search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பம்"

    காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
    கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு முனைப்பு காட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை துணையிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். குடும்ப விஷயங்களை போலவே நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

    அன்றைய நாளில் காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் தான் பேசுவதை துணை காது கொடுத்து கேட்கிறாரா? என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் பேச்சை ரசித்து கேட்க முடியாமல் அவஸ்தைபடுவதை உடல் மொழியால் வெளிப்படுத்தினாலும் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் சொல்ல விரும்பிய விஷயத்தை கூறி விடுவதிலேயே குறியாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

    எந்தெந்த விஷயங்களையெல்லாம் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி துணையிடம் கூறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வெளிப்படையாக பேசும் விஷயங்களே சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

    குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. காதல் விஷயங்களை துணையிடம் பேச வேண்டியதில்லை என்ற கருத்தை மன நல ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள். அதுவே பெரும்பாலானவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் தன் பழைய காதல் கதையை கணவரிடம் கூற வேண்டியதில்லை என்பது போலவே, கணவரும் தன் காதல் அனுபவத்தை பகிரக்கூடாது.

    இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருவர் தன் மனைவியிடம் கல்லூரி காலத்தில் தொடர்ந்த நட்பு காதலாக மாறிய கதையை சொல்லி இருக்கிறார். தனக்கு அந்த பெண் எழுதிய கடிதங்களையும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் மனைவிக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அந்த கடிதங்களை கிழித்து எறிந்தவர் கணவருடன் கடுமையாக சண்டை போட்டுவிட்டார். இப்போதும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேகம் மனைவிக்கு தலைதூக்க, பிரச்சினை பெரிதானது. கணவரிடம் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கணவர் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

    எனவே யாரிடம் எந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி பேச வேண்டும். எந்த விஷயத்தை எந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. அந்த சமயத்தில் பேசினால்தான் அதற்கு மதிப்பு கூடும். துணையின் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். கோபத்தில் ஒருபோதும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.

    சிலர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசிவிடுவார்கள். கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதை நினைத்து வருந்து வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், கோபமாக இருக்கும் சமயத்தில் வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டும். சிலரோ, எதை பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே அருவி போல் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு காலாகாலத்துக்கும் அவர்கள் உறவில் விரிசல் விழுந்து விடும்.

    பெண்களை கற்பூர புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதுண்டு. எதையும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வார்கள். கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    துணை கோபமாக இருக்கும்போது, உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொறுமையாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அவரை போலவே நீங்களும் கோபப்பட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே துணையிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
    குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
    கணவன்-மனைவி இடையேயான உறவு பந்தம் பாசப்பிணைப்புடன் பின் தொடர்வதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுவாக்கும். நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நிலைத்தோங்க செய்யும். குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    1. கருத்து: ஒரு சில விஷயங்களில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அந்த சமயத்தில் ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பு கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் நல்ல விஷயத்தை பின்பற்றுவதற்கு தயங்க கூடாது. ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் நல்ல கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இருவரில் ஒருவரின் கருத்து ஆட்சேபனைக்குரியதாக இருந்தாலும் சகிப்பு தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். பின்பு அதில் இருக்கும் சாதக, பாதகங்களை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    2. கர்வம்: கணவர் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தக்கூடாது. குடும்ப நிதி நிலைமை, வரவு-செலவு விஷயத்தில் மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன் வருமானத்தை எப்படி வேண்டுமானாலும் செலவிடுவேன் என்ற கர்வம் மனதில் எழுந்துவிடக்கூடாது. குடும்பத்தை வழிநடத்தும் மனைவிக்கு குடும்ப பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் தனது வரவு-செலவு கணக்குகளை கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் தனக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்ற எண்ணம் மனைவியிடத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.

    3. புரிதல்: சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. கணவரின் பார்வையில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் மனைவிக்கு பெரியதாக தெரியலாம். அதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த விஷயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து ‘சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்கிறாள்’ என்று கூறினால் பிரச்சினைதான் அதிகரிக்கும். உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.

    4. மரியாதை: கணவன் - மனைவி இடையே வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதி காக்க வேண்டும். இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபடும்போது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை திட்டுதல், அவதூறாக பேசுதல் போன்றவை பிரச்சினையை பல மடங்கு அதிகரிக்க செய்துவிடும்.

    5. அணுகுமுறை: கணவர் தனது குடும்ப உறுப்பினர்களை போலவே மனைவியின் வீட்டினரையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதை விடுத்து தன் வீட்டினருக்கு மட்டும் மதிப்பளித்துவிட்டு மனைவியிடம் அதே மரியாதையை கொடுக்கும்படி எதிர்பார்க்கக் கூடாது.

    6. சுதந்திரம்: கணவன் - மனைவி இருவரிடத்திலும் கருத்து சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவர், மற்றொருவர் சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ‘நான் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவேன். ஆனால், நீ கூண்டுக்கிளியாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று கூறுவது தவறானது.

    7. நேர மேலாண்மை: கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலை வேளையில் அலுவலகத்திற்கு பரபரப்பாக கிளம்ப வேண்டியிருக்கும். அப்போது நேர மேலாண்மையை கடைப்பிடித்தால் மட்டுமே டென்ஷன் இல்லாமல் புறப்பட முடியும். எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொள்வார் என்று கருதக்கூடாது. கணவரும் சின்ன சின்ன உதவிகளை செய்வது மனைவிக்கு ஆறுதல் அளிக்கும். வேலைகளை விரைவாக முடிக்க ஏதுவாகும்.
    வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியை விதைக்கும் புன்னகையை தக்கவைத்து கொள்ள வேண்டியது அவசியமானது.
    கணவன்-மனைவி இடையே சச்சரவுகள், சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படும்போது இருவரும் நிதானம் இழந்துவிடுவது உறவில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இருவரில் யாராவது ஒருவர் சட்டென்று கோபம் கொள்வது பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது. வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியை விதைக்கும் புன்னகையை தக்கவைத்து கொள்ள வேண்டியது அவசியமானது. எத்தகைய பிரச்சினைகள் எழுந்தாலும் அன்றைய நாளின் இறுதிக்குள் இருவரும் சமாதானமாகி மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் தூங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

    * உண்மையிலேயே வாழ்க்கை துணையை நேசிக்கிறீர்கள் என்றால், அவரை காயப்படுத்தி அழ வைக்கக்கூடிய எதையும் செய்ய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் அவரை உற்சாகப்படுத்தும் விஷயங்களை செய்ய வேண்டும். மனைவியை மகிழ்விப்பதற்கான முதல்படி, உங்களுக்குள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வதுதான். ஏனெனில் கணவர் சந்தோஷமான மனநிலையில் இல்லாவிட்டால் அவரால் மனைவியை மகிழ்விக்க முடியாது. அதனால் ஜாலியான நபராக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நேர்மறையான சிந்தனை, நகைச்சுவை உணர்வு மிக்க நபராக இருங்கள்.

    * மனைவியின் மனநிலையை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் சோர்வுடனோ, சலிப்புடனோ இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சியுங்கள். வீட்டுவேலைகள்தான் பெரும்பாலும் மனைவியை நெருக்கடிக்குள்ளாக்கும். அவருடன் இணைந்து சின்ன சின்ன வேலைகளை செய்து முடிக்கலாம்.

    * மனைவியின் ஆடை, அலங்கார நேர்த்தியை எப்போதும் பாராட்டுங்கள். அதனை அவர் எதிர்பார்ப்பார். குறிப்பாக வெளி இடங்களுக்கு செல்லும்போது தனது ஆடை தேர்வு எப்படி அமைந்திருக்கிறது என்பது பற்றி கணவர் கருத்து கூற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். ஏதேனும் குறை இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். அதற்காக கோபப்பட மாட்டார். அதனை திருத்திக்கொள்வதற்குத்தான் முயற்சி செய்வார்.

    * மனைவியிடம் பொய் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்துவிடும். எந்தவொரு சூழலிலும் உண்மையை பேசுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.

    * மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை மனம் நோகாமல் சுட்டிக்காட்டுங்கள். அதே தவறை திரும்ப செய்தாலும் கடிந்து கொள்ளாமலும், வாய்க்கு வந்தபடி திட்டாமலும் நிதானமாக தவறுகளை சரி செய்வதற்கு ஆலோசனை வழங்குங்கள்.

    * மனைவி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கோபமாக இருந்தால், கணவரும் பதிலுக்கு கோபப்படுவதோ, எரிச்சல் கொள்வதோ அழகல்ல. அது இருவருக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்திவிடும். மனைவி கோபமாக இருந்தாலும் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.

    * மனைவி ஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால் அவரது கவனத்தை திசை திருப்பும் விதத்தில் பேச்சு கொடுக்காதீர்கள். அவருக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதைவிடுத்து அவரிடம் ஏதேனும் வேலை சொல்லிக்கொண்டிருந்தால் அவர் கோபம் அடையக்கூடும். இருவருக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    * வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வீடு திரும்பியதும் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை கணவரிடம் கூறுவதற்கு ஆர்வம் காட்டுவார். அதனை புரிந்து கொண்டு அவர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். அதுபோல் அன்றைய நாளில் நடந்த உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    * வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவருடைய விருப்பங்களை கேட்டறிந்து ஓய்வு நாளில் அதனை நிறைவேற்றுவதற்கு மறக்காதீர்கள்.

    * மனைவி ஏதாவது ஒரு பொருளை விரும்பி கேட்கும் போது, கையில் பணம் இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் வாங்கி தருவதாக கூறலாம். அதைவிடுத்து ‘கையிருப்பில் பணம் இல்லாததை சுட்டிக்காட்டி’ அவர் மனம் நோகும்படி வார்த்தைகளை உச்சரித்துவிடக்கூடாது. அந்த பொருள் அவசியம் தேவையில்லாத பட்சத்தில் நிதானமாக பேசி புரியவைக்கலாம்.

    * மனைவி ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை மனதில் வைத்திருந்து, தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி பேசி மனம் நோகச்செய்யக்கூடாது. தேவையில்லாமல் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசவும் கூடாது. அது மனைவி மனதில் வெறுப்புணர்வை விதைத்துவிடும்.

    * தம்பதியர் இருவரும் பேசும்போது வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து பேசுவதுதான் சரியானது. மற்றவர்கள் முன்பும் துணையை விட்டுக்கொடுத்து பேசக்கூடாது.

    * மனைவி செய்யும் வீட்டு வேலைகளில் குறை கண்டுபிடிப்பதையே வாடிக்கையாக கொள்ளக்கூடாது. தவறு இருக்கும் பட்சத்தில் அவருடன் சேர்ந்து அந்த தவறை திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே சிக்கலை கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், உறவை மகிழ்ச்சியாக நீட்டிக்கலாம். எத்தகைய நேரங்களில் தனிமை தேவைப்படும் என்பதை இங்கே காண்போம்.

    விரக்தியாக இருத்தல்:

    உங்கள் வாழ்க்கைத்துணை இறுக்கமாக இருக்கும் தருணங்களில், யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவே தோன்றும். ஏதோ ஒரு பொருளை இழந்ததுபோல், விரக்தியுடனே இருப்பார்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பது போலத் தோன்றும். எதைக் கேட்டாலும், எரிச்சலுடன் கோபமடைவார்கள். இத்தகைய சமயங்களில் அவர்களோடு வாதிடாமல், சற்று அமைதியாக இருப்பது அவசியம்.

    மகிழ்ச்சியான தருணங்களை ஒதுக்குதல்:

    இதுநாள் வரை வாழ்க்கைத் துணையுடன் இணைந்து, வார இறுதி நாட்களில், வெளியிடங்களுக்கு செல்லவோ, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணை, அவரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக உணரும்போதோ அல்லது, அவருக்கான ஆசை, விருப்பம் நிறைவேறாமல் பறிபோவதாக நினைத்தாலோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். வழக்கமாக நீங்கள் போடும் திட்டங்களைத் திடீரென பொய்க்காரணம் கூறி ரத்து செய்யலாம். இது ஒரு முறை நடக்கும்போது, பெரிது படுத்த தேவையில்லை. அதுவே, தொடரும்போது, கட்டாயம் அதில் கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எதையும் விவாதிக்க மாட்டார்:

    அலுவலகத்தில் நடப்பவை, குடும்பத்தில் நடப்பவை என அனைத்து விஷயங்களையும் தினமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கைத்துணையின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படும்போது, அவருக்குள் ஏற்படும் மாறுபாட்டால், அதை உங்களிடம் விவாதிக்க விரும்பாமல் மறுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அவரிடம், மேற்கொண்டு எதையும் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தாமல், இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமைதியாய் இருப்பது நல்லது.

    காரணமின்றி சண்டை போடுதல்:

    வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் எப்போதும் சண்டையிட்டு, பிரச்சினையைப் பெரிதாக்க முயல்வதாகத் தெரிந்தால், வாழ்க்கைத் துணைக்குச் சற்று அமைதி தேவை என புரிந்து கொள்ளுங்கள். அப்போது, அங்கிருந்து விலகி சில மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க முயலுங்கள். மேலும், துணைக்கு எந்த வகையில், சுதந்திரம் தேவை என்பதைக் கேட்டுத் தெளிவடைவது சிறந்தது.

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    ×