search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crop cultivation"

    • பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. அக்டோபர்- 2023ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 451.60 மி.மீ.,நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 342.66 மி.மீ ஆகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 41.39 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 15.25 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 28.98 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 1.770 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 1642 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1160மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,765 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 612 மெட்ரிக் டன்அளவு இருப்பில் உள்ளதென கலெக்டர் தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டரங்கில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக கலெக்டர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளிடமிருந்து 144 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
    • பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டார பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.

    வெயிலுடன் அவ்வப்போது கடுமையான காற்றும் வீசுகிறது.

    பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.

    இந்த வாரத்தில் குறுவை சாகுபடி முழுமையாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரில் ஆடிப் பருவத்தில் வீசும் காற்று, பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக புது விதமான பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    வேளாண்துறையினர் குறுவை சாகுபடி வயல்கள் உன்னிப்பாக கவனித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி நல்ல நிலையில் குறுவை பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    • குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    • தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பின், தரிசாக உள்ள நிலங்களில் பயறு வகை பயிர்களான, உளுந்து, பாசிபயறு சாகுபடி செய்ய சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பயறு வகை சாகுபடி செய்வதால், சாகுபடி செலவு குறைவாகவும், 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயறு வகை பயிர்கள் பயிரிடுவதால் மண் வளம் மேம்படுகிறது. இப்பயிர்கள் வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது. இதன் வாயிலாக, மண் வளம் அதிகரித்து, அடுத்து பயிர் சாகுபடியின் போது, விளைச்சல் அதிகரிக்கிறது.எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம், இடுபொருள்கள் வாங்க அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க சென்றனர்.
    • சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தியில் பல லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம் மற்றும் இடுபொருள்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க இங்கிருந்த அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, அக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடக்கு பச்சையாறு அணையில் இருந்து மடத்தூர், ஏட்டு துரைசாமி, பழம்பத்து, பத்மநேரி கால், சம்பாகுளம், தேவநல்லூர் ஆகிய 6 அணைக்கட்டுகளில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.
    • அணையில் 21 அடி மட்டுமே நீர் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி அணை திறக்கப்பட்டு உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பத்தை கிராமத்தில் வடக்கு பச்சையாறு அமைந்துள்ளது.

    நீர் திறப்பு

    இந்த அணைக்கட்டு மூலமாக 115 குளங்கள் நிரம்பும். அதன் மூலம் 9592.91 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 21.25 அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்நிலையில் பயிர் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் அரசு உத்தரவின்பேரில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    6 அணைக்கட்டுகள்

    இதன் மூலம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள சுமார் 33 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. அணையில் இருந்து இன்று முதல் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அணையை திறந்து வைத்தபின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து மடத்தூர், ஏட்டு துரைசாமி, பழம்பத்து, பத்மநேரி கால், சம்பாகுளம், தேவநல்லூர் ஆகிய 6 அணைக்கட்டுகளில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

    65 நாட்கள்

    இதன் மூலம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள பத்தை, மஞ்சுவிளை, பத்மநேரி, மேலவடகரை, கீழ வடகரை, நெடுவிளை, இடையன்குளம் மற்றும் எருக்கலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2028.71 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஆயக்கட்டுகளுக்கு இன்று முதல் 65 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

    அணையில் 21 அடி மட்டுமே நீர் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி அணை திறக்கப்பட்டு உள்ளது. எனவே அதனை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், தாசில்தார் இசக்கிபாண்டி, உதவி பொறியாளர் பாஸ்கர், களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் விசுவாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2018-19-ல் இந்த திட்டம் ரூ.19.74 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும்.

    தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழப்பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பு பயிர், பலஅடுக்கு பயிர் வழங்கப்படும். மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரவல்ல பசுமைக் குடில்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

    விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.

    இதனை பற்றிய தகவல் அறிந்து பயன்பெற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும், 04567-230832, 230328 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ×