search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "darna"

    பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார். #BJP #PMModi #MamataBanerjee

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது.

    ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆக மறுத்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.

    சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய அரசு தூண்டி விட்டதன் பேரில் சி.பி.ஐ. இப்படி நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி அவர் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இதை ஏற்க மறுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

    சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் ஆவேசமாகி உள்ள மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த தடவை அவர் தனது போராட்ட களத்தை டெல்லிக்கு மாற்றி உள்ளார். டெல்லியில் நாளை அவர் தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார்.

    டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

    மம்தா பானர்ஜி நாளை போராட்டம் தொடங்கியதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை முடிவடையும் நிலையில் மம்தா போராட்டத்தை தொடங்கி இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #BJP #PMModi #MamataBanerjee

    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். #Plastic #BJPMLA
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு, நீர் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.



    புதுவையில் ஏற்கனவே 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை உள்ளது. ஆனால் இந்த தடை கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதால் புதுவையில் பிளாஸ்டிக் விற்பனை, தயாரிப்பின் கள்ளச்சந்தையாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ புதுவை சட்டமன்ற வளாகத்தில் மைய மண்டபம் செல்லும் வழியில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது கையில் பதாகைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தார். அந்த பதாகைகளில் தடை செய், தடை செய் புதுவை நகரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை கெடுக்கும் பிளாஸ்டிக்கை புதுவையில் தடை செய் என்ற பதாகைகளை கையில் பிடித்தபடி கோ‌ஷம் எழுப்பினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டார்.  #Plastic #BJPMLA

    ரேசன் கார்டு கேட்டு குழந்தையுடன் பெண் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Rationcard

    சென்னை:

    சென்னையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா என்றால் நூறு பேராவது திரண்டு இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

    ஆனால் மைலாப்பூரில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்து அந்த பெண்ணை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் விரைந்து வந்தனர்.

    தர்ணாவில் ஈடுபட்ட அந்த பெண்ணின் பெயர் மனோன்மணி (34). நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோன்மணி அதே பகுதியில் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

    இதையடுத்து தனது ரே‌ஷன் கார்டை புதிய முகவரிக்கு மாற்றித் தரும்படி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார் கார்டு எல்லாவற்றையும் சமர்ப்பித்து இருக்கிறார். அதிகாரிகளும் அதை சரி பார்த்து விட்டு விரைவில் கார்டு வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிடும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மனோன்மணி ரேசன் கார்டு கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பலமுறை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அலைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மழுப்பலான பதிலே கிடைத்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு சென்று கேட்டபோது இன்னும் கார்டு தயாராகவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி இ.சேவை மையத்துக்கு சென்று கார்டு நிலவரத்தை விசாரித்துள்ளார். அப்போது கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    எல்லா தகவல்களும் சரியாக கொடுத்த பிறகும் ஏன் முடக்கி வைத்துள்ளார்கள் என்று புரியாமல் மனோன்மணி தவித்து இருக்கிறார்.

    ஏற்கனவே மனோன்மணி விண்ணப்பித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.14 ஆயிரம் கொடுத்து உடனடியாக கார்டு பெற்றது தெரிய வந்தது.

    தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால்தான் மனோன்மணி இந்த தர்ணாவை கையில் எடுத்துள்ளார். தனது 3 வயது குழந்தையை எடுத்து மடியில் வைத்தபடி நடுரோட்டில் அமர்ந்து விட்டார்.

    நிலைமை விவகாரம் ஆன பிறகு விரைவில் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். #Rationcard

    புதுவை கவர்னர் மாளிகை எதிரே மனைவிக்கு விடுமுறையை நீட்டிக்க கோரி அரசு ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை தேத்தாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். பொதுப் பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாலாம்பாள் (45). இவர், புதுவை நீதிமன்றத்தில் பல்நோக்கு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    பாலாம்பாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதனால் பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிக்க கோரி அவர் பணியாற்றும் நீதிபதி இல்லத்தில் அவரது கணவர் முருகையன் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் விடுமுறையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விடுமுறை அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாம்பாளின் கணவர் முருகையன் தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினருடன் புதுவை கவர்னர் மாளிகை எதிரே திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலாம்பாளுக்கு விடுப்பை நீட்டிப்பு செய்ய வேண்டும், அவரை வேறு துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என முருகையன் வலியுறுத்தினார்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட முருகையனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #tamilnews
    கோவையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் வித்யா (30). எம்.ஏ. பட்டதாரி. இவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பின்னர் அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இது குறித்து வித்யா சென்னை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மணிகண்டன் கோவை சங்கனூர் வந்து விட்டார். இங்கு பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் வித்யா சென்னையில் இருந்து கோவை வந்தார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    அவர் தன் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதாகவும், விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாலும் வித்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்தார்.பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற வித்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சினார். ஆனால் மணிகண்டன் மனம் இறங்கவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென மேட்டுப்பாளையம் சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவரை மகளிர் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.நள்ளிரவு 1 மணி வரை வித்யா தனது போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் தர்ணாவை கைவிட்டு கோவையில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்றார். #tamilnews
    ×