search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தடை எதிரொலி - துணிப்பைகளுக்கு மாறிய வியாபாரிகள்
    X

    பிளாஸ்டிக் தடை எதிரொலி - துணிப்பைகளுக்கு மாறிய வியாபாரிகள்

    பிளாஸ்டிக் தடை காரணமாக ஓட்டல் மற்றும் கடைகளில் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற கைப்பைகளுக்கு அளவு, தரத்துக்கு ஏற்ப தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (1-ந்தேதி) முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால், பெரும்பாலான ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் கைப்பைகளை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள எளிதில் மக்கும் வகையிலான கைப்பையை பொதுமக்களுக்கு வழங்க தொடங்கி உள்ளனர். பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கைப்பைகளை இலவசமாக வழங்கி வந்த வியாபாரிகள் எளிதில் மக்கும் வகையிலான கைப்பைக்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

    அளவு மற்றும் தரத்துக்கு ஏற்றாற்போல் ஒரு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை இந்த கைப்பைகளுக்கு என தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழியில்லாமல் பொதுமக்களில் பலர் விலை கொடுத்து இதுபோன்ற கைப்பைகளை வாங்கி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் தடை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே ஓட்டல்கள், பலசரக்கு கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, இட்லி, தோசை மாவு கடை போன்றவற்றில் வழக்கமாக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ‘அடுத்தமுறை வரும் போது வீட்டில் இருந்து கைப்பை எடுத்து வரவும்’ என்று வியாபாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.

    அதன்படி, பொதுமக்களில் பலர் வீட்டில் இருந்து கைப்பையை எடுத்து சென்று பொருட்கள் வாங்கும் நிலைக்கு மாறி உள்ளனர்.



    பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை என முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட கடைகளை நடத்தி வந்த பலர் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி விட்டு எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் குவளைகள், பேப்பர் உறிஞ்சுகுழல், மரக்கட்டையிலான ஸ்பூண்கள் போன்றவற்றை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளாக மாற்றி உள்ளனர்.

    சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பைகளை கொண்ட கடையை நடத்தி வந்த சதக்கத்துல்லா என்பவர் தனது கடையை எளிதில் மக்கக்கூடிய கைப்பைகளை கொண்ட கடையாகவும், துணிப்பை மற்றும் சணல் பை கடையாகவும் மாற்றி உள்ளார்.

    அவர் கூறும்போது, ‘பிளாஸ்டிக் கைப்பைக்கு முழுமையான தடை வரப்போகிறது என்று தெரிந்ததும் ஏற்கனவே விற்பனைக்காக வைத்திருந்த பிளாஸ்டிக் கைப்பையை மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டேன். அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக எளிதில் மக்கும் கைப்பை, துணிப்பை ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினேன். தற்போது பிளாஸ்டிக் கைப்பை விற்பனைக்கு இல்லை என்ற நிலையில் கடையை நடத்தி வருகிறேன். எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகளை விட பிளாஸ்டிக் கைப்பைகள் விலை மிக குறைவு தான் என்ற போதிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது தான் சரியாக இருக்கும்’ என்றார்.

    இதேபோன்று கொடிகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக பேப்பரினால் ஆன கொடிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    இதுகுறித்து பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் கொடிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் எஸ்.எம்.மூர்த்தி கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிளாஸ்டிக் கொடி விற்பனைக்கு வந்தது. அதன்பின்னர், பேப்பர் கொடி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம், பிளாஸ்டிக் கொடிகள் விழா நடக்கும் இடங்களில் எளிதாக கட்டுவதற்கு வசதியாக கயிற்றுடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. பேப்பர் கொடிகளை பொறுத்தமட்டில் அதற்கென்று தனியாக சணல் வாங்கி பசை மூலம் சணலில் ஒட்டி கட்ட வேண்டும். இதற்கு வேலைப்பாடு அதிகம் என்று கருதியே அரசியல் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி சென்றனர். பிளாஸ்டிக் கொடியை விட பேப்பர் கொடி விலை சற்று அதிகம் தான். கொடி அலங்காரத்துக்கான வேலைப்பாடும் அதிகம், விலையும் அதிகம் என்ற போதிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்க எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை சென்னை பிராட்வே என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கடைகளில் ஏராளமான சிறு வியாபாரிகள் வாங்கி சென்றனர். #PlasticBan
    Next Story
    ×