்றம், உறவுகள்.

    எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா

    ×