search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fail"

    வாக்குரிமை பெற்றவர்கள் தேர்தலில் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும் என வானொலியில் பிரதமர் மோடி கூறினார். #PMModi #Vote #MannKiBaat
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கீ பாத்’ எனப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

    அந்தவகையில் நேற்று ஒலிபரப்பான மன் கீ பாத் உரையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் தேர்தல் கமிஷனின் அயராத பணிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கடந்த 25-ந் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதல் முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கி இருந்தார்.

    இது தொடர்பாக மோடி கூறியதாவது:-

    21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். தேசத்தின் கடமைகளில் தோள்கொடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேச கட்டுமானத்தின் பங்குதாரர்களாக பயணத்தை தொடங்க உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட கனவை தேசத்தின் கனவுடன் இணைப்பதற்கான நேரம் வந்திருக்கிறது.

    வாக்களிக்க தகுதி வாய்ந்த இளம் சமூகத்தினர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் ஆவதன் மூலம் வாக்குரிமையை பெறுகிறோம். இது, நமது வாழ்க்கை பயணத்தின் முக்கியமான சடங்குகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    அதேநேரம் வாக்களிப்பது புனிதமான கடமை என்ற உணர்வும் நம்மிடம் தானாகவே வளர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவர் வாக்களிக்க முடியவில்லை என்றால், அது ஒருவரை காயப்படுத்தும். வாக்குரிமை பெற்றவர்கள் ஓட்டு போடாவிட்டால் பின்னர் வருந்த நேரிடும்.

    எனவே வாக்களிக்கும் கடமையின் முக்கியத்துவத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்போல வாக்காளர் பதிவு மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் முக்கிய பிரபலங்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவது உலக நாடுகளுக்கு பிரமிப்பாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் மற்றும் அதன் திறன்வாய்ந்த செயல்பாடுகளால் ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகின்றனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனது வாக்குரிமையை தேர்தல் கமிஷன் உறுதி செய்கிறது. இதுதான் நமது ஜனநாயகத்தின் அழகு.

    நேர்மை மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடப்பதுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் கமிஷன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #PMModi #Vote #MannKiBaat
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராகுல் எகிப்து வீரர் மோன்டாசரிடம் தோல்வியை தழுவினர்.
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராகுல் பாய்தா 4-11, 9-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் மோன்டாசரிடம் (எகிப்து) வீழ்ந்தார். யாசிர் பாத்டே, வீர் சோட்ரானி ஆகிய இந்திய வீரர்களும் தோல்வியை தழுவினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து வீராங்கனை அலிஸ் கிரீன் 11-13, 11-4, 11-8, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் செங் நகா சிங்கை (ஹாங்காங்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் ரோவன் எலராபி (எகிப்து) 11-4, 11-8, 11-2 என்ற நேர் செட்டில் இந்திய வீராங்கனை ஆஷிதாவை பந்தாடினார். இதே போல் ஐஸ்வர்யா, சன்யா வட்ஸ் ஆகியோரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 
    நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். #NEET2018 #Subasree #TNStudentSuicide
    திருச்சி:

    நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துள்ளார். அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருச்சி 1-வது டோல்கேட் திருவள்ளூவர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன், அரசு பஸ் டிரைவர்.

    அண்ணா தொழிற்சங்கத்தில் கிளை தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி.

    இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (வயது 17) என்ற மகளும், மிதுன் (13) என்ற மகனும் உள்ளனர். துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த சுபஸ்ரீ பொதுத்தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

    நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்த சுபஸ்ரீ பிளஸ்-2 தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

    சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் மாணவி சுபஸ்ரீ 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவரது டாக்டர் கனவு தகர்ந்தது. அப்போது முதல் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்து வந்தார்.

    சுபஸ்ரீயை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனாலும் நீட் தேர்வின் தோல்வியில் இருந்து மாணவி சுபஸ்ரீ மீளவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை மகளின் மனதை திடப்படுத்தவும், அவருக்கு தைரியம் ஊட்டவும் முடிவு செய்த பெற்றோர் திருச்சி ஓயாமாரி மயானம் பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு அழைத்து சென்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விட்டு இரவு வீடு திரும்பினர்.

    சுபஸ்ரீயின் தாய் செல்வி இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார். தந்தை கண்ணன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். தம்பி மிதுன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வீட்டில் இருந்த தனி அறைக்கு சென்ற சுபஸ்ரீ கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டார்.

    இதைப்பார்த்த மிதுன் தனது தாயிடம் சென்று கூறினான். அந்த சமயம் வீட்டிற்குள் வந்த கண்ணன் மற்றும் செல்வி ஆகியோர் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் இல்லை. இதனால் பதறியடித்துக் கொண்டு அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

    சுபஸ்ரீ துப்பாட்டாவால் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பெற்றோர் அவரை கீழே இறக்கினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுபஸ்ரீயை ஆம்புலன்சு வேன் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    சுபஸ்ரீ உடல் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    காலை 11 மணியளவில் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் உருகச் செய்தது. தொடர்ந்து திருச்சி ஓயாமாரி மின் மயானத்தில் சுபஸ்ரீயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஓயாமாரி மின்மயானம் வரை இரண்டு அரசு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. இதில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் மயானத்திற்கு சென்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவியின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    சிறுவயது முதலே எனது மகள் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறிவந்தார். அதற்கேற்றவாறு நாங்களும் அவரை ஊக்கப்படுத்தி வந்தோம். பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்திருந்த போதிலும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக அல்லும் பகலும் படித்தார்.

    மாணவி சுபஸ்ரீ தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட பழைய படம்

    ஆனால் தேர்வின்போது பதட்டம் அடைந்த அவர் மைனஸ் மதிப்பெண்கள் என்ற முறையை மறந்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். இதில் தவறாக அளித்த பதில்கள் மூலம் நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் தகுதியை இழந்தார். இருந்த போதிலும் அவரை நாங்கள் தொடர்ந்து தேற்றி வந்தோம். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம்.

    ஆனால் அநியாயமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். ஆசை, ஆசையாய் வளர்த்த மகளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம். இந்த தேர்வால்தான் எங்களது மகளை பறிகொடுத்து விட்டோம். இதுபோன்ற நிலைமை இனிமேலும் எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்தார்.

    இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாணவியும் நீட் தேர்வில் தோல்வியால் உயிரை மாய்த்துள்ளார்.

    மாணவி சுபஸ்ரீ தற்கொலை குறித்து திருச்சி கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமயபுரம் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #NEET2018 #Subasree #TNStudentSuicide
    ×