என் மலர்
வழிபாடு
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-3 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை காலை 11.09 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.23 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்தரசேகரர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் விருஷப வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை கணபதி ஹோமம், வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்லமுத்துக் குமார சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-புகழ்
கடகம்-சுகம்
சிம்மம்-வரவு
கன்னி-போட்டி
துலாம்- அன்பு
விருச்சிகம்-மேன்மை
தனுசு- நற்செயல்
மகரம்-சிந்தனை
கும்பம்-அமைதி
மீனம்-சாதனை
- இன்று கார்த்திகை விரதம்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-2 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை நண்பகல் 1.07 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.35 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். தென்காசி ஸ்ரீ உலகம்மை, வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் திருவீதியுலா. நெல்லை ஸ்ரீகாந்திமதியம்மன் காலை வெள்ளிச்சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி. இடங்கழி நாயனார் குரு பூஜை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-அன்பு
கடகம்-புகழ்
சிம்மம்-மாற்றம்
கன்னி-நற்செயல்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-பரிசு
தனுசு- நன்மை
மகரம்-ஆக்கம்
கும்பம்-செலவு
மீனம்-பயணம்
- நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
- பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும்.
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.

பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
நந்தி என்ற வார்த்தையுடன் ஆ சேரும்போது ஆநந்தி என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே, இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
ஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
இதேபோல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள். இவர் பூவுலகில் கடுமையாகத் தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவகணங்களின் தலைவர்.
கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை 'ப்ராஹார நந்தி' என்பார்கள்.
சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
நந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
- ஆலயத்தின் திருவிழா வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
- 26-ந் தேதி ஆயில்ய நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோவிலின் முகப்புத் தோற்றம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு என்ற இடத்தின் அருகாமையில் அமைந்துள்ளது, மண்ணார சாலை நாகராஜா கோவில். காட்டுப் பகுதியில் மரங்களுக்கு நடுவே, தனிமையில் அமைந்திருக்கும் இந்த ஆலயமானது, நாகக் கடவுள்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும்.
இங்கே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகர் சிலைகளை நாம் காண முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆலயத்தில் பெண் ஒருவர் தலைமை பூசாரியாக இருப்பது தனித்துவமானது. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழா, மலையாள மாதமான துலாம் (ஐப்பசி) மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும்.
கோவில் புராண வரலாறு
தன்னுடைய தந்தையை கொன்ற சத்ரியர்களை அழித்த பரசுராமர், அதோடு நிற்காமல் 22 தலைமுறை சத்ரியர்களையும் அழித்து ஒழித்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட பாவத்தில் இருந்து விடுபடுவதற்காக, மகரிஷிகள் சிலரிடம் ஆலோசனை கேட்டார்.
அப்போது அவர்கள், பிராமணர்களுக்கு ஒரு நிலத்தை தானமாக வழங்கும்படி அறிவுறுத்தினர். சொந்தமாக ஒரு நிலத்தைப் பெறுவதற்காக பரசுராமர், வருண பகவானை நினைத்து வழிபட்டார்.
பின்னர் சிவபெருமானால் வழங்கப்பட்ட 'மழு' என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகி, நிலப்பகுதியாக மாறியது. அந்த இடத்தை பரசுராமர், அந்தணர்களுக்கு தானமாக வழங்கினார். அதுதான் கேரளம்.
ஆனால் ஆரம்பத்தில் அந்த இடம் உப்புத் தன்மையுடன், மரம்- செடிகள் முளைக்காமலும், வாழ்வதற்கான சூழல் இல்லாததாகவும் அமைந்திருந்தது. அதனால் தானமாக பெற்ற மக்கள், அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
இதனை அறிந்த பரசுராமர், வருத்தம் கொண்டார். உடனடியாக திருமாலை நினைத்து தவம் புரிந்தார். அவருக்கு நேரில் காட்சியளித்த திருமால், "இந்த பகுதியில் நாகராஜாவின் அருள் ஒளி பரவினால் மட்டுமே, நீ எண்ணியவை நடக்கும். நாகராஜாவை திருப்தி அடையச் செய். எல்லாம் சரியாகும்" என்று கூறி மறைந்தார்.
கேரள தேசத்தை இயற்கை அழகு நிறைந்த நாடாகவும், சகல சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாற்றிய பின்னரே, அங்கிருந்து வேறு பகுதிக்குச் செல்வது என்று பரசுராமர் தீர்மானம் செய்தார்.
தன் சீடர்களுடன், ஒரு வனாந்திர பகுதியைத் தேடி புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகில் ஒரு இடத்தை கண்டார். அங்கே தீர்த்த சாலை அமைத்து, தவம் இயற்றினார்.
அந்த தவத்தின் பயனாக அவருக்கு நாகராஜாவின் அருள்காட்சி கிடைத்தது. அவரை தலை வணங்கி வழிபட்ட பரசுராமர், தன்னுடைய வேண்டுதலை நாகராஜாவிடம் தெரிவித்தார்.
நாகராஜா தன்னுடைய அருள் கடாட்சத்தை அந்த நிலம் முழுமைக்கும் பரவச் செய்தார். அதன் மூலம் கேரள தேசம், நாக பூமியாக மாறியது.
அப்போது பரசுராமர், "நாகராஜரே.. நீங்கள் அனுதினமும் இந்த தேசத்தில் அருள் ஒளியைப் பரவச் செய்ய வேண்டும்" என்று வேண்டினார். அதை நாகராஜாவும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தன்னுடை சீடர்களில் முதன்மையான விப்ரனை என்பவரை, நாக பூஜை செய்யும் அதிகாரியாக, பரசுராமர் நியமித்தார். விப்ரனையின் வம்சாவளியினருக்கு, நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார்.
வனப்பு மிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள்பாலிப்பதால். இந்த சோலை 'மந்தார சோலை' எனும் பெயரில் அழைக்கப்பட்டு, அதுவே 'மண்ணார சாலை' என்று மருவியதாக சொல்கின்றனர்.
தலைமுறைகள் பல கடந்தன. ஒரு கட்டத்தில் கேரள தேசத்தில் காட்டுத் தீ பரவி கோரத் தாண்டவம் ஆடியது. அக்னியால் பாதிக்கப்பட்ட சர்ப்பங்கள் அனைத்தும் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தங்களுடைய ராஜாவான, நாகராஜா அருளாட்சி செய்து கொண்டிருந்த மண்ணார சாலைக்கு வந்து சேர்ந்தன.
நாகராஜாவின் அருளால் காட்டுத் தீ அணைந்து, நாகங்கள் அனைத்திற்கும் அபயம் கிடைத்த புண்ணிய பூமியாக மண்ணார சாலை மாறியது.
பரசுராமர் தீர்த்த சாலை அமைத்து நாகராஜாவை வழிபட்ட இடத்தில்தான், இப்போது மண்ணார சாலை நாகராஜா திருக்கோவில் அமையப்பெற்றிருக்கிறது, என்கிறது தல வரலாறு.
இந்த ஆலயத்தில் உள்ள நாகராஜா சிலை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டு, அந்த விதிப்படியே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி (துலாம்) மாத ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இதில் மன்னர் வம்சத்தினரும் பங்கேற்று சிறப்பு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் திருவிழா வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் வழக்கமான பூஜைகளுடன், மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா நடக்கிறது.
25-ந் தேதி நாகராஜாவிற்கும், சர்ப்ப யட்சிக்கும் திருவாபரணம் அணிவித்து, நைவேத்தியம் படைக்கப்படும்.
26-ந் தேதி ஆயில்ய நட்சத்திர நாளில், கோவிலின் பெண் பூசாரி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நாகராஜா ஊர்வலம் நடைபெறும்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
ஆலப்புழாவில் இருந்து சுமார் 37 கிலோ மீட்டரில் உள்ளது இந்த திருத்தலம்.

சிறப்பு வழிபாடுகள்
இங்கே முக்கிய வழிபாடாக 'உருளி கவிழ்த்தல்' என்ற வழிபாடு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இங்குள்ள நாகராஜாவையும், சர்ப்ப யட்சி அம்மனையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, நீண்ட ஆயுள், வம்ச விருத்தி வேண்டியும், நோய், பில்லி - சூனிய தொல்லைகளும் அகலவும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. செல்வச் செழிப்பு, கல்வி, புகழ், தானிய விருத்தி, உடல் ஆரோக்கியம், விஷத்தன்மை நீங்கிட, நாக தோஷம் விலக என்று ஒவ்வொன்றிற்கும் தனி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
- உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமாள் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-1 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: பிரதமை பிற்பகல் 3.16 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அஸ்வினி மாலை 4.01 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவள்ளியம்மன் புறப்பாடு. உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. தேவக்கோட்டை மணி முத்தா நதிக்கு அவ்வூர் சகல ஆலயமூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமாள் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிறப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-தனம்
கன்னி-போட்டி
துலாம்- உற்சாகம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- நிறைவு
மகரம்-வாழ்வு
கும்பம்-பயணம்
மீனம்-பண்பு
- முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
- திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.
பழனி:
பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.
அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- முன்வினைப் பயனால் தான் துன்பம் ஏற்படுகிறது.
- மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்கு பழி வாங்கத்துடிக்கிறோம். ஆனால் அது தவறான செயல்.
நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் நாம் முன் செய்த வினைப்பயன் தான். எனவே நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும், பழிக்கு பழி வாங்க நினைக்காமலும், பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அசோகவனத்தில் சீதை இருந்த போது சீதையை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம் தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.
ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு அசோகவனத்தில் இருந்த சீதா தேவியிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், சீதா தேவையை வணங்கி `தாயே ஸ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்' என்று கூறினார்.
அனுமன் கூறுயதை கேட்டு மகிழ்ந்த சீதை `அனுமனே நான் முன்பொரு நாள் உயிர் துறக்க நினைத்த நேரத்தில் நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போது ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்கு தெரிவித்தாய்.
ஏற்கனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றாள்.
அதற்கு அனுமன், `தாயே எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்று தான். கடந்த பல மாதங்களாக உங்களை பாடாய் படுத்திய இந்த அரக்கிகளை நான் தீயில் இட்டு கொளுத்த வேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று அனுமன் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனை பார்த்து `அனுமனே நீ நினைப்பது போல் இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தி இருந்தாலும் அதற்கு இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்கு காரணம் நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன் மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு அதை பிடித்து வர கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், `லட்சுமணா, லட்சுமணா என்று அபயக்குரல் எழுப்பியதாலும் பயந்துபோன நான் எனக்கு காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பி பார்க்க சொன்னேன்.
அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனை கண்டித்து பேசினேன். ஒரு பாவமும் அறியாமல் இரவும் பகலுமாக எங்களை கண் இமைப்போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியது தான் இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்கு காரணம்.
எனவே நீ அரக்கிகளை ஒன்றும் செய்துவிடாதே, அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களூக்கு தீங்கு செய்து நீ பெரும் பாவத்தை தேடிக்கொள்ளாதே என்று கூறினார். அனுமன் உண்மையை புரிந்து கொண்டார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நாம் முன் செய்த தீவினை பயன் தான் காரணம்.
இதை தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.
சிறு வயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லை செருகியதால் பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார்.
மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது சிறுவயதில் அவர் தும்பியை துன்புறுத்தியது தான் காரணம் என்று கூறியது.
எனவே நமக்கு ஒருவர் துன்பம் விளைவித்தாலும் நம்மை ஒருவர் பழித்துப் பேசினாலும் அதற்கு காரணம் நாம் செய்த வினைப்பயன் தான் என்பதை உணர்ந்து நாம் பதிலுக்கு அவரை பழிதீர்க்க நினைக்க கூடாது.
- இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
- இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
திருவேற்காடு:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.
இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.
சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.
பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
- வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.
சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
- இன்று பவுர்ணமி.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-31 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 5.25 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ரேவதி மாலை 5.36 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப் பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குறுக்குதுறை ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. சோழவந்தான் அருகில் ஸ்ரீ குருவித்துறை குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-போட்டி
கடகம்-ஆசை
சிம்மம்-விவேகம்
கன்னி-ஆக்கம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- வரவு
மகரம்-புகழ்
கும்பம்-சுபம்
மீனம்-பயணம்
- விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
- சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.
முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






