search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cloth bags"

    • முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகளை வழங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பால சுப்பிரமணியன், கார்த்திக், சசிகலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் அப்துல்கலாம் பற்றி கருத்துரை வழங்கினர்.

    கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம்,ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி தொடங்கியது. அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது. இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    திருவாரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    அதன்படி உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவை வணிகர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி உத்தரவின்படி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் தங்கராம் மற்றும் பணியாளர்கள் நேற்று நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 3 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறியதாவது:-

    தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள், வணிகர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    தஞ்சை பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    தஞ்சாவூர்:

    பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கப், பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

    தஞ்சையில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் பாக்கெட், கப் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசைகளை பார்சலாக கட்டி எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்கினர். பேப்பர் தட்டுகளில் இட்லி, பூரி, தோசைகள் பரிமாறப்பட்டன. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளில் தான் மளிகை சாமான்களை கட்டி கொடுத்தனர்.

    தஞ்சை பூக்கார தெருவில் பூ சந்தை கடைகளில் துணிப்பையில் பூக்களை போட்டு வழங்கினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளம்பர பேனர், பூச்சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

    பூக்கள் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தஞ்சையில் இறைச்சி கடைகளில் கறிவாங்க, பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால் நேற்று முதல் விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுப்பிரியர்களுக்கு சில பார்களில் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வரை வசூலிக்கப்பட்டது.  #Plasticban

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் நேற்று துணிப்பைகளுக்கு மாறினர். இந்த திட்டத்துக்கு பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர். #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    மக்களது அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றன. மக்களிடம் இருந்து பிளாஸ்டிக்கை பிரிக்கவே முடியாது என்ற சூழ்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு நேற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    சாலையோர உணவகங்கள் மற்றும் ஏராளமான ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேற்று ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டது. வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது.

    அதேபோல ‘பார்சல்’ கேட்டு வருவோரிடம் பாத்திரங்களை கொண்டுவருமாறு கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் தூக்குச்சட்டி, கிண்ணம் போன்ற பாத்திரங்களை கொண்டுவந்து வேண்டிய உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.

    இட்லி-தோசை மாவு விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கைவிட்டனர். வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அந்தவகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் பெண்மணிகள் பாத்திரங்களில் இட்லி-தோசை மாவு வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் பாத்திரங்கள் மீண்டும் மறு பிரவேசம் எடுத்திருக்கின்றன.

    இறைச்சி கடைகளிலும் தையல் இலைகள் எனும் மந்தார இலை, வாழை இலைகளிலேயே இறைச்சி தரப்பட்டது. எப்போதும் பயன்படுத்தப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களை இறைச்சி கடைகளில் நேற்று பார்க்க முடியவில்லை.



    காய்கறி-பலசரக்கு போன்ற ‘பெரும்பாலான கடைகளில் ‘பிளாஸ்டிக் பை பயன்பாடு இல்லை’, ‘கடைக்கு செல்லும்போது கைப்பை எடுத்து செல்வோம்’ போன்ற வாசகங்கள் பெரிய அட்டைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    கடைகளுக்கு வருவோர் மஞ்சப்பை, துணிப்பைகள் மற்றும் கூடைகளை எடுத்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். #PlasticBan

    வானகரம், திரு.வி.க.நகர் உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்களிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு நேற்று பெருமளவு குறைந்திருந்தது. வாழை இலைகளிலேயே மீன்களை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். வாடிக்கையாளர்களும் தேவையான பாத்திரங்கள் மற்றும் துணிப்பைகளை கடைகளுக்கு எடுத்து வந்தனர். டீக்கடைகளிலும் பெரும்பாலும் கண்ணாடி டம்ளர்களே பயன்படுத்தப்பட்டன.

    மளிகை கடை முதல் அனைத்து கடைகளுக்கும் கைப்பையின் தேவை அதிகரித்து இருப்பதால் பெண்களின் அத்தியாவசிய பொருளாக துணிப்பைகள் மாறி வருகின்றன. ஆண்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களிலும் ஒரு துணிப்பை கட்டாயம் இடம்பிடிக்க தொடங்கி இருக்கிறது.

    கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கான பூஜை பொருட்களை மொத்தமாக பிளாஸ்டிக் பைகளில் கட்டி விற்கும் வியாபாரிகள் நேற்று பூஜைக்கு தேவையான பொருட்களை துணிப்பையில் வைத்தே விற்பனை செய்தனர். இந்த துணிப்பைகளுக்கு தனியாக ரூ.5 வசூலித்து கொண்டனர்.

    நகரத்து மக்களின் முக்கிய தேவையான துணிப்பைகளின் மவுசு ஒரே நாளில் இப்படி அதிகரிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நேற்று மறக்க மக்கள் அதிகமாக முயற்சித்திருந்தனர்.

    ஆனாலும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை காண முடிந்தது. குறிப்பாக சாலையோரம் பூ வியாபாரம் மற்றும் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோர் நேற்று வழக்கம்போலவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினர். சிலர் பிளாஸ்டிக் பை மீதான தடை குறித்து கேள்வி எழுப்பும்போது, ‘கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற முடியும். வாங்கி வச்ச சரக்க என்ன பண்றது. கொஞ்ச நாளில் மாறிக்கலாம் சார்’, என்று சலிப்பாக பதில் அளித்தனர்.

    எது எப்படியோ பிளாஸ்டிக் மீதான தடையை மக்கள் ஏற்க தொடங்கி விட்டனர். இதுகுறித்து சென்னை மீர்சாகிப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசிகள் வி.ஜெயந்தி, ஜெ.ஜோதி ஆகியோர் கூறுகையில், “பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிப்பது தற்போது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் அது மிகப்பெரிய பலனை தரும். அரசின் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கத்தக்கது”, என்றனர்.

    அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அந்தந்த மண்டலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிடங்குகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைத்து வருகின்றனர். இக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு கொடுங்கையூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி ஆ.பரந்தாமன் கூறுகையில், “பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் அறிவிக்கப்பட்ட கிடங்குகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கலாம்”, என்றார். #PlasticBan
    பிளாஸ்டிக் தடை காரணமாக ஓட்டல் மற்றும் கடைகளில் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற கைப்பைகளுக்கு அளவு, தரத்துக்கு ஏற்ப தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (1-ந்தேதி) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால், பெரும்பாலான ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கைப்பைகளை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள எளிதில் மக்கும் வகையிலான கைப்பையை பொதுமக்களுக்கு வழங்க தொடங்கி உள்ளனர். பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கைப்பைகளை இலவசமாக வழங்கி வந்த வியாபாரிகள் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

    அளவு மற்றும் தரத்துக்கு ஏற்றாற்போல் ஒரு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை இந்த கைப்பைகளுக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழியில்லாமல் பொதுமக்களில் பலர் விலை கொடுத்து இதுபோன்ற கைப்பைகளை வாங்கி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் தடை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே ஓட்டல்கள், பலசரக்கு கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, இட்லி, தோசை மாவு கடை போன்றவற்றில் வழக்கமாக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ‘அடுத்தமுறை வரும் போது வீட்டில் இருந்து கைப்பை எடுத்து வரவும்’ என்று வியாபாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.

    அதன்படி, பொதுமக்களில் பலர் வீட்டில் இருந்து கைப்பையை எடுத்து சென்று பொருட்கள் வாங்கும் நிலைக்கு மாறி உள்ளனர்.



    பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை என முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட கடைகளை நடத்தி வந்த பலர் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி விட்டு எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் குவளைகள், பேப்பர் உறிஞ்சுகுழல், மரக்கட்டையிலான ஸ்பூண்கள் போன்றவற்றை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளாக மாற்றி உள்ளனர்.

    சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பைகளை கொண்ட கடையை நடத்தி வந்த சதக்கத்துல்லா என்பவர் தனது கடையை எளிதில் மக்கக்கூடிய கைப்பைகளை கொண்ட கடையாகவும், துணிப்பை மற்றும் சணல் பை கடையாகவும் மாற்றி உள்ளார்.

    அவர் கூறும்போது, ‘பிளாஸ்டிக் கைப்பைக்கு முழுமையான தடை வரப்போகிறது என்று தெரிந்ததும் ஏற்கனவே விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கைப்பையை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டேன். அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக எளிதில் மக்கும் கைப்பை, துணிப்பை ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். தற்போது பிளாஸ்டிக் கைப்பை விற்பனைக்கு இல்லை என்ற நிலையில் கடையை நடத்தி வருகிறேன். எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகளை விட பிளாஸ்டிக் கைப்பைகள் விலை மிக குறைவு தான் என்ற போதிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது தான் சரியாக இருக்கும்’ என்றார்.

    இதேபோன்று கொடிகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக பேப்பரினால் ஆன கொடிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதுகுறித்து பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் கொடிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் எஸ்.எம்.மூர்த்தி கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிளாஸ்டிக் கொடி விற்பனைக்கு வந்தது. அதன்பின்னர், பேப்பர் கொடி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம், பிளாஸ்டிக் கொடிகள் விழா நடக்கும் இடங்களில் எளிதாக கட்டுவதற்கு வசதியாக கயிற்றுடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. பேப்பர் கொடிகளை பொறுத்தமட்டில் அதற்கென்று தனியாக சணல் வாங்கி பசை மூலம் சணலில் ஒட்டி கட்ட வேண்டும். இதற்கு வேலைப்பாடு அதிகம் என்று கருதியே அரசியல் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி சென்றனர். பிளாஸ்டிக் கொடியை விட பேப்பர் கொடி விலை சற்று அதிகம் தான். கொடி அலங்காரத்துக்கான வேலைப்பாடும் அதிகம், விலையும் அதிகம் என்ற போதிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்க எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கடைகளில் ஏராளமான சிறு வியாபாரிகள் வாங்கி சென்றனர். #PlasticBan
    ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை வாங்கி துணி பைகளை தாசில்தார் வழங்கினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் பாலிதீன் பைகள் உபயோகத்தை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பாலித்தீன் பைக்கு தடை விதித்ததை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜாண்சன்தேவசகாயம் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் ஜாண்சன் தேவ சகாயம், மண்டல துணை தாசில்தார்கள் பிரபாகர், கண்ணன், முதுநிலை வரைவு ஆய்வாளர் ஆதிராமலிங்கம், மண்டல நில அளவை அலுவலர் மனோகரன், வருவாய் ஆய்வாளர்கள் திருமணி ஸ்டாலின், ஆகஸ்டீன்பாலா மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பாலித்தீன் பைகளை அகற்றினர்.

    அப்போது தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை வாங்கி துணி பைகளை தாசில்தார் ஜாண்சன் தேவசகாயம் வழங்கினார். இது தொடர்பாக தாசில்தார் ஜாண்சன்தேவசகாயம் கூறுகையில், "தமிழக அரசால் பாலித்தீன் பை தடை செய்யப்பட்டுள்ளதால் தாலுகா அலுவலகத்துக்கு பாலித்தீன் பைகளுடன் வர அனுமதி இல்லை. மீறி பாலித்தீன் பைகளுடன் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
    தொண்டியில் துணிப்பையை பயன்படுத்த பொது மக்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் வலியுறுத்தினர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பேரூராட்சிப்பகுதியில் சுற்றுச்சூழலைபாதுகாக்கும் வகையில் தமிழகஅரசின் உத்தரவுப்படி பாலித்தீன் பைகளை முற்றிலும் ஒழித்து எளிதில் மக்கும் துணிப்பைகளை பயன்படுத்த பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் கடை வீதிகளில் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

    பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் முத்துச்சாமி உட்பட பலர் கடை வீதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளை சோதனையிட்டு பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அபராதம் விதித்தனர். இதனால் தொண்டி பகுதியில் பெரும்பாலான கடைக்காரர்கள் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் வரும்போது துணிப்பை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். #tamilnews
    ×